சுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி?


சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்துவிட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா?”

விடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே!” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா?” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”

ஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.

தன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.

நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.

அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்


வானம் அதிகாலையில்தான் வெக்காளித்திருந்தது. திரும்பவும் மழை வந்துவிட்டது. நேரத்துக்கு முன்கூட்டி இயங்குபவரான முதுபெரும் தலைவர் சங்கரய்யா, மழையையும் போக்குவரத்து நெரிசலையும் யோசித்திருக்க வேண்டும். பயண நேரம் என்னவோ அரை மணிதான் என்றாலும், கட்சி அலுவலகத்தில் காலை ஒன்பதரை மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு வீட்டிலிருந்து ஆறரை மணிக்கே புறப்பட்டு வந்திருந்தார். நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். உடலின் தளர்ச்சி செயல்பாட்டில் தெரியவில்லை. “அன்றாடம் ஏழு பத்திரிகைகள் வாசிக்கிறார். வானொலி கேட்கிறார். கட்சிக்காரர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அரசியலில் ஓய்வு என்பது ஏது?” என்கிறார்கள். சங்கரய்யாவை அன்றைய தினம் சந்தித்த பலரும் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருந்தார்கள். இக்கட்டான சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பம், தன் தலைமகனுக்கு ஒருசேர முகங்கொடுப்பதற்கு ஒப்பான சூழல் அது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் சிந்தனை உதித்த நூற்றாண்டைக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியில் சங்கரய்யாவுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். ‘தோழர்களே!’ என்று தொடங்கி ‘இன்குலாப்... ஜிந்தாபாத்!’ என்று முடித்த சங்கரய்யா, “இந்த உலகம் முழுக்க சோஷலிஸ ஒளி பரவ வேண்டும் என்றால் அதற்கு, ஆசியாவில் 130 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவுக்கான ஒளிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது” என்றார். இந்த நூற்றாண்டு முழுக்க இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் எதிர்கொண்ட அடக்குமுறைகளைத் தன் பேச்சில் கொண்டுவந்தார் சங்கரய்யா. “எவ்வளவோ வேட்டையாடப்பட்டும் பொதுவுடைமை இயக்கம் நீடித்து நிற்கக் காரணம், இந்த இயக்கத்தோடு கரைத்துக்கொண்டவர்கள் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பு; அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள்” என்று சங்கரய்யா சொன்னபோது, அவருடைய வாழ்க்கையை அறிந்தவர்கள் கண் கலங்கியதில் ஆச்சரியமில்லை. பசி, பட்டினி, தடியடி, சிறை எல்லாவற்றுக்கும் முகங்கொடுத்தவர் சங்கரய்யா.

உண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்?


காமன்வெல்த் மாநாட்டு நிமித்தம் பிரிட்டன் சென்றிருந்தபோது, ‘நவ்ரூ’ எனக்கு அறிமுகமானது. காமன்வெல்த் உறுப்பினர்களிலேயே சிறியதான நவ்ரூ உலகின் சின்ன தீவு நாடுகளில் ஒன்று. “நீங்கள் நவ்ரூ வந்தால், ஒரே நாளில் தீவை நடந்தே சுற்றிவந்து, ஒரு நாட்டையே சுற்றிப் பார்த்த திருப்தியுடன் நாடு திரும்பலாம். எங்கள் நாட்டின் கடற்கரை நீந்துவதற்கும் மீன் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது. அப்புறம், ‘புவாடா லகூன் கடல் ஏரி’. அது நீந்துவதற்குத் தகுதியானது அல்ல என்றாலும், அதன் கரையில் உட்கார்ந்து நாளெல்லாம் அதன் அழகை ரசிக்கலாம்” என்று நவ்ரூவிலிருந்து வந்திருந்த நண்பர் சொன்னார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டனால் கூட்டாக நிர்வகிக்கப்பட்ட நவ்ரூவுக்கு 1968-ல் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெரிய செல்வ வளம் இல்லை. சுற்றுலாதான் பெரும் ஆதாரம். ராணுவப் பாதுகாப்பு உள்பட பெரும்பாலான தேவைகளுக்கு ஆஸ்திரேலியாவையே நம்பியிருக்கின்றனர். நாட்டின் பரப்பளவு 21 சதுர கி.மீ. மொத்த மக்கள்தொகை 11,000 சொச்சம். மூன்றாண்டுகள் பதவிக் காலத்தோடு 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் அதிபராகிறார். அவரே நாட்டுக்கும் அரசுக்கும் தலைவர். ஐந்து அல்லது ஆறு பேர் அமைச்சர்கள். 
பருவநிலை மாற்றத்தால் நாடே மூழ்கிவிடும் அபாயத்தை நவ்ரூ எதிர்கொள்கிறது. “அப்படி ஒருக்கால் கடல் சூழும் ஆபத்தால் இங்கிருந்து வெளியேறும் ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டாலும், எங்கள் மனங்களில் நவ்ரூ வாழும். சின்ன தீவு என்பதாலேயே பெரும் கலாச்சாரச் சூறாவளியை எப்போதும் எதிர்கொண்டுவருகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எங்களுக்கு உண்டு. பலபல நூற்றாண்டுகளுக்கு முன் பசிபிக் தீவுக்கூட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய பாலினேசியர்கள், மைக்ரோனேசியர்களின் வம்சாவழியாக வாழும் 12 தனித்தனி இனக் குழுவினர் இங்குண்டு. எங்கள் நாட்டுக் கொடியில் உள்ள 12 நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதுதான். நவ்ரூவின் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் எங்கள் கல்வியின் வழி குழந்தைகளுக்குக் கடத்துகிறோம்; எங்கள் நாட்டில் கல்வி அனைவருக்கும் கட்டாயம். எங்கள் குழந்தைகளின் நினைவுகளின் வழி காலாகாலத்துக்கும் நவ்ரூ வாழும்.”
அவர் பேசிக்கொண்டேயிருந்தபோது இந்தியாவில் எத்தனை நவ்ரூகள் இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். பரப்பளவு எனக் கொண்டால், 32.87 லட்சம் ச.கி.மீ-க்கு விரிந்திருக்கும் இந்தியாவில் 1.56 லட்சம் சொச்சம் நவ்ரூகள் இருக்கின்றன; 130 கோடியைத் தாண்டிவிட்டிருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், 1.18 லட்சம் சொச்ச நவ்ரூகள் இந்தியாவில் இருக்கின்றன. பரப்பளவில் பாதி நவ்ரூவுக்குச் சமமான நான் பிறந்த ஊரான மன்னார்குடி நகரத்தின் இன்றைய மக்கள்தொகை 66,000 சொச்சம் என்கிறார்கள்; ஆக, ஆறு நவ்ரூகளுக்கு சமம் அது.

விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?



தன்னைக் கடந்து சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கோபம் கொப்பளிக்க சிறுமி கிரியத்டா துன்பர்ரி முறைக்கும் காணொலியைப் பார்த்தபோது, ட்ரம்ப் இதே காணொலியைப் பார்த்தபோது எப்படி உணர்வார் என்று தோன்றியது. உலகின் கவனம் ஈர்க்கும் சூழல் செயல்பாட்டாளராக உருவெடுத்திருக்கும் பதினாறு வயது மாணவிகிரியத்தா துன்பர்ரிக்காக அவருடைய சொந்த நாட்டினரான ஸ்வீடன்காரர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகின் மிக சக்தி வாய்ந்த நபருக்கு எதிரான கிரியத்தா துன்பர்ரியின் சீற்றம் அவருடைய தார்மிகத்தோடு, ஸ்வீடன் தன் குடிமக்களிடம் வளர்த்தெடுத்திருக்கும் துணிச்சலான ஜனநாயக மாண்பையும், தாராளச் சிந்தனையையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பத்தாவது பேரக் குழந்தைக்குத் தாத்தாவான ட்ரம்பின் மூத்த பேத்தியான கய் ட்ரம்பைவிடவும் நான்கே வயது மூத்தவர் கிரியத்தா துன்பர்ரி; அபூர்வமாகவேனும் ட்ரம்ப் கனிவாக அவரை எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்தேன். தன் வயதுக்கு இணையான எதிரியை எதிர்கொள்வதுபோலவே கிரியத்தா துன்பர்ரியையும் கிண்டலடித்திருக்கிறார் ட்ரம்ப்.

நியூ யார்க்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா. சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார் கிரியத்தா துன்பர்ரி.  “உங்கள் வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளையும் என் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயருறுகிறார்கள். மக்கள் செத்து மடிகிறார்கள். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் சிதைந்தழிகிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆயினும் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் குறித்த கதைகளைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று பருவநிலை மாற்றத்தை அலட்சியமாகக் கையாளும் உலகத் தலைவர்களை நோக்கி அவர் கேட்டதைப் புதிய தலைமுறையின் அறைகூவல் என்றே சொல்ல வேண்டும்.

சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்



வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.

அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் – படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன்.

எப்போது தூங்குவான்?

ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான்.

என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.

வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?


அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்றைய நாளில் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் வழியே காரில் வீட்டுக்குத் திரும்புகையில் கொஞ்சம் ஆச்சரியம்கூட அடைந்திருக்கக் கூடும். கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரிடமிருந்தும் துளி முணுமுணுப்பு வெளியே வரவில்லை; அத்தனை பேரும் இதற்காகக் காத்திருந்தவர்களைப் போலக் காட்டிக்கொண்டனர்;  மாவட்ட அமைப்புகள் உதயநிதியை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. ஸ்டாலினை இளைஞர் அணியின் பொறுப்பு நோக்கி அவருடைய தந்தை கருணாநிதி நகர்த்தியபோது, சூழல் இவ்வளவு இசைவாக இல்லை.

நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளுக்குப் பின், அதன் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, நாடு முழுவதும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று ‘வாரிசு அரசியல்’ விவாதத்துக்குள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியிருக்கும் சூழலில், இப்படி பட்டவர்த்தனமாக வாரிசுக் கொடியைப் பறக்கவிட எங்கேயோ ஒரு கட்சி கூச்சம் துறக்க வேண்டியிருக்கிறது. செம்மொழி மாநாட்டில் ஆய்வறிஞர்கள் மத்தியில், ‘ஸ்டாப் புகழ்’ பேத்தியைக் கவிதை வாசிக்க வைத்து கருணாநிதிி  அழகு பார்த்த காலகட்டத்திலேயே எல்லா இறக்கங்களையும் பார்த்துவிட்டதால், “குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறது; திமுகவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று கம்பீரமாக முட்டுக்கொடுக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள் கட்சிப் பிரதிநிதிகள். அதிகாரம் தன் பிறப்புரிமை என்பதுபோல இருக்கின்றன உதயநிதியின் செயல்பாடுகளும், ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் முன்னதாக அளித்திருந்த பேட்டிகளும். எல்லோருக்குமே எங்கோ, யாரோ ஞாபகப்படுத்த வேண்டியிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது: அடிப்படையில், வாரிசு அரசியல் எதிர்ப்பிலிருந்து முகிழ்ந்த கட்சி திமுக.


அண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி


நவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ஒரு படைப்பாளியின் மனைவி என்கிற சராசரி அடையாளத்தைத் தாண்டிய முக்கியத்துவம் அவருக்கு உண்டு. முத்துசாமி ஒரு இயக்கமாக வாழ, அவருடைய ‘கூத்துப்பட்டைறை’ சமூக நீதியின், சமத்துவத்தின் பண்பைப் பெற தன்னையும் அர்ப்பணித்துக்கொண்டவர் அவயாம்பாள். சகலரும் சமையலறை வரை சகஜமாகப் புழங்கும் வீடாகவே அவர்கள் வீடு இருந்தது. தமிழ்நாட்டு நவீன படைப்பாளிகள் பலரையும் திராவிட இயக்கத்தின் ஒவ்வாமை சூழ்ந்திருந்த நாட்களில், தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில், அண்ணாவுடனான புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தவர்கள்; தன்னை அண்ணாவின் தொண்டராகவும் திமுக ஆதரவாளராகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்கள் முத்துசாமி – அவயாம்பாள் தம்பதி. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காகப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தபோது உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார் முத்துசாமி. ஆனாலும், அண்ணா என்ற சொல் தந்த உத்வேகம் அவரை உற்சாகத்தோடு பேசவைத்தது. முத்துசாமியின் மரணத்துக்கு முன் அவரிடம் எடுக்கப்பட்ட கடைசிப் பேட்டி இது. இடையிலேயே அவயாம்பாளும் சேர்ந்துகொண்டார்.

தமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்!


ஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்தியாவின் பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்வானது வழக்கமான நிமித்தத்தைத் தாண்டி, சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பெற்றதற்கு இரு காரணங்கள் இருந்தன. உறுப்பினர்கள் பதவியேற்றபோது அதிகாரபூர்வ உறுதிமொழியோடு தத்தமது அரசியலைப் பிரகடனப்படுத்தும் முழக்கங்களையும் சேர்த்துக்கொண்டது முதன்மைக் காரணமானது. அதிகமான உறுப்பினர்கள் இம்முறை தத்தமது தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பதில் காட்டிய ஆர்வம் அடுத்த காரணமானது.

உலகில் இன்று எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட அட்டகாசத்தைப் பார்க்க முடியாது. “முழக்கங்கள் எழுப்புவது மரபல்ல; அவைக் குறிப்பிலும் முழக்கங்கள் இடம்பெறாது” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டபோதும் எவர் காதிலும் அது விழுந்ததாகத் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடக்கிவைத்தவர்கள் ஆளும் பாஜகவினர். பிரதமர் மோடி பதவியேற்க வந்தபோது “மோடி, மோடி, மோடி” என்று முழங்கியவர்கள் அடுத்து, தமக்குப் பிடித்தமானவர்கள் வந்தபோது “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை முழங்கலாயினர். மேலும், தங்களுடைய பதவியேற்பு உறுதிமொழியோடு “பாரத் மாதா கீ… ஜே!”, “ஜெய் ஸ்ரீராம்!”, “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரு!”, “ஹரஹர மஹாதேவ்” என்றெல்லாம் முழுக்கங்களைச் சேர்த்துக்கொண்டனர். தொடர்ந்து, தங்களுக்குப் பிடிக்காத, எதிர் வரிசையில் உள்ளவர்கள் பதவியேற்க வரும்போதும், அவர்களைச் சீண்டும்விதமாக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை பாஜகவினர் ஒலிக்கலானபோது, எதிர்க்கட்சியினரும் முழக்கங்களைக் கையில் எடுத்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் காகோலி கோஷ் தஸ்திதர், “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்துக்கு ஈடுகொடுக்க “ஜெய் மா காளி!”, “ஜெய் மா காளி!” என்று முழங்கியபடியே உறுதிமொழி எடுக்க வந்தார். முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி உறுப்பினரான அஸாதுதீன் ஓவைஸி பதவியேற்க வந்தபோது, பாஜகவினரின் முழக்கம் உச்சம் தொட்டது. தன் இரு கைகளையும் உயர்த்தி பாஜகவினரின் சீண்டலை வரவேற்பது போன்ற சைகையுடன் வந்தவர் “ஜெய் பீம்”, “ஜெய் மீம்”, “தக்பீர்”, “அல்லாஹூ அக்பர்”, “ஜெய் ஹிந்த்!” என்று சொல்லித் தன் உறுதிமொழியேற்பை முடித்தார். சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் எஸ்.டி.ஹசன் உறுதிமொழிக்குப் பின் “ஜெய் ஹிந்துஸ்தான்” என்று சொல்லி பாஜகவினருக்கே அதிர்ச்சி அளித்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பகவத் மன் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கினார். பாஜக கூட்டணியிலுள்ள சிரோன்மணி அகாலி தளத்தின் சுக்பீர் சிங் பாதலைக்கூட அன்றைய சூழல் எங்கோ சீண்டியிருக்க வேண்டும். சீக்கிய மத குருவை வாழ்த்தும் “வஹே குருஜீ கா கால்சா, வஹே குருஜீ கி ஃபதே” முழக்கத்தை முழங்கிய அவர் தன்னுடைய உறுதிமொழியை நிறைவுசெய்தார்.

தமிழ்நாட்டின் எதிர்வினை

தமிழ்நாட்டின் உறுப்பினர்களில் அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் மட்டும் “எம்ஜிஆர் வாழ்க, அம்மா வாழ்க, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்” என்று சொல்லித் தன் உறுதிமொழியை முடிக்க, திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிக - மதிமுக - உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் “பெரியார் வாழ்க”, “கலைஞர் வாழ்க”, “அம்பேத்கர் வாழ்க”, “காமராஜர் வாழ்க” என்று தத்தமது தலைவர்களுக்கான வாழ்த்துகளோடு, “தமிழ் வாழ்க” எனும் வாழ்த்தையும், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”, “மதச்சார்பின்மை வாழ்க”, “இந்திய ஒற்றுமைப்பாடு ஓங்குக”, “தமிழ்நாடே என் தாய்நாடு; தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்றெல்லாம் முழங்கியது ஒரு ஆச்சரியத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது. ஏனைய சமூகங்கள் மதரீதியிலான முழக்கங்களை மதரீதியிலாகவே எதிர்கொள்ள முற்படும்போது, ஒரு மொழி மட்டும் எப்படி கடவுளுக்கு இணையான இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதும், அது மதத்துக்கு அப்பாற்பட்ட விழுமியங்களை எப்படி முழக்கங்களாகத் தர வழிவகுக்கிறது என்பதும்தான் அது.

நாடு முழுக்க இந்த ‘முழக்க அரசியல்’ விவாதிக்கப்பட்டாலும், இந்தக் கோணத்தில் விவாதங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் மதவழி தேசியத்தை எதிர்கொள்ள மொழிவழி தேசியம்தான் வழியா என்பதும், இந்தப் போக்கு எப்படிச் செல்லும் என்பதும் விவாதித்திருக்க வேண்டிய ஒரு விஷயம். மேலும், இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தில் உறுப்பினர்கள் காட்டிய ஆர்வத்தோடு சேர்த்து விவாதித்திருக்க வேண்டிய விஷயமும்கூட இது.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!


நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.

ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?

புதிய கல்விக் கொள்கையின் வரைவானது முன்மொழியும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.

உலகம் எந்த மொழியில் படிக்கிறது?

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.


வெற்றி தோல்விக்கானவை மட்டும் அல்ல தேர்தல்கள்!


சீமான், கமல்ஹாசன் அரசியல் என்னவாகும்? 
அ.முகமது ஷரீஃப், கீழக்கரை.

இருவருக்குமே இது முதல் மக்களவைத் தேர்தல். ‘நாம் தமிழர் கட்சி’, ‘மக்கள் நீதி மய்யம்’ இரு கட்சிகளுமே இத்தேர்தலில் அவர்களைப் புறக்கணிக்க முடியாத ஓட்டுகளை வாங்குவார்கள் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினர் மத்தியில் சீமானுக்கும், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கமலுக்கும் ஒரு செல்வாக்கு இருப்பது எல்லோரும் கவனிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. ‘தொகுதி வெல்கிறார்களோ, இல்லையோ; ஓட்டுகளைப் பிரிப்பார்கள்’ என்ற பேச்சினூடாக இருவர் மீதும் நிறைய வசைபாடல்களையும் பார்க்க முடிந்தது. அது கட்சிக்கார மனோபாவம்; நாம் அதற்கு வெளியே நின்று பேசுவோம். தொகுதிக்கு இருவரும் குறைந்தது ஐம்பதாயிரம் ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த ஐம்பதாயிரம் வாக்காளர்களின் அபிலாஷைகள் என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி. தமிழர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதை மையப்படுத்தியிருந்தது சீமானின் பிரச்சாரம். கமலின் பிரச்சாரம் ஊழலையும் குடும்ப அரசியலையும் மையப்படுத்தியிருந்தது. இருவரும் பிரதான கட்சிகளில் இன்று வாய்ப்பற்றவர்களாகிவிட்ட சாமானியர்கள் சிலரையேனும் வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தார்கள். இருவருமே தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மட்டும் அல்லாது மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவையும் குறிவைத்தார்கள் என்பது வெளிப்படை. ஆனால், அதில் என்ன தவறு இருக்க முடியும்?  தேர்தல்கள் வெறுமனே வெற்றி தோல்விக்கானவை  மட்டும் அல்ல. ஓட்டுகளின் பின்னணியிலுள்ள மக்களின் அபிலாஷைகள் நிச்சயமாகப் பிரதானக் கட்சிகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், முதலிடத்தில் வரும் கட்சியின் குரல்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த இடங்களில் வரும் ஒவ்வொரு கட்சியின் குரல்களும் காலப்போக்கில் வலுப்பெறுகின்றன. ஒவ்வொரு ஜனநாயக சமூகத்திலுமே ‘அரசியலழுத்தக் குழு’க்களுக்கு ஓர் இடம் உண்டு. தேர்தல் அரசியலுக்கு உள்ளும் வெளியிலுமாக இவர்கள் வெவ்வேறு கொள்கைகளை வலியுறுத்திவருவார்கள். இந்தியாவில் தேர்தல் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனித்துவமும் முக்கியத்துவமும் மிளிரும் இடமும்கூட அதுதான். சீமானும் கமலும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்; இந்தத் தேர்தலில் அவர்கள் கையில் எடுத்திருக்கிற விஷயங்கள் எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எல்லா பிரதானக் கட்சிகளாலும் மொழிபெயர்க்கப்படும். அந்தத் தாக்கம் ஜனநாயகத்துக்கு நல்லது.

சூப்பர் டீலக்ஸும் தமிழ்ப் பிரக்ஞையும்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தீர்களா?
- ராஜன், சென்னை.

தியாகராஜன் குமாரராஜா மதிப்புக்குரிய இயக்குநர்களில் ஒருவர். அவருடைய முதல் படமே - ‘ஆரண்ய காண்டம்’ - நல்ல தொடக்கம்தான். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில், அதன் தலைப்பு சம்பந்தப்பட்டு மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். ‘தமிழில் தலைப்பு சூட்டப்படும் படங்களுக்கு வரிவிலக்கு’ என்ற நடைமுறை இருந்தவரை ‘எந்திரன்', ‘தொடரி’ என்றெல்லாம் புதுப்புது பெயர்களை உண்டாக்கிய தமிழ் இயக்குநர்கள் ஜிஎஸ்டியின் வருகையோடு, வரிவிலக்கு வழக்கொழிந்த பின் எந்த கதி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்ற போக்கோடு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டும். ‘சர்கார்’, ‘தர்பார்’, ‘என்ஜிகே’, ‘கே13’... இந்தத் தலைப்புகள் யாவுமே கற்பனை வறட்சி, மொழிப் பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடு.  

எப்போது கொடூரங்களை நிறுத்தப்போகிறோம்?


அடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்கி  உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வெடவெடுத்த இரு கைகளும் கூப்பியிருக்கின்றன. இடுங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அவள் இறைஞ்சுகிறாள். நடந்ததை ஒரு கிராமத்தின் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாகச் சுருக்கிவிடுவது விஷயத்தை ஏறக்கட்டிவிட்டுக் கடக்க வசதியானது.

2019 தேர்தலின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?


தேர்தல் காய்ச்சலுக்குள்ளான தமிழ்நாட்டின் குறுக்கும் மறுக்குமாகக் கோடை வெக்கையில் சுற்றுவது வெயிலை உள்ளும்புறமுமாகக் குடிப்பதற்குச் சமானம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற பதைபதைப்பில் அரசியல்வாதிகள் சுற்றுகிறார்கள் என்றால், மக்களும் ஏராளமான கேள்விகளுடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தத் தேர்தலில் யார் வெல்வார்; எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்; டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?’ என்கிற  வழமையான தேர்தல் கேள்விகளைத் தாண்டிய வேறொரு கேள்வியும் இம்முறை மக்களிடம் சேர்ந்துகொண்டிருக்கிறது: ‘எடப்பாடி கே.பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் என்னவாகும்?’

இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்றால், ‘தமிழ்நாட்டின் ஏழு மண்டலங்களில் ஆறு மாவட்டங்கள், 38 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ‘கொங்கு மண்டலம்’ என்றழைக்கப்படும் மேற்கு மண்டலம் இந்த மக்களவைத் தேர்தலில் என்ன முடிவெக்கும்?’

இந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்: ப.சிதம்பரம்


வரலாற்று முக்கியத்துவம் மிக்க 2019 தேர்தலில் மக்கள் தரப்பிலிருந்து கொண்டாடத்தக்க விஷயங்களைப் பட்டியலிட்டால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அவற்றில் முதன்மை பெறும். ‘இது மக்களின் அறிக்கை’ என்ற பிரகடனத்துடன் வந்திருக்கும் இது, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் 174 இடங்களில் விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் என்று பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது காங்கிரஸ். இந்தியாவில் இப்படி விரிவாக மக்களிடம் கருத்துகளைப் பெற்று ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையை மோடி எனும் ஒரு தனிமனிதரின் படம் பிரதானமாக ஆக்கிரமித்திருக்க, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையோ பல்லாயிரக்கணக்கான மக்களின் முகங்களைத் தாங்கி வந்திருக்கிறது. பாஜக அறிக்கை தேசியத்தையும் தேச அரசின் நலன்களையும் பிரதானப்படுத்தியிருக்க, மனித உரிமைகளையும் சமூக நலத் திட்டங்களையும் பிரதானப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ் அறிக்கை. இந்த அறிக்கை தயாரிப்பில் முக்கியப் பங்களித்த காங்கிரஸ் சித்தாந்த முகங்களில் ஒருவரான ப.சிதம்பரத்துடன் தேர்தல் தொடர்பில் உரையாடியதிலிருந்து...

எல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்


நான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்கள் வெளிவரும் தருணத்திலும் நண்பர் ஜெயமோகன் கடுமையாக எதிர்வினையாற்றினார். இரண்டு புத்தகங்களுமே வெளிவருவதற்கு முன்பே - அறிவிப்புகள், முன்னோட்டங்களைப் பார்த்த வேகத்தில் - படிக்காமலேயே எழுதினார் என்பதை வாசகர்கள் இதைப் படித்து முடிக்கும் வரை ஞாபகத்தில் கொண்டபடி படிக்க வேண்டும். முதல் புத்தகத்துக்கு நான் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; இரண்டாவது புத்தகத்துக்கு ஒரு வாரத்துக்குள் ஐந்தாறு பதிவுகளை அவர் வெளியிட்டுவிட்ட சூழலிலேயே இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் அறிவியக்கத்தின்மூலம் ஜனநாயகத்தைப் பரவலாக்கியவர் அண்ணா: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி



நவீன அரசியலில் தமிழ்நாடு எழுச்சி பெற்ற நூற்றாண்டின் சாட்சியங்களில் ஒருவர் ஆ.சிவசுப்பிரமணியன். நம் காலத்தின் முக்கியமான சமூகவியல் ஆய்வாளர்களில் ஒருவரும் இடதுசாரி அறிவுஜீவியுமான சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் வெகு மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தைக் கற்பிப்பதாகவும் வளர்த்தெடுப்பதாகவும் அண்ணாவின் அரசியல் இருந்தது என்பதையும் திராவிட இயக்கம் எப்படி இங்கே ஒரு அறிவொளியை உண்டாக்கியது என்பதையும் மிக விரிவாகப் பேசினார். பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.

அண்ணாவின் காலத்துக்குக் கொஞ்சம் முன்பிருந்து நாம் கதையைத் தொடங்கலாமா?
அரசியல், ஜனநாயகம் இவையெல்லாம் வெகுமக்களுக்குப் புதிதுதானே! சுதந்திர இந்தியாவில்தான் சாமானியருக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. சரியாக, ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசாகிறது; நான்கு மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 17, 1949 அன்று திமுக பிறக்கிறது. முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை, 1957-ல் நடந்த இரண்டாவது தேர்தலில்தான் அது போட்டியிட்டது என்றாலும் ஒரு முழு அரசியல் கட்சிக்கான ஆகிருதியோடுதான் முன்பிருந்தே அது நடந்துகொண்டது. பேச்சு, எழுத்துக்கு அது தீவிரமான கவனம் கொடுத்தது. என்னுடைய சிறுவயது நினைவிலிருந்து சொல்கிறேன். திருநெல்வேலியில் அப்போதே மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கப் பத்திரிகைகளுக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது. ‘திராவிட நாடு’, ‘முரசொலி’, ‘நம்நாடு’, ‘மன்றம்’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘போர்வாள்’ இப்படி நிறையப் பத்திரிகைகள் வரும். பள்ளிக்கூட மாணவர்களே சொந்தக் காசிலிருந்து ‘திராவிட நாடு’ வாங்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் அண்ணாவுக்கு ஒரு மவுசு இருந்தது. வாங்குவது மட்டுமல்ல; மனப்பாடமே செய்துவிடுவார்கள். அண்ணாவின் மொழிநடையும் இயல்பாகவே மனப்பாடமாகும். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது என்று நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் பற்றி தேர்வில் ஒரு கேள்வி வந்தது. ‘சேரநாடு செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து வளர்ந்து வளம் கொஞ்சும் நாடு... எழிலுறத் திகழும் பொழில்கள், அப்பொழில்களைச் சுற்றி அடுக்கடுக்கான மாளிகைகள். அம்மாளிகைகளின் உள்ளே கலகலவென ஒலியெழுப்பிக் களிப்படையும் காரிகைகள், இத்தனையும் படைத்துச் செல்வத் திருநாடாய் இன்பத் திருவீடாய் இருந்தது சேர நாடு…” இப்படி! (கடகடவென ஒப்பிக்கிறார்) விடைத்தாள் கொடுக்கும்போது ஆசிரியர் என்னை அழைத்தார். எனக்கோ பயம். “திராவிட நாட்டைப் படிச்சி மனப்பாடம் பண்ணுனியா?” என்றார். தலையாட்டினேன். விடைத்தாளைக் கையில் கொடுத்துவிட்டார். இப்படி ஆசிரியரும் மாணவரும் ஒன்றுபோல் படிக்கும் சூழல் அன்றிருந்தது. பேச்சுப் போட்டி என்றால், திமுக பாணியில்தான் மாணவர்கள் பேசுவார்கள். நாடகப் போட்டி என்றால் அண்ணா, கருணாநிதி எழுதிய நாடக வசனங்களைத்தான் பேசினார்கள். பொதுவாக, அந்நாட்களில் மூன்று இயக்கங்கள் மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரிய அளவில் திமுக, சிறு துளி மாதிரி தமிழரசுக் கழகம், இரண்டுக்கும் நடுவே பொதுவுடமை இயக்கம். காங்கிரஸுக்குப் பெரியவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்ல முடியாது. பெரியாருக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதேசமயம், அது பெருங்கூட்டம் என்று சொல்ல முடியாது. திராவிடர் கழகத்தின் வளர்ச்சியிலேயே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. ஒரு சரியான தருணம் முகிழ்ந்தபோது சமூக மறுமலர்ச்சி இயக்கமான அதிலிருந்து அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, அரசியல் களத்தை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டார். திமுக கூட்டங்களிலும் சரி, பத்திரிகை களிலும் சரி, பெரிய வசீகரம் தமிழ்.

தெளிவான சிந்தனையாளராகவும் முதிர்ச்சியான ராஜதந்திரியாகவும் வெளிப்பட்டார் அண்ணா: என்.ராம் பேட்டி


அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரை அறிந்துகொண்டவர்களில், பின்னாளில் இந்திய அளவில் ஊடகத் துறையில் ஜொலிப்பவராக மாறிய ஒரு தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான என்.ராம்தான் அவர். அப்போது அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர். அண்ணாவுடனான சந்திப்புதான் ராமுக்கு, அண்ணா மீது மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் மீதான வலுவான ஈர்ப்புக்கும் காரணமாகிறது. திராவிட இயக்கத்தை ஆய்வுநோக்கில் ஆராயத் தொடங்கியவர், காலப்போக்கில் அந்த இயக்கத்துக்கான தேவையையும் நியாயத்தையும் பேசுபவர் ஆனார். திராவிட இயக்கத்தவரால் ‘மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று குறிப்பிடப்பட்ட ‘தி இந்து’ நாளிதழின் வரலாற்றுப்போக்கில் பிற்பாடு ஒரு திருப்புமுனையை உண்டாக்கியவரான ராம், அண்ணாவின் அமெரிக்கப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

மாபெரும் தமிழ்க் கனவு



இன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி கோயில் தேரடித் திடலில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியிருக்கிறது. சுற்றுக் கிராமங்களிலிருந்து நகரை நோக்கி வரும் சாலைகள் அத்தனையும் மனிதத் தலைகளால் நிரம்பியிருக்கின்றன. கால்நடையாகத்தான் வருகிறார்கள் பெரும்பான்மையோர்; குழந்தைகளைத் தோளில் உட்காரவைத்தபடி நடந்து வருபவர்கள் அதிகம். மேடையில் உள்ளூர்ப் பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிட்டு, மைக்கைப் பிடிக்கும் திமுக மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி சொல்கிறார், “நம் இதயங்களையெல்லாம் கொள்ளைகொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுவார்.” கூட்டம் பேரோசை எழுப்புகிறது.

அன்று பகல் ஒரு மணிக்கு அண்ணா பேசுவார் என்று முன்வரிசையில் இடம்பிடிக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வர ஆரம்பித்த கூட்டம் அது. மணி இப்போது மாலை ஐந்து. உள்ளூர்ப் பேச்சாளர்கள் தொடர்கிறார்கள். ஒரு மணி நேரம். மீண்டும் குறுக்கிடுகிறார் நாராயணசாமி, “வழியெல்லாம் மக்கள் அலை நடுவே நீந்தி வந்துகொண்டிருக்கிறார் நம் அண்ணன்.” இன்னும் அரை மணி நேரம். “தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளி அண்ணா வடுவூரைத் தாண்டிவிட்டார்.” மேலும் அரை மணி நேரம். “மன்னார்குடி எல்லையைத் தொட்டுவிட்டார் நம் தலைவர். இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் முன் உரையாற்றப்போகிறார், வரலாறு மாறப்போகிறது...” கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

ஐந்தடி உயரம். கசங்கிய வேட்டி, சட்டை. மேல்துண்டில் புகையிலைப் பொடிக் கறை. கலைந்த தலைமுடி. ஒரு நாளைக்கு 20 கூட்டங்களுக்குத் திட்டமிட்டுக் கிளம்பினாலும், அதைத் தாண்டியும் வழியெங்கும் வண்டியை மறித்து ஒரு நிமிஷமேனும் தங்கள் ஊரில் பேசிவிட்டுச் செல்லப் பணிக்கும் மக்களின் அன்புக்காகப் பேசிப் பேசிக் களைத்தவரின் சோர்வு முகத்தில் தென்படுகிறது. ஆனால், கண் முன் தெரியும் மக்கள் வெள்ளத்தின் எழுச்சி தரும் புத்துணர்வு அவர் முகத்தை மலர்விக்கிறது. காரிலிருந்து இறங்குபவர் கூட்டத்தை உற்றுநோக்கியபடி சட்டையை லேசாகத் தூக்கிவிட்டு, வேட்டி மடியை இழுத்துக் கட்டுகிறார். அவர் ஒரு பேருரைக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. எந்த வகையிலும் தன் உருவத் தோற்றத்தில் ஆளை வசீகரித்துவிடும் தன்மை அற்ற அந்த எளிய மனிதர் மேடை ஏறுகிறார். உன்மத்தம் பிடிக்கிறது கூட்டத்துக்கு. மைக்கைப் பிடிக்கிறார். பேரோசை; பேரோசை. அண்ணா பேச்சைத் தொடங்குகிறார். சன்னதம் ஆடிய கூட்டம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. அவர் உரையை முடிக்கிறார். ஒட்டுமொத்த கூட்டமும் விண்ணதிர அவர் பெயரைச் சொல்லி முழங்குகிறது, “அண்ணா... வாழ்க!”, “தமிழ்… வெல்க!” கூட்டத்தின் கண்களில் நீர் கசிகிறது.

திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ரா. பேட்டி


தமிழ்நாட்டின் வெகுமக்கள் மொத்தமாக அண்ணாவைப் பேரறிஞர் என்று கொண்டாடியிருந்திருக்கலாம். ஆனால், நவீனத் தமிழிலக்கிய கர்த்தாக்களில் பெரும் பகுதியினர் மத்தியில் அவர் மீது கீழான பார்வையே அக்காலத்தில் இருந்தது. “அண்ணாவின் குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு, குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப்போவதில்லை. அவரை அறிஞர் என மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்று பெருமூடர்களே அழைக்கலாயினர்” என்று அண்ணாவின் மரணத்தையொட்டி - எழுத்துலகில் மட்டும் அல்லாமல், சமூக அரசியல் தளத்திலும் கொண்டாடப்பட்ட எழுத்தாளுமையான - ஜெயகாந்தன் எழுதிய குறிப்பை இங்கே ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அண்ணாவைப் பற்றியோ, அவர் வழிவந்த திராவிடக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியோ ஆக்கபூர்வமான மதிப்பீடுகள், விமர்சனங்கள், இடையீடுகள் நம்முடைய அறிவுசார் தளத்தில் நடக்காமல்போனதும் திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்கால கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் துரதிர்ஷ்டம்தான். ஆனால், திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது. நம் காலத்தின் தலைசிறந்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனுடன் இது தொடர்பாக உரையாடினேன்.

சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம் அண்ணா- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி




தமிழ்நாட்டு அரசியலில் அரிதான அனுபவங்களைக் கொண்டவர்களில் ஒருவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. ஓர் ஏழை இந்துவாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த கொடிக்கால், தமிழ்நாட்டின் தலித் அரசியல் எழுச்சி முகங்களில் ஒன்றாக அறியப்பட்டவர். சாதிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது ஐம்பது வயதுக்கு மேல் அம்பேத்கர் வழியில் இந்து மதத்தைத் துறந்தவர், இஸ்லாத்தை வரித்துக்கொண்டார். பொதுவுடைமை இயக்கம்தான் இவரது ஆரம்ப அரசியல் களம். குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு அவருக்கு உண்டு. அதன் பின் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கை முகமாகப் பார்க்கப்பட்ட இளையபெருமாளுடன் இணைந்து பணியாற்றினார். சிறுபான்மையின முன்னேற்றப் பயணத்திலும் இணைத்துக்கொண்டவர். மைய நீரோட்ட அரசியல் பாதையே விளிம்புநிலையினருக்கான பாதை என்பவர். சுதந்திர  இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றுக்கான சாட்சியமான கொடிக்கால், தன்னுடைய பயணம் நெடுகிலும் காங்கிரஸையும் திராவிட இயக்கத்தையும் விமர்சனபூர்வமாக அணுகியவர், வாழ்வின் பிற்பகுதியில் காந்தியையும் அண்ணாவையும் அடையாளம் கண்டார்.
மொழியுரிமையில் உங்களுக்குள்ள பிடிப்பின் காரணமாகவே தெற்கெல்லைப் போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். சாதி எதிர்ப்பும் உங்கள் இயல்பிலேயே இருக்கிறது. அப்படியிருக்க, திராவிட இயக்கம் எப்படி உங்களை இழந்தது?
முதலாவது விஷயம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. நான் பெரிய கடவுள் பக்தன் அல்ல என்றாலும் ஆன்மிகம் எங்கோ மனிதனுக்கு அவசியம் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இரண்டாவது, இந்த திராவிட நாடு என்று சொல்லப்பட்ட இன்றைய ஐந்து மாநிலங்களில் நாங்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இருந்தோம். மலையாள மொழி ஆதிக்கமும், மேல் சாதி ஆதிக்கமும் இணைந்து எங்களைப் பல வழிகளில் இம்சித்துவந்த அன்றைய காலகட்டத்தில், திராவிட நாடு அமைந்தால் திருவிதாங்கூர் ராஜ்ஜியம் எப்படியானதாக மாறும் என்பதில் குழப்பம் இருந்தது. நான் சொல்லும் அந்த இம்சைகளின் தீவிரத்தையும் இங்குள்ள தமிழர்களின் எதிர்மனோநிலையையும் நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ.தாணுப்பிள்ளை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அது தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று சொல்லியும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.எஸ்.ராமசாமிப் பிள்ளையே சொந்தக் கட்சிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து  ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுத்தார் என்றால், இதை உங்களால் நம்ப முடிகிறதா? 
அப்படிப்பட்ட நாட்களில் ம.பொ.சி. தலைமை வகித்த தமிழரசுக் கழகம், திராவிட இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஈர்ப்பைத் தருவதாக இப்பகுதியைச் சேர்ந்த எங்களுக்கு இருந்தது. ஆனால், அங்கும் நான் தொடர்ந்து இருந்திடவில்லை. ‘மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் – தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறை சென்றேன் இல்லையா, சிறைக்குள் கிடைத்த அறிமுகங்களும் அனுபவங்களும் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி, நான் சார்ந்திருந்த தமிழரசுக் கழகத்தில் இல்லை என்பதை விரைவிலேயே உணர்த்திவிட்டன.  சிறையில் நான் சந்தித்த இடதுசாரி இயக்கத்தினர் “சாதி, இனம், வர்க்க விடுதலைக்குப் பரந்துபட்டு சிந்திக்கும் ஒரு அமைப்பின் கீழ் பணியாற்ற வேண்டும் – அதற்கு ஒரே வழி பொதுவுடைமை இயக்கம்” என்றார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கக் கனவுகாணும் சங்கம்புழாவின்  ஒரு கவிதையை அவர்கள் வாசித்தபோது கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன். அடுத்த இருபத்தைந்து வருஷங்கள் அதுவே என் இயக்கமாக இருந்தது.
அண்ணாவை முதன்முதலாக எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
திருத்தமிழகம் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வடசேரியில் உள்ள பெரியாரசிங்கம் தெருவில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்தார். தேதிகூட ஞாபகம் இருக்கிறது 30.7.1954. அன்றுதான் அண்ணாவைப் பார்க்கிறேன். ஆளையே அடித்துப்போடுவதாக அவருடைய பேச்சு இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறப்பட்டாலும், எப்படி வடக்கத்திய - சனாதன ஏகாதிபத்தியத்தின் கீழ் நாடு இருக்கிறது – ஏன் தமிழ் மக்களுக்கும் ஏனைய திராவிட இனத்தினருக்கும் சுயாட்சி வேண்டும் என்று பேசினார். இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்போது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பது புரிகிறது.

மிச்சமிருக்கும் விடுதலைப் போராட்டம்... காந்தி இருக்கிறார்; காந்தியர்கள் இருக்கிறார்களா?


இந்த இலையுதிர்காலத்தின் தொடக்க நாட்களில் ‘குறுங்காடு’ தங்கசாமி உதிர்ந்துபோனார். தன்னுடைய சொந்த ஊரான சேந்தங்குடியில் ஒரு சின்ன காட்டையே உருவாக்கியவர் தங்கசாமி. ஐம்பதாண்டுகளில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்ததோடு அல்லாமல், ஊர் ஊராகச் சென்று மரங்களை வளர்க்கப் பிரச்சாரம் செய்தார். கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், விதைகளைத் தன் கை வழியே பரிமாறியவர் தங்கசாமி. தொடக்கத்தில் விவசாயத்திலிருந்து கரைசேர பொருளாதாரரீதியான ஒரு ஏற்பாடாக மரம் வளர்ப்பைப் பார்த்தவர், பிற்பாடு சுற்றுச்சூழலில் அது உண்டாக்கிய மாற்றங்களைப் பார்த்து வியந்து தன்னை ஒரு சூழல் பாதுகாப்புச் செயல்வீரராக மாற்றிக்கொண்டார். ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் மூன்றில் ஒரு பங்கையேனும் மரம் வளர்க்க வேண்டும் என்பார் அவர். ஒரு வானொலி உரைச்சித்திரத்தைக் கேட்டு, மரம் வளர்ப்பை நோக்கித் திரும்பிய தங்கசாமியை மரபுவழி வேளாண்மையை நோக்கித் திருப்பியவர் நம்மாழ்வார்.

திருச்சியில் இருந்த நாட்களில் ஒரு காலகட்டம் நெடுகிலும் நம்மாழ்வாருடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஸ்ரீரங்கத்தில் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். நல்ல பனிக்காலம். அதிகாலையில் ததும்பத் ததும்ப நீர் செல்லும் காவிரியைக் கடந்து அவர் வீட்டுக்குச் செல்வேன். மொட்டை மாடியில் சின்ன குடிலில் இருப்பார். அதுவுமே அவருக்கு முகாம் அலுவலகம் மாதிரிதான் இருந்தது. சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். அடுத்து, கூட்டங்களுக்கு அவரை அழைத்துச்செல்ல விவசாயிகள் வருவார்கள். இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், அதிகபட்சம் நூறு பேர். பெரும்பாலான கூட்டங்களில் இவ்வளவு பேர்தான் பார்வையாளர்கள். தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகப் போய் பேசினார். இது போக ஓரிருவராகவோ நான்கைந்தராகவோ பார்க்க வருபவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். “எண்ணிக்கை முக்கியம் இல்ல. விதை ஆழமா விழணும். நல்ல விதை ஒண்ணு பிடிச்சுக்கிட்டா போதும். மொத்த சமுதாயத்துக்கும் அது இருக்குற வரைக்கும் நிழல் தந்துடும்!”

தனி ஒரு மனிதராகக் கடந்த கால் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உணவுப் பண்பாட்டில் நம்மாழ்வார் நிகழ்த்திய மாற்றம் வேறு யாரும் செய்திராதது. தமிழ்நாடு முழுக்க இன்று சாலையோரங்கள் பழச்சாறுக் கடைகளாலும் கரும்புச்சாறு கடைகளாலும் இளநீர் வண்டிகளாலும் நிரம்பியிருக்கின்றன. சர்வதேச அளவில் குளிர்பானத் துறையில் கோலோச்சும் இரு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விற்பனைச் சரிவை ஈடுகட்ட வழி தேடி கள ஆய்வு நடத்துகின்றன. மதுக்கடைகள், பேரங்காடிகள், பெருந்திரையரங்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களைத் தாண்டி தமிழ்நாட்டில் குளிர்பானம் விற்பதில்லை. தமிழில் தங்களுடைய குளிர்பானத்தின் பெயரை மாற்றிப்பார்த்தாலேனும் விற்க முடியுமா என்று நிறுவனங்கள் கையாண்டுபார்த்த உத்தியெல்லாம்கூட பலித்தபாடில்லை.

பிரிட்டன் கிராமங்களினூடே ஒரு பயணம்


விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருந்த இரவிலேயே அங்கு வந்தடைந்திருந்தோம். கடும்பனி கார் ஜன்னலின் கண்ணாடி மீது நுங்கு தசைபோல் படர்ந்திருந்தது. அதிகாலையில் புறப்பட்டு இரவில் திரும்பிவிடும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார் ஹெலன். நெடுஞ்சாலையை ஒட்டியும், பிரதான சாலையிலிருந்து பிரிந்தோடி, ஊருக்குள் சுற்றி இன்னொரு பிரதான சாலையில் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருந்த கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து இந்தப் பயணத்தில் அவர் கோத்திருந்தார். வெளியே இருந்த பொழுதுக்கும், கடிகாரம் காட்டும் நேரத்துக்குமான தொடர்புகள் முற்றிலுமாக அறுபட்டிருப்பதாகத் தோன்றியது. கார் கண்ணாடிக்கு வெளியே சாலைக்கு மேலே கொட்டிக்கிடந்த நட்சத்திரங்கள் மத்தியில் வானம் தன்னை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் கிராமங்களின் சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடங்களில் அங்காடிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என்று அனேகமாக எல்லா வசதிகளும் தென்பட்டன. ஊருக்குள் பிரிந்த சாலை நோக்கி காரை ஓட்டலானார் ஹெலன். ஜன்னல் கண்ணாடியைக் கொஞ்சம் கீழ் இறக்கினேன். அடர் கருநீலத்தில் இருபுறங்களிலும் விரவிக்கிடந்த வயல்களில், அணிவகுப்பில் நிற்கும் சிப்பாய்களைப் போல அலையலையாகக் குத்திட்டு நின்றிருந்தன தானியக் கதிர்கள். இடைவெளி விட்டுவிட்டு தூரத்தில் விளக்கெரியும் பண்ணை வீடுகள். புரண்டுகொண்டிருந்த கிராமத்தை விளக்கொளி வழியே பார்த்தபடியிருந்தேன்.