வலதுசாரிகள் எப்படிச் சிரிக்கிறார்கள்?


சோவியத் ஒன்றியம் ஒருநாள் உடைந்து சிதறியது. ரஷ்யாவின் வீதிகளில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வந்த, பீரங்கிகளின் வாயில் பூங்கொத்துகளைச் செருகினார்கள் மக்கள். ராணுவத்தினர் சிரித்தவாறே கையசைத்துக் கடந்தார்கள். ஒரு மர்மக் கணத்தில் தகர்ந்து நொறுங்கியது பெர்லின் சுவர். ஆளுக்கு ஒரு கோடரியுடன் வந்து ஒரு கல்லையாவது பெயர்த்தெடுத்துச் செல்ல முயன்றார்கள். காரணங்கள் நீண்ட காலமாகக் கனல்கின்றன. வரலாறு நம்ப முடியாத தருணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. கூடவே, ஒருபோதும் எதிர்பாராத தொடர் விளைவுகளையும் காலத்தின் கையில் திணித்துச் செல்கிறது.

உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றும் முதலாளித்துவத்தின் இதயமுமான பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருப்பது, உலகமயமாக்கல் மீது விழுந்திருக்கும் ஒரு அடியாகவே தோன்றுகிறது. இது உருவாக்கும் அதிர்வலைகளின் தாக்கம், உலகம் எளிதில் கடக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றவில்லை.


சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கிளர்ந்தெழுந்த உலகமயமாக்கல் காலகட்டம் பெரும் சந்தேக நிழல்கள், எதிர்க் கூச்சல்கள், பய இருளின் இடையே வளர்ந்தெழுந்தது என்றாலும், அதை நம்பிக்கையின் ஊடே பார்த்த கண்களும் உண்டு. உலகின் அழுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர், ஒரு புதிய வாய்ப்புலகம் உருவாகிவருகிறது என்றும் அது சுத்திகரிக்கப்பட்ட முதலாளித்துவம் என்றும் நம்பினார்கள். இந்தியாவிலேயே தலித் அறிவுஜீவிகள், தொழில்முனைவோர் சிலர், இந்தியத் தொழில்துறையைச் சாதியப் பிடியிலிருந்து உலகமயமாக்கல் விடுவிக்கும் என்று நம்பினர். அந்நாட்களில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியபோது, அம்பேத்கரியர்கள் பலர் அதிலிருந்து விலகி நின்றது ஞாபகத்துக்கு வருகிறது.


இந்த நம்பிக்கைகளுக்கு உலகமயமாக்கம் செய்த நியாயம் என்ன? ஒரு இந்திய உதாரணம் இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு, காக்கி அரைக்கால்சட்டையில் ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தவர் அரசு ஊழியர். இன்று நீலநிற முழுக்கால்சட்டையுடன் தொப்பி அணிந்து, அதே ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருப்பவர் அவரது மகன். அவரிடம் இயந்திரங்கள் இருக்கின்றன. காலில் பூட்ஸ், கையில் கையுறை. இன்றைக்கு அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தக் கூலி. அரசு நிறுவனத்துக்கும் தொழிலாளிக்கும் இடையில் அயல் பணி ஒப்படைப்பு நிறுவனம் என்ற பெயரில் ஒரு தரகுக் கும்பலும் உண்டு கொழிக்கிறது.


சொத்துகளை விற்று உருவாகும் வசதியும் சௌகரியங்களும் வெகுநாள் நீடிப்பதில்லை. 2008-ல் உலகளாவியப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போதே, ஒரு விஷயம் வெளிப்பட்டது: உலகமயமாக்கலுடனான மக்களின் தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது; மோசமான காலம் சமீபிக்கிறது!

புத்தகம் என்ன சக்களத்தரா?


சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. வெள்ளத்தின் தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சியில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார்.

பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கலாக பெரும்பாலான பதிப்பகங்கள் இம்முறை பாதிக்கப்பட்டிருக்கின்றன. “சென்னையில் ஜனவரியில் புத்தகக்காட்சி நடக்கும்போது மார்கழி இசை விழா, நாட்டிய விழா, புத்தாண்டு பொங்கல் கொண்டாட்டங்களோடு அதுவும் கூட்டு சேர்ந்துகொள்கிறது. புத்தகக்காட்சிக்குக் குடும்பத்தோடு செல்வதும் ஆளுக்கொரு புத்தகமேனும் வாங்குவதும் அப்போது ஒரு பொழுதுபோக்கு சம்பிரதாயம் ஆகிவிடுகிறது. இந்தக் கோடையில் அப்படி யாரும் வருவதில்லை. தீவிர வாசகர்களின் வருகை மட்டுமே விற்பனைக்குப் போதுமானதாக இல்லை” என்று சொன்னார்கள்.

இந்த முறை புத்தகக் காட்சி நடக்கும் இடமான தீவுத்திடலுக்கு ஒரு வரலாறு உண்டு. சென்னையில் வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருள்காட்சி நடக்கும் இடம் இது. எந்தப் பொருள்காட்சியும் கூட்டம் இல்லை என்று சொல்லி முடங்கியதாகத் தெரியவில்லை. வெயில் புழுக்கம் பெரும் சங்கடம் என்றாலும், அதை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.