சூப்பர் ஸ்டார் கல்கி




அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம் நோக்கி  நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப் படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும் காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம் அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும் நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில் பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.

நான் கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான  அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால் நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால் வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன் விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து, எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி  பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து 1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர் மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக் கூடாதா?



இந்தியாவுக்கு வெளியே இப்போது அதிகம் அமெரிக்காவைக் கவனிக்கிறேன். குவிமையம் நியூயார்க். கரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா என்றால், அமெரிக்காவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் நியூயார்க்; அதிகம் பாதிப்புக்குள்ளான நகரம் நியூயார்க் நகரம். கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள நாடான ரஷ்யாவைக் காட்டிலும் நியூயார்க்கின் எண்ணிக்கை அதிகம்.

நியூயார்க் என்ற சொல்லே வானளாவிய கனவுகளோடு பொருந்தியது. எத்தனை நள்ளிரவுக்குப் பின் ஒருவர் தூங்கச் செல்லும்போதும், அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலைக்கு வெளியே பிரகாச ஒளியில் நியூயார்க் நகரம் மிதந்துகொண்டிருக்கிறது. நியூயார்க் தூங்குவதே இல்லை. மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானத்தை முட்டிப்பார்க்க உயர்ந்துகொண்டேயிருக்கும் நியூயார்க்கின் கட்டிடங்கள் மனித குலத்தின் இடையறாத சாத்தியங்களைப் பிரகடனப்படுத்தியபடியே வளர்கின்றன. அமெரிக்காவின் முதல் தலைநகரமாக இருந்தது அதுதான்; வாஷிங்டன் பின்னாளில் அந்த இடத்தைப் பறித்துக்கொண்டாலும் இன்றைக்கும் நியூயார்க்கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.

அமெரிக்காவின் நிதித் தலைநகரம் நியூயார்க். இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதினைந்து நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் நியூயார்க்கிலேயே வசிக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தங்கத்தை இருப்பில்  வைத்திருக்கும் நகரம் அது. உலகின் புகழ்பெற்ற நகர அடையாளச் சின்னமான லண்டன் டவர் பாலத்தைவிட நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் பழமையானது என்று தன் நகரத்தை ஒரு நியூயார்க்கியர் அறிமுகப்படுத்தும்போது, அதில் வேறொரு சூசகச் செய்தி உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பூமியிலேயே மேம்பட்ட வசதிகளையும், பாதுகாப்பான சூழலையும் தங்கள் நகரில் உருவாக்கியிருப்பதாகவும் அது ஒரு ஒரு நவீன தொன்மம் என்றும் நியூயார்க்கியர்கள் நீண்ட காலமாக நம்பிவருகிறார்கள். அந்த நியூயார்க் கரோனாவின் முன் உறைந்திருக்கிறது. நிரம்பி வழியும் நியூயார்க்கின் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் எனும் செய்தி கேட்டாலே மலைக்கின்றன. பெரிய பெரிய சவக்குழிகளுக்குள் உயிரிழப்போர் சடலங்களின் சவப்பெட்டிகள் அப்படியே தொகுப்பாக மண்ணுக்குள் இறங்குகின்றன.

நான் கரோனாவை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்வதற்கு இணையாக மானுடரீதியாக உணர்ந்துகொள்வதற்கும் முயற்சிக்கிறேன். அமெரிக்கா மீதான, நியூயார்க் மீதான கரோனாவின் அடி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அகங்காரம் மற்றும் பேராசை மீதான அடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா இன்று பல நாடுகளின் கனவு; நியூயார்க் பல நகரங்களின் கனவு. நாமும் அப்படியாகத்தான் ஆசைப்படுகிறோம். கடவுள் எச்சரிப்பதுபோலத் தோன்றுகிறது. கரோனாவைக் கிருமியாகப் புரிந்துகொள்வதோடு மனிதகுலம் அதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டால், எதிர்காலத்தில் நமக்குக் கூடுதலான பலன்கள் கிட்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நியூயார்க்கை வேறு சில விஷயங்களுக்காகப் பிடிக்கும். பன்மைத்துவம் - ஜனநாயகம். உலகிலேயே அதிகமான மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நகரம் அது; கிட்டத்தட்ட சரிபாதி வீடுகளில் ஆங்கிலம் அல்லாத மொழியே தாய்மொழி. தனிநபர் சுதந்திரத்தை அது தூக்கிப் பிடிக்கிறது. பெண்கள் எந்த இடத்துக்கும் எந்த உடையிலும் செல்லும் உரிமையைச் சட்டபூர்வமாகவே பாதுகாக்கும் நகரம் அது; மேலாடை இல்லாமலும்கூட நியூயார்க்கில் ஒருவர் பொது இடத்துக்கு வர முடியும். உலகிலேயே அதிகாரம் மிக்க அதிபரைக் கொண்ட நாடு என்றாலும், கூட்டாட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதுமே நியூயார்க் உயிர்த்துடிப்போடு பாதுகாத்திருக்கிறது; இந்த கரோனா காலத்தில் ஜனநாயகத்தின் இயக்கமும் கூட்டாட்சியின் உத்வேக ஆற்றலும் அங்கு மேலும் கூடியிருக்கின்றன.

பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு



அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்கியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது!

கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு ரயில் பாதை. அதன் நடுவே ரத்தம் தோய சிதறிக் கிடக்கும் சப்பாத்திகள். பக்கத்திலேயே சிதைந்த உடல்களின் பாகங்கள். இந்த ஒரு காட்சி கரோனா வரலாற்றிலிருந்து அகலப்போவதே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கழித்தாலும், எதிர்வரும் தலைமுறைகள் நினைவுகூர்கையில் கரோனாவை இந்தியா எதிர்கொண்ட ஒட்டுமொத்த சூழலையும் ஓர் உருவகமாக அந்தக் காட்சி சொல்லும். ஊரடங்கின் விளைவாகப் பிழைப்பை இழந்து, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்துக்கு ரயில் பாதை வழியே கால்நடையாகச் செல்லத் துணிந்து, ஔரங்காபாத் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பதினாறு பேரும் அந்தக் கொடிய அதிகாலையில் எழுப்பிய மரண ஓலம் இந்த நாட்டின் மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பெரும் அறைகூவல்.

இந்தியாவின் அமைப்பில் உள்ள சகல பலவீனங்களையும் கரோனா அம்பலமாக்குகிறது. வணிகத் தலைநகரம் - முன்னேற்றத்தின் முகம் என்று நாம் கொண்டாடிவந்த மும்பைதான் இன்று நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம். நாட்டுக்கே பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட குஜராத், கரோனா மரணங்களில் முன்வரிசையில் இருக்கிறது. ஆலைகளுக்கும் தொழில்களுக்கும் பேர்போன குஜராத்தி நகரங்களால் தம் தொழிலாளர்களை சில வாரங்களுக்குக்கூட நிம்மதியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. குஜராத்தின் சண்டோலாவிலுள்ள ஆலை ஒன்றில் கூலியாக வேலை பார்த்துவந்த ஜாதவ் அசாமின் கதாரியா கிராமத்துக்குப் புறப்பட்டார்; 25 நாட்கள் நடந்தும், இடையிடையே தென்பட்ட வண்டிகளில் தொற்றியபடியும் 2,800 கி.மீ. பயணித்து, தன் சொந்த ஊரை அவர் அடைந்தபோது ஜாதவின் உடல் நைந்துபோயிருந்தது. ‘எங்களை விடுங்கள்; ஜாதவ் மாதிரியேனும் ஊர் போய் சேர்கிறோம்’ என்று சூரத்திலுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

கொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி


நம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன? கரோனா காலத்திய உலகளாவிய போக்குகளைக் கடந்த காலத்தின் வழி புரிந்துகொள்ள முடியுமா? சமூக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனுடன் பேசினேன். பேராசிரியர் இப்போது மதுரையில் இருக்கிறார். நள்ளிரவிலும் தூங்காத நகரம் இப்போது நண்பகலிலும் கொஞ்சம் அயர்ந்திருக்கிறது.

மதுரை என்றதுமே சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது, சங்க காலம் நினைவுக்கு வந்துவிடுகிறது, திருவிழாக்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. தொன்மையான மதுரை நகரம், தமிழர்களின் நினைவுகளில் இடையறாது ஒளிர்ந்துகொண்டிருக்கும் நகரம். வீட்டுக்குள் இருக்கும் உங்கள் நினைவுகளில் ஊரடங்கிய மதுரை எப்படியாகக் காட்சியளிக்கிறது?
ஒளி மங்கியதாகத் தோன்றுகிறது. அந்த ஒளி வேறு எதுவும் இல்லை, மக்களுடைய இடையறாத இயக்கம்தான் அது. வரலாற்றில் பல அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட நகரம்தான் இது. மக்களை ஒடுக்கிய ஆட்சியாளர்களின் அன்றைய அடக்குமுறைகள் எப்படி இருந்திருக்கும்? இந்த ஊரடங்கு அதைக் காட்டுவதுபோல இருக்கிறது.

கரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்: மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி


அடிப்படையில் மருத்துவரும், தற்செயல் அரசியலருமான இரா.செந்தில், வெகுமக்களிடையே எப்போதும் புழக்கத்தில் இருப்பவர். தீவிரமான வாசகர், சமூகச் செயல்பாட்டாளர், பாமகவின் தாராளர்களில் ஒருவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனா கிருமியின் தாக்கம் சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாது, சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், கிருமியிடமிருந்து தப்பிக்கும் உத்திக்கு மாற்றாகக் கிருமியை எதிர்கொள்ளும் உத்திக்கு மாற வேண்டும் என்று பேசுபவர் செந்தில். இந்தியா முந்தைய உத்தியிலேயே தொடர்ந்து சென்றால், பசியில் பல கோடி மக்களை நாம் தள்ளிவிடுவோம் என்பதால், பிந்தைய உத்தியையும் பரிசீலிப்பது மிகுந்த அவசியம் ஆகிறது.

கரோனாவுடனான இன்றைய சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கரோனா தொடர்பிலான உலகின் ஒவ்வொரு செய்தியையும் நான் வாசிக்கிறேன். தொடக்கத்தில் கிருமியிடமிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்பட்ட வழிமுறைகளையே ஒரு மருத்துவராக நானும் தீவிரமாக நம்பினேன், பின்பற்றினேன். இது நாட்களில் அல்லது வாரங்களில் முடியும் பிரச்சினை இல்லை என்பதை நாளடைவில் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று யோசிக்கலானேன். ஏனென்றால், நான் மருத்துவத்தில் மட்டும் அல்ல; அரசியலிலும் இருக்கிறேன்; அன்றாடம் சாமானிய மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பார்க்கிறேன், பலர் சொல்லக் கேட்கிறேன். இது நீங்கலாக உலகின் பல்வேறு நாடுகளும் இதை எப்படி அணுகுகின்றன என்றும் பார்க்கிறேன். மொத்த உலகமும் கரோனாவுடன் வாழப் பழகி அதை எதிர்கொண்டு கடப்பது எனும் உத்தி நோக்கியே நகர வேண்டும்.  ஏனென்றால், வேறு வழி நமக்கு இல்லை.

இந்தியாவுக்குத் தேவை அதிகாரப்பரவலாக்கல் சிகிச்சை



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள்கின்றன என்கிற அணுகுமுறை வேறுபாட்டைக்  காணும் அசாதாரணமான சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை ஒரு உத்தியாகக் கையில் எடுத்தன. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கும்கூட அந்தந்த நாட்டின் இயல்புக்கேற்ற பண்பையே வெளிப்படுத்துகிறது. சீனா மிகக் கடுமையான கண்காணிப்பு வளையத்தைத் தன் நாட்டு ஊரடங்குக்கு அணிவித்தது; முற்றிலுமாக மக்களின் எல்லா வெளிச் செயல்பாடுகளையும் முடக்கியது. மக்கள் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டு அவர்களுடைய பெரும்பாலான செயல்பாடுகளை அனுமதித்தது ஸ்வீடன். நாம் எதையெல்லாம் அத்தியாவசியமாகக் கருதுகிறோம்? நாட்டுக்கு நாடு இதுவும் வேறுபட்டது. இத்தாலியில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலில் புத்தகக் கடைகளும் இருந்தன; இத்தாலியர்களுக்குப் புத்தகங்களும் அத்தியாவசியம். அமெரிக்காவில், ‘ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்’ என்று இந்த ஊரடங்குக் காலத்திலும் போராட்டம் நடத்த முடிகிறது. அமெரிக்கர்களுக்குப் போராட்ட உரிமையும் அத்தியாவசியம். நாம் நிறைய உள்நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.