காங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்




கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில்  வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து  வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”

அரச வன்முறையின் ஊற்றுக்கண்



நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.

அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.

நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?