இந்த இலையுதிர்காலத்தின் தொடக்க நாட்களில் ‘குறுங்காடு’ தங்கசாமி உதிர்ந்துபோனார். தன்னுடைய சொந்த ஊரான சேந்தங்குடியில் ஒரு சின்ன காட்டையே உருவாக்கியவர் தங்கசாமி. ஐம்பதாண்டுகளில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்ததோடு அல்லாமல், ஊர் ஊராகச் சென்று மரங்களை வளர்க்கப் பிரச்சாரம் செய்தார். கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், விதைகளைத் தன் கை வழியே பரிமாறியவர் தங்கசாமி. தொடக்கத்தில் விவசாயத்திலிருந்து கரைசேர பொருளாதாரரீதியான ஒரு ஏற்பாடாக மரம் வளர்ப்பைப் பார்த்தவர், பிற்பாடு சுற்றுச்சூழலில் அது உண்டாக்கிய மாற்றங்களைப் பார்த்து வியந்து தன்னை ஒரு சூழல் பாதுகாப்புச் செயல்வீரராக மாற்றிக்கொண்டார். ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமுள்ள நிலத்தில் மூன்றில் ஒரு பங்கையேனும் மரம் வளர்க்க வேண்டும் என்பார் அவர். ஒரு வானொலி உரைச்சித்திரத்தைக் கேட்டு, மரம் வளர்ப்பை நோக்கித் திரும்பிய தங்கசாமியை மரபுவழி வேளாண்மையை நோக்கித் திருப்பியவர் நம்மாழ்வார்.
திருச்சியில் இருந்த நாட்களில் ஒரு காலகட்டம் நெடுகிலும் நம்மாழ்வாருடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஸ்ரீரங்கத்தில் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். நல்ல பனிக்காலம். அதிகாலையில் ததும்பத் ததும்ப நீர் செல்லும் காவிரியைக் கடந்து அவர் வீட்டுக்குச் செல்வேன். மொட்டை மாடியில் சின்ன குடிலில் இருப்பார். அதுவுமே அவருக்கு முகாம் அலுவலகம் மாதிரிதான் இருந்தது. சில மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். அடுத்து, கூட்டங்களுக்கு அவரை அழைத்துச்செல்ல விவசாயிகள் வருவார்கள். இருபத்தைந்து பேர், ஐம்பது பேர், அதிகபட்சம் நூறு பேர். பெரும்பாலான கூட்டங்களில் இவ்வளவு பேர்தான் பார்வையாளர்கள். தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகப் போய் பேசினார். இது போக ஓரிருவராகவோ நான்கைந்தராகவோ பார்க்க வருபவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தார். “எண்ணிக்கை முக்கியம் இல்ல. விதை ஆழமா விழணும். நல்ல விதை ஒண்ணு பிடிச்சுக்கிட்டா போதும். மொத்த சமுதாயத்துக்கும் அது இருக்குற வரைக்கும் நிழல் தந்துடும்!”
தனி ஒரு மனிதராகக் கடந்த கால் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உணவுப் பண்பாட்டில் நம்மாழ்வார் நிகழ்த்திய மாற்றம் வேறு யாரும் செய்திராதது. தமிழ்நாடு முழுக்க இன்று சாலையோரங்கள் பழச்சாறுக் கடைகளாலும் கரும்புச்சாறு கடைகளாலும் இளநீர் வண்டிகளாலும் நிரம்பியிருக்கின்றன. சர்வதேச அளவில் குளிர்பானத் துறையில் கோலோச்சும் இரு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விற்பனைச் சரிவை ஈடுகட்ட வழி தேடி கள ஆய்வு நடத்துகின்றன. மதுக்கடைகள், பேரங்காடிகள், பெருந்திரையரங்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களைத் தாண்டி தமிழ்நாட்டில் குளிர்பானம் விற்பதில்லை. தமிழில் தங்களுடைய குளிர்பானத்தின் பெயரை மாற்றிப்பார்த்தாலேனும் விற்க முடியுமா என்று நிறுவனங்கள் கையாண்டுபார்த்த உத்தியெல்லாம்கூட பலித்தபாடில்லை.