தமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்?




இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில் திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது? இப்படிப் பல எண்ணங்கள்.  

அன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”

அதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது? 


இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை


அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.

இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.
 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!


நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.

ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?

புதிய கல்விக் கொள்கை ஆர்வம் கொள்ளும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.

உலகம் எந்த மொழியில் படிக்கிறது?

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு


நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.

ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.

நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

காங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்




கொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில்  வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து  வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!” தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”

அரச வன்முறையின் ஊற்றுக்கண்



நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம்.

அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் குத்திக்குதறி அவர்கள் விளையாடும்போது, வாயை மூடியபடி கதற வேண்டும். கொடூர விளையாட்டு அவர்களுக்கு அலுத்துப்போகும்போதோ, தாங்கவே முடியாத எல்லையை உடல் அடையும்போதோ வெளியே இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டு, காவல் நிலையத்திலிருந்து நீங்கள் இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். உடலின் ரணமும், ரத்தம் கசிந்த உடைகளும் தெரியாத தொலைவில் நீதிபதி ஒருவரின் முன் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் நிறுத்தப்படுகிறீர்கள். அந்த நீதிபதி உங்களைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். பின்னர் நீங்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறீர்கள். அங்கே உங்களுடைய மோசமான உடல்நிலையைப் பார்த்தும், காவல் அதிகாரிகளைச் சங்கடப்படுத்தாத வகையில் அவர்கள் விரும்பும் திருப்திகரமான ஒரு மருத்துவச் சான்றிதழை, அரசு மருத்துவர் வழங்குகிறார். பின்னர், சிறையில் நீங்களும் உங்கள் பிள்ளையும் உயிரை விடுகிறீர்கள்.

நாட்டு மக்கள் அதிர்கிறார்கள். எல்லோரும் பேசத் தொடங்கியதும், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல்வர் பேசுகிறார். இந்தக் கொடுங்கோன்மையை வன்முறை என்று சொல்லக்கூட தயங்கும் அவர், மகன் மூச்சுத்திணறலாலும், தந்தை உடல்நலக் குறைவாலும் இறந்ததாகச் சொல்கிறார். எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்கவும், குற்றஞ்சாட்டப்படும் காவல் துறையினரைப் பணியிடை நீக்கம் செய்யும் அவர், அதேசமயம் அவர்கள் மீது அதுவரை பதியப்படாத ஒரு வழக்கை, தன்னுடைய பொறுப்புக்குக் கீழேயுள்ள காவல் துறையிடமிருந்து தன்னுடைய பொறுப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றவிருப்பதாக அறிவிக்கிறார். இதனிடையே சம்பவத்தை விசாரிக்க நீதிபதி ஒருவர் செல்கிறார். விசாரணையில் ‘உங்களால் ஒன்றும் புடுங்கக்கூட முடியாது’ என்று நீதிபதிக்கு சவால் விடுகிறார் ஒரு காவலர். விசாரணைக்குக் காவல் துறையினர் ஒத்துழைக்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் நிர்வாகத்தைக் காவல் துறையிடமிருந்து பறித்து, வருவாய்த் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது நீதிமன்றம்.

அன்றாடம் காவல் கம்பிகளுக்குப் பின் ஐந்து பேர் உயிரை விடும் ஒரு நாட்டில் இந்த விவகாரம் எப்படி முடியும் என்ற கேள்விக்கு முன் சுற்றிலும் இங்கு நடக்கும் விவாதங்களிலிருந்து வேறு ஒரு அடிப்படையான கேள்விக்கு முகம் கொடுப்போம். இது வெறும் காவல் துறையின் சீர்கேடா அல்லது ஒட்டுமொத்த அமைப்பினுடைய சீர்கேட்டின் வெளிப்பாடா?

நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம்!



அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இத்தகு உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

பொதுவாக, நகரங்களை நவீனத்துடனும், கிராமங்களைப் புராதனத்துடனும் பொருத்திப் பார்க்கும் மனோபாவம் உலகம் முழுக்க நிலவுகிறது. உண்மை அப்படி இல்லை என்றாலும்கூட. அழிவில் புதையுண்டுபோன சிந்து சமவெளி, கீழடி தொடங்கி தம்மை மீட்டுருவாக்கியபடியே வந்திருக்கும் ஏதென்ஸ், ரோம், லண்டன் வரை நமக்குச் சொல்வது, நகரங்களின் புராதனத்தையும்தான். தீவிரமான விமர்சனங்களை நகரங்கள் மீது கொண்டிருந்தாலும் ஏன் மனித குலம் இடையறாது நகரங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது? ஏனென்றால், வாழ்க்கையை நேற்றைய புதுமையும்கூட மூடிடாத வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கும் பண்பை நகரங்கள் பெற்றிருக்கின்றன. அப்படியென்றால், கிராமங்கள் எப்படி நீடிக்கின்றன? அவை இன்றைய புதுமையையும் வாழ்க்கையின் நெடிய பழமையோடு இணைக்க முற்படுகின்றன. ஆக, மனித குலத்தின் புராதன புதுப்பிப்பு சக்தி நகரங்கள் என்றால், புராதனத்தைத் தக்கவைக்கும் சக்தி கிராமங்கள். இரண்டுக்கும் இடையிலான சமநிலை முக்கியம்.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?



இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

சூப்பர் ஸ்டார் கல்கி




அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம் நோக்கி  நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப் படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும் காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம் அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும் நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில் பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.

நான் கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான  அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால் நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால் வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன் விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து, எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி  பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து 1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர் மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக் கூடாதா?



இந்தியாவுக்கு வெளியே இப்போது அதிகம் அமெரிக்காவைக் கவனிக்கிறேன். குவிமையம் நியூயார்க். கரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா என்றால், அமெரிக்காவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் நியூயார்க்; அதிகம் பாதிப்புக்குள்ளான நகரம் நியூயார்க் நகரம். கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள நாடான ரஷ்யாவைக் காட்டிலும் நியூயார்க்கின் எண்ணிக்கை அதிகம்.

நியூயார்க் என்ற சொல்லே வானளாவிய கனவுகளோடு பொருந்தியது. எத்தனை நள்ளிரவுக்குப் பின் ஒருவர் தூங்கச் செல்லும்போதும், அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலைக்கு வெளியே பிரகாச ஒளியில் நியூயார்க் நகரம் மிதந்துகொண்டிருக்கிறது. நியூயார்க் தூங்குவதே இல்லை. மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானத்தை முட்டிப்பார்க்க உயர்ந்துகொண்டேயிருக்கும் நியூயார்க்கின் கட்டிடங்கள் மனித குலத்தின் இடையறாத சாத்தியங்களைப் பிரகடனப்படுத்தியபடியே வளர்கின்றன. அமெரிக்காவின் முதல் தலைநகரமாக இருந்தது அதுதான்; வாஷிங்டன் பின்னாளில் அந்த இடத்தைப் பறித்துக்கொண்டாலும் இன்றைக்கும் நியூயார்க்கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.

அமெரிக்காவின் நிதித் தலைநகரம் நியூயார்க். இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதினைந்து நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் நியூயார்க்கிலேயே வசிக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தங்கத்தை இருப்பில்  வைத்திருக்கும் நகரம் அது. உலகின் புகழ்பெற்ற நகர அடையாளச் சின்னமான லண்டன் டவர் பாலத்தைவிட நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் பழமையானது என்று தன் நகரத்தை ஒரு நியூயார்க்கியர் அறிமுகப்படுத்தும்போது, அதில் வேறொரு சூசகச் செய்தி உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பூமியிலேயே மேம்பட்ட வசதிகளையும், பாதுகாப்பான சூழலையும் தங்கள் நகரில் உருவாக்கியிருப்பதாகவும் அது ஒரு ஒரு நவீன தொன்மம் என்றும் நியூயார்க்கியர்கள் நீண்ட காலமாக நம்பிவருகிறார்கள். அந்த நியூயார்க் கரோனாவின் முன் உறைந்திருக்கிறது. நிரம்பி வழியும் நியூயார்க்கின் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் எனும் செய்தி கேட்டாலே மலைக்கின்றன. பெரிய பெரிய சவக்குழிகளுக்குள் உயிரிழப்போர் சடலங்களின் சவப்பெட்டிகள் அப்படியே தொகுப்பாக மண்ணுக்குள் இறங்குகின்றன.

நான் கரோனாவை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்வதற்கு இணையாக மானுடரீதியாக உணர்ந்துகொள்வதற்கும் முயற்சிக்கிறேன். அமெரிக்கா மீதான, நியூயார்க் மீதான கரோனாவின் அடி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அகங்காரம் மற்றும் பேராசை மீதான அடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா இன்று பல நாடுகளின் கனவு; நியூயார்க் பல நகரங்களின் கனவு. நாமும் அப்படியாகத்தான் ஆசைப்படுகிறோம். கடவுள் எச்சரிப்பதுபோலத் தோன்றுகிறது. கரோனாவைக் கிருமியாகப் புரிந்துகொள்வதோடு மனிதகுலம் அதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டால், எதிர்காலத்தில் நமக்குக் கூடுதலான பலன்கள் கிட்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நியூயார்க்கை வேறு சில விஷயங்களுக்காகப் பிடிக்கும். பன்மைத்துவம் - ஜனநாயகம். உலகிலேயே அதிகமான மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நகரம் அது; கிட்டத்தட்ட சரிபாதி வீடுகளில் ஆங்கிலம் அல்லாத மொழியே தாய்மொழி. தனிநபர் சுதந்திரத்தை அது தூக்கிப் பிடிக்கிறது. பெண்கள் எந்த இடத்துக்கும் எந்த உடையிலும் செல்லும் உரிமையைச் சட்டபூர்வமாகவே பாதுகாக்கும் நகரம் அது; மேலாடை இல்லாமலும்கூட நியூயார்க்கில் ஒருவர் பொது இடத்துக்கு வர முடியும். உலகிலேயே அதிகாரம் மிக்க அதிபரைக் கொண்ட நாடு என்றாலும், கூட்டாட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதுமே நியூயார்க் உயிர்த்துடிப்போடு பாதுகாத்திருக்கிறது; இந்த கரோனா காலத்தில் ஜனநாயகத்தின் இயக்கமும் கூட்டாட்சியின் உத்வேக ஆற்றலும் அங்கு மேலும் கூடியிருக்கின்றன.

பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு



அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உலகம் முழுக்க இன்று உள்ளூர் அரசியலுணர்வு எழுச்சியடைகிறது. ஒரு திடீர் நெருக்கடி நம்முடைய சகல கற்பிதங்கள், போதாமைகளையும் அம்மணமாக்கி நிஜமான தேவைகளைச் சுட்டுகிறது. உலகெங்கிலும் மாநில அரசுகளாலும் உள்ளூர் அரசுகளாலும் வெகுமக்களாலும் தேசிய அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது உலக நாடுகளின் எல்லைகளில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குமோ தெரியாது; ஆனால், நிஜமான சுதந்திரம், நிஜமான இறையாண்மை எதில் உள்ளடங்கியிருக்கிறது என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது; நிதியாள்கைதான் அது!

கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு ரயில் பாதை. அதன் நடுவே ரத்தம் தோய சிதறிக் கிடக்கும் சப்பாத்திகள். பக்கத்திலேயே சிதைந்த உடல்களின் பாகங்கள். இந்த ஒரு காட்சி கரோனா வரலாற்றிலிருந்து அகலப்போவதே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கழித்தாலும், எதிர்வரும் தலைமுறைகள் நினைவுகூர்கையில் கரோனாவை இந்தியா எதிர்கொண்ட ஒட்டுமொத்த சூழலையும் ஓர் உருவகமாக அந்தக் காட்சி சொல்லும். ஊரடங்கின் விளைவாகப் பிழைப்பை இழந்து, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்துக்கு ரயில் பாதை வழியே கால்நடையாகச் செல்லத் துணிந்து, ஔரங்காபாத் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பதினாறு பேரும் அந்தக் கொடிய அதிகாலையில் எழுப்பிய மரண ஓலம் இந்த நாட்டின் மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பெரும் அறைகூவல்.

இந்தியாவின் அமைப்பில் உள்ள சகல பலவீனங்களையும் கரோனா அம்பலமாக்குகிறது. வணிகத் தலைநகரம் - முன்னேற்றத்தின் முகம் என்று நாம் கொண்டாடிவந்த மும்பைதான் இன்று நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம். நாட்டுக்கே பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட குஜராத், கரோனா மரணங்களில் முன்வரிசையில் இருக்கிறது. ஆலைகளுக்கும் தொழில்களுக்கும் பேர்போன குஜராத்தி நகரங்களால் தம் தொழிலாளர்களை சில வாரங்களுக்குக்கூட நிம்மதியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. குஜராத்தின் சண்டோலாவிலுள்ள ஆலை ஒன்றில் கூலியாக வேலை பார்த்துவந்த ஜாதவ் அசாமின் கதாரியா கிராமத்துக்குப் புறப்பட்டார்; 25 நாட்கள் நடந்தும், இடையிடையே தென்பட்ட வண்டிகளில் தொற்றியபடியும் 2,800 கி.மீ. பயணித்து, தன் சொந்த ஊரை அவர் அடைந்தபோது ஜாதவின் உடல் நைந்துபோயிருந்தது. ‘எங்களை விடுங்கள்; ஜாதவ் மாதிரியேனும் ஊர் போய் சேர்கிறோம்’ என்று சூரத்திலுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

கொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி


நம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன? கரோனா காலத்திய உலகளாவிய போக்குகளைக் கடந்த காலத்தின் வழி புரிந்துகொள்ள முடியுமா? சமூக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனுடன் பேசினேன். பேராசிரியர் இப்போது மதுரையில் இருக்கிறார். நள்ளிரவிலும் தூங்காத நகரம் இப்போது நண்பகலிலும் கொஞ்சம் அயர்ந்திருக்கிறது.

மதுரை என்றதுமே சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது, சங்க காலம் நினைவுக்கு வந்துவிடுகிறது, திருவிழாக்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. தொன்மையான மதுரை நகரம், தமிழர்களின் நினைவுகளில் இடையறாது ஒளிர்ந்துகொண்டிருக்கும் நகரம். வீட்டுக்குள் இருக்கும் உங்கள் நினைவுகளில் ஊரடங்கிய மதுரை எப்படியாகக் காட்சியளிக்கிறது?
ஒளி மங்கியதாகத் தோன்றுகிறது. அந்த ஒளி வேறு எதுவும் இல்லை, மக்களுடைய இடையறாத இயக்கம்தான் அது. வரலாற்றில் பல அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட நகரம்தான் இது. மக்களை ஒடுக்கிய ஆட்சியாளர்களின் அன்றைய அடக்குமுறைகள் எப்படி இருந்திருக்கும்? இந்த ஊரடங்கு அதைக் காட்டுவதுபோல இருக்கிறது.

கரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்: மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி


அடிப்படையில் மருத்துவரும், தற்செயல் அரசியலருமான இரா.செந்தில், வெகுமக்களிடையே எப்போதும் புழக்கத்தில் இருப்பவர். தீவிரமான வாசகர், சமூகச் செயல்பாட்டாளர், பாமகவின் தாராளர்களில் ஒருவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனா கிருமியின் தாக்கம் சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாது, சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், கிருமியிடமிருந்து தப்பிக்கும் உத்திக்கு மாற்றாகக் கிருமியை எதிர்கொள்ளும் உத்திக்கு மாற வேண்டும் என்று பேசுபவர் செந்தில். இந்தியா முந்தைய உத்தியிலேயே தொடர்ந்து சென்றால், பசியில் பல கோடி மக்களை நாம் தள்ளிவிடுவோம் என்பதால், பிந்தைய உத்தியையும் பரிசீலிப்பது மிகுந்த அவசியம் ஆகிறது.

கரோனாவுடனான இன்றைய சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கரோனா தொடர்பிலான உலகின் ஒவ்வொரு செய்தியையும் நான் வாசிக்கிறேன். தொடக்கத்தில் கிருமியிடமிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்பட்ட வழிமுறைகளையே ஒரு மருத்துவராக நானும் தீவிரமாக நம்பினேன், பின்பற்றினேன். இது நாட்களில் அல்லது வாரங்களில் முடியும் பிரச்சினை இல்லை என்பதை நாளடைவில் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று யோசிக்கலானேன். ஏனென்றால், நான் மருத்துவத்தில் மட்டும் அல்ல; அரசியலிலும் இருக்கிறேன்; அன்றாடம் சாமானிய மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பார்க்கிறேன், பலர் சொல்லக் கேட்கிறேன். இது நீங்கலாக உலகின் பல்வேறு நாடுகளும் இதை எப்படி அணுகுகின்றன என்றும் பார்க்கிறேன். மொத்த உலகமும் கரோனாவுடன் வாழப் பழகி அதை எதிர்கொண்டு கடப்பது எனும் உத்தி நோக்கியே நகர வேண்டும்.  ஏனென்றால், வேறு வழி நமக்கு இல்லை.

இந்தியாவுக்குத் தேவை அதிகாரப்பரவலாக்கல் சிகிச்சை



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள்கின்றன என்கிற அணுகுமுறை வேறுபாட்டைக்  காணும் அசாதாரணமான சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை ஒரு உத்தியாகக் கையில் எடுத்தன. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கும்கூட அந்தந்த நாட்டின் இயல்புக்கேற்ற பண்பையே வெளிப்படுத்துகிறது. சீனா மிகக் கடுமையான கண்காணிப்பு வளையத்தைத் தன் நாட்டு ஊரடங்குக்கு அணிவித்தது; முற்றிலுமாக மக்களின் எல்லா வெளிச் செயல்பாடுகளையும் முடக்கியது. மக்கள் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டு அவர்களுடைய பெரும்பாலான செயல்பாடுகளை அனுமதித்தது ஸ்வீடன். நாம் எதையெல்லாம் அத்தியாவசியமாகக் கருதுகிறோம்? நாட்டுக்கு நாடு இதுவும் வேறுபட்டது. இத்தாலியில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலில் புத்தகக் கடைகளும் இருந்தன; இத்தாலியர்களுக்குப் புத்தகங்களும் அத்தியாவசியம். அமெரிக்காவில், ‘ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்’ என்று இந்த ஊரடங்குக் காலத்திலும் போராட்டம் நடத்த முடிகிறது. அமெரிக்கர்களுக்குப் போராட்ட உரிமையும் அத்தியாவசியம். நாம் நிறைய உள்நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஊரடங்கு: என்ன பேச வேண்டும் என் பிரதமர் ?



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஒரு மாதம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. கிருமி எப்படியெல்லாம் பரவுகிறது, அறிகுறிகள் என்னவாகவெல்லாம் விரிவடைகின்றன, தொற்று எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது; இவை எல்லாமே ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன அல்லது நாளாக நாளாகத்தான் நாம் இந்தக் கிருமியையும் அதன் மொத்த விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே  மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இதைக் கடந்துவிடலாம் என்று எண்ணினோம். வெளிநாடுகளிலிருந்து கிருமித் தொற்றோடு வந்திருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் வாயிலாகவும், அவர்கள் வழி தொற்றுக்குள்ளாவோரைத் தடுப்பதன் வாயிலாகவும் கிருமியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினோம். இது நம் கணக்குகளில் அடங்கிவிடும் விவகாரம் அல்ல என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது. சில மாதங்கள் அல்ல; இந்தக் கிருமியிடமிருந்து முழுமையாக விடுபட சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியென்றால், என்ன செய்வது? ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருப்பதா?

நாம் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது, கிருமியிடமிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்வது எப்படி என்கிற வியூகத்திலிருந்து கிருமியை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்கிற வியூகத்துக்கு நாம் மாற வேண்டும். கிருமி நம்மைத் தொற்றினால், நம் குடும்பத்தினரைத் தொற்றினால் எப்படி அதை எதிர்கொண்டு கடந்து வருவது என்ற முன்னேற்பாட்டினூடாக புதியதோர் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி

படம்: புதுவை இளவேனில்

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருக்கிறார்? எத்தனையெத்தனை நோய்களையும் மக்களின் வருத்தப்பாடுகளையும் பார்த்தவர் அவர்! இந்த ஊரடங்கு காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? நம்முடைய மூதாதையோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள இன்றைக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா? புதுச்சேரியில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவருடன் பேசினேன்.

அடுத்த 3 மாதங்களுக்கு என்ன திட்டம்?


ஒரு சின்ன குடிசை. மூதாட்டியும் பெரியவரும் அதில் வசிக்கிறார்கள்.  பெரியவர் நல்ல நாட்களிலேயே வீட்டில் முடங்கிக் கிடப்பவர். மூதாட்டி வீடுகளுக்கு வேலைக்குச் செல்பவர். வெளிவேலை, உள்வேலை எல்லாமே அவர்தான். கரோனா செய்திகள் மெல்ல அந்த வீட்டின் அன்றாடங்களை மாற்றுகின்றன. வீட்டு வாசலில் சாணி தெளிப்பதற்கு மாறாக, தினமும் மஞ்சளும் உப்பும் கலந்த தண்ணீரை மூதாட்டி தெளிக்கிறார்; ஒருசில நாட்கள் வீட்டிலேயே வேப்பிலைக் கரைசலைத் தெளிக்கிறார். வீட்டு வாசலிலேயே ஒரு சோப்பு - ஒரு வாளித் தண்ணீர். வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். கை, கால் கழுவாமல் வீட்டினுள் நுழைவதில்லை.

பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தபோது, பக்கத்தில் கடன் வாங்கி மூன்று மாதத்துக்கான அரிசியையும், கொஞ்சம் மளிகைச் சாமான்கள் – காய்கறிகளையும் வாங்கி வந்தார். முதலில் வடகம் உருட்டினார். அடுத்தடுத்த நாட்களில் வடகத்தோடு கத்திரி, மா, சுண்டைக்காய் என்று பல காய்களும் வற்றல்களாகச் சின்னச் சின்னத் தட்டுகளில் வெயிலில் காய்ந்தன. அன்றைக்குக் காய்கள் வீட்டுக்கு வெளியிலேயே கழுவப்பட்டு, வெயிலில் ஒரு சூடு கண்ட பின் வீட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. “நாம பழைய நெலமைக்குத் திரும்ப குறைச்சலா மூணு மாசமாகும்போல இருக்கே? வெளிநடமாட்டம் இல்லாதப்ப உடம்பைப் பெருக்கவுட்டு பிரச்சினையத் தேடிக்கக் கூடாதுன்னு அய்யாவும் நானும் சாப்பாட்டை ரெண்டு வேளையாக்கிட்டோம். வாரத்துக்கு ஒருக்க நான் சந்தைக்குப் போறதோட சரி. இனி அதுக்கும் கையில காசு இல்லை. கிடைக்கிற காய்ல கொஞ்சத்தைச் சமைச்சுட்டு, மிச்சத்தை வத்தலுக்குப் போடுறது. தண்ணிச் சோறு திங்கவும் தொட்டுக்கை வேணும்ல? பாவம் குடியான ஜனம். இப்பவும் நமக்காகக் காய்கறியத் தூக்கிக்கிட்டு ஓடி வருதுவோ. நாளைக்கு வியாதி மிகுந்தா பயம் யாரை வெளிய நடமாடவுடும்? சம்சாரிங்க யோசிச்சுதான் நடந்துக்கணும்! நீகூட ஒன்னைப் பத்தா வகுத்துச் செலவழிக்கப் பழகிக்கய்யா!”

இதை ஒரு மூதாட்டியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்வதா அல்லது ஒரு சமூகத்தினுடைய வரலாற்றறிவின் காலத்திய வெளிப்பாடு என்று சொல்வதா? கடன் வாங்கி அரிசியை முன்கூட்டி வாங்குபவளும் அவள்தான்; அரிசியைச் சிக்கனமாகச் செலவழிப்பவளும் அவள்தான். நெருக்கடியான சூழல்களில் துரிதமாக முடிவெடுப்பது மட்டுமல்ல; காலத்தே செயல்படுவதும் முக்கியம். அப்படிச் செயல்பட எங்கோ உண்மைக்கு முகம் கொடுத்து, பொறுப்பெடுத்துக்கொள்வது முக்கியம். உங்கள் சிந்தனையை யாரும் ஆக்கிரமிக்காமல் இருப்பது முக்கியம். இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இந்திய அரசிடம் நான் காணும் பெரும் சிக்கல், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சிந்தனையையும் ஆக்கிரமிக்க முற்படுகிறது; ஆனால், அதன் சிந்தனை என்ன, அதன் கையில் உள்ள முன்கூட்டிய திட்டங்கள் என்ன என்பது இன்றுவரை நம் யாருக்கும் தெரியவில்லை. ஊரடங்குக்கு முந்தின நாள் வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்திக்கொண்டே ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றக் காட்சிகளையும் அரங்கேற்றிக்கொண்டிருந்ததுதான் அது!


கரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா?



இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன என்ற க்வோ ஜிங்கின் நாட்குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். வூஹான்வாசியான ஜிங் ஓர் இளம்பெண்; சமூகச் செயல்பாட்டாளர். ஜனவரியில் வூஹான் முடக்கப்பட்ட முதல் வார அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

முடக்கப்பட்ட அன்றாடம்

அன்று காலை ஜிங் எழுந்தபோது நகரம் முற்றாக முடக்கப்பட்ட செய்தி அவரை வந்தடைகிறது. இந்தச் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு முன்னனுபவம் எல்லா வூஹான்வாசிகளையும்போல அவருக்கும் இல்லை. அதற்கு எப்படித் தயாராக வேண்டும், எவ்வளவு நாட்கள் நீடிக்கும்... எதுவும் தெரியவில்லை.

உடனடியாக வெளியே செல்கிறார். கடைகள் கூட்டத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அரிசி, நூடுல்ஸ், ரொட்டி, காய்கறிகள் என்று உணவுப் பொருட்கள் விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு மனிதர் ஏராளமான அளவில் உப்பு வாங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஏன் இவ்வளவு வாங்குகிறீர்கள்?’ என்று அவரிடம் இன்னொருவர் கேட்பதற்கு, ‘ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது?’ என்கிறார். ஜிங் அதிர்ந்துபோகிறார்.

ஜிங்குக்கு எப்படியும் அவருக்குத் தேவையானவை கிடைத்துவிடுகின்றன. சீக்கிரமே நகரம் முடங்கிவிடுகிறது. குறிப்பிட்ட நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்கள், கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன; திரையரங்குகள், மைதானங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. விழாக்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள்ளான எல்லா உரையாடல்களும் சுருங்கிவிடுகின்றன. சிந்தனை முழுமையையும் கிருமி  ஆக்கிரமித்திருக்கிறது. ஜிங் தனிமையில் உழல்கிறார். சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இடையிலேயே சீனப் புத்தாண்டு வருகிறது. அதுவும் பெரும் அச்சத்தினூடாகவும் அமைதியினூடாகவுமே கரைகிறது. ‘இந்த அமைதி என்னை அச்சுறுத்துகிறது; அருகிலுள்ள வீடுகளிலிருந்து ஏதாவது சத்தம் வரும்போதுதான் எனது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதையே உணர முடிகிறது’ என்று எழுதுகிறார் ஜிங்.

ஒரு நாள் காலாற வெளியே நடக்கும் எண்ணம் ஜிங்குக்கு வருகிறது. சாலையில் நடக்கிறார். பரபரப்பான அந்த நகரின் சாலைகள் இப்போது வெறிச்சோடி அங்கொருவர், இங்கொருவரோடு காட்சி அளிக்கிறது; பேருந்துகளில் ஆறேழு பேர் உட்கார்ந்து செல்கிறார்கள். ஜிங் கண்கள் கலங்குகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்?

மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?


மூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது. தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது:  தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.


ஒடுக்குமுறைத் தேர்வுகள்


உஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. நெருக்கடியான, நெரிசல் மிக்க கட்டிடங்கள். அனேகமாக ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பையும் வெவ்வேறு வண்ணங்களிலான பத்துப் பதினைந்து பெயர்ப் பலகைகள் மூடியிருந்தன. சாலையின் இரண்டு ஓரங்களிலும் விளம்பரத் தட்டிகள். சாலைக்குக் குறுக்கே வாகனங்களைத் தொந்தரவுக்குள்ளாக்காத உயரத்துக்கு மேலே, அணி அணியாக விளம்பரப் பதாகைகள், தோரணங்கள். எல்லாம் நம்மைப் போட்டித் தேர்வுகளுக்கும், நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி எடுக்கக் கூப்பிடுபவை. முகர்ஜி நகரை மொத்தமாகவே பயிற்சி மையங்களின் சந்தை என்று சொல்லிவிடலாம்.

அரசுப் பணிகளுக்கு உள்ள பசியும் போட்டியும்தான் இங்குள்ள பயிற்சி மையங்களின் மூலதனம். மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், மேலாண்மைப் பணிகள், இதரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான மையங்கள் என்று பல வகைமைகள் இருந்தாலும், முகர்ஜி நகரின் பெரிய அடையாளம் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் அந்தச் சின்ன பகுதியில் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முகர்ஜி நகரில் மட்டும் இயங்கும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம். கட்டிடங்களுக்குள் நுழைந்து பார்த்தபோது, மேல் தளங்களிலேயே விடுதிகளோடு ஒவ்வொன்றும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போல இருந்தன.

இந்த ஐந்தாண்டுகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உண்டாக்கியிருக்கும் அழுத்தத்தில் சண்டிகர், அலகாபாத், லக்னோ, மதுரா, பாட்னா, கயை, மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, அசன்சோல், புவனேஸ்வர், போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம் என்று நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் பல வீதிகள் நெருக்கடியான பயிற்சி மையங்களால் நிறைந்திருக்கின்றன. இந்தியக் கல்வித் துறை எப்படி ஆட்சியாளர்களால் கல்விச் சந்தையாக உருமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குறியீடுபோல இருக்கிறது ராஞ்சியிலுள்ள ஒரு ஐந்தடுக்குப் பெரும் கட்டிட வளாகத்தின் பெயர் - ‘எஜுகேஷன் மால்’. ராஞ்சியில் 2012-ல் வெறும் இருநூறு பயிற்சி மையங்களே இருந்தன; இன்றைக்குப் பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

ஆந்திர முடிவு தவறு… ஒரு மாநிலம் – ஒரு தலைநகரம் ஏற்பாடே சிறந்தது!



இந்தி பேசாத மாநிலங்களில் பெரியதாக இருந்ததும், மொழிவழி எல்லையைக் கடந்து பிரிவினையை எதிர்கொண்டதுமான ஆந்திரம் இப்போது மூன்று தலைநகரங்கள் எனும் முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலங்கானாவுடன் ஹைதராபாத் சென்றுவிட்ட நிலையில், புதிய தலைநகரமாக அமராவதியைக் கட்டமைத்தது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, சட்டமன்றத்தைக் கொண்ட சட்டமன்றத் தலைநகராக அமராவதியையும், தலைமைச் செயலகத்தைக் கொண்ட நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், உயர் நீதிமன்றத்தைக் கொண்ட நீதித் துறைத் தலைநகராக கர்னூலையும் அறிவித்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் அமராவதி கனவைக் குலைக்கும் வகையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்குப் பின், பல்வேறு தனிப்பட்ட அரசியல் கணக்குகள் ஆந்திர அரசியலில் சொல்லப்பட்டாலும், அவற்றைத் தாண்டி நிர்வாகரீதியில் இந்த முடிவை எப்படிப் பார்ப்பது? இது எத்தகைய தாக்கங்களை உருவாக்கலாம்? அரசு நிர்வாகத் துறையில் நெடிய அனுபவம் கொண்டவரும், விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அஷோக் வர்த்தன் ஷெட்டி பேசுகிறார்.

சமத்துவத்தின் தாய்


கெட்ட செய்திகளின் நாட்களில் மனம் ஒரு நல்ல செய்திக்காக ஏங்குகிறது. உலகெங்கும் உள்ள தலைவர்கள் புத்தாண்டுச் செய்திகளாக எதையெல்லாம் சொல்கிறார்கள் என்று வாசித்துக்கொண்டிருந்தேன். பின்லாந்து பிரதமர் சன்னா மரினின் செய்தி கவர்ந்திழுப்பதாக இருந்தது. “ஒரு சமூகத்தின் பலம் அதில் எத்தனை பேர் பணக்காரர்கள் என்பதில் அல்ல; அதனுடைய நலிவுற்ற பிரிவு மக்கள் எப்படி வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது… ஒரு சமூகத்தில் எல்லோருமே கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி” என்று சொல்லியிருந்தார் சன்னா மரின். கூடவே தன்னுடைய செய்தி வெறும் மாய்மாலம் அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2020 ஜனவரி முதலாக அவருடைய அரசு செயல்படுத்தவுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, பின்லாந்தின் எழுபது சத மக்களின் வருமானத்தை இந்த மாற்றங்கள் உயர்த்தும் என்று நம்பிக்கையும் விதைத்திருந்தார்.

இதற்குச் சில நாட்கள் முன்புதான் ‘வாரத்தில் நான்கு நாட்கள்; ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டும் வேலை’ கொள்கையை முன்னிறுத்தியிருந்தார் மரின். அவருடைய சமூக ஜனநாயகக் கட்சியின் 120-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். பின்லாந்தில் இப்போது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மக்கள் வேலை செய்கின்றனர்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதே விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.