அன்றாடம் இரவு தூங்கச்செல்வது சவாலான ஒரு காரியமாகிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் விழும் பகல்கள், ரம்மியமான வானிலை, பிடித்தமான குளிர், புதுப்புது மனிதர்கள் - அனுபவங்கள், பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. ஒவ்வொருநாளும் அதன் அடர்த்தியின் சுமை அதிகமானபடி இருந்தது. இரவில் வீதியில் படர்ந்திருந்த மஞ்சள் விளக்கொளி வேறொரு காலகட்டத்துக்கு, வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை வேறொரு வெளியோடு பிணைத்திருந்தது.
அன்றைய தினம் இரவு முழுவதுமாகவே உறங்கவில்லை. ஜன்னலின் வழியே விடியலின் கிரணங்களை எதிர்நோக்கியிருந்தேன். அதிகாலையில் முதல் கீற்று தென்பட்டபோது, ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி கண்ணாடியைத் திறக்கிறேன். உள்ளே குத்தீட்டிகள்போல பாயும் குளிர்க்காற்று. தேம்ஸ் நதி நோக்கி அது அழைத்தது.
அந்த அதிகாலையில் நீளமான கருநீல கோட் அணிந்த ஒரு முதிய தம்பதி என் கார் நிறுத்தப்பட்ட இடத்தில், பாலத்தின் கைப்பிடியைப் பற்றி ஓடி விரையும் தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அதிகாலை நேர தேம்ஸ் சூழல் ஒரு ஓவியம்போல இருந்தது. ஆமாம், ஓவியத்துக்குள் நுழைவது மாதிரிதான் அது இருந்தது. சுமார் அரை மணி நேரம் இருக்கும். அந்தத் தம்பதி புறப்பட்டனர். பெரியவர் என்னைக் கடந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “தேம்ஸைத் தெரிந்துகொள்ள அருங்காட்சியகம் செல்லுங்கள். அங்குள்ள பொருட்கள் தேம்ஸை மட்டும் அல்லாது மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார்.