அண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு - ந.முத்துசாமி பேட்டி


நவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ஒரு படைப்பாளியின் மனைவி என்கிற சராசரி அடையாளத்தைத் தாண்டிய முக்கியத்துவம் அவருக்கு உண்டு. முத்துசாமி ஒரு இயக்கமாக வாழ, அவருடைய ‘கூத்துப்பட்டைறை’ சமூக நீதியின், சமத்துவத்தின் பண்பைப் பெற தன்னையும் அர்ப்பணித்துக்கொண்டவர் அவயாம்பாள். சகலரும் சமையலறை வரை சகஜமாகப் புழங்கும் வீடாகவே அவர்கள் வீடு இருந்தது. தமிழ்நாட்டு நவீன படைப்பாளிகள் பலரையும் திராவிட இயக்கத்தின் ஒவ்வாமை சூழ்ந்திருந்த நாட்களில், தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில், அண்ணாவுடனான புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தவர்கள்; தன்னை அண்ணாவின் தொண்டராகவும் திமுக ஆதரவாளராகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்கள் முத்துசாமி – அவயாம்பாள் தம்பதி. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காகப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தபோது உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார் முத்துசாமி. ஆனாலும், அண்ணா என்ற சொல் தந்த உத்வேகம் அவரை உற்சாகத்தோடு பேசவைத்தது. முத்துசாமியின் மரணத்துக்கு முன் அவரிடம் எடுக்கப்பட்ட கடைசிப் பேட்டி இது. இடையிலேயே அவயாம்பாளும் சேர்ந்துகொண்டார்.

தமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்!


ஆட்சிமன்றங்களில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு சம்பிரதாய நிமித்தமானது. ஊடகங்களில் பதவியேற்புச் செய்தியும் சம்பிரதாய நிமித்தமானது. இந்தியாவின் பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்வானது வழக்கமான நிமித்தத்தைத் தாண்டி, சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பெற்றதற்கு இரு காரணங்கள் இருந்தன. உறுப்பினர்கள் பதவியேற்றபோது அதிகாரபூர்வ உறுதிமொழியோடு தத்தமது அரசியலைப் பிரகடனப்படுத்தும் முழக்கங்களையும் சேர்த்துக்கொண்டது முதன்மைக் காரணமானது. அதிகமான உறுப்பினர்கள் இம்முறை தத்தமது தாய்மொழியில் உறுதிமொழி எடுப்பதில் காட்டிய ஆர்வம் அடுத்த காரணமானது.

உலகில் இன்று எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட அட்டகாசத்தைப் பார்க்க முடியாது. “முழக்கங்கள் எழுப்புவது மரபல்ல; அவைக் குறிப்பிலும் முழக்கங்கள் இடம்பெறாது” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டபோதும் எவர் காதிலும் அது விழுந்ததாகத் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடக்கிவைத்தவர்கள் ஆளும் பாஜகவினர். பிரதமர் மோடி பதவியேற்க வந்தபோது “மோடி, மோடி, மோடி” என்று முழங்கியவர்கள் அடுத்து, தமக்குப் பிடித்தமானவர்கள் வந்தபோது “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை முழங்கலாயினர். மேலும், தங்களுடைய பதவியேற்பு உறுதிமொழியோடு “பாரத் மாதா கீ… ஜே!”, “ஜெய் ஸ்ரீராம்!”, “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரு!”, “ஹரஹர மஹாதேவ்” என்றெல்லாம் முழுக்கங்களைச் சேர்த்துக்கொண்டனர். தொடர்ந்து, தங்களுக்குப் பிடிக்காத, எதிர் வரிசையில் உள்ளவர்கள் பதவியேற்க வரும்போதும், அவர்களைச் சீண்டும்விதமாக “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை பாஜகவினர் ஒலிக்கலானபோது, எதிர்க்கட்சியினரும் முழக்கங்களைக் கையில் எடுத்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் காகோலி கோஷ் தஸ்திதர், “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்துக்கு ஈடுகொடுக்க “ஜெய் மா காளி!”, “ஜெய் மா காளி!” என்று முழங்கியபடியே உறுதிமொழி எடுக்க வந்தார். முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி உறுப்பினரான அஸாதுதீன் ஓவைஸி பதவியேற்க வந்தபோது, பாஜகவினரின் முழக்கம் உச்சம் தொட்டது. தன் இரு கைகளையும் உயர்த்தி பாஜகவினரின் சீண்டலை வரவேற்பது போன்ற சைகையுடன் வந்தவர் “ஜெய் பீம்”, “ஜெய் மீம்”, “தக்பீர்”, “அல்லாஹூ அக்பர்”, “ஜெய் ஹிந்த்!” என்று சொல்லித் தன் உறுதிமொழியேற்பை முடித்தார். சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் எஸ்.டி.ஹசன் உறுதிமொழிக்குப் பின் “ஜெய் ஹிந்துஸ்தான்” என்று சொல்லி பாஜகவினருக்கே அதிர்ச்சி அளித்தார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பகவத் மன் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழங்கினார். பாஜக கூட்டணியிலுள்ள சிரோன்மணி அகாலி தளத்தின் சுக்பீர் சிங் பாதலைக்கூட அன்றைய சூழல் எங்கோ சீண்டியிருக்க வேண்டும். சீக்கிய மத குருவை வாழ்த்தும் “வஹே குருஜீ கா கால்சா, வஹே குருஜீ கி ஃபதே” முழக்கத்தை முழங்கிய அவர் தன்னுடைய உறுதிமொழியை நிறைவுசெய்தார்.

தமிழ்நாட்டின் எதிர்வினை

தமிழ்நாட்டின் உறுப்பினர்களில் அதிமுகவின் ஒரே உறுப்பினரான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் மட்டும் “எம்ஜிஆர் வாழ்க, அம்மா வாழ்க, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்” என்று சொல்லித் தன் உறுதிமொழியை முடிக்க, திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிக - மதிமுக - உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் “பெரியார் வாழ்க”, “கலைஞர் வாழ்க”, “அம்பேத்கர் வாழ்க”, “காமராஜர் வாழ்க” என்று தத்தமது தலைவர்களுக்கான வாழ்த்துகளோடு, “தமிழ் வாழ்க” எனும் வாழ்த்தையும், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”, “மதச்சார்பின்மை வாழ்க”, “இந்திய ஒற்றுமைப்பாடு ஓங்குக”, “தமிழ்நாடே என் தாய்நாடு; தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்றெல்லாம் முழங்கியது ஒரு ஆச்சரியத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தது. ஏனைய சமூகங்கள் மதரீதியிலான முழக்கங்களை மதரீதியிலாகவே எதிர்கொள்ள முற்படும்போது, ஒரு மொழி மட்டும் எப்படி கடவுளுக்கு இணையான இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதும், அது மதத்துக்கு அப்பாற்பட்ட விழுமியங்களை எப்படி முழக்கங்களாகத் தர வழிவகுக்கிறது என்பதும்தான் அது.

நாடு முழுக்க இந்த ‘முழக்க அரசியல்’ விவாதிக்கப்பட்டாலும், இந்தக் கோணத்தில் விவாதங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் மதவழி தேசியத்தை எதிர்கொள்ள மொழிவழி தேசியம்தான் வழியா என்பதும், இந்தப் போக்கு எப்படிச் செல்லும் என்பதும் விவாதித்திருக்க வேண்டிய ஒரு விஷயம். மேலும், இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தில் உறுப்பினர்கள் காட்டிய ஆர்வத்தோடு சேர்த்து விவாதித்திருக்க வேண்டிய விஷயமும்கூட இது.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!


நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.

ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?

புதிய கல்விக் கொள்கையின் வரைவானது முன்மொழியும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.

உலகம் எந்த மொழியில் படிக்கிறது?

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.