புனிதங்கள் பொசுங்கட்டும்!


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விமர்சகன் நான். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்த மாநிலத்தில் பிறந்த மரபும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியை மையப்படுத்தியிருக்கும் அதிகாரங்கள் சமூகநீதிக்கும் ராஜியநீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடைத்துப் பரவலாக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவன். ஆனால், சமத்துவத்துக்கான இந்த உணர்வானது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமானது அல்ல. சமத்துவத்துக்கான இந்தத் தேட்டமே அதன் ஆன்மா. பாரபட்சத்துக்கு எதிரான என்னுடைய பேச்சுக்கு அது சக்தி தருகிறது. ஆன்மாவுக்கேற்ப அதன் உடல் உறுப்புகளும் அமைய வேண்டும் என்று பேசுகையில், நான் கோரும் அற விழுமியங்களில் அரசியலமைப்புணர்வுக்கும் ஒரு பங்கிருப்பதை உணர்கிறேன்.

சட்டங்களுக்கு வெகுதூரத்தில் மக்கள் கூட்டத்தில் நிற்கும் எனக்கு, இந்நாட்களில் ஒரு சந்தேகம் எழுகிறது. சட்டத்தோடு ஒவ்வொரு நாளும் புழங்கக்கூடிய, நிபுணத்துவம் பெற்ற சட்ட வடிவமைப்பாளர்களான ஆட்சியாளர்களும், சட்டக் கண்காணிப்பாளர்களான நீதிபதிகளும் உண்மையிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தரும் இந்த அரசியலமைப்புணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் எழுத்துகளாக உள்ள அதன் ஆன்மா இந்த எழுபதாண்டுகளில் எங்கேனும் இவர்கள் உடலுக்குள் புகுந்து ஒரு கலாச்சாரமாக ஆகியிருக்கிறதா அல்லது அவை தத்தமது தேவைக்கும் சௌகரியத்துக்கும் ஏற்ப அணிந்துகொண்டு தூக்கிப்போடும் உடைகள்போல வெறும் எழுத்துகளாகவே நிற்கின்றனவா? ஏனென்றால், விழுமியங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அவை தார்மிகத்தின் ஒரு அங்கமாகவும் வெளிப்படுகின்றன. அரசியலமைப்புணர்வானது சட்டப் புத்தகங்களில் உள்ள எழுத்துகளாலேயே வந்துவிடுவதில்லை. ஒரு சமூகம் தன் நடத்தையின் மூலம் அந்த எழுத்துகளுக்குக் கொடுக்கும் அர்த்தமே அதன் ஆதாரம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நம்முடைய அமைப்பு எதிர்கொள்ளும் முறை நிலைக்குலைய வைக்கிறது. ஆட்சிமன்றமோ, நீதிமன்றமோ; எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை.

விவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது?


பள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம். கவிஞன். நல்ல வாசகன். அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்த எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவனே முதன்மையானவன். எங்கள் குழுவில் எல்லோருமே ஆங்கில இலக்கியம் படிக்க ஆசைப்பட்டோம். அவனும் அப்படி படித்திருக்க வேண்டும். சம்பா சாகுபடி வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வருஷம் தண்ணீர் இல்லாமல் போக, முதல் அடி சம்பாவுக்கும் அடுத்த அடி கார்த்திகேயனுக்கும் விழுந்தது. இலக்கியம் படித்திருக்க வேண்டியவன் பன்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டான். கொஞ்ச நாட்களில் கார்த்திகேயனின் அப்பா ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போனார். கார்த்திகேயன் இப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கிறான். அப்பா உயிரோடு இல்லை.

ராதாநரசிம்மபுரத்தில் ஆசைத்தம்பி என்று ஒரு நண்பர் உண்டு. சிறு விவசாயி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். வசதியில்லாததால் படிக்க முடியாமல்போய்விட்ட ஏக்கம் அவருக்கு நிறைய உண்டு. இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும். அதுவே லட்சியம். விவசாயம் பொய்த்தபோது உள்ளூரிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அப்புறம் கடலை விற்றார். சென்னைக்கு கட்டிட வேலைக்குச் சென்றார். ஒன்றும் எடுபடாதபோது யாரோ சொன்னார்கள் என்று கடன் வாங்கி வளைகுடா நாடு ஒன்றில் பனை வெட்டச் சென்றார். கொத்தடிமை வாழ்க்கை. பதினாறு மணி நேர வேலைச் சூடு தாங்காமல் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களிலேயே ஊர் திரும்பியபோது கண் பார்வை மங்கிவிட்டிருந்தது. அந்த வருஷம்தான் அவருடைய மகள் பிளஸ் டு எழுதியிருந்தாள். பொறியியல் கனவைச் சுமந்தவள். நன்கு படித்தவள். ஏற்கெனவே உள்ள சுமைகளோடு அப்பாவின் கடனும் முடக்கமும் சேர, வீட்டு கஷ்டத்தைச் சுமக்க படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். மகன் லாரி கிளீனர் ஆனான்.

ஒரு பருவம் ஆற்றில் தண்ணீர் வரவில்லை அல்லது வழக்கமான மழை இல்லை என்றால், நம் கிராமங்களில் அது ஏற்படுத்தும் தெறிப்புகள் சாமானியவை அல்ல. ஒரு குடும்பத்தின் பல்லாண்டு கால கனவுகள் அத்தனையையும் கணத்தில் பொசுக்கிவிடக் கூடியது ஒரு பருவத்தின் வெள்ளாமைப் பொய்ப்பு. ‘விவசாயிகள் தற்கொலை’ என்ற தலைப்பில் வெளியாகும் செய்திகள் கிராமங்களில் நடக்கும் உடல்ரீதியிலான மரணங்களை மட்டுமே பேசுகின்றன. கொடிய வலி மண்டலங்களான விவசாயக் குடும்பங்களிலிருந்து பார்த்தால்தான் இந்நாட்டின் அதிகார வர்க்கம் வருஷக்கணக்கில் விவசாயப் பிரச்சினைகளை இழுத்தடிப்பதும் விவசாயிகளை அலைக்கழிப்பதும் எவ்வளவு தீவிரமான சமூகக் குற்றம் என்பதை உணர முடியும். அதுவும் நதிநீர் விவகாரத்தை சாவதானமாக ஓர் அமைப்பு அணுகுவது, ரத்தம் ஆவியாகிக்கொண்டிருக்க மூச்சிரைப்போடு சிகிச்சைக்கு வந்திருப்பவனைப் பார்த்து, “போய் வரிசையில் நில்!” என்று சொல்லும் அதிகாரத்தடித்தனமே அன்றி வேறில்லை.

மாநிலங்களிலிருந்து ஒரு தேசியத் தலைவன்!


மேலே மஞ்சள், கீழே சிவப்பு, நடுவில் வெள்ளை; நடுவே மாநில அரசின் சின்னம். கர்நாடகக் கொடி அதன் எல்லைகளைக் கடந்து முழு இந்தியாவுக்கும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்திய வரலாற்றில் மாநிலங்களால் என்றைக்கும் மறக்க முடியாத தலைவராகிவிட்டார் சித்தராமையா.