குறைந்தபட்ச வாழ்வூதியம் நமக்கு எப்போது சாத்தியமாகும்?




களங்கமற்ற மாலை. வைரத்தில் ஊடுருவி சிதறுண்டு வெளிவரும் கதிர்கள்போல, நகரத்தின் கட்டிடங்களில் மோதிச் சிதறி வீதிகளில் வந்து விழுந்திருந்தது சூரிய ஒளி. இன்னும் இரண்டு நாட்கள். மூன்றாவது நாளன்று இந்தியா புறப்பட வேண்டும். அதற்குள் இன்னும் மூன்று விஷயங்கள் தொடர்பில் தெரிந்துகொண்டுவிட விரும்பினேன்: பிரிட்டனில் தொழிலாளர் நிலை, பிரிட்டன் கிராமங்களின் இன்றைய சூழல், பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழ்க்கை.

இதற்கு லண்டனுக்கு வெளியே கொஞ்சம் பயணிக்க வேண்டும். விடுதி வாழ்க்கையைத் தாண்டி, வீட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். யாரேனும் ஒரு தமிழ் நண்பர் உடனிருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. நண்பர் ஷங்கரிடம் பேசினேன். அவருடைய நண்பர் ராஜை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜ். லண்டனில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஹால்போன் பகுதியில் அவர் அலுவலகம் இருந்தது. புறநகர்ப் பகுதியில், பிரஸ்டனில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். விடுதிக்கு என்னை அழைக்க வந்திருந்தார்.

டாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?

எந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு பேட்டியில் ரத்தன் டாடாவிடம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோது ரத்தன் டாடா சொன்னார், “அவர்கள் வியாபாரிகள், நாங்கள் தொழிலதிபர்கள்.”


சராசரி இந்தியக் குடும்பம் ஒன்றுக்கு அறிமுகமாவதுபோலவே பொருட்கள் வாயிலாக எனக்கு டாடா நிறுவனம் அறிமுகமானது. பலசரக்குக் கடையில், டாடா நிறுவனம் தயாரிக்கும் டீ தூளுக்குப் பதிலாக வேறு ஒரு நிறுவன டீ தூளை வாங்கி வந்த ஒரு நாளில், வீட்டில் டாடா நிறுவனத்தின் மகாத்மியங்கள் எனக்குச் சொல்லப்பட்டன. அந்தக் கதையை என்னுடைய தாத்தா இப்படி முடித்தார். “டாடா நுழையாத இடமே கிடையாது. ஆனா, எவ்வளவு வரும்படி வரும்னாலும் பீடி, சிகரெட்,சாராய விற்பனையில் நீ டாடாவைப் பார்க்க முடியாது. ஏன்னா, டாடாவுக்குன்னு அறம் சார்ந்த ஒரு கொள்கை இருக்கு!”


பிரதிபலன் பாராது கொடுப்பதைத்தான் டாடாக்களிடம் இந்தியத் தொழில் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்: சுந்தர் சருக்கை பேட்டி


சுந்தர் சருக்கை, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க தத்துவவியலாளர்களில் ஒருவர். டாடா நிறுவனத்தின் வரலாற்றை சமூக - தத்துவப் புலத்தில் ஆராய்ந்தவர். டாடா நிறுவனம் 150-வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நவீன இந்தியாவுக்கு, டாடா என்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்று பேசினோம்.

ஒரு முஸ்லிம் - இந்து கதை



ஊர்கள் எப்போதும் என் நினைவுகளில் மனிதர்களாகத்தான் படிகின்றன. ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “ஒரு நிமிஷம் கண்களை மூடி ஊரை யோசித்துப்பார்” என்று சொன்னால், நிலப்பரப்பையோ, கட்டிடங்களையோ, நீர்நிலைகளையோ காட்சிக்குக் கொண்டுவரும் முன், அங்கிருந்த மனிதர்களைத்தான் முதலில் மனம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. லண்டன் அப்படி நினைவுகளில் அள்ளிக்கொண்டுவரும் மனிதர்களில் சாதிக் கான் தவிர்க்கவே முடியாத மனிதராக இருப்பார்.

மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது. லண்டன் மேயர் தேர்தலில் வெல்லுதல் எளிதானதல்ல. ஐரோப்பாவில் நடக்கும் பெரிய தேர்தல்களில் ஒன்று அதற்கானது. ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம் - ஓர் உதாரணம் லண்டன் மெட்ரோ ரயில் சேவை, காவல் துறை மேயரின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்!



நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?

கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.

ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.

செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”

அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”

பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.

உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.