மனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..

படம்: முஹம்மது ராஃபி
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அழகு என்று குதிரை வண்டிகளைச் சொல்லலாம். தமிழகத்தில் இன்னும் குதிரை வண்டிகள் மிச்சமிருக்கும் மிகச் சில இடங்களில் ஒன்று ராமேஸ்வரம். அங்குதான் சுப்பிரமணியைச் சந்தித்தேன். பெட்டிகளை வாங்கி வண்டிக்குள் வைத்த சுப்பிரமணி, “நம்பி ஏறுங்க சார், ராஜா சல்லுனு கொண்டுபோய் விட்டுடுவான்” என்றார். வண்டியில் கட்டப்பட்டிருந்த ராஜாவைப் பார்த்தால் சல்லென்று கொண்டுபோய் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக நின்றது. வண்டி நகர ஆரம்பித்தது.

மனிதர்கள்: தமிழ்தான் அடையாளம்!


முதன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.

காண்டாமிருகங்கள் ஆகிறோம்!


றேழு ஆண்டுகள் இருக்கும், திருச்சியில் இருந்தபோது நடந்தது. வெளியூரிலிருந்து நண்பர் வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு அவருக்கு வண்டி. வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முன்கூட்டியே இரண்டரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டோம். வீதி இருண்டு கிடந்தது. செல்பேசி விளக்கின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நூறடி நகர்ந்திருக்காது. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்தது அலறல். சட்டென இன்னதென்று யூகிக்க முடியவில்லை. அமைதி. திரும்பவும் அலறல். கூடவே நாய்களின் உறுமல். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது, கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன கொட்டைகையின் முன்நடுக்கத்தோடு ஒடுங்கி நின்றுகொண்டிருந்தார் ஒரு பெரியவர். மூன்று நாய்கள் அவர் அருகே. உறுமிக்கொண்டு பாய்ந்துவிடத் தயாராக நின்றன. கையில் வைத்திருக்கும் காலி துணிப்பைகளை வைத்துக்கொண்டு “ச்சூ… ச்சூ…போ” என்றார் பெரியவர். நண்பர் கற்களை அள்ளி வீசினார். நாய்கள் சிதறி ஓடின. அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் பெரியவருக்குப் பதற்றமும் பதைபதைப்பும் நீங்கவில்லை. பேச முடியவில்லை. நாங்கள் புறப்பட்டோம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்பும்போது, மணி ஏழரை இருக்கும். அப்போதுதான் கவனித்தேன். ஒரு ரேஷன் கடையின் முன்பகுதி அந்தக் கொட்டகை. அந்தப் பெரியவர் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்குப் பின் இருபது முப்பது பேர். கிட்ட நெருங்கிப் பார்த்தால், பெரியவரின் கண்கள் மூடியிருந்தன. தூக்கத்தில் இருப்பதுபோல இருந்தது. முன்னும் பின்னும் வரிசையில் மனிதர்களோடு பைகள், கற்களும் கலந்திருந்தன. “எல்லாம் பருப்புக்காக” என்றார்கள் நின்றவர்கள்.

நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?



ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன். தனுஷ்கோடி கடலோடிகள் வாழ்வின் ஒரு பகுதி என்றும்கூட இதைச் சொல்லலாம். ஊரில் பெரும்பாலானோர் பெயர்கள்  மாரி, முத்து, முத்துமாரி, மாரியம்மாள் இப்படி இருக்கும். கடற்கரையில் புதிய வடிவில் ஒரு கோயில் முளைத்திருக்கிறது. சிலைகள் எதிலும் நம்மூர் பாணி இல்லை. வடக்கிலிருந்து உபயமாக வந்தடைந்த சிலைகள் என்கிறார்கள். உள்ளூர் மாரியம்மனுக்கு இப்போது சவாலாக ஆரம்பித்திருக்கிறது பெருந்தெய்வ வழிபாடு.

தமிழகத்தின் கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வழியில் புதுப்புது கோயில்கள் முளைப்பதைப் பார்க்க முடிகிறது. கோபுரங்கள் / விமானங்களில் தொடங்கி உள்ளே இருக்கும் சாமி சிலைகள், வழிபாட்டு முறைகள் வரை எல்லாம் புதுப் பாணி. இந்தியர்களின் எல்லை கடந்த ஆன்மிகப் பயணங்களும் உறவுகளும் பங்களிப்புகளும் வரலாறு முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் புதிய கலாச்சாரத்தையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா? முடியாது. இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது. “ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா? கன்னம் பூச ஆரம்பித்திருக்கிறது. புதிய ஓவியங்கள், சிலைகளில் மோடி மாதிரி இருக்கிறார் சாய்பாபா” என்றார் நண்பர் சங்கர். அப்படிப் பார்த்தால், அப்படியும் தெரிகிறார். எது ஒன்றையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில்களில் செந்தூரம் புதிதாக நுழைகிறதோ அங்கெல்லாம் நிலத்துக்கு அடியில் சங்கப் பரிவார வேர்கள் பரவுவதை உணர முடிகிறது. ராமேசுவரத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ‘தமிழ்நாடு விடுதி’யில் தங்கல். விடுதி உணவகத்தில் அசைவத்துக்கு இடம் இல்லை. கூடவே, உணவகம் முழுக்க சைவப் பிரச்சாரம். வாசல் சுவர் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி கேட்கிறது: “நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே! மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்!”

உலகின் மிகச் செழிப்பான கடல் பகுதியைக் கொண்ட ராமேசுவரத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. முக்கியமானது, இந்தியக் கடற்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் கண்டறியப்பட்ட ராமேசுவரம் கடல். இங்கு கிடைக்கும் மீன்கள் பல வேறு எங்கும் சாப்பிடக் கிடைக்காதவை. தவிர, அசைவ சமையலில் ராமேசுவரத்துக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. இந்திய - இலங்கை - அரேபிய - பாரசீக சமையல் கலாச்சாரத்தின் கூட்டுக் கலவை அது.  ஒரு அலை கொஞ்சம் ஓங்கி அடித்தால், விடுதிக்குள் வந்து தண்ணீர் விழும்; கடலுக்கு அவ்வளவு நெருக்கமாகக் கரையில் கட்டப்பட்டிருக்கிறது ‘தமிழ்நாடு விடுதி’.

கடலோடிகளின் நகரத்தில், கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அரசுசார் விடுதியில் மீன் உணவு இல்லை என்றால், நாம்தான் நியாயமாகக் கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக, ஏன் விடுதி நிர்வாகம் நம்மைப் பார்த்துக்கேள்வி எழுப்புகிறது? கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர். இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா? தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார்? பதில் இல்லை. விடுதியை விட்டு வெளியேறும்போது, அது கண்ணில் பட்டது. கடற்கரையில், விடுதிக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் மண்ணில் நிறுவப்பட்ட நடுகல். சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பலிதான இடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். சூழலையும் சூழலுக்கான பின்னணியையும் சொல்லாமல் சொல்லும் குறியீடுபோல இருந்தது அது!

மனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு!

ஞ்சாவூர் வடக்கு வாசல்.
“ஏண்ணெ, இங்கெ காமாட்சி தேவியம்மா வீடு எது?” சைக்கிளில் செல்லும் இளைஞர், கால் ஊன்றி வண்டியை நிறுத்தி, தெருவின் பின்பக்கத்தைக் காட்டுகிறார். வீடுகள் அழுதுவடிகின்றன. ஒருகாலத்தில் வடக்கு வாசல் வாழ்வாங்கு வாழ்ந்தது. வடக்கு வாசல் மட்டும் இல்லை, ரெட்டிபாளையம், கீழஅலங்கம் எல்லாமே வாழ்வாங்கு வாழ்ந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் செழித்த இடங்கள் இவையெல்லாம். கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடியாட்டம், உறுமியாட்டம், உறியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம்.. இப்படி எந்த ஆட்டம் என்றாலும் தஞ்சாவூருக்கு வந்தால் செட்டு பிடித்துச் சென்றுவிடலாம். அதிலும், கரகாட்டத்திலும் பொய்க்கால் குதிரையாட்டத்திலும் தஞ்சாவூருக்கு என்று தனி மரபும் சிறப்பும் உண்டு.

நாட்டுப்புறக் கலைஞர்கள் உலகம் இரவுலகம் என்றாலும், பகல் பொழுதுகளில் இங்கெல்லாம் உலாத்துவது தனி அனுபவம். எந்தத் தெருவில் நுழைந்தாலும் சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்கும். வீடுகளில் சிறு பிள்ளைகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். டீக்கடைகள், கோயிலடிகள், கட்டைச்சுவர்களில் அரட்டைக் கச்சேரிகள் அள்ளும். பகடிகள் பறக்கும்.

“ஏம்மா, காமாட்சி தேவியம்மா வீடு இதுதானுங்களா?”
வாசல் கதவு திறந்தே இருக்கிறது என்றாலும், உள்ளே வெளிச்சம் தெரியவில்லை. பதிலும் இல்லை. அந்தக் காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் காமாட்சி தேவி. கரகாட்டத்தின் அத்தனை போக்குகளையும் அறிந்த, மிச்சமிருக்கும் வெகு சிலரில் ஒருவர். கணவர் நாடி ராவ் பொய்க்கால் குதிரையாட்டத்தில் பேர் போனவர். பிள்ளைகளும் இதே தொழிலில்தான் இருக்கிறார்கள்.

“ஏம்மா, வீட்டுல யாரும் இருக்கீங்களா?”
மெல்ல அசைவு தெரிகிறது. “வாங்கய்யா, யாரு வந்திருக்கீங்க?” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்!” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா?” என்கிறார்கள். பேரப் பிள்ளைகளை அனுப்பி டீ வாங்கி வரச் சொல்கிறார்கள்.

மனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்!


தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய உயிரியல் பூங்கா சுமார் 1490 ஏக்கருக்கு விரிந்து கிடக்கிறது; லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், செடி கொடிகள் காற்றுடன் விளையாடுகின்றன. வண்டலூரைப் பூங்காவாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு பிரமாண்டமான உயிரியல் பூங்கா. காடாகப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சின்ன காடு. இந்தியாவிலேயே அதிகமான விலங்குகள், இனங்களைக் கொண்ட பூங்காவும் இது. கிட்டத்தட்ட 166 இனங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கிருக்கின்றன. நான் ஒரு மனிதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். செல்லையா!

மீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்

மீண்டும் ஒரு பயணம். வயலில், மலையில், காட்டில், கடலில்… நடைபாதையில், சாலையோரங்களில், ரயிலடிகளில்… பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலைகளில்…

‘மனிதர்கள்!’ சகஜீவிகளை நோக்கிச் செல்லும் பயணம் இது. நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வாழக் கூடியவர்கள், பயணத்தில் கடக்கும்போது நம் கண்ணில் படக்கூடியவர்கள், சட்டென ஒருகணம் வந்து யார் என்று யோசிக்கும் முன் மறைந்துவிடக் கூடியவர்கள், நாம் நினைத்தால் தோழமையுடன் தோள் மீது கை போட்டுக்கொள்ளக் கூடியவர்கள், நம்மைப் போலவே பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆனால், ஏதோ ஒருவகையில், நம் ஒவ்வொருவரின் உலகத்துடனும் பிணைக்கப் பட்டவர்கள், ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கைக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்பவர்கள், நமக்கு மிக நெருக்கமானவர்களை நெருங்கிச் செல்லும் பயணம் இது.

ஒரு மடக்கு தண்ணீர் நம் வாயைத் தேடி வர எத்தனை முகமற்ற மனிதர்களின் உழைப்பைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் யோசிப்பது இல்லை. சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கல்வி சக உயிரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்றால், இந்தப் பயணம் ஒருவகையில் அப்படிப்பட்ட முயற்சி!

அக். 2015, ‘தி இந்து’

எதிரில் இருப்பவர்கள் எதிரிகளா?


இந்த காந்தி ஜெயந்திக்கு அற்புதமான ஓர் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது லுதுவேனியா. காந்தி தன் ‘ஆன்ம நண்பர்’ என்று குறிப்பிட்ட ஹெர்மன் காலன்பக் - காந்தி இருவரும் சேர்ந்திருக்கும் சிலையை நிறுவியிருக்கிறது. லுதுவேனியாவில் பிறந்த யூதரான ஹெர்மன் காலன்பக் பின்னாளில் தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தவர். தேர்ந்த கட்டிடக் கலைஞரான அவர், 1904-ல், தன்னுடைய 33-வது வயதில் காந்தியைச் சந்தித்தார். ஆன்மிக உரையாடலால் வலுப்பெற்ற நட்பு, கூடிய சீக்கிரம் காந்தியின் எளிமை, சைவம், சமத்துவ அரசியலை ஹெர்மன் காலன்பக்கிடம் கொண்டுசேர்த்தது.

தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகிகளுக்கு என காந்தி திட்டமிட்ட குடியிருப்பான ‘டால்ஸ்டாய் பண்ணை’ உருவாக காந்திக்கு 1,000 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியதோடு, குடியிருப்புகள் அமைக்கவும் உதவியவர் காலன்பக். 1913-ல், ‘ஃபீனிக்ஸ் பண்ணை’யில் காந்தி நடத்திய முதல் பிராயசித்த உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாகிரக இயக்கம் இரண்டிலும் முக்கியப் பங்காற்றியவர். உலகப் போர் சூழலும் இந்தியச் சுதந்திரப் போராட்டச் சூழலும் காந்தியையும் காலன்பக்கையும் வெவ்வேறு இடங்கள் நோக்கித் திருப்பினாலும், இருவரும் இறுதி வரை ஆன்ம நண்பர்களாகவே இருந்தார்கள். 1945-ல் காலன்பக் இறந்தபோது, தன்னுடைய எஸ்டேட்டின் ஒரு பெரும் பகுதியை தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எழுதிவைத்துச் சென்றிருந்தார். இன்றைக்கெல்லாம் வரலாற்றின் இடுக்குகளில் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த பாறைகளும் இருளும் சேர்த்து மூடிப் புதைத்துவிட்ட ஒரு பெயர் ஹெர்மன் காலன்பக். லுதுவேனிய அரசு இந்தச் சிலையின் மூலம் அதை மீட்டெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே, இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.