யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?



தமிழ்நாட்டில் சாதி அரசியல் சம்பந்தமாகப் பேசப்படும்போதெல்லாம், மன்னார்குடி ஞாபகம் வரும். எதையும் வாழ்வில் நேரடியாகப் பார்க்கும் களங்கள் மறக்க முடியாதவை அல்லவா! செய்தித்தாள்கள், புத்தகங்களில் நாம் படிக்கும் கதைகளும், களத்தில் யதார்த்தத்தில் நிலவும் சூழல்களும் எல்லா விஷயங்களிலும் அப்படியே பொருந்திப்போவது இல்லை. இந்தியாவில் சாதி அரசியலுக்கு இது நிறையவே பொருந்தும்.

மன்னார்குடியில் கு.பா. என்றொரு தலைவர் இருந்தார். கு.பாலகிருட்டிணன் என்பது முழுப் பெயர். திமுகக்காரர். மன்னை நாராயணசாமி காலத்துக்குப் பின், மன்னார்குடியில் கருணாநிதியின் முன்னுரிமைப் பட்டியலில் முதல் வரிசையில் இருந்தவர். கட்சியில் மூத்தவர், கடுமையாக உழைக்கக் கூடியவர், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் இன்னல்களை எதிர்கொண்டவர் இப்படி ஏராளமான பின்னணிகள் அவருக்கு இருந்தன. முதல் நாள் பகலில் மன்னார்குடியில் கருணாநிதி கூட்டத்தில் அதிமுகவை ஆவேசமாகப் பேசும் பாலகிருட்டிணன், மறுநாள் இரவு சசிகலாவின் தம்பி திவாகரனுடன் உட்கார்ந்து உறவாடிப் பேசிக்கொண்டிருப்பார். அதிமுகவும் ஜெயலலிதாவும் அவருக்கு எதிரி. திவாகரன் அப்படி அல்ல; வேண்டப்பட்டவர்; சொந்தக்காரர்!

திமுகவின் ‘நீல நட்சத்திரப் பேச்சாளர்’களில் ஒருவரான வெற்றிகொண்டான் ஜெயலலிதா தொடர்பாகக் கடுமையாகவும் ஆபாசமாகவும் பேசிய எத்தனையோ மேடைகளில் சசிகலா தொடர்பாகப் பேச்சு வரும்போது, “பாவம், அது நம்ம வூட்டு புள்ள, ஒண்ணும் தெரியாத அப்பாவிப் புள்ளைய எல்லாத்துலேயும் சிக்கவெச்சிட்டாங்க” என்று வெளிப்படையாகச் சாதிரீதியிலான உறவில் கடப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.

மன்னார்குடியில் சிவா ராஜமாணிக்கம் அப்போது காங்கிரஸில் இருந்தார். தேர்தலில் அவரை எதிர்த்துத் தம் கட்சி வேட்பாளரோடு தெருத்தெருவாகப் பகலில் சுற்றும் அதிமுககாரர்கள் இரவில் தம் சாதிக்காரர்கள் வீட்டுக்கு மட்டும் போய், “ஆயிரம் இருந்தாலும் ராஜமாணிக்கம் நம்மாளு, கட்சி பார்த்து விட்டுர முடியாது” என்று மாற்றி ஓட்டு கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுச் சமூகம் முக்குலத்தோர் என்று அகமுடையர், கள்ளர், மறவர் மூன்று சமூகங்களையும் ஒன்றாகக் குறித்தாலும், உள்ளுக்குள் அப்படி அல்ல. அகமுடையர், கள்ளர் சமூகங்கள் பெருமளவில் வசிக்கும் மன்னார்குடியில் அதிகாரப் போட்டி என்றைக்குமே இந்த இரு சமூகங்களிடையேதான் இருந்திருக்கிறது. பெரிய கோயில் திருவிழா அரசியல் முதல் திமுக, அதிமுக உள்கட்சி அரசியல், தேர்தல் அரசியல் வரை எதுவும் இதில் இன்றைக்கு வரை விதிவிலக்கு அல்ல.

ஒரு ஊர், இரு கட்சிகள் அல்லது இரு சமூகங்கள் சார்ந்த வரையறைகள் அல்ல இவை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்சியிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இப்படியான பல பல உள்கதைகளை, கிளைக் கதைகளைப் பார்க்க, கேட்க முடியும்.

வசந்திதேவியும் ராமச்சந்திரனும்


சத்தியமங்கலம் வனப் பகுதிக்குச் சென்றிருந்தேன். மலைக்கு மேலே ஓரளவுக்கு மேல் சென்றுவிட்டால், நாம் எதிர்கொள்ளும் இந்தியாவில் பெரிய அளவில் மாநில வேறுபாடுகள் தெரிவதில்லை. நாடு முழுவதும் பழங்குடி மக்கள் பெருமளவில் ஒரே மாதிரியான துயரங்களையே எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசும்போது, தேர்தல் தொடர்பான அவர்களுடைய எண்ணப்போக்குகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. பலதும் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு அவர்களுடைய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாகச் சென்றது. ஆச்சரியமான விஷயம், நிறையப் பேர் திருப்தியாகப் பேசினார்கள்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி அது. காடு, மலை, பள்ளம் என்று பரப்பளவில் பரந்து விரிந்த மிகப் பெரிய தொகுதி. சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்க வேண்டும் என்றால், சாதாரணமாக 100 கி.மீ. பயணித்து வர வேண்டிய அளவுக்குத் தொலைவிலுள்ள கிராமங்களைக் கொண்டது. இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் அவரைப் பார்க்க வருவது சிரமம் என்பதால், மலையிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, அவரே மக்களைப் பார்க்க வருகிறார் என்றார்கள்.


குன்றி மலைப் பகுதியில், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சாலையே இல்லாத காளிதிம்பம், இராமரணை, மாவநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சாலை வசதியை உண்டாக்கித் தந்திருக்கிறார். காலங்காலமாக சாதிச் சான்றிதழுக்காகப் போராடிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சான்றிதழ்கள் வாங்கித் தந்திருக்கிறார். தொகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வாங்கிக் கொடுத்திருக்கிறார்; இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கியமான விஷயம், கை சுத்தம் என்றார்கள். மனைவி அஞ்சல் துறையில் வேலை செய்கிறாராம். சுந்தரத்தின் குடும்ப வாழ்க்கை மனைவியின் வருமானத்தில் ஓடுவது என்றார்கள். மீண்டும் இதே தொகுதியில் நிற்கிறார் சுந்தரம்.

இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒருவர் எம்.ஜெயசீலன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லால்குடியில் நிறுத்தப்பட்டிருப்பவர். பள்ளிவிடை கிராமத்தில் வெறும் 210 சதுர அடி அளவே உள்ள வீட்டில் தாய், மனைவி, இரு மகள்களும் வாழ்ந்துவரும் மனிதர். கட்சி தரும் சிறு தொகையில் வாழ்க்கையை ஓட்டிவந்த ஜெயசீலன், இவ்வளவு காலம் வங்கிக் கணக்குகூட இல்லாமல் இருந்திருக்கிறார். ஏராளமான மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கும் ஜெயசீலன், எந்தப் பிரச்சினை என்றாலும் கூப்பிட்ட உடன் ஓடிவருபவர் என்கிறார்கள்.

சர்வமும் பணமயம் ஆகிவிட்ட இந்திய அரசியலில் இப்படியான வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கான சாத்தியங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளே பெருமளவில் மிச்சம் வைத்திருக்கின்றன. இடதுகளின் மக்கள் நலக் கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் பல வேட்பாளர்கள் இப்படிக் கவனிக்கவைக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவமும் பலமும் இது. எனினும், இயக்கத்துக்குள் வளர்ந்துவந்த இவர்களையெல்லாம் தாண்டி, வெளியே வளர்ந்து இடதுகளின் மநகூ சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களே இன்றைக்குப் பெரும் கதையாடலாக மாறியிருக்கிறார்கள். முதலாமவர் வசந்திதேவி; இரண்டாமவர் ராமச்சந்திரன்!

அழுகும் கழகங்கள்!


சென்னை ஔவை சண்முகம் சாலை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள உணவகத்தில் விழுப்புரம் தொண்டர்கள் கூட்டம் நுழைந்தபோது மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது. தங்கள் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பாளரின் தகிடுதத்தங்களைப் பற்றி கட்சித் தலைமைக்குப் புகார் அளிக்க வந்தவர்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்து போகிறார்கள். உள்ளூரிலிருந்து மேலே பேசி வேலைக்கு ஆகாத சூழலில், போராடும் நோக்கில் சென்னை வருகிறார்கள். தலைமை அலுவலகத்துக்கும் ஜெயலலிதா வீட்டுக்கும் வருபவர்களை இங்குள்ளவர்கள் அசமடக்குகிறார்கள். கூடுமானவரை பேசிக் கரைக்கிறார்கள். மசியாதவர்களை உள்ளே அழைத்து புகாரை எழுதிக் கொடுத்துவிட்டு போகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் போராட்டங்கள் நடக்கின்றன.

திருச்சி, மதுரை, தென்காசி, உளுந்தூர்பேட்டை, ஈரோடு, பெருந்துறை ஊர்களிலிருந்து வந்தவர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தார்கள். கள்ளக்குறிச்சியிலிருந்து வந்தவர்கள் தீக்குளிக்கும் போராட்டத்திலேயே இறங்கினார்கள். தி நகர் வேட்பாளர் சத்தியநாராயணா நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். திருச்சி தமிழரசி ஒரு போலி மருத்துவர் என்றார்கள். பெருந்துறை வெங்கடாசலம் மீது ஏராளமான முறைகேடு புகார்களுடன் விடுமுறை நாளன்றுகூட அவர் ஒரு சொத்தைப் பதிவுசெய்திருப்பதாகச் சொன்னார்கள். ஒவ்வொருவர் கையிலும் நிரூபிக்க ஏராளமான ஆவணங்களும் இருந்தன.
 

நாம் பேசிக்கொண்டிருக்கும் கதை, ஜெயலலிதாவே நேரில் வந்து “நான் நிறையத் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்” என்று கூறினாலும், “ஐயோ, அம்மா நீங்கள் கடவுள்” என்று மறுக்கும் ரக தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் நடப்பது. “தலைவர் ஒரு முடிவெடுத்தால் அதில் ஒரு கணக்கு இருக்கும்” என்ற பேச்சுக்குப் பேர் போன திமுகவும் கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தைத் தாண்டி, கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளையே  முற்றுகையிட வருகிறார்கள். பாளையங்கோட்டை, சீர்காழி, மண்ணச்சநல்லூர், சோழிங்கநல்லூர், குன்னூர் என்று வரிசையாகக் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
 

இதுவரை அதிமுகவில் 26 தொகுதிகளிலும் திமுகவில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மாற்றம் நடந்திருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், மாற்றங்கள் தொடர்கின்றன. எல்லா மாற்றங்களுக்குமே எதிர்ப்பு மட்டுமே காரணம் இல்லை என்றாலும், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியைத் தாங்க வல்லவர்கள் இல்லை என்ற முடிவுக்குக் கட்சித் தலைமை வரும்போது, அதன் முந்தைய முடிவு தவறானது என்பது வெளிப்படையாகிறது.
 

கட்சிக் கட்டுப்பாடு, வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் புள்ளிகளின் மிரட்டல், மேலே வேட்பாளர் தேர்வில் பங்கேற்றிருக்கும் நிழல் அதிகார மையங்களின் ‘லாபி’ இவையெல்லாவற்றையும் தாண்டியும் ஒரு கட்சியின் கீழ்நிலை தொண்டர்கள் இப்படிப் போராட்டக் குரலோடு கட்சித் தலைமைகளை நோக்கி வருவது தமிழகத்துக்குப் புதிது; ஜனநாயகத்துக்கு நல்லது. இந்த விஷயத்தில் இதைத் தாண்டி அம்பலத்துக்கு வந்திருக்கும் ஒரு சங்கதி நாம் விவாதிக்க வேண்டியது. அது, இரு கட்சிகளுக்கும் அடிவரை புரையோடியிருக்கும் ஊழல். இந்த ஊழலுக்கு வெளியே இருப்பவர்களை அறிய முடியாத அளவுக்கு தலைமைகள் அந்நியமாகி இருப்பது.

ஜனநாயகம் யார் கையில்?


ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.

நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் – கீழே வேட்பாளர்கள்; மேலே அவர் மட்டும் என்பதான – மேடை முடியாட்சிக் கால, சர்வாதிகார மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் இப்படியான ஒரு மேடையமைப்பில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, பிரதான கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை.

ஏப்ரல் 11 விருத்தாசலம் நிகழ்வு தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தவர்களிடம் பேசும்போது நடந்தது ஒரு விபத்தாகத் தோன்றவில்லை. நம்முடைய அரசியல்வாதிகளின் ஆணவத்தினாலும் அதன் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தினரிடமும் கீழேயுள்ள நிர்வாகக் கட்டமைப்பினரிடம் ஊடுருவியிருக்கும் அலட்சியத்தாலும் நடத்தப்பட்ட கொலைகளாகவே தோன்றுகின்றன.

அரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்



தமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார். கூடுமானவரை உண்மைக்கு முகம் கொடுத்தார். எதிர்த்தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பளித்தார். தவறுகளை யோசிப்பவராகவும் மறுபரிசீலனை செய்பவராகவும் தெரிந்தார். சமகால அரசியல் தலைவர்கள் மத்தியில் இவையெல்லாம் அரிதாகிவருவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நாங்கள் பேசினோம்.

அவர் வரலாற்றில் இருக்கிறார்!


நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்” என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். முதுபெரும் தலைவர் கருணாநிதியை விமர்சிக்கையில் நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது.

வைகோ பிறகு மன்னிப்புக் கேட்டார். வைகோவிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றாலும், மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. பொதுமேடைகளில் இதை அரசியல் கலாச்சாரமாக வார்த்தெடுத்ததில் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. சாதியத்தையும் சாதியையும் சாடுவது வேறு; எல்லா மனிதர்களையும் அவர் பிறப்பின் அடிப்படையில் சாதியோடு சேர்த்துப் பொதுமைப்படுத்தி வசைபாடுவது வேறு. சாதி ஒழிப்புக்காக இறுதி வரை போராடிய பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. “பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.

தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் கருணாநிதி மீதான விமர்சனங்களில் சாதி கூர்மையாகத் தனித்து இயங்கு வதை ஒரு ஊடகனாகப் பல்வேறு தருணங்களில் கவனித்திருக்கிறேன். கருணாநிதி சாதிரீதியிலான இழிவை எதிர்கொள்ளும்போதெல்லாம் என் ஞாபகங்கள், மறைந்த கலை விமர்சகர் தேனுகாவை நோக்கி இயல்பாகச் செல்லும். 


இனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை!


ஜாட் உள்ளிட்ட ஐந்து சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 10 நிமிடங்களுக்குள் ஒருமனதாக நிறைவேற்றி யிருக்கிறது ஹரியாணா அரசு. ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தங்கள் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லையெனில், கிளர்ச்சி தீவிரம் அடையும் என்று கெடு விதித்திருந்தனர் ஜாட் தலைவர்கள். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அரசு கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரச்சினைக்கான தீர்வு அது இல்லை.

ஹரியாணாவில் ஜாட்டுகள் நடத்திய போராட்டங்களில் ரூ.20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொன்னது அசோசேம். கலவரங்களின் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடும் ரத்தானது. மீண்டும் மாநாடு நடத்தப்படலாம். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதலீடுகள் வருமா என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டங்களின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் சாமானிய உயிர்களுக்கு என்றைக்கு மதிப்பு இருந்தது? அதேசமயம், அசோசேம் குறிப்பிடும் இழப்பும் முதலீட்டாளர்கள் மாநாடு ரத்தானதால் ஏற்படும் இழப்பும் ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கக் கூடியவை. யோசிக்கட்டும்!