அன்புக்குரிய கேளிர், வணக்கம்!
உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.
இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.