எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம் தீர்மானிக்கப்பட்ட முடிவோடு முடிந்தது எப்படி?


தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துகொண்டிருந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நண்பர்கள் அழைத்த வண்ணம் இருந்தார்கள். தமிழர் அல்லாத நண்பர்களுக்கு அது ஆச்சர்யம். தமிழ் நண்பர்களுக்கோ அது பெரிய குஷி. “நம்ம பசங்க எல்லோரையும் திரும்பிப் பார்க்க வெச்சிட்டாங்க. இங்கெல்லாம் ரொம்ப மரியாதையோடு பார்க்குறாங்க.”

இங்கே தமிழ்நாட்டில் எப்போதுமே நாம் நெஞ்சை நிமிர்த்தி விரைத்துக்கொண்டு நடக்கிறோம் என்றாலும், தமிழகத்துக்கு வெளியே செல்பவர்களுக்குத்தான் சாதாரண நாட்களில் ‘மதராஸி’ ஆக இருப்பதன் துயரம் புரியும். தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் நமக்குச் சேர்த்து வைத்திருக்கும் ‘அடிமைப் பெருமை’ அப்படி!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தப் பிம்பத்தைக் கணிசமான அளவுக்கு மாற்ற முனைந்தது. போராட்டத்தின் உள்ளடக்கம் ஜல்லிக்கட்டாக இருந்தாலும், அதன் வெளிப்பாடு ஆட்சியாளர் களுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான துணிச்சலான அறைகூவல் என்பதை நாடு சரியாகவே உணர்ந்தது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் டெல்லியிலும் ஆட்சியாளர்களை இந்தப் போராட்டம் பதைப்பதைப்பில் தள்ளியதற்கான நியாயம் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நாடு முழுக்கப் பரவக் கூடியவை.

பெரும் திரளான மக்கள் கூட்டத்தை அதிகாரம் கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணியில் ஆரம்பத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆளும் அதிமுகவின் புதிய தலைமைக்கு எதிரான அதிருப்தி குரல்களிலிருந்து மக்களின் கவனம் திசை திரும்ப அனுமதிப்பதே அது. அடுத்தடுத்த நாட்களில், போராட்டம் தமிழகம் எங்கும் விசுவரூபம் எடுத்ததும் மாணவர்கள் ஜல்லிக்கட்டைத் தாண்டி மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இரு தரப்பையுமே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும் தமிழக அரசு எதிர்பாராதது. ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்தச் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள முனைந்தன. அதற்கும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை. ஆக, பாரம்பரிய அரசியல் கட்சிகள் பெரும்பாலானோருக்கு எரிச்சலூட்டியபடி போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 26 நெருங்கிய சூழலில், மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடியாகப் பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

ஜல்லிக்கட்டு தொடர்வதற்கேற்ப சட்டப்பேரவையில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவதோடு கூட்டத்தைக் கலைக்க இரு அரசுகளும் முடிவெடுத்தன. தொடக்கத்தில் கூறியபடி, இந்தப் போராட்டத்துக்கான உள்ளடக்கம் ஜல்லிக்கட்டு என்றாலும், அதன் உண்மையான இலக்கும் மக்கள் வெளிப்படுத்திய கோபமும் ஜல்லிக்கட்டைத் தாண்டியவை. போராட்டக்காரர்களும் இதை உணர்ந்திருந்தனர். அரசும் உணர்ந்திருந்தது. பொதுச்சமூகமும் உணர்ந்திருந்தது. ஊடகங்களும் இதை அறிந்திருந்தன. என்றாலும் எல்லோருக்குமே ஜல்லிக்கட்டு முகமூடியே பாதுகாப்பானதாகத் தோன்றியது. கூடவே ஜல்லிக்கட்டைத் தாண்டிய அரசியல் கிளர்ச்சியாக இது உருமாறுமா என்ற அந்தரங்க எதிர்பார்ப்பும் பலரிடமும் தெரிந்தது.

பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வைக்குள் பூட்டிவைத்திருப்பீர்கள்?



பத்ம விருதுகளில் இந்த ஆண்டு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடமில்லாமல் போனதை, மும்பையில் விவாதம் ஆக்கியிருக்கிறார்கள். இதற்குப் பின் இரண்டு கூற்றுகள் உண்டு. நாட்டில் தலைநகர் டெல்லிக்கு அடுத்து அதிகமான பத்ம விருதுகளைக் குவித்திருப்பது மகாராஷ்டிரம். 2017 வரை அறிவிக்கப்பட்டிருக்கும் 4373 பத்ம விருதுகளில் 764 விருதுகளை அது பெற்றிருக்கிறது. 397 விருதுகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிர லாபிக்கு டெல்லியில் உள்ள செல்வாக்கை உணர முடியும். பத்ம விருதுப் பட்டியலில் எப்போதும் மத்திய ஆட்சியாளர்களின் செல்லக்குட்டிகள் சினிமாக்காரர்கள். ஏன் அப்படி?

தமிழக அரசியல்வாதிகளே... போராட்டத்தைப் படியுங்கள்!

படம்: ஷிவ கிருஷ்ணா

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

டெல்லிக்கட்டு!


அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை என்று தமிழகம் எங்கும் பரவியது?

ஒட்டுமொத்த இந்தியாவும் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. மெரினா கடற்கரையை நோக்கிச் செல்லும் சென்னையின் ஒவ்வொரு சாலையும் மனிதத் தலைகளால் நிரம்பி வழிகிறது. இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மெரினாவில் உட்கார்ந்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்குப் பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. இது தவிர, பல்லாயிரக்கணக்கானோர் நாளெல்லாம் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பேரணியாக வர முடியாதவர்கள் ஆங்காங்கே தெருமுக்குகளில் கையில் கருப்புக் கொடியுடன், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளுடன் கூடி நிற்கிறார்கள். சைதாப்பேட்டையில் பணி முடித்து சீருடையைக்கூடக் கலைக்காமல் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் ‘தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றதைப் பார்த்தேன்.  எங்கு பார்த்தாலும் கருப்புச் சட்டையர்கள். எங்கும் பறை, மேளதாள முழக்கங்கள். ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே அறிந்திராத எதிர்வீட்டு ஐந்து வயது சிறுமி கையில் பென்சிலால் எழுதப்பட்டு, மாடு வரையப்பட்ட காகிதத்துடன் தெருவுக்கு ஓடுகிறாள். ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் பலரை முடக்கும் காயங்களைத் தந்துச் செல்லக் கூடியது; சிலரது உயிரையும் உடன் எடுத்துச் செல்லக் கூடியது. ஜல்லிக்கட்டை அறிந்த பெண்கள் அதை உவகையோடு அணுகிப் பார்த்ததில்லை. இன்று மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தன்னெழுச்சியாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்! திருச்சியில் முக்காடிட்ட முஸ்லிம் சிறுமிகள் சிலம்பம் சுற்றியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அத்தனையையும் ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்வினையாக மட்டுமே பார்க்க முடியுமா?


தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் எது?


முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”

தேசியத்தின் பெயரால் எல்லாவற்றையும் நாம் பொதுமைப்படுத்துகிறோமா?


வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்ப்பை மேலோட்டமான ஒரு தேசபக்தக் கொண்டாட்ட மனோநிலையில் இந்தியா வேகமாகக் கடந்துவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘‘தேர்தல்களில் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்ட விரோதம்’’ என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது, நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட லட்சியவாதம் நம் எல்லோர் மனதையும் ஆக்கிரமிப்பது இக்காலத்தின் பிரச்சினையாகவே உருவெடுக்கிறதோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது.