சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?


இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.

ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?


எப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள்? இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை?”

அடுத்த முதல்வர் சகாயம்?


எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்ததும்!

சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை. நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்’ எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது. அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?”

அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?

என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, “உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்” என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.


மாற்றமாவோம்!


அரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா. எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம். இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இரு வழிகள்; நாம் எந்த வழி?



நகுலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.” விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்: “எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்; எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”
 

சென்னை வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த நாடு வாழ்வதற்கானதாக அல்ல; பிழைப்பதற்கானதாக நம் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.
“ஏன் மாப்ள, ஓடி ஓடிச் சம்பாதிக்குற காசையெல்லாம் சின்ன வயசுல பிள்ளைங்களுக்காகப் பள்ளிக்கூடங்கள்ல கொடுத்துடுறோம்; நடு வயசுல சம்பாதிக்கிறதைக் கல்லூரிகள்ல கொடுத்துடுறோம்; வயசான பின்னாடி மிஞ்சுற காசை ஆஸ்பத்திரிக்காரன் பறிச்சுக்குறான். உள்ளபடி நாம யாருக்குச் சம்பாதிச்சுக் கொடுக்க இந்த ஓட்டம் ஓடுறோம்? யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம்?”
கேள்விக்கான பதிலை யோசிக்கும் முன்பே மீண்டும் ஓட்டத்தை நோக்கி விரட்டிவிடுகிறது சூழல்.


ஒருவேளை இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கி ஆஸ்பத்திரி வரையிலான எல்லாச் செலவுகளைத் தாண்டியும் நம்மால் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க முடியும் என்றால், நம் பேரப் பிள்ளைகளுக்கு அது உதவலாம். அவர்களுக்கும்கூட வைத்தியச் செலவுகளுக்கு அந்தக் காசு உதவுமே தவிர, காலை ஆட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்க உதவாது என்பதே உண்மை. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஒரு விபரீதத்தைச் சுட்டிக்காட்டிவருகிறது. இப்போதெல்லாம் வாழ்முறை சார்ந்த நோய்களே இந்தியர்களை அதிகம் கொல்கின்றன. குறிப்பாக, இந்திய நகர்ப்புறங்களில் ஏற்படும் 80% மரணங்கள் இதயநோய், புற்றுநோய், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றன. 60 வயதுக்குள் இந்நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 13%. இந்தியாவில் 30%. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2005-ல் 3.8 கோடியாக இருந்தது. இப்போது 6 கோடி. நீரிழிவு நோயாளிகள் 5.1 கோடி. இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த புற்றுநோய் முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேரைப் புதிதாக அது பீடிக்கிறது; 7 லட்சம் பேரை அது கொல்கிறது.

குப்பை அரசியல்!




அடையாற்றிலிருந்து அதிகபட்சம் 250 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என் வீடு. வெள்ளம் வீட்டுக்குள் என்ன வேகத்தில் வந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. 10 நாட்களுக்குப் பின்னரே வீட்டுக்குள் நுழைய முடிந்தது. நிறைய நண்பர்கள் விசாரித்தார்கள். பொருளாதாரரீதியாகப் பெரும் இழப்புகள் நேர்ந்திருக்குமோ என்கிற கவலையில், உதவவும் பலர் முன்வந்தார்கள். அப்படியான பொருள் இழப்புகள் எதுவும் நேரவில்லை. உண்மை இதுதான். எங்கள் வீட்டில் கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், அப்படியான பொருட்கள் எதுவுமே வீட்டில் இல்லை. மிச்சமிருந்த சாமான்களும் புத்தகங்களும் அரை மணி நேரத்துக்குள் சில மூட்டைகளில் கட்டி பரண்களில் வைக்கக் கூடிய அளவிலானவை. ஆகையால், யாவும் தப்பித்தன. இதற்காக பொருட்களே இல்லை என்றால், எந்தப் பாதிப்புமே இருக்காது என்று சொல்ல வரவில்லை; என்னளவில் நான் புரிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மை, பொருட்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்குச் சுமைகளும் சிரமங்களும் குறைவு என்பது.

ஆறா, சாக்கடையா?


சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

கக்கா போவதும் அரசியல்தான்!


சிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.

உண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.

கொஞ்சம் விளக்கமாகவே எழுதுகிறேன்.

என் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்!


ரவு வெகுநேரமாயிற்று வேலை முடித்துச் செல்ல. குளிர் உடலுக்குள் ஊடுருவிச் சென்றது. உள்ளூர் ரயில் நிலையங்களில் எப்போதும் நிற்கும் கூட்டம் இல்லை. நடைமேடைக் கடையில் தண்ணீர் போத்தல் வாங்கினேன். தலையைச் சுற்றி கம்பளி மப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை இறுகக் கட்டியவராக உட்கார்ந்திருந்தார் கடைக்காரர். “எப்படி இருந்த ஊர், எப்படியாயிட்டு பாருங்க…” என்றார். “ஒரு பத்து லட்சம் பேர் ஊரைவிட்டுப் போயிருப்பாங்களா?” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னைல இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்!” ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க!” என்றார். சிரித்தேன். ரயில் வந்தது. வெறிச்சோடி கிடந்தது. ரயிலின் வேகம் குளிரை மேலும் கூட்ட ஆரம்பித்தது.

மக்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா? இப்படி ஒரு கேள்வி கேட்டால், எப்போதுமே அதற்கான பதில் ஆம். ஆனால், புதிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏன் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றன?

பிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்?


அடிக்கடி நினைப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது?

ஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்!” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் இல்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.

1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பயணத்தில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.

1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறையில் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.

கொல்வது பயம்


இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?

நமக்குள் ஒரு தலைவன்!


தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

மக்கள் ஆட்சி


ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். “அது என்ன நீங்கள் ‘தி இந்து’வில் இப்படி எழுதுகிறீர்கள், ‘முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை!’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா?” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா?” என்று கேட்டிருந்தார்.

மனிதப் பேரவலம்!

நன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்
திர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம்! சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.

பேரழிவுக்கு யார் பொறுப்பு?


வீடு முழுக்க வெள்ளம் சேர்த்த சேறு. ஒரு வாரம் தண்ணீரில் மூழ்கியிருந்ததில் வீட்டின் உள்பக்கச் சுவர்கள் சாயும் நிலையில் இருந்தன. வீட்டின் அத்தனை சாமான்களும் வீட்டுக்கு வெளியே வீதியில் வெயிலுக்காகப் பரப்பிக் கிடந்தன. வீட்டுச் சுவரில் பளிச்செனத் தெரிகின்றன ஒரு பக்கம் இரட்டை இலை, ஒரு பக்கம் உதயசூரியன். இரண்டுக்கும் நடுவே உட்கார்ந்து பைத்தியம் பிடிக்காத குறையாக அரற்றிக்கொண்டிருந்தார் சின்னக்கா: “ஏ தெய்வமே நான் என்ன செய்வேன்?” பேரழிவுக்குள்ளான கடலூரில் பயணித்தபோது, தமிழகத்தின் சமகால சமூக நிலை யையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் கணத்தில் உணர்த்தும் ஒரு குறியீடுபோல இருந்தது அந்தச் சூழல்.