சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்



வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.

அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் – படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன்.

எப்போது தூங்குவான்?

ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான்.

என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.

வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?


அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்றைய நாளில் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் வழியே காரில் வீட்டுக்குத் திரும்புகையில் கொஞ்சம் ஆச்சரியம்கூட அடைந்திருக்கக் கூடும். கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரிடமிருந்தும் துளி முணுமுணுப்பு வெளியே வரவில்லை; அத்தனை பேரும் இதற்காகக் காத்திருந்தவர்களைப் போலக் காட்டிக்கொண்டனர்;  மாவட்ட அமைப்புகள் உதயநிதியை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. ஸ்டாலினை இளைஞர் அணியின் பொறுப்பு நோக்கி அவருடைய தந்தை கருணாநிதி நகர்த்தியபோது, சூழல் இவ்வளவு இசைவாக இல்லை.

நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளுக்குப் பின், அதன் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, நாடு முழுவதும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று ‘வாரிசு அரசியல்’ விவாதத்துக்குள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியிருக்கும் சூழலில், இப்படி பட்டவர்த்தனமாக வாரிசுக் கொடியைப் பறக்கவிட எங்கேயோ ஒரு கட்சி கூச்சம் துறக்க வேண்டியிருக்கிறது. செம்மொழி மாநாட்டில் ஆய்வறிஞர்கள் மத்தியில், ‘ஸ்டாப் புகழ்’ பேத்தியைக் கவிதை வாசிக்க வைத்து கருணாநிதிி  அழகு பார்த்த காலகட்டத்திலேயே எல்லா இறக்கங்களையும் பார்த்துவிட்டதால், “குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறது; திமுகவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று கம்பீரமாக முட்டுக்கொடுக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள் கட்சிப் பிரதிநிதிகள். அதிகாரம் தன் பிறப்புரிமை என்பதுபோல இருக்கின்றன உதயநிதியின் செயல்பாடுகளும், ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் முன்னதாக அளித்திருந்த பேட்டிகளும். எல்லோருக்குமே எங்கோ, யாரோ ஞாபகப்படுத்த வேண்டியிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது: அடிப்படையில், வாரிசு அரசியல் எதிர்ப்பிலிருந்து முகிழ்ந்த கட்சி திமுக.