இடதுசாரி கட்சிகள் இணைப்பு தொண்டர்கள் கையில் - சீதாராம் யெச்சூரி


சீதாராம் யெச்சூரி யுத்த களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல; இந்திய இடதுசாரி இயக்கம் முழுமைக்கும் இது முக்கியமான ஒரு யுத்தம். பாஜக நாட்டின் எல்லா பாகங்களிலும் கிளை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில், இடதுசாரிகள் தம் கோட்டையாகப் பார்க்கும் வங்கத்திலும் கேரளத்திலும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இரு இடங்களிலுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்; கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் காலம் அவர்களை நிறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அரை நூற்றாண்டு `திமுக - அதிமுக' அரசியலுக்கு முடிவுகட்டும் நோக்கில் கட்சி கட்டியிருக்கும் கூட்டணியை நம்பிக்கையுடனே பார்க்கிறார் யெச்சூரி. தேர்தல் களத்தைத் தாண்டியும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரிடம் நிறையப் பேசினேன்.

மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு!



தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, ‘விஜயகாந்த் கூட்டணி’ ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி. தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால் சேர்க்க முடியவில்லை. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பேரம் முடித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மிச்சமுள்ள 110 இடங்களை நான்காகப் பிரித்தால், இக்கூட்டணியின் மூலம் அடைந்த பலன் என்ன என்பதை நால்வர் அணிக்குத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும்.

ஓராண்டுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘திராவிட அரசியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தைச் சுற்றிவந்தது பொதுத்தளத்தில் ஒரு ஈர்ப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருந்தது. அரை நூற்றாண்டு ‘திராவிட அரசியல்’ தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய இழிவான சூழ்நிலையின் வெளிப்பாடு அது. இதே முழக்கத்துடன் பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் களத்தில் நின்றாலும், இடதுசாரிகள் கவனம் ஈர்க்கக் காரணம் சாதி, மதச்சார்ப்பற்ற அவர்களுடைய நிலைப்பாடும், அவர்கள் பேசும் விளிம்புநிலை அரசியலும், அவர்கள் தம் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க ஆளுமைகளும்.தமிழகத்தில் இதுவரை இல்லாத சூழலாக, இந்தத் தேர்தலில் சுமார் 1.08 கோடி இளைஞர்கள் - 22.92% பேர் - புதிதாக வாக்களிக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையை இந்தப் புதிய தலைமுறை வாக்காளர்களிடம் பெரிய அளவில் கவனிக்க முடிந்தது. அவர்களைக் குறிவைத்து இறங்குவதற்கான களம் இடதுசாரிகளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. நிச்சயமாக இடதுசாரிகள் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறவர்கள் அல்ல என்றாலும்கூட, இப்படியான ஒரு தரப்பை ஆதரிப்பது, தமிழகத்தின் சமகால அரசியல் போக்குக்கு எதிராக நிற்பதற்கான தார்மீக ஆதரவாகப் பார்க்கப்பட்டது. இப்போது இடதுசாரிகள் உருவாக்கியிருக்கும் கூட்டணியோ எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. வாக்காளர்கள் முன்பு கடைசியாக அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்வு என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்த்!

இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் உற்றுநோக்கும் எவருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாளுக்கு நாள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அதிகாரம் பெருமுதலாளிகள் காலில் குவிகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. எல்லாமும் சேர்ந்து சாமானிய மக்களை உக்கிரமாகத் தாக்குகின்றன. இத்தகைய சூழலில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகப் பேசும், ஒரு இயக்கம் மக்களிடம் இயல்பாகப் பரவ வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக அதை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பதென்ன? நேர் எதிராக நாளுக்கு நாள், மிக மோசமாக அடிவாங்குகிறார்கள் இடதுசாரிகள். காரணம் என்ன?மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகரமானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ; சரியாகக் கையாளவில்லையெனில், கையாள்பவரின் கைகளை அது பதம்பார்ப்பது நிச்சயம். அடிப்படையில் தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் சொல் மாற்றம். இடதுசாரிகள் இந்தியாவில் இவ்வளவு தூரம் கீழே வந்ததற்கும், நாளுக்கு நாள் அடிவாங்குவதற்கும் தூய்மைவாதத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளிடம் தூய்மைவாதப் பேச்சு அதிகம். தூய்மைவாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. ஊரையெல்லாம் விமர்சிப்பவர்கள் கடைசியில் தாம் செல்ல அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் எதிரியின் சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் கைகள் மட்டுமல்ல; உங்களுடன் கை கோத்து நிற்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதெனில், இடதுசாரிகள் தங்களது எதிரிகளை மிகச் சரியாக நிர்ணயிக்கிறார்கள். நண்பர்களை அடையாளம் காணும்போது மோசமாக சொதப்புகிறார்கள். வரலாற்று வாய்ப்புகளைத் தாமாக முனைந்து நாசப்படுத்திக்கொள்வதில், அலாதியான வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

உள்கட்சி விவகாரமா அதிமுக கூத்துகள்?


அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர்.

ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புரிமை. அரசின் நிர்வாகம் செழுமையாக மாற்றங்கள் உதவும் என்பதே இந்தச் சிறப்புரிமைக்கான அடிப்படை. தமிழகத்தில் அமைச்சர்கள் என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்படுகிறார்கள் அல்லது சேர்க்கப்படுகிறார்கள் என்பது வெளியே யாருக்கும் தெரியாத மர்மம்.

பொதுவாக, ஒரு அமைச்சர் நீக்கப்படுகிறார் என்றால், எப்படியும் அதற்குப் பின்வரும் மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும். 1. விசுவாசமின்மை, 2. திறமையின்மை. 3. அதிகார துஷ்பிரயோகம். எப்படிப் பார்த்தாலும் இந்த மூன்றில் ஒரு காரணத்துக்காக நீக்கப்படுபவர் எப்படி மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் அமைச்சரவைக்குள் இடம்பெற முடியும்? கோகுல இந்திரா, உதயகுமார், வேலுமணி, ஆனந்தன், சண்முகநாதன் ஆகியோர் இப்படித்தான் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, ரமணா ஆகியோர் இப்படித்தான் இரு முறை சேர்க்கப்பட்டு, இரு முறை நீக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு முறை அமைச்சர்கள் நீக்கத்தின்போதும் புலனாய்வுப் பத்திரிகைகள் வழி நம்மை வந்தடையும் செய்திகளில், பெயர்களில் வேறுபாட்டைக் காண்கிறோமே தவிர, காரணங்களில் வேறுபாட்டைக் கண்டதில்லை. இப்படியான ‘செய்திக் கசிவு’களில் உளவுத் துறையின் கைங்கர்யமும், ஆளுங்கட்சியின் அருளாசியும் எப்படிக் கலந்திருக்கும் என்பது ஊடக உலகை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. மொத்தத்தில், பொதுமக்களிடம் இச்செய்திகள் உருவாக்கும் பிம்பம்: ‘முதல்வருக்குத் தெரியாமல் பெரிய தவறுகளில் இந்த அமைச்சர் ஈடுபட்டிருக்கிறார்; இப்போதுதான் அது முதல்வர் கவனத்துக்கு வந்தது; உடனே கறாராக அவர் நடவடிக்கை எடுத்துவிட்டார்!’

இந்தக் கதைகள் உண்மை என்றால், திரும்பத் திரும்பத் தவறுகள் செய்யும் அமைச்சர்களைக் கொண்ட அரசியல் கட்சி அதிமுகவாகவும் திரும்பத் திரும்ப ஏமாற்றப்படுபவர் ஜெயலலிதாவாகவுமே இருக்க வேண்டும். ஜெயலலிதாவோ இப்படியான செய்திகள் மூலமாகவே தன்னை ஒரு தேர்ந்த நிர்வாகியாக நிறுவிக்கொண்டிருக்கிறார்.

2011-ல் திமுக அரசு கஜானாவைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டது என்று சொன்னபோது, திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டுக்கான உதாரணமாக ஜெயலலிதாவால் உதாரணப்படுத்தப்பட்டது, திமுக விட்டுச்சென்ற ரூ.1 லட்சம் கோடிக் கடன். 2016-ல் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது ஜெயலலிதா விட்டுச்செல்லும் கடன் ரூ.2.11 லட்சம் கோடி. திமுக விட்டுச்சென்ற கடனாவது காலங்காலமாகத் தொடர்ந்துவந்த அரசுகள் விட்டுச்சென்ற கடன்களின் நீட்சி. தன்னுடைய 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் அதைவிட அதிகமான கடனை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு. இது எந்த வகையான நிர்வாகத்துக்கான சான்று?

இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண்டால் என்ன?


சாதிய வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் ஏன் வாய்மூடி இருக்கிறது?' என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால்தான் ‘இப்போது ஏன் பேசுவதில்லை' என்ற கேள்வியும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்எஸ்எஸ் வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த கீழவெண்மணி சம்பவத்தின்போது - 44 தலித்துகள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டபோது - ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? சுந்தூரில் 8 தலித்துகள் கொன்றழிக்கப்பட்டபோது என்ன செய்தது? பதானில் 21 தலித்துகள் கொல்லப்பட்டபோது என்ன செய்தது? சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு என்று அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் குறிப்பிடப்பட்ட, 58 தலித்துகள் கொல்லப்பட்ட லக்ஷ்மண்பூர் பதே சம்பவத்தின்போது என்ன செய்தது?
 

சில நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. 2002-ல் டெல்லி வஸந்த்குஞ்சில் வேதக் கல்வி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவுக்கு அத்வானி வந்தபோது, இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் வசித்துவந்த தலித் குடும்பங்களை வெளியேற்றினார்கள். வேதக் கல்வி நிறுவனம் தொடங்கும் சமயத்தில் தலித்துகள் அங்கு இருந்தால், புனிதம் கெட்டுவிடும் என்றார்கள்.  அத்வானியோ, ஆர்எஸ்எஸ்ஸோ இதற்கு ஆட்சேபித்ததாக நினைவில்லை. அதே வருஷத்தில்தான் துலினா சம்பவமும் நடந்தது. இறந்துகிடந்த ஒரு மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐந்து தலித்துகளை அடித்தே கொன்றார்கள். குற்றவாளிகள் ‘விஷ்வ ஹிந்து பரிஷத்' தொண்டர்கள் என்ற செய்தி வந்தபோது, “எத்தனை மனித உயிர்களையும்விட உயர்வானது ஒரு பசுவின் உயிர்” என்று அந்தப் படுகொலையை நியாயப்படுத்தினார் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர். ஆர்எஸ்எஸ் இதைக் கண்டித்ததாக நினைவில்லை. அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்து மதத்தின் மிகப் பெரிய விரோதி சாதி. இந்துக்களை இந்து மதத்திலிருந்து விரட்டும் மாபெரும் தீயசக்தியும் அதுதான். இந்து மதத்தைக் காப்பதையே தன் பிரதான கடமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு நூற்றாண்டை நோக்கி நகரும் தருணத்திலேனும் அதன் உண்மையான எதிரியை அங்கீகரிக்க வேண்டுமா, இல்லையா?


அப்பச்சி சாமி


விருதுநகர். வெயில் இந்த ஊரில்தான் இப்படி அடிக்கிறதா அல்லது இந்த ஊரில்தான் இப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. காலையிலேயே சுள்ளென்று விழுந்தது. ஊரில் அன்றைக்கு முழுவதும் சுற்றித் திரிந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. யார் தலையிலும் துண்டு இல்லை, முக்காடு இல்லை, கையில் குடையில்லை; விருதுநகர்க்காரர்கள் நாளெல்லாம் வெயிலில் நனைந்துகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வாகும் சேர்ந்துத்தான் காமராஜரின் அலுக்காத உழைப்பில் வெளிப்பட்டிருக்குமோ என்று தோன்றியது.

சுலோச்சனா தெரு முக்கில் வண்டியை நிறுத்தினார் ஆட்டோக்காரர். “இதுல நேரே போனா அப்பச்சி வீடு, நடந்துருவோம்” என்று சொல்லிவிட்டு அவரே துணைக்குக் கூட வந்தார். குறுகலான தெரு. சின்னச் சின்ன கடைகள். நான்கு பேர் சேர்ந்தாற்போல் உட்கார முடியாத இடங்கள் வணிகத்தளங்களாக இருந்தன. பரபரவென்று வேலையில் இருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக் கடை. கடையைக் காட்டிலும், கடைக்கு வெளியே இருந்த உணவு வகைகளின் பட்டியலின் நீளம் அதிகமாகத் தோன்றியது. நடக்க ஆரம்பித்தோம்.

காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பின் அரை நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. அவருக்கு முன்பும் சரி, அவருக்குப் பின்னும் சரி; ஆட்சியில் இருந்த முதல்வர்கள் எவருமே சாமானியமானவர்கள் அல்ல. சாதுர்யர்கள், ராஜதந்திரிகள் என்று பெயரெடுத்தவர்கள். தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட முதல்வரும் அல்ல அவர். வெறும் 9 வருஷங்கள்தான் ஆட்சியில் இருந்தார். 1954 முதல் 1963 வரை. எது இன்னமும் மீண்டும் மீண்டும் காமராஜர் பெயரை உச்சரிக்க வைக்கிறது?

கொல்லும் அமைதி


தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடியபோது, பக்கத்தில் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். என்ன நினைத்தானோ சின்னவன் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்தான். அப்படியே காலில் சாய்ந்தவன் முகத்தை மடியில் புதைந்துகொண்டான். வீடு அப்படியே உறைந்துபோன மாதிரி இருந்தது. மனம் பதைபதைத்துக்கொண்டே இருந்தது. யாராலும் பேச முடியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருஷங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். பெண்களை உடைமைகளாகப் பார்க்கும் மனோபாவம் கற்காலத்திலிருந்தே தொடர்வது என்றாலும், சாதியை மீறித் திருமணம் செய்துகொள்ளும் அத்தனை பேர் மீதும் சாதிய திமிர் பாய்ந்துவிடவில்லை; இடம் பார்த்தே பாய்கிறது. பொதுவில் சாதி ஆணவக் கொலைகள் என்று உச்சரிக்கப்பட்டாலும், இப்படிக் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்.

ஒவ்வொரு கொலையும் கொடூரமானது என்றாலும் உடுமலைச் சம்பவம் இவ்வளவு உக்கிரமாக நம்மைத் தாக்கக் காரணம் அந்த வீடியோ. அது ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்தும் உண்மை. நம்மில் பலர் வெறும் சொல்லாக அல்லது பெருமிதமாக மட்டுமே பயன்படுத்தும் சாதியின் அசலான குரூர முகம்.

நகரத்தில், ஊர்க் கடைவீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அந்தக் கொலை சாவதானமாக நடக்கிறது. கடைக்குச் செல்லும் இளம் தம்பதியை மூன்று பேர் கொண்ட ஒரு குழு பின்தொடர்ந்து நடக்கிறது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து சேரும் இருவர் அவர்கள் அருகே வண்டியை நிறுத்துகின்றனர். தம்பதியை நோக்கி கும்பல் நகர்கிறது. கணவன் - மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டுகின்றனர். பின், சாவதானமாக மோட்டார் சைக்கிளை எடுக்கிறார்கள். சாவதானமாகச் செல்கிறார்கள்.

கொலை நடந்த இடத்தில் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்களின் கையறு நிலை, நடந்துகொண்டிருந்த கொலை, துடித்துக் கொண்டிருந்த உயிர்கள்… இவை எல்லாவற்றையும் விட, பயங்கரமானது கொலையாளிகளின் சாவதானம். அவர்களுடைய திமிர். அவர்களுடைய அமைதி… எங்கிருந்து கிடைக்கிறது கொலையாளிகளுக்கு இவ்வளவு துணிச்சல்? சம்பவம் நடந்து இரு நாட்களாகியும் இன்னும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்காத முதல்வர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வெளிப்படும் அசாத்தியமான அமைதியையும் கொலையாளிகளிடமிருந்து வெளிப்பட்ட அமைதியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!


கொல்கத்தாவில் 2016 தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களிடம் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். கள்ளக்கூட்டு. இந்த ஒரு வார்த்தைதான் திரிணமுல் காங்கிரஸாருக்கு மம்தா அளித்திருக்கும் தேர்தல் மந்திரம். இதை ஊர் ஊராக மக்களிடம் போய் சொல்ல பிரத்யா பாசு, தேவஸ்ரீ ராய், சிரஞ்ஜீத், தேவ், மூன் மூன் சென், பாய்சுங் பூட்டியா, லக்ஷ்மி ரத்தன் சுக்லா என்று ஒரு பெரிய நடிக - விளையாட்டு நட்சத்திரப் பட்டாளத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

மம்தா பிரயோகிக்கும் வார்த்தை கூசவைப்பதாக இருக்கலாம். அப்படியான உறவைத்தான் அங்கு தேர்தல் உத்தியாக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதன்படி, தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் இரு தரப்பும் அதிகாரபூர்வமாக தனித்தனியே நிற்கும். ‘கள்ளப் பங்கீட்டு தொகுதிகளில்’ பரஸ்பரம் ‘டம்மி வேட்பாளர்கள்’ போட்டு விட்டுக்கொடுத்துக்கொள்வார்கள்; மம்தாவுக்கு எதிராக பரஸ்பரம் கை கோத்து வேலை செய்வார்கள்.

தங்களை ஜனநாயகவாதிகளாகவும் தாராளச் சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் நாட்டின் இரு முக்கியக் கட்சிகளின் இப்படியான ‘கள்ளக்கூட்டு’ உறவு வெட்கக்கேடு. அதைத் தாண்டி தேர்தலில் கரைசேருவதற்கான உத்தியும் அல்ல இது.

ஜெயலலிதாவாதல்!


திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல்.

இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’  பிம்பம் ஜெயலலிதா.

ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.

திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள்.  “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?”  என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும் ‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார்.

அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.

வேகம் விவேகம் அல்ல மந்திரி!


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு நாள். பொழுதைக் கழிக்கப் பக்கத்திலிருந்த சுட்டிப்பையன் உதவினான். அவன்தான் கேட்டான், “அங்கிள், இன்ஜின் டிரைவர்ஸ் ரயில் போய்க்கிட்டிருக்கும்போது எங்கே போயி உச்சா போவாங்க?” இந்திய ரயில் இன்ஜின்களில் கழிப்பறை கிடையாது. இதுபற்றியெல்லாம் நாம் யோசிப்பதும் கிடையாது. ஒரு கேள்விக்கான பதிலையே சொல்ல முடியாமல் தத்தளித்தபோது, அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான். “நீர்க்கடுப்பு வந்தா என்ன செய்வாங்க? வயித்தால வந்தா என்ன செய்வாங்க?”