இந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமானது டி.எம்.கிருஷ்ணாவினுடையது. கர்நாடக சங்கீத மேடைகளில், லவங்கி ராகத்தில் 'ஓம்கார காரிணி...' பாடலைப் பாடும்போது அவரிடத்தில் வெளிப்படும் குரலைவிடவும் முக்கியமானது இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடான இனப் பாகுபாட்டுக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக அவர் வெளிப்படுத்தும் குரல். கச்சேரிகளில் கட்டமைப்புகளை மீறுவதற்குப் பேர் போன கிருஷ்ணா, இப்போது தன்னுடைய மீறல்களை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்கிறார். இந்திய சாதியக் கட்டுமானத்தின் கலாச்சாரப் பீடங்களில் ஒன்றாக மாறிவிட்ட கர்நாடக சங்கீதத் துறைக்கு உள்ளேயே இருந்துகொண்டு அவர் வெளிப்படுத்தும் கலகக் குரல் சபாக்களைத் தாண்டி வீதிகளில் படர்ந்து மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் தீண்டுகிறது. வெளியே சமத்துவ வேஷத்துடன் திரியும் இனவாதிகளின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. நம் மனசாட்சியுடன் உரையாடுகிறது.
உங்களுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது நீங்கள் எழுப்பும் குரல் ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு பிராமண ராக, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். கல்வி ஒரு சுமையாக இல்லாத ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிக் கூடத்தில் படித்திருக்கிறீர்கள். இளவயதிலேயே ஒரு நல்ல பாடகராக அடையாளங்காணப்பட்டு, அங்கீகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். சகலமும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், உங்களுக்கு இந்தச் சாதிய அமைப்பு உதவவே செய்திருக்கிறது. பின் எது உங்களைச் சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசவைக்கிறது?
ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. வழக்கமான பொருளில் சொல்வதென்றால், நான் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறந்தேன் (அம்மா அய்யர், அப்பா ஐயங்கார்). ஆனால், ஆனால், பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங்கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. மற்ற கலாச்சாரங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், அதுமட்டுமல்லாமல் அக்னாஸ்டிஸிஸம் (கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி தெரியாத நிலை) போன்றவற்றுக்கு எங்கள் வீட்டின் கதவுகள் திறந்தேவைக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது சில வருடாந்திர சடங்குகள் எங்கள் வீட்டில் அனுசரிக்கப்பட்டுவந்தாலும் அர்த்தமில்லாத சடங்குகளுக்கு எங்கள் வீட்டில் பெரும்பாலும் இடமே இருந்ததில்லை. நானும் என் சகோதரரும் பூணூல் அணிந்துகொள்ள வேண்டுமென்றோ சடங்குகளை அனுசரிக்க வேண்டுமென்றோ பூஜைபுனஸ்காரங்களில் ஈடுபட வேண்டுமென்றோ எந்தவித நிர்ப்பந்தங்களும் இருந்ததில்லை. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங்கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. ஆனால், அதற்காக மதரீதியிலான சகிப்பின்மையோ மூடநம்பிக்கைகளிலும் ஆச்சார அனுஷ்டானங்களிலும் ஊறிப்போனதும் அறிவுபூர்வமாகவோ ஆத்மார்த்தமாகவோ இல்லாததுமான வைதீகத்தின் தாக்கமோ நல்லவேளை எங்கள் குடும்பத்தில் இருந்ததில்லை. நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிப்பதற்கு ஏற்ற வீட்டுச் சூழலிலிருந்து வந்தேன் என்று சொல்லக் கூடாது. அந்தப் பள்ளியில் சாதி, மதம் போன்றவற்றுக்குக் கொஞ்சமும் இடம் இல்லை; பூரண விடுதலையைப் பற்றிய ஒருவருடைய சுயபிரக்ஞையின் மூலமாக உண்மையை - அதாவது பாதையற்ற அந்த நிலத்தை யார் கண்டறிகிறார்களோ அவர்களுடன் (நம் மனதால்) கைகோத்துச் செல்ல அங்குதான் முடியும். எனவேதான், என் பெற்றோர் அங்கே என்னைச் சேர்த்தனர்.
ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது என்று சொன்னேன் அல்லவா? உண்மைதான், ஆனால், “நீயே சுயமாகச் சிந்தித்துப்பார், உனது அறிவைப் பயன்படுத்து, உன் உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்து, வெறும் மையுறிஞ்சு தாளாக இருக்காதே, எவ்வளவு அழகான மையாகவும் வடிவமைப்பாகவும் இருந்தாலும்கூட” என்று நம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டு ஏதோ ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்கிறது. வழிவழியாக வந்த சங்கீதம், கச்சேரியில் முழு வீச்சில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும்போது இசைக் கலைஞரும் மேற்கண்ட புள்ளியைச் சந்திப்பார். அப்போது, ஓர் உள்ளொளி அவரைத் தொட்டுச் சொல்லும்: “இதோ பார், இப்போது நீ முழுக்க விடுதலை அடைந்தவன்… பறக்கத் தொடங்கு…”
சாதிய அதிகாரப் படிநிலையின் உயர்பீடங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டு, நீங்கள் தொடர்ந்து இந்திய சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசுகிறீர்கள். எந்த வகையில் சாதியப் படிநிலைகளைத் தூக்கிப் பிடிப்பதில் பிராமணியம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதுகிறீர்கள்?
நீங்கள் சரியான சொற்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால், நான் முன்வைக்கும் விமர்சனங்களை யும் கருத்துகளையும் கேட்கும் சிலர் பிராமணர்கள் என்று தங்களைச் சொல்லக் கூடிய குழுவுக்கு அல்லது சமூகத்துக்கு அல்லது சாதிக்கு எதிரானவன் நான் என்று எடுத்துக்கொள்கிறார்கள். நான் எந்தக் குறிப்பிட்ட சாதிக்கும் ஆதரவானவனோ எதிரானவனோ கிடையாது. நான் சாதி மாச்சர்யங்களுக்கு எதிரானவன், காலங்காலமாக சாதி என்ற அமைப்பு இழைத்துவந்த கொடுமைகளுக்கும், மறை முகமாக அது இன்னமும் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்கும் எதிரானவன். மேன்மையான இனம் என்ற கோட்பாட்டுக்கு எப்படி நான் எதிரானவனோ அதேபோல், உயர்ந்த சாதி, ஆசீர்வதிக்கப்பட்ட சாதி என்ற உணர்வுகளுக்கெல்லாமும் எதிரானவன். ஆரியர் என்பவர் யார் என்பதற்கு புத்தர் மிக அற்புதமாக மறுவரையறை செய்திருப்பார் - உன்னத குணங்களைக் கொண்டவர் என்று. வெறும் உடல்ரீதியாக அதாவது கண்கள், தோல், முடி போன்ற வற்றின் நிறத்தால் அவர் வரையறை செய்யவில்லை. அதேபோல் சாஸ்திரிய சங்கீதமும் - அதை நான் கலை இசை என்றே குறிப்பிட விரும்புகிறேன் - ஒரு கலைஞரின் கற்பனை யைச் சார்ந்தத்தேயொழிய அவருடைய சாதியைச் சார்ந்தது இல்லை. கோயிலும் சம்ஸ்கிருதப் பின்னணியுள்ள குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்களும் என்று வரலாற்றுப் பின்புலமுள்ள கர்நாடக சங்கீதம் அவர்களுடைய சொத்தாக ஆகிவிட்டது. ஒன்றின் சொத்தாக இருப்பதென்பதும் ஒன்றால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதென்பதும் வேறுவேறு.
போற்றிப் பாதுகாக்கப்பட்டு பரந்த அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய திறமை என்பதைத் தாண்டி என்னுடைய கலை வடிவம் ஒருவகையில் ஒரு குழுவின் சொத்துரிமையாக, சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கொடுக்கக்கூடியதாக, கிட்டத்தட்ட காப்புரிமைக்கு உட்பட்டதுபோல், ஆகிவிட்டது. இந்தக் கலையின் வாரிசுகளாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் இந்தக் கலையைத் தங்களுடைய தனியுடைமையாகக் கருதாமல் பொது வுடமையாகக் கருதி பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். என்னுடைய கலை வடிவம் என்பது என்னுடைய உயிர்மூச்சு, அது ஒரு அனுபவம். அது மந்திர உச்சாடனம்போல் இறுகிப்போய்விடக் கூடாது.
வேதங்களில் தொடங்கி ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை இந்தியாவுக்கு என்று ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. மனித வாழ்க்கையை இன்னொரு நிலைக்குக் கொண்டுசெல்லும் அவற்றை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் மனித உரிமைகளை மிதித்து நசுக்கும் மோசமான சாதிய படிநிலையையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதை எப்படிப் பார்ப்பது?
மிக நேர்மையான கேள்வி இது. மிகவும் அவசியமானதும்கூட. நாம் நமது தேசம்குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் நிறைகுறைகளைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அதன் கண்மூடித்தனமான வழிபாடிகளாக நாம் ஆகிவிடக் கூடாது. இதை நான் விளக்க முயல்கிறேன்.