திணிப்புத் திட்டங்களை எதிர்க்கும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கிறதா?


நெடுவாசலில் விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிப்ரவரி 15 அன்று இங்கு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுப்பதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியின் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. வானம் பார்த்த நிலம். சில மாதங்களுக்கு முன் உள்ளூர் செய்தியாளர் சுரேஷுடன் புதுக்கோட்டை கிராமங்களைச் சுற்றி வந்தேன். நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. “கிணத்துல அஞ்சடி ஆறடி ஆழத்துல கெடந்த தண்ணியை ஏத்தம் கட்டி எறைச்ச காலம் போய், இன்னிக்கு ஆயிரம் அடி நோக்கி தண்ணி கீழே போய்க்கிட்டுருக்கு” என்றார்கள்.

நெடுவாசல் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் அவ்வளவு மோசம் இல்லை என்றாலும், பத்தாயிரம் அடி பதினைந்தாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு போட்டு எரிபொருள் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, சுற்றுப்புறக் கிராமங்கள் முழுக்க நீர்மட்டம் விழுந்துபோகும்; விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் இது நிலைகுலைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள். இந்தத் திட்டம் அழிவுத் திட்டமா? தெரியவில்லை. வளர்ச்சித் திட்டமாகவேகூட அமையலாம். ஆனால், எந்த நிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த நிலம்சார் மக்களுக்கு இதுகுறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமா, இல்லையா?

தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?


பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த இந்த மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், மனிதனை நாய் கடிப்பதும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது ஐயா; ஆனால், இதுவும் ஒரு முக்கியமான செய்தி!” என்று அவர் ஊடக நிறுவனத்திடம் வாதிடுவார்.

எப்போது இப்படி ஒரு ஊடகரால் வாதிட முடியும் என்றால், அவர் சிந்திக்கும்போது. சிந்திப்பதற்கான நிதானத்தில் அவர் இருக்கும்போது. அதற்கான அவகாசம் அவருக்கு வாய்க்கும்போது. சதா ஓடிக்கொண்டிருப்பவர்களால் எப்படி சிந்திக்க முடியும்? தான் சிந்திப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ளாதவர்களால், சமூகத்தை எப்படிச் சிந்திக்கச் செய்ய முடியும்?

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்… மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!


சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசிஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.

லட்சம் கோடிகளை ஊழல்கள் எட்டிவிட்ட காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.

தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். ஜெயலலிதா சாலையைக்  கடக்கிறார் என்றால், சிக்னலில் பிரதமர் நரசிம்ம ராவ்  சிக்னலில் காத்திருக்கவைக்கப்பட்ட காலகட்டம்.  துறைகள்தோறும் ஜெயலலிதா-சசிகலாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா - சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். சட்டப்பேரவையில் சபாநாயகரின் நாற்காலியில் எந்தப் பதவியிலும் இல்லாத  சசிகலாவை உட்காரவைத்து எல்லா மாண்புகளையும் ஜெயலலிதா உருக்குலைத்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.

என் ஆட்சி, என் முடிவு!

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி நன்றி தெரிவிக்கிறார். எல்லோருக்கும் கைகுலுக்குகிறார். பின் அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் இவர்களும் கலைந்துவிடுகிறார்கள். அப்புறம் மாட்டுத்தொழுவம் வரை சென்று பார்க்கிறார்கள். செல்பேசியில் சில சுயபடங்கள். பந்தலில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடக்கும் பிரச்சாரத்தைக் கொஞ்ச நேரம் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். அடுத்து, திண்ணையில் அமர்ந்திருக்கும் தொழில்நுட்பக் குழுவிடம் சென்று தங்கள் சுயவிவரங்களை அளிக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர, நடத்தப்படும் இணைய கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். புறப்படுகிறார்கள். அடுத்தடுத்து கூட்டம் வருவதும் போவதுமாக இருக்கிறது.

புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்


தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.


இரு வருத்தங்கள்


என்னுடைய ‘யாருடைய எலிகள் நாம்?’ புத்தகத்தைத் திரும்பப் படிக்க நேர்ந்தபோது இரு விஷயங்களில் நான் தவறிழைத்திருப்பதாகத் தோன்றியது.