கயா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்றால், அதற்கு முன் பிஹார் எவ்வளவு இருட்டில் இருந்திருக்கும்?
சமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர்.
சகா ஷஃபி முன்னா சொன்னார், “அப்போதெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியே ஆட்களைப் பார்க்க முடியாது. பயம். எங்கும் ரவுடிகள் ராஜ்ஜியம். கொஞ்சம் வசதி வந்துவிட்டால், நீங்கள் தனியாகப் பாதுகாப்புக்காக ஆள் போட்டுக்கொள்ள வேண்டும், துப்பாக்கியோடு. இல்லாவிட்டால் தூக்கிவிடுவார்கள். புதிதாக வீடு வாங்குகிறோம், கார் வாங்குகிறோம், தொழில் தொடங்குகிறோம் என்றால் தாதாக்களுக்குத் தனியே ‘ரங்தாரி’ கட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் கப்பம்.” அவர் சொன்னது நகரங்களின் நிலை. கிராமங்கள் முழுக்க நிலச்சுவான்தார்கள் கைகளில் இருந்தன. அத்துக்கூலிக்குக் கொத்தடிமை வேலை. எதிர்த்தால், தீர்த்துக்கட்டுவது. பொறுக்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் நக்ஸல்களாக மாறினார்கள். அதை எதிர்கொள்ள நிலச்சுவான்தார்கள் கூலிப்படைகளை அமைத்துக்கொண்டார்கள். அப்படி உருவானவற்றில் ஒன்றுதான் ரன்வீர் சேனா. 1997-ல் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் 58 தலித் தொழிலாளர்களை ரன்வீர் சேனா கொன்று குவித்தது, அன்றைய அராஜகச் சூழலின் ஒரு துளி.