மக்களின் முதல்வர்!


யா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்றால், அதற்கு முன் பிஹார் எவ்வளவு இருட்டில் இருந்திருக்கும்?

சமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர்.


சகா ஷஃபி முன்னா சொன்னார், “அப்போதெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியே ஆட்களைப் பார்க்க முடியாது. பயம். எங்கும் ரவுடிகள் ராஜ்ஜியம். கொஞ்சம் வசதி வந்துவிட்டால், நீங்கள் தனியாகப் பாதுகாப்புக்காக ஆள் போட்டுக்கொள்ள வேண்டும், துப்பாக்கியோடு. இல்லாவிட்டால் தூக்கிவிடுவார்கள். புதிதாக வீடு வாங்குகிறோம், கார் வாங்குகிறோம், தொழில் தொடங்குகிறோம் என்றால் தாதாக்களுக்குத் தனியே ‘ரங்தாரி’ கட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் கப்பம்.” அவர் சொன்னது நகரங்களின் நிலை. கிராமங்கள் முழுக்க நிலச்சுவான்தார்கள் கைகளில் இருந்தன. அத்துக்கூலிக்குக் கொத்தடிமை வேலை. எதிர்த்தால், தீர்த்துக்கட்டுவது. பொறுக்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் நக்ஸல்களாக மாறினார்கள். அதை எதிர்கொள்ள நிலச்சுவான்தார்கள் கூலிப்படைகளை அமைத்துக்கொண்டார்கள். அப்படி உருவானவற்றில் ஒன்றுதான் ரன்வீர் சேனா. 1997-ல் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் 58 தலித் தொழிலாளர்களை ரன்வீர் சேனா கொன்று குவித்தது, அன்றைய அராஜகச் சூழலின் ஒரு துளி.

மனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்!


வெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.

அன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.


கொல்வது மழை அல்ல!


திகாலை 3 மணி.  செல்பேசி அழைக்கிறது. மறுமுனையில் அழைப்பவன் நண்பன். பதற்றமும் அழுகையும் கூடிய குரல். வெளியே சாலைகளை ஆறுகளாக மாற்றியிருக்கிறது மழை. எங்கும் கும்மிருட்டு.
“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது, தலை வேற கடுமையா வலிக்குதுங்குறான். விடாம அழறான். நாசமாப்போன இந்த மழையில ஆட்டோ, டாக்ஸி யாரும் வர மாட்டேங்குறாங்க. எங்கெ போறது, என்ன பண்றது. ஒண்ணுமே தெரியலைடா…”

“பாரசிட்டமால் மாத்திரை இருக்கா?”
ஒரு ரூபாய் மாத்திரை. அரை மாத்திரை கொடுத்தால், காலை வரைக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுவிடலாம். நண்பன் வீட்டில் பாரசிட்டமால் இல்லை. அந்த இரவு எத்தனை கொடுமையான இரவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. காரணம், குழந்தையா, மழையா, நண்பனின் முன்னெச்சரிக்கையின்மையும் அலட்சியமுமா?

இயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஓரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதிகார வர்க்கம் என்ன செய்கிறது?

நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?


சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்று இது. நேரு நாட்டின் முதல் பிரதமரானது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற படேல் பிறந்த நாள் விழாவில் அந்தக் கேள்வி இன்னொரு முறை உயிர் பெற்றது. சரிதான், தன்னைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் இருந்தபோது, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டாலும்கூட சுவாரஸ்யமான கேள்வி இது. கூடவே, காந்தி, நேரு எனும் இரு ஆளுமைகளையும் இந்திய வரலாற்றையும் நாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல மேலும் ஒரு வாய்ப்பு!

இன்றைக்கு அரசியல் எதிரிகள் பலரும் குறிப்பிடுவதுபோல, ஜாடிக்கேற்ற மூடியாக இருந்தது அல்ல காந்தி - நேரு உறவு. வெறும் விசுவாசம் மட்டுமே கருதி தன்னுடைய வாரிசாக நேருவை அறிவித்தவர் அல்ல காந்தி. மாறாக, காந்தியைப் போல நேருவும் மகத்தான ஓர் ஆளுமை. பெரும் சிந்தனையாளர். ஜனநாயகவாதி. மாபெரும் மக்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் காலமெல்லாம் காந்தியுடன் கருத்து யுத்தம் நடத்தியவர். இந்தியர்களின் ஆன்மிக வழி அரசியல் வாழ்வியலுக்கான வழிகாட்டி காந்தி என்றால், அரசுத் தலைமைக்கான முன்னுதாரணம் நேரு.

ஆடம்பரமான சூழலில் பிறந்தவர் நேரு. அலகாபாத் 'ஆனந்த பவன்' மாளிகையில் பெரிய குதிரை லாயம், இரு நீச்சல் குளங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து நேருவுக்குப் பாடம் எடுத்தார்கள். உயர்கல்விக்கு ஹாரோ, கேம்பிரிட்ஜ் சென்றார். ராஜ தடபுடலுடன் நடந்தது திருமணம். சுதந்திரப் போராட்டம் அவருடைய குடும்பப் பொருளாதாரத்தைச் செல்லரித்தது. ஒருகட்டத்தில் கையில் சல்லிக்காசுகூட இல்லாத காலம் வந்துவிடுமோ என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மனைவியின் நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய தட்டுமுட்டுப் பொருட்களை விற்க தீர்மானிக்கிறார். காலமெல்லாம் காசநோயோடு போராடிய கமலா நேரு 36 வயதிலேயே இறந்தார். நேருவின் 20 வருட தாம்பத்ய வாழ்வின் பெரும் பகுதி போராட்டங்களில் கழிந்தது. மொத்தம் 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். நேருவின் கால் நூற்றாண்டு களப் பணிகளையும் தியாகங்களையும் நேரடியாகப் பார்த்தவர் காந்தி.

காந்தி 1869-ல் பிறந்தவர். நேரு 1889-ல் பிறந்தவர். 20 வயது வித்தியாசம். உண்மையில் காந்தியும் நேருவின் தந்தை மோதிலாலும் ஒரே தலைமுறை. காந்தியின் மூத்த மகனான ஹரிலாலைவிட ஒரு வயது சிறியவர் நேரு. மேலும், தன் இளமைப் பருவத்தின் கணிசமான பகுதியை ஐரோப்பாவில் கழித்த நேரு, கிழக்கு-மேற்குலகுகளின் சரிவிகிதக் கலவை. காந்தியை ஏற்றுக்கொண்ட அவருடைய கடுமையான விமர்சகர்களில் ஒருவர் என்று நேருவைச் சொல்லலாம். தன்னை பாபு என்று அழைத்த நேருவை ஒரு மகனாக, அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக, அவர்களுடைய குரலாகவே காந்தி பாவித்தார். வரலாற்றுணர்வும் உலகளாவிய பார்வையும் கொண்ட காந்தி - நேருவுக்கு இடையேயான கருத்து மோதல்களின் விளைவே ஒரு வகையில் நவீன இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மையப்புள்ளி.

இந்தியாவின் வெற்றி!


ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?

மனிதர்கள்: காவிரி சாமி!


திருச்சி வழியாகச் சென்றாலும் சரி, தஞ்சாவூர் வழியாகச் சென்றாலும் சரி, கல்லணை செல்லும் அனுபவமே தனி. ஒரு பெரும் பிரவாகமாக ஓடும் பிரம்மாண்டமான காவிரியின் கரைதான் சாலை. சுற்றிலும் பச்சை. சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்கள், கண்ணுக்கு எட்டிய வரை பரவிக் கிடக்கும் நெல் வயல்கள், வரிசையாக தென்னை - வாழைத் தோப்புகள், இடையிடையே மாந்தோப்புகள்… கல்லணைப் பயணம் சாதாரண நாட்களிலேயே மனதை ஒரு அருவிக்குள் கொண்டுபோய் அமிழ்த்திவிடக் கூடியது. மழை நாட்களில் பயணிப்பது கூடுதல் சுகம். கார் போய்க்கொண்டிருந்தது. கண்கள் காவிரியிலேயே மிதந்துகொண்டிருந்தன.

உலகிலேயே காலத்தால் மிக முற்பட்டது, இன்னும் புழக்கத்தில் இருப்பது எனும் இரு சிறப்புகள் கல்லணைக்கு உண்டு. திருச்சிக்கு மேற்கே முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகப் பிரியும் அகண்ட காவிரி, மீண்டும் ஒரு மாலைபோல நெருங்கி வரும் இடம் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் இங்கு கல்லணை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காவிரி நீரைத் தஞ்சைப் பகுதி முழுமைக்கும் திருப்பிவிட்டு, பாசனப் பரப்பையும் நெல் விளைச்சலையும் அதிகரிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது கல்லணைக் கட்டுமானம். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் கல்லணையின் வடிவத்தை மேலும் மேம்படுத்தினர். காவிரியைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் கேப்டன் கால்டுவெல், ஏராளமான தண்ணீர் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் வீணாகப் பாய்வதையும் பாசனத்துக்கு மிகக் குறைவான தண்ணீரே கிடைப்பதையும் உணர்ந்தார். அணையின் உயரத்தைக் கொஞ்சம் உயர்த்தலாம் என்றார். அணை உயர்ந்தபோது நீரைத் தேக்கிவைக்கும் அளவும் கணிசமாக உயர்ந்தது. கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீர் பாயும் பகுதியில் அணையின் கீழ்ப்புறத்தில் மதகுகளை அமைத்து, அணையில் வண்டல் படியாமல் அவ்வப்போது திறந்துவிடலாம் என்று மேஜர் சிம் கூறினார். தொடர்ந்து, கொள்ளிடத்தின் குறுக்காக மணற்போக்கியை சர் ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னாளில், கல்லணைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆக, காவிரி நான்கு நதிகளாக இங்கு பிரிகிறது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்.

கல்லணையால் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்று கேட்டால், சொல்லிவிடலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேளையில், கல்லணை வழியே பாயும் காவிரி அரிசியைத்தான் சாப்பிடுகிறோம் சோறாக, இட்லியாக, தோசையாக… ஆமாம், தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி உணவு காவிரிப் படுகையிலிருந்தே வருகிறது. கல்லணையால் வாழ்வது வேறு; கல்லணையில் வாழ்வது வேறு. பரமசிவம் கல்லணையில் வாழ்பவர்!

மோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்!


பிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம். ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.

கலாம் நினைவுகூர்வார் மோடி


ப்துல் கலாமின் ‘எண்:10, ராஜாஜி மார்க் வீடு’ காலிசெய்யப்பட்டு, ராமேசுவரத்துக்கு அவருடைய மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் புதுடெல்லியில் இருந்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற வகையில் கலாமுக்கு இந்திய அரசு ஒதுக்கிய அந்த வீட்டுக்கெனச் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் புது டெல்லி நகரத்தையும் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் முதல் நம்முடைய ஆட்சியாளர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாளிகையையும் நிர்மாணித்த பிரிட்டீஷ் பொறியாளர் எட்வின் லூட்டியன்ஸ், தான் வசிப்பதற்கு என்று திட்டமிட்டு கட்டிய வீடு அது. கிட்டத்தட்ட 79,297 சதுர அடி நிலத்தில் இரு தளங்களாக 11,775 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீடு. கலாமின் மறைவுக்குப் பின் அந்த வீட்டை, அவருடைய நினைவகமாக மாற்றக் கோரி மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமான சமயத்தில்தான் கலாமின் உடைமைகளை ஏறக்கட்டிவிட்டு, தன்னுடைய உலகப் புகழ்பெற்ற கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு அதை ஒதுக்கியிருக்கிறது நரேந்திர மோடி அரசு.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாயைத் திறந்தால் கழிவுகளாகக் கொட்டும் வார்த்தைகளுக்காகவே கவனம் பெற்றவர். இந்தியக் கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்துவது தமது அரசின் தலையாயப் பணி என நம்புபவர். “மேற்கத்தியமயமாக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நாங்கள் தூய்மைப்படுத்துவோம்; அது வரலாறானாலும் சரி, நிறுவனங்களானாலும் சரி” என்று வெளிப்படையாக அறிவித்தவர். “ராமாயணம், கீதையைப் போல பைபிளோ, குர் ஆனோ இந்தியாவின் ஆன்மாவின் மையத்தில் இருப்பவை அல்ல” என்பதைத் தன்னுடைய மறுவாசிப்பின் மூலமாக வெளிக்கொணர்ந்த மாமேதை. “பெண்கள் இரவில் வெளியில் செல்வது என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று பெண்களுக்குப் புதிய கலாச்சார வழி காட்டிய கண்ணியவான். கேவலம் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியின் பெயரால் தாத்ரியில் முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டபோது, “அது ஒரு “விபத்து” என்றும் “சம்பவம் நடந்த வீட்டில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தார்; அவரை யாரும் தொடவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூசாமல் கூறிய பெருந்தகை. அப்துல் கலாமைப் பற்றியும் அன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார். “முஸ்லிமாக இருந்தாலும்கூட ஒரு தேசபக்தராக இருந்தவர் கலாம்” என்ற ஒரே வரிச் சான்றிதழ் மூலம் அப்துல் கலாம் வரலாற்றையும் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றையும் ஒருசேரக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவர். மகேஷ் சர்மா இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் என்றாலும், கலாம் இருந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது டெல்லியில் பாஜகவினரின் புருவங்களையும்கூட  உயர்த்தியிருக்கிறது. பொதுவாக, அரசு அதிகாரத்தில் உச்ச நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியான இரு தள வீடு ஒதுக்கப்படுவது மரபு. அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்ற மூத்த அமைச்சர்களின் வீடுகளே இதைவிடவும் சிறியவை (சிங்கின் வீடு 4,144 சதுர அடி; ஜேட்லியின் வீடு 7,825 சதுர அடி). எல்லாமே ஒரே தள வீடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, வழிகாட்டு விதிகளின்படி, அந்த வீடு மகேஷ் சர்மாவின் பதவிக்கு உரியது அல்ல. 


இத்தனையையும் தாண்டிதான் ஒரு இளைய அமைச்சருக்கு, அதுவும் ஒரு இணையமைச்சருக்கு கலாம் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகக்  குறுகிய காலத்தில் தேசத்துக்கு மகேஷ் சர்மா   ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பிரதமர் மோடி அளித்திருக்கும் அங்கீகாரமாகவும் பரிசாகவும் இதை நாம் கருதலாம். தன்னுடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் ஒவ்வொரு செய்தியை அனுப்புபவர் அல்லவா மோடி!