கபாலியும் காலி வத்திப்பெட்டியும்


ரஜினி படம் ஒரு தேர்த் திருவிழா. தேர் பார்க்கப்போவது என்று முடிவெடுத்துவிட்டால், கூட்டத்தோடு பார்ப்பது கூடுதல் கொண்டாட்டம். திருவிழா என்பது சுவாமி பார்ப்பது மட்டும் இல்லை. ஆனால், ஊர் முழுக்க உள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை எடுத்து, அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளைத் தொடங்கிவிட்டாலும் சமீப காலமாக முதல் நாள் அன்று ரஜினி படம் பார்ப்பது சாத்தியப்படுவதில்லை. கொள்ளைக் கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மனம் ஒப்புவதில்லை.

திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பது அரிதாகி நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்னையில், சாதாரண நாட்களில், ஒரு குடும்பம் திரையரங்கம் போய் படம் பார்த்து வருவதற்கே எழுநூறு, எண்ணூறு ரூபாய் வேண்டும். சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ.120. வாகனம் நிறுத்த ரூ.50. பத்து ரூபாய் பப்ஸின் விலை அரங்கினுள்ளே ரூ.50. சம்பாத்தியத்துக்கும் செலவழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது.

திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்.

திரையரங்கில் பைசா செலவழிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் படம் வெளியான ஐந்தாம் நாள் ‘கபாலி’க்குப் போனோம். முதல் நாள் ரூ.2,000-க்கு விற்ற டிக்கெட் அன்றைக்குத்தான் ரூ.120-க்குக் கிடைத்தது. படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், வயதுக்கேற்ப ரஜினியின் சினிமா பயணத்தை சரியான தடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். “பழைய ரஜினி படங்களின் ‘மாஸ்’ இல்லை” என்று பலரும் பேசக் கேட்க முடிந்தது. அதற்கான காரணத்தை இரஞ்சித்திடம் தேடுவதைக் காட்டிலும் ரஜினியிடம் தேடுவது உசிதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் சரி; இதற்கு முந்தைய சமீபத்திய படங்களிலும் சரி; எங்கெல்லாம் முன்புபோல் ரஜினி துள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் அவருடைய வயது அவரைக் கைவிடுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக படத்தில் வயதான ரஜினியையும் வயதுக்கேற்ற ஆர்ப்பாட்டமான அவருடைய நடிப்பையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ‘படையப்பா’வுக்குப் பின் அதிகம் ஒன்றவைத்த ரஜினி படம் இது.

நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் இந்தியாவிடமிருந்து விலகும் முடிவை எடுக்கலாம். போகட்டும். ஜம்முவாசிகள், லடாக்வாசிகள் இந்தியாவில் நீடிக்கும் முடிவையே தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் படைகளுக்கு வாரி இறைக்கிறோம். அவர்களுக்கும் அமைதி இல்லை. நமக்கும் நிம்மதி இல்லை. எப்படியும் இந்தப் பிரச்சினையை இந்தியா தீர்த்தே ஆக வேண்டும்!”

முதல் முறையாக இப்படிக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சராசரி இந்திய மனம் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம் இந்தியச் சுதந்திரப் போரட்ட வரலாற்றுடன் இணையாகவே பயணித்த காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படிக்கச் சொன்னார். இன்றைக்கு நாம் ‘காஷ்மீர்’ என்றழைக்கும் காஷ்மீருக்குள் உள்ளடங்கியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான கலாச்சார வேறுபாடுகளையும் புவியியல் சூழலையும் படிக்கச் சொன்னார். இந்திய வரைபடம் காட்டும் காஷ்மீரில் உள்ளபடி சரிபாதிகூட நம் வசம் இன்றைக்கு இல்லை. நம் வசம் உள்ள 1.01 லட்சம் சொச்ச சதுர கி.மீ. காஷ்மீரின் பரப்பில், 58.33% பரப்பு லடாக் பிராந்தியத்தில் இருப்பது; 25.93% பரப்பு ஜம்மு பிராந்தியத்தில் இருப்பது; 15.73% பரப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. இந்தியாவின் மாணிக்கம் என்று சொல்வதற்கும், இந்தியா இழுத்துப் பிடித்து வைத்திருப்பதற்குமான பெரிய, அரிய வளங்கள் ஏதும் பள்ளத்தாக்கில் கிடையாது. அதேசமயம், இந்தியா தலைகுனிய வேண்டிய எல்லா அவலங்களும் பள்ளத்தாக்கில் நடக்கின்றன.