விடைபெறுகிறேன்: நன்றி தி இந்து!

எனது அன்புக்குரிய நண்பர்கள், வாசகர்களுக்கு, வணக்கம்!

இந்த வாரத்தோடு ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 2013 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ குழுமத்தில் தொடங்கிய என்னுடைய பணி, 2021 ஜூன் மாதத்தோடு நிறைவுக்கு வந்திருக்கிறது. நெகிழ்வான மனதுடனேயே வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறேன். 

உலக எழுத்தாளர் கி.ரா.


தமிழ்நாட்டில், அகிலனுக்கு 1975-ல் அளிக்கப்பட்ட பிறகு ‘ஞானபீடம்’ விருதுக்காக கால் நூற்றாண்டு இருவரது பெயர்கள் அவ்வப்போது பேசப்பட்டுவந்தன. ஜெயகாந்தன், அசோகமித்திரன். ஒருசமயம், சுந்தர ராமசாமி எழுதினார், “ஒவ்வொரு வருடமும் ஜெயகாந்தன் பெயரையோ, அசோகமித்திரன் பெயரையோ மாற்றி மாற்றிப் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை, நான் பரிந்துரைப்பதை நிறுத்திக்கொண்டால் கொடுப்பார்களோ என்னவோ!”

ஜெயகாந்தனுக்கு 2002-ல் ‘ஞானபீடம்’ கொடுக்கப்பட்ட பிறகு, அசோகமித்திரன் முன்னிறுத்தப்பட்டார்; அடுத்த இடத்தில் கி.ரா. மெல்லப் பேசப்படலானார். ஊடாகவே இந்திரா பார்த்தசாரதி முதல் வைரமுத்து வரை வெவ்வேறு பெயர்களும் அடிபட்டுவந்தன என்றாலும், 2017-ல் அசோகமித்திரனும் மறைந்த பிறகுதான் கி.ரா.வின் பெயர் பெரிதும் பேசப்படலானது. கி.ரா.வுக்கு இதில் வருத்தம் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன் தொடங்கி ‘ஞானபீடம்’ விருதுக்காக முன்னிறுத்தப்பட்ட பலர் மீதும் அவருக்கு நன்மதிப்பு இருந்தது; அதேசமயம், தான் எந்த விதத்தில் குறைந்துபோனோம், இத்தனை ஆண்டுகள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டோம் என்ற கேள்வி அவருக்கு இருந்தது. ஜெயகாந்தனைவிட அசோகமித்திரன் 3 வயது மூத்தவர்; கி.ரா. 11 வயது மூத்தவர் என்பதையும், ஒருவேளை 80 வயதை ஒட்டி மறைந்திருந்தால், பத்ம விருதுகளைப் போல ஞானபீட விருதுக்கும் பேசப்படும் இடத்தில்கூடத் தன் பெயர் இருந்திருக்காது என்ற கி.ரா.வின் கவலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவருடைய துயரத்தின் வலி புரியும்.

இந்த விருதுக்கான பேச்சு ஒரு பெரிய விஷயம் இல்லை. அது இங்கே இருந்த ஒரு முன்வரிசையைச் சுட்டுவதாகும். வயது அல்லது பங்களிப்பு அடிப்படையிலானது அல்ல இந்த முன்வரிசை; அது ஒரு ‘பொது அடையாளம்’ சார்ந்தும் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய பாரதி, புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்தப் பொது அடையாளப் பட்டியலில் வந்துவிடுவார்கள். கி.ரா. இந்த வட்டத்துக்குள் வர மாட்டார்; இமையம், ஜோ டி குரூஸ் வர மாட்டார்கள். பெருமாளுக்கும் அய்யனாருக்கும் இடையே உள்ள வேறுபாடு மாதிரிதான்; சாமியின் மகிமை மீது யாருக்கும் சந்தேகம் கிடையாது; மரியாதைக்கும் குறைச்சல் இல்லை; ஆனால், அந்தஸ்தில் அது பொது சாமி; இது நாட்டுப்புறச் சாமி.

வாழ்நாள் முழுவதும் இந்தப் பாகுபாட்டை அனுபவித்தார் கி.ரா. அவர் எழுதிய கிராமத்தையும் வாழ்வையும் ஒரு வட்டாரத்தின், ஒரு சமூகத்தின் குரலாகக் குறுக்கும் அரசியல் இங்கே தொடர்ந்து நடந்தது. ஒரு உரையாடலில் கி.ரா. கேட்டார், “சரி, என்னோட கதைகள் ஒரு வட்டாரத்தோட, ஒரு சாதியோட கதைகள்னா மத்தவங்களோடதெல்லாம் என்ன?” அடுத்து கி.ரா. கேட்க வரும் கேள்வி புரிந்துகொள்ள முடியாததா என்ன? ‘ஜெயகாந்தனோ, அசோகமித்திரனோ தன் படைப்புகளில் வெளிக்கொணர்ந்த வாழ்க்கையை மட்டும் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான அல்லது உலகளாவிய மானுடப் பரப்புக்கானதாகச் சொல்லிட முடியும்?’

சரியான முடிவா முழு ஊரடங்கு?


பலதரப்பு மனிதர்கள் கருத்துச் சொல்லும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். திமுக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது அது. எதிர்பார்த்ததைவிடவும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதில் பலரும் சொல்கிறார்கள். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியலர்கள் வட்டாரத்திலேயே கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு பேச்சு இருப்பதைக் கேட்கிறேன். வெகுமக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நான் நம்பவில்லை. முன்னதாக தமிழக மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சி இங்கே  இருந்தது; அரசியல் தலைமை என்பதே காணாமல்போயிருந்தது; நான் முன்பே பல முறை சுட்டியிருக்கிறபடி கே.பழனிசாமி ஆட்சியின் ஆகப் பெரிய வீழ்ச்சி அதுதான்.

நல்லதோ, கெட்டதோ; பெரும்பான்மை முடிவுகளை மாநிலத்தில் அரசு அதிகாரிகளே எடுத்தனர். நாடு தழுவிய பிரச்சினைகளில் பாஜகவின் முடிவுகளுக்கேற்ப பழனிசாமியின் அரசு ஒத்திசைந்து செயல்பட்டது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது மேலும் வெளிப்பட்டது. உலகெங்கும் கரோனா பரவியது. தொற்றுக்குள்ளானோரின் வீடுகள் தகரத் தட்டிகளால் அடைத்துத் தடுக்கப்பட்டதையும், வீதிகள் இரும்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டதையும் இங்கேதான் கண்டோம். ஊரடங்கின்போது தவறி வெளியே சென்றவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவ்வளவையும் பொருட்படுத்தாதவராக பழனிசாமி இருந்தார். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து, மக்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே “நானும் உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொன்ன வரலாறு அவருக்கு இருந்ததால் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள்.

மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நடந்த முதல் நல்ல விஷயம், வெகுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என்ற சமிக்ஞை வெளியானது; அதுதான் மக்களின் வரவேற்புக்கு முக்கியமான காரணம். ஊரடங்கின் கேடுகளை எதிர்க்கட்சித் தலைவராக நன்கு உணர்ந்திருந்தவர் என்பதால், மிகுந்த தயக்கத்துடனேயே ஊரடங்கு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டிலேயே அதிகமான பரவல் எனும் இடத்தை நோக்கி தொற்று பரவிவந்தது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிந்தனர்; மருத்துவர்கள் பெரும் பணி நெருக்கடிக்கு ஆளாயினர்; அனைத்துக் கட்சிகளிடத்திலிருந்தும் ஊரடங்குக்கான அழுத்தம் பெருகிவந்தது; ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இவ்வளவு நெருக்கடியானச் சூழல்கள் ஸ்டாலினுக்கு முந்தையவர்கள் எவரும் எதிர்கொண்டிராதது; ஆக, ஊரடங்கு முடிவு நோக்கி அவர் நகர்ந்த நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது.

சரி, இந்த ஊரடங்கை எப்படி அமலாக்குவது? இதில்தான் நமக்குப் பெரிய தெளிவு தேவைப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பான்மையும் ஊரடங்கை அமல்படுத்தினாலும், மோசமான முன்னுதாரணம் பிரதமர் மோடி 2020 மார்ச் 24-ல் அறிவித்தது என்பதை வரலாறு சொல்லும். போதிய அவகாசம் கொடுக்காமல், மக்களை அல்லோலகல்லோலப்படுத்தி அலைக்கழித்து வதைத்த ஊரடங்கு அது. ஊரடங்கு எப்படி அமலாக்கப்படக் கூடாது என்பதை அதிலிருந்தும், எப்படி அமலாக்கப்பட வேண்டும் என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் இந்த ஓராண்டில் இந்திய மாநிலங்கள் கற்றிருக்கின்றன.

பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயேகூட அத்தியாவசியப் பொருள்களுக்கான அங்காடிகள், கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. லண்டன் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கியது. ஆயினும், அங்கேயே பொதுமுடக்கத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் தீவிரமான விவாதங்கள் இன்று நடக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்தே மாறுபட்ட கவனத்துடன் ஸ்வீடன் அணுகிவருகிறது. சாத்தியப்பட்ட அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை அது உத்வேகப்படுத்தியது; திரளான கூடுகைகளுக்கு அது தடை விதித்திருந்தது; மக்கள் விழிப்புணர்வுடன் அணுகத் தொடர்ந்து அது வலியுறுத்திவந்தது; அதேசமயம், அன்றாடச் செயல்பாடுகளை ஸ்வீடன் முடக்கவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் பிரிட்டனைக் காட்டிலும் ஸ்வீடனில் அதிகமாக இருந்தபோதிலும், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஸ்வீடனில் குறைவாகவே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் ஸ்வீடன் 3% வீழ்ச்சியை எதிர்கொள்ள பிரிட்டன் 10% வீழ்ச்சியை எதிர்கொண்டது. தீவிரமாக ஊரடங்கை அமலாக்குவது மொத்தமாக மக்களுடைய வாழ்க்கைத்தரத்திலும், மரணங்களிலும், நெடுங்காலத்துக்குப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் விளைவுகளோடு ஒப்பிடப்பட்டு இன்று அங்கு விவாதங்கள் நடக்கின்றன.

திமுக வெற்றியின் முக்கியத்துவம் என்ன?


புது டெல்லியின் கருத்துருவாக்கர்கள் 2021 ஐந்து மாநிலத் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள்? தேர்தல் ஆய்வாளரும், சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், ‘பாஜகவின் அஸ்வமேத யாகத்தை நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது வங்கம்!’ முதல்வர் மம்தா இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை. கட்டுரையில் ஓரிரு வரிகளில் தமிழ்நாட்டைக் கடந்திருக்கிறார் யோகேந்திர யாதவ்.

பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் தன்னுடைய இணையப் பத்திரிகையின் இரு தலையங்கங்களைப் பகிர்ந்திருந்தார். வங்கத்தைப் பற்றிய தலையங்கம் சொல்கிறது, ‘வங்கத் தேர்தலில் மூன்று முக்கியமான விஷயங்களைக் காண முடிகிறது. முதலாவது, மோடி யுகத்தில் பாஜக அடைந்த பெரிய தேர்தல் தோல்வி இது. பிரிவினை, வகுப்பியச் செயல்திட்டங்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை வெல்ல பாஜகவுக்கு உதவாது. மூன்றாவது, எல்லாம் வல்ல நரேந்திர மோடி என்ற ஆளுமை வழிபாடு இந்தி மாநிலங்கள், குஜராத் போன்றவற்றில் எடுபடலாம். அது ஏனைய பகுதிகளை ஈர்க்காது.’ அதேசமயம், சேகர் குப்தாவின் தமிழ்நாட்டைப் பற்றிய தலையங்கம் இப்படிச் சொல்கிறது, ‘தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் சுரத்தே இல்லாத, சீரற்ற ஆட்சிக்குப் பிறகு ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவுக்குத் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி சாத்தியமற்றதாகவே இருந்தது!’ அதே ஊடகத்தின் இன்னொரு ஆசிரியர் ராம லக்ஷ்மி – ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரும்கூட - இவர் ட்விட்டரில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்திருந்தார்: ‘தமிழ்நாட்டின் பப்புவை வாக்கு இயந்திரமாக பிரஷாந்த் கிஷோர் எப்படி மாற்றினர் என்பதை வாசியுங்கள்... முரட்டுத்தனமான மாணவர் தலைவர் என்பதிலிருந்து முதல்வராகும் சாத்தியமுள்ளவராக - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இயல்பான உருமாற்றம்.’

இது வாடிக்கைதான். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, அதன் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதியினுடைய சட்டமன்றப் பணியின் அறுபதாண்டு முத்தருணங்களை ஒட்டி ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலை உருவாக்குகையில் கட்டுரைக்காக அணுகியபோது, நவீன இந்தியாவின் வரலாற்றாய்வாளர் என்று தன்னை வரையறுத்துக்கொள்ளும் ராமசந்திர குஹா மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது!’ அது சரி, பேசவோ எழுதவோ விருப்பமற்ற ஒன்றை ஒருவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்!

என்னைப் பொறுத்த அளவில், வங்கத்தில் மம்தாவின் வெற்றிக்கு இணையானதாகவே தமிழ்நாட்டில் ஸ்டாலினின் வெற்றியையும் காண்கிறேன்.

தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?




பனிமேகப் பழுப்பு மலைக் குன்றுகளும், பசும்புல்வெளிகளும் நிரம்பியதான சிக்கிம் ஞாபகம் வரும்போதெல்லாம், ‘இந்த நாட்டில் சிக்கிமர் ஒருவர் பிரதமராகும் நிலை என்றாவது வருமா?’ என்று பிரதீப் பாஞ்சுசோபாம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வரும். ‘சிறிய மாநிலங்களே சிறந்தது’ என்று சொல்லி மாநிலங்களை உடைக்க வாதிடுபவர்களிடம் எல்லாம் அவசியம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் தோன்றும்.

இந்தியாவின் சிறிய மாநிலம் சிக்கிம். 7,096 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிக்கிமின் மொத்த மக்கள்தொகை வெறும் 6.10 லட்சம். தமிழ்நாட்டோடு ஒப்பிட 18-ல் ஒரு பங்கு நிலப்பரப்பையும், 139-ல் ஒரு பங்கு மக்கள்தொகையையும் கொண்டது.

சிறிய மாநிலங்களே வளர்ச்சிக்கு உகந்தது என்று சொல்லி தமிழ்நாட்டின் பிரிவினைக்குப் பொது அறிவுஜீவியான ஞாநி போன்றவர்களே வாதிட்டிருக்கும்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ந்து இதைப் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. 

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னத்தி ஏரான ஆந்திர பிரதேசம் பிளவுண்டதில் சாதிக் கணக்குகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தெலுங்கர்கள் ஒரே மொழியினராய்ச் சிந்தித்தபோது இந்தியாவில் இந்திக்கு அடுத்து அதிகமாகப் பேசப்படும் மொழியின் தாய்நிலமாக சக்திமிக்க ஆந்திர பிரதேசம் பிறந்தது. அதே தெலுங்கர்கள் ரெட்டிகளாகவும் கம்மாக்களாகவும் காப்புக்களாகவும் மீண்டும் பிளவுண்டபோது ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்கள் உருவானதோடு, அடுத்து ‘ராயலசீமா’வுக்கான மூன்றாவது கங்கும் கனன்றுகொண்டிருக்கிறது. 

முன்னதாக வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்று பேசிவந்த ராமதாஸ் அடுத்து கொங்குநாடு என்ற பிளவையும் சேர்ப்பதும், சமூகவலைதளங்களில் இந்த விவாதம் தீயெனப் பரவுவதும் தமிழர்களை மறைமுகமாகச் சாதிரீதியாகப் பிளப்பதே ஆகும். நேரடியாக வன்னியர் நாடு, கவுண்டர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்றும் அடுத்தடுத்து இதைப் பேசலாம்.

இது தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்பதற்கான போர்: ஸ்டாலின் பேட்டி


சித்திரை உச்சிவெயில். உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தாலும் அசராமல் காத்திருக்கிறது கூட்டம். அலரும் ஒலிபெருக்கியின் முழக்கங்களுக்கும், தொண்டர்களின் ஆரவாரத்துக்கும் இடையில் கிழித்துக்கொண்டு நுழையும் பிரச்சார வேனிலிருந்து வெளிப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல பலராலும் சாதாரணமாக மதிப்பிடப்பட்டவராக இல்லை; 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உட்பட எதிரில் உள்ள அத்தனை நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பிரதான இலக்கும் அவரே. ஆளுங்கட்சியின் தலைவரை அல்லது முதல்வரைப் பிரதான இலக்காக்கி நடக்கும் பிரச்சாரங்களிலிருந்து இந்தத் தேர்தல் முழுவதுமாக மாறுபட்டிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவரையே எல்லோரும் குறிவைக்கிறார்கள். ஜாம்பவான் கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவில் அதிகார மாற்றத்தைச் சுமுகமாகக் கைமாற்றிக்கொண்டதோடு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் கூட்டணியையும் ஜாக்கிரதையாகக் கையாள்கிறார்.

தன்னுடைய தவறுகள், போதாமைகளை ஸ்டாலின் தீர்வுகள் வழி எதிர்கொள்கிறார். தான் கருணாநிதிபோல வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதை உணர்ந்திருப்பவர் திமுகவின் கூட்டங்களை மக்களுடன் உரையாடும் களமாக மாற்றியிருக்கிறார். எல்லோருக்கும் பொறுமையாகக் காது கொடுப்பதும், குறைகளுக்கு முகம் கொடுப்பதும், சரியானவர்களிடம் பொருத்தமான பொறுப்புகளை ஒப்படைப்பதும் ஸ்டாலினின் பெரிய பலம் என்கிறார்கள் கட்சியினர். சரியான தருணத்தில் கட்சியைத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கும் நகர்த்தியவர் மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ப கட்சிக்குப் புது உருவம் கொடுத்திருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தோற்ற கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது பெரிய திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலினுடைய வாழ்வில் முக்கியமான தேர்தல். கடுமையாக உழைக்கிறார். 20 நாட்களில் அவருடைய பிரச்சார வாகனம் 12,000 கி.மீ. பயணித்து 234 தொகுதிகளையும் சுற்றிவந்திருக்கிறது. தங்கும் ஊர்களில் வீதிகளில் மக்களுடன் நடப்பவர் தொடர் பயணங்களுக்கு இடையே பேசினார்.

இந்த நாட்களில் உங்களுடைய ஒரு நாள் எப்படியிருக்கிறது?

உண்மையில், எந்த ஊருல இருக்கேன், எந்த ஊருல தூங்குறேன்னு என்னாலேயே யூகிக்க முடியாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். பொதுவா, ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறை என்னுடையது. காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துடறது, பத்திரிகைகளை வாசிக்கிறது, ஐஐடி வளாகத்துல நடைப்பயிற்சி, அடுத்ததாக வீட்டுல உடற்பயிற்சி, காலை உணவு, விருந்தினர் சந்திப்பு, அப்புறம் ‘முரசொலி’ அலுவலகத்துக்குப் போறது, அதன் பிறகு அறிவாலயம், அப்புறம் வீட்டுல மதிய உணவு, சின்ன தூக்கம், மீண்டும் சந்திப்புகள், திரும்பவும் மாலையில் அறிவாலயம், இரவு பொதுக்கூட்டங்கள், அப்புறம் வீடு, இரவு உணவு, கொஞ்ச நேரம் வாசிப்பு, தூக்கம்னு இருக்கும். ஆனா, தேர்தல் எல்லாத்தையும் மாத்திருச்சு. தேர்தல்னாலே அப்படித்தானே! அதுவும் இது தேர்தலா இல்லை; யுத்தமா ஆயிடுச்சு.

நீங்கள் செய்த முதல் தேர்தல் பிரச்சாரம் எது? இன்றிலிருந்து அன்றைய தமிழகத்தை நினைவுகூர்ந்தால், நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர் திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக’னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது 1984-ல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன். அன்னைக்குப் பார்த்த தமிழ்நாட்டுக்கும் இன்னைக்குப் பார்க்கிற தமிழ்நாட்டுக்கும் இடையில நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு. முக்கியமா வறுமையை, பசியைப் பெரிய அளவுல ஒழிச்சுருக்கோம். ஆனா, இன்னும் நிறைய நாம முன்னேறியிருக்கணும். அது நடக்காமல் போக முக்கியமான ஒரு காரணம் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படக்கூடிய தேக்கநிலை; திமுக கொண்டுவர்ற நல்ல திட்டங்களைத் திமுக கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க நிறுத்துறது தொடர் வளர்ச்சியில பெரும் முட்டுக்கட்டை. தமிழகம் இழந்திருக்கிறதா நான் நினைக்கிறது நல்ல சுற்றுச்சூழலை. இதை மாத்தணும்னுதான் கட்சியிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குன்னு ஒரு அணியை உருவாக்கினோம். வளர்ச்சின்னு பேசும்போதெல்லாம் சுற்றுச்சூழல் நலனையும் கவனத்துல எடுத்துக்கணும்னு நெனைக்கிறேன். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கான வழி, இல்லையா?

காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது: கமல் பேட்டி


அரசியல் தலைவர்களுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் பயணிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். ஒவ்வொரு தலைவரின் பேச்சையும் கேட்கவும் மக்களில் எந்தெந்தத் தரப்பினர் கூடுகின்றனர், தலைவர்கள் பேசும் எந்த விஷயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், முக்கியமாகத் தலைவர்களுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அரசியலர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், மக்களிடம் இயல்பான ஒரு உரையாடலை உருவாக்கிக்கொள்கிறார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த மகத்தான கலைஞரை, அதுவும் ஒப்பனையற்ற முதிர்ந்த தோற்றத்தில் நேரில் காண்கையில் மக்கள் வாஞ்சையோடு ஓடிவருகிறார்கள். அன்போடு அவருடன் பேசவும், ஆசையோடு படம் எடுத்துக்கொள்ளவும் முந்துகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டமாகவே அது தெரிகிறது. ஆனால், அங்கே அரசியலும் தொழிற்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாக நீங்கள் குறிப்பிடும் ‘மையவியம்’ – அதாவது இடது, வலது இரண்டும் கலந்த நடுநிலையான சென்டரிஸம் – பேசும் கட்சிகள் உலகம் முழுக்க வெவ்வேறு போக்குகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இஸ்ரேலில் உள்ள மையவியக் கட்சிகளும் பிரேசிலிலுள்ள மையவியக் கட்சிகளும் ஒரேவிதமான சிந்தனைகளை, வெளிப்பாடுகளைக் கொண்டவை அல்ல. இடதுசாரிகளையோ வலதுசாரிகளையோ வரையறுப்பதுபோல மையசாரிகளைத் துல்லியமாக வரையறுக்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை; பெரும்பாலும் அவர்களுடைய போக்கு சமரசமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் நீங்கள் முன்னிறுத்தும் மையவியத்துக்கான அர்த்தப்பாடு என்ன?

ஜனநாயகம் என்று சொல்லும்போது சாக்ரடீஸ் சொன்னதும் இன்றைக்கு இருப்பதும் வேறுவேறு; இன்னும் சொல்லப்போனால், பிரிட்டனில் பேசுவதும், அமெரிக்காவில் பேசுவதும், நாம் இங்கே புழக்கத்தில் வைத்திருப்பதும் வேறுவேறு. சென்டரிஸமும் அப்படித்தான். இங்கே புழக்கத்தில் நமக்கானதை உருவாக்குவோம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் நடுநிலைமை; அரசியலற்ற நிலை அல்ல இது. வள்ளுவர் போற்றும் நிலை. ஒரு திறந்த மனப்பாங்கு. மரபோ நவீனமோ பகுத்தறிந்து நமக்கான விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

பிரான்ஸில், ‘மன்னராட்சியானது புரட்சி மூலம் தூக்கி வீசப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களை இடதுசாரிகளாகவும், ‘மன்னராட்சியே நீடிக்கட்டும், புரட்சி தேவையற்றது’ என்று முடிவெடுத்தவர்களை வலதுசாரிகளாகவும் வரையறுத்துக்கொண்டால், ‘மன்னராட்சி போக வேண்டும், அதே சமயம் புரட்சி வேண்டியது இல்லை’ என்று முடிவெடுத்தவர்களை மையசாரிகள் என்று வரையறுக்கலாம். கேள்வி என்னவென்றால், புரட்சி நடக்காமல் எப்படி மன்னராட்சி முடிவுக்கு வரும்? புரட்சியை வன்முறை என்று வரையறுப்போமானால், மன்னராட்சியின் கொடுங்கோன்மையை என்னவென்று வரையறுப்பது? அப்படியென்றால், மையவியம் என்பது கிட்டத்தட்ட வலதுசாரிகளுக்கு அருகில் உள்ள நிலைப்பாடுதானே?

இல்லை. இருக்கும் அமைப்பிலுள்ள சமூகக் கொடுமைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. அதே சமயம், வன்முறை அல்லது அத்துமீறல் மூலம் அதை நிலைநாட்டுவதும் எங்கள் வழிமுறை இல்லை. நான் போராட்ட வடிவங்களுக்கும்கூட இதைத்தான் சொல்கிறேன், அரசு அலுவலகங்கள் மீதும், பேருந்துகள் மீதும் கல் எறிவதுதான் போராட்ட வடிவம் என்றால், அத்தகைய போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர் ஒருநாளும் பங்கேற்க மாட்டார்கள். ஆயுதப் படைகள் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது ஒரு பழைய நம்பிக்கை. புரட்சி என்பது வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி நிறையக் காலம் ஆகிவிட்டது. அது வெற்றி பெறுமா என்று கேட்காதீர்கள். அந்த நம்பாமைதான் சென்டரிஸத்துக்கு எதிரி. இதற்கு உதாரணப்படுத்தும்போது நான் காந்தியை அழைத்துக்கொள்வேன். தன் கருத்தை விளக்கத் தடுமாறும்போது மார்டின் லூதர் கிங்கும் காந்தியைத்தான் அழைத்துக்கொண்டார்.

இந்தியாவில் இன்று மையவியக் கட்சிகளாக நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள்?

எங்களைத்தான் சொல்ல வேண்டும்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா: சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டின் மாடியில் உள்ள அவருடைய அலுவலகமானது நூலகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த சீமான், வீடு திரும்புவதற்காகக் காத்திருந்த நேரத்தில் நூலகத்தைப் பார்வையிட முடிந்தது. சங்கத் தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழர் வரலாற்று நூல்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள், சூழலியல் நூல்கள் வரை விரிவான தொகுப்புகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஓரிடத்தில் தென்பட்டபோது, எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். குறிப்புகள் நிமித்தம் பக்கங்களின் ஓரங்கள் ஆங்காங்கே மடிக்கப்பட்டிருக்கின்றன. நம்மாழ்வார் நூல்களைப் பிரித்தபோது நிறைய அடிக்குறிப்புகளைக் காண முடிந்தது. ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ வாசிப்பில் இருக்கும் அறிகுறிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. மேஜையில் உள்ள ‘ஜென் கதைகள்’ நூலில் மடிக்கப்பட்டிருந்த பக்கத்திலுள்ள கதையை சீமானுடைய ஒரு பேச்சில் கேட்டது நினைவுக்கு வருகிறது. சீமான் வந்துவிட்டார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாசிப்பீர்கள்?

சாதாரண நாட்கள்ல காலையில் இரண்டு மணி நேரம் வாசிப்பேன். வாசிப்பைத் தவறவிடக் கூடாதுங்கிறதுக்காகவே மாலையில்தான் உடற்பயிற்சின்னு வெச்சுக்கிட்டேன். வருஷத்தில் சில நாட்கள் முழுக்க உட்கார்ந்துடுவேன். கணக்கு வழக்கில்லாமல் அப்போ வாசிப்பேன்.

இப்போது யாரை அதிகம் வாசிக்கிறீர்கள்?

அதிகம் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களை வாசிக்கிறேன். அவர் எங்க ஊர் பக்கம்கிறதாலோ என்னவோ ரொம்ப நெருக்கமா அவரோட எழுத்துகள் இருக்குது. அம்பேத்கர், நம்மாழ்வார் எழுத்துகளை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். என்னோட பழக்கம் என்னன்னா, இந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம், அந்தப் புத்தகத்துல பத்துப் பக்கம் அப்படின்னு வாசிப்பேன்; ஒரே புத்தகத்தோடு முழுசா உட்காருவது கிடையாது. நமக்கு ஒண்ணும் தெரியலைங்கிறதுதான் படிக்கப் படிக்கத் தோணுது. யாருக்கும் குறைவில்லாம நம்மாளுங்க சிந்திச்சுருக்காங்க, எழுதியிருக்காங்க. ஆனா, இந்த இனம் இப்படி அதிகாரம் அற்று இருக்குங்கிறதுதான் வரலாற்று முரணா இருக்கு.

ஒவ்வொரு இனமும் காலம் நெடுகிலும் மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளையும் போக்குகளையும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. தமிழ்த் தேசிய அரசியலுக்கு இங்கே குறைந்தது நூறாண்டு அரசியல் வரலாறு இருக்கிறது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பேசிய பெரியாரும், அண்ணாவும் பிற்பாடு ‘திராவிட நாடு’என்று பேசலானதும், பின்னர் இந்தியக் கூட்டாட்சியில் மாநில சுயாட்சியை முன்னிறுத்திப் பேசலானதும் சமரசங்கள் மட்டும் அல்ல; அடுத்தடுத்த கட்டப் பரிணாமங்கள். உங்களுடைய ‘நாம் தமிழர் கட்சி’யின் இலக்கு என்ன? கடைசியாக அண்ணா விட்டுச்சென்ற கூட்டாட்சி எனும் புள்ளியின் தொடர்ச்சியா அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் தொடக்கப் புள்ளியான தனிநாடு கனவா?

தனி நாடு அல்லது கூட்டாட்சி அதுஇதுன்லாம் நான் பேசப்போறதில்லை. என் இனத்துக்குத் தேவை அதிகாரம். பல்லாயிரம் ஆண்டுகளா இது தமிழ்த் தேசம்தான்; இந்தியாங்கிற நாடு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து உருவாவதற்கு முன்னாடியும் இது தமிழ்த் தேசம்தான்; இப்போதும் தமிழ்த் தேசம்தான். ஆட்சியாளர்கள் யாருங்கிறதை விடுங்க. இந்தியாங்கிறதே பல நாடுகளோடு ஒன்றியம்தானே! ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ மாதிரி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’. அப்படிச் செய்வோம்! ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி’ என்பது அண்ணா முன்வைத்த முழக்கம். எல்லா தேசிய இனங்களுக்கும் அதுதான் சரி. இப்போதுள்ள ஆட்சிமுறையில மாநில உரிமைகள் பறிபோய்க்கிட்டே இருக்கு. வட இந்தியர்கள்தான் நாட்டின் முதன்மை அமைச்சர்களாக ஆக முடியும்ங்கிற சூழல் போதாதா, இங்குள்ள அக்கிரமச் சூழலைச் சொல்ல? இந்த நிலை மாற்றப்படணும். என் மக்களுக்கும் அதிகாரம் வேணும். இதைத்தான் நான் பேசுறேன்.

சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு பாஜக கொண்டுசெல்லும்: எல்.முருகன் பேட்டி

ஓராண்டுக்கு முன் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டபோது ‘யார் இவர்?’ என்று பலர் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியில் சில முன்னணித் தலைவர்கள் பாஜக தலைமை அலுவலகமான ‘கமலாலய’த்துக்கு அன்றாடம் வருவதை நிறுத்திக்கொண்டதைக் கேள்விப்பட முடிந்தது. இன்று நிலைமை தலைகீழ் ஆகியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் கட்சிக்குள் தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் முருகன்; கட்சிக்கு வெளியிலும் செயல்படும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் ஒருவகையில் முருகனின் தலைமையைப் பரிசோதிக்கும் களமும் ஆகியிருக்கிறது. 

ஒருகாலத்தில் ‘பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம் மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருக்கிறது; கட்சிக்குள் சமூகங்களுக்கு இடையிலான பொறுப்புப் பகிர்வு முன்னர் இல்லாத அளவுக்கு நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கேள்வி என்னவென்றால், உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா? 

முழுச் சுதந்திரமாகவே செயல்படுகிறேன். என்னை எல்லோருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் படுக்கச் செல்கிறேன்; மதியத் தூக்கம்கூடக் கிடையாது. கட்சியினர் என்னுடைய எதிர்பார்ப்பை அறிந்திருக்கிறார்கள். அதனால், எனக்கு இணையாக ஓட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கிறது. எந்த விஷயத்திலும் சுதந்திரமாகவே முடிவெடுக்கிறேன் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் மூத்தவர்களிடம் கலந்தாலோசிக்கிறேன். கீழிருந்து வந்த மோடிஜி மேலே இருப்பது இன்றைய கட்சிக்கு உள்ள பெரிய உத்வேகம். நீங்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கட்சிக்காக நேர்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை பாஜகவில் மட்டுமே இருக்கிறது. 

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின் - திருமாவளவன் பேட்டி


விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; இப்படித்தான் ஓடுது; ஆனா, ஓய்வொழிச்சல் பார்த்து உட்கார முடியாத யுத்தம் இது” என்று புன்னகைக்கிறார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சனாதனத்துக்கு எதிரான போர் என்று அறிவித்திருக்கிறீர்கள். சனாதனம் என்பதை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள், உங்கள் அறிவிப்பை விளக்க முடியுமா?

சனாதனத்தின் உள்ளடக்கம் அசமத்துவம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தீர்மானித்து இங்கே ஒரு கட்டுமானம் இருக்கிறது இல்லையா, அதை உருவாக்கியதும், அது அழிந்துவிடாமல் பராமரிப்பதும் சனாதனம். இந்தச் சாதியக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்திடவும், அதை உடைத்து நொறுக்கிவிட்டு சமூகநீதிக் கட்டுமானத்தை உருவாக்கிடவும் என்று இங்கே இரு தரப்பிலும் வேலைகள் நடக்கின்றன. சனாதனக் கட்டுமானத்தை அப்படியே நீட்டிக்கச்செய்ய உழைக்கும் அமைப்பாகவே நான் சங்கப் பரிவாரங்களைக் காண்கிறேன். தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் சாதி – மத வரையறைகளைக் கடந்து அமைப்புகளாக ஒருங்கிணைந்து, கீழே உள்ளவர்களையும் அதிகாரமயப்படுத்தும் சக்திகளை நாசப்படுத்த முற்படும் அரசியல் சக்தியாகவே பாஜகவைக் கருதுகிறேன். அதாவது, பாஜக என்பது சனாதனத்தின் அரசியல் வடிவம். அது தமிழ்நாட்டை இப்போது சூறையாட முற்படுகிறது. இங்குள்ள ஜனநாயக சக்திகளை அழிக்க முற்படுகிறது. ஆகையால்தான் அதற்கு எதிரான போர் என்று இந்தத் தேர்தலைக் குறிப்பிடுகிறேன்.

சமூகநீதியைத் தங்களுடைய மைய இலக்குகளில் ஒன்றாகப் பேசும் அமைப்புகளின் அரசியலை மோடியின் பாஜக இந்த ஏழாண்டுகளில் பல இடங்களிலும் உடைத்திருக்கிறது; குறிப்பாக, வட இந்தியாவில் இதை அதிகம் காண்கிறோம். இதில் தலித் அரசியல் இயக்கங்கள் பெரும் தேக்கத்தையும் சிதிலத்தையும் அடைந்திருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். சொல்லப்போனால், தேசிய அளவில் விசிக அளவுக்குத் துடிப்போடு முன்னகரும் அம்பேத்கரிய இயக்கம் ஒன்று தென்படவில்லை. எங்கே தவறு?

தலித் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் வகை, அம்பேத்கரை வெறுமனே ஒரு தலைவராக உள்வாங்கிக்கொண்டு திரளும் இயக்கங்கள்; இவை அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாக உள்வாங்குவதில்லை; அம்பேத்கர் என்ற சென்டிமென்ட், தலித் என்ற சென்டிமென்ட் இரண்டோடும் முடிந்துவிடுகின்றன; காலப்போக்கில் இவை சாதியுணர்வைப் பிரதிபலிக்கும் இயக்கங்களாகவும் ஆகிவிடுகின்றன. இரண்டாம் வகை, அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாகப் படித்து உள்வாங்கி, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு அமைப்பாகத் திரளும் இயக்கங்கள். அதிகாரத்தை நோக்கிய அணிதிரட்டல் ஒருபுறம்; புரட்சிகர மாற்றத்தை நோக்கிய அணிதிரட்டல் மறுபுறம். பொது நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றும்போது எங்கே சமரசம் செய்வது, எங்கே உறுதியாக நிற்பது; எது நட்பு முரண், எது பகை முரண் என்பதில் பெரிய தெளிவு தேவை. அந்த இடத்தில் ஏற்படும் சறுக்கலே இந்த நிலைக்குக் காரணம். இந்திய அளவில் அம்பேத்கரிய இயக்கங்கள் இன்று மெல்லக் கரைகின்றன என்றால், அதற்குக் கருத்தியல் சிதைவுதான் காரணம்.

அப்படியென்றால், காந்திபோல அம்பேத்கரும் ஆகிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாமா? அதாவது, சாராம்சத்துக்கு அப்பாற்பட்ட அடையாளமாக அவருடைய அரசியல் எதிரிகளாலும் எப்படி காந்தி சுவீகரிக்கப்படுகிறாரோ அப்படி அம்பேத்கரும் ஆகிவருகிறார் எனலாமா?

அதுதான் உண்மை. வெற்று அடையாள அரசியல் சீக்கிரமே நீர்த்துவிடும். அம்பேத்கரின் சிலைகளையும் படங்களையும் அவருடைய லட்சியத்தை உள்வாங்காமல் வெறுமனே நம்முடைய தேவைக்காகப் பயன்படுத்தினால் அம்பேத்கர் ஒரு கமர்ஷியல் கமாடிட்டி மாதிரி ஆகிவிடுவார். இது ஒரு சுரண்டல்தான்.


பாஜக மாதிரி ஆக வேண்டியது இல்லை காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி பேட்டி


பரபரப்பும் படாடோபமும் கூடிய அரசியல் யுகத்திலிருந்து விலகிய நிதானச் சூழலில் இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன். தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தலைவர் ஆகியிருக்கும் கே.எஸ்.அழகிரி அதே நிதானத்தைப் பிரதிபலிக்கிறார். தொண்டர்கள் எளிதாக தலைவர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முடிகிறது, அவரைச் சந்திக்க முடிகிறது; கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோர்க்கும் பொதுவான நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

ஒரு கிராமத்திலிருந்து ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று படிப்படியாக மேல் நோக்கி வந்தவரான நீங்கள் காங்கிரஸை அதன் பின்னடைவிலிருந்து மீட்டு மேல் நோக்கி உயர்த்த எது சரியான வழி என்று நம்புகிறீர்கள்?

காந்தி காட்டிய வழிமுறைதான்: செயல்பாடு, செயல்பாடு, செயல்பாடு.

இந்த ஓராண்டில் கட்சிக்குள் என்ன முக்கியமான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள்?

இரண்டு விஷயங்கள். பெரிய ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்கிறோம். எனக்கு என்று ஒரு கோஷ்டியை நான் பராமரிக்கவில்லை. முரண்பாடுகளை மதிப்பவன் நான். எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை என்பது சாத்தியமே இல்லை. அது இயற்கையும் இல்லை. அதனால் நான் என்ன நினைப்பேன் என்றால், ‘இந்த இயக்கம் என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். நம்முடைய கருத்துகளிலிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் நமக்கு அந்நியமானவர்கள் அல்ல. எல்லோர் அறிவும் ஆற்றலும் இயக்கத்துக்கு முக்கியம். அதனால் அவரவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று நினைப்பேன். விளைவாக எந்த நிகழ்ச்சி என்றாலும், மேடையில் எல்லா முக்கியத் தலைவர்களும் ஒன்றாக அமரும் இணக்கம் உருவாகியிருக்கிறது. அடுத்து, புதிதாக மாநிலக் குழு அமைத்திருப்பதோடு, பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். மாநிலத் துணைத் தலைவர்களாக 32 பேர், பொதுச்செயலர்களாக 43 பேர், செயலர்களாக 103 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மிகச் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். மேல்மட்டத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்கள் கீழ்மட்டம் நோக்கிச் செல்கின்றன. அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்திருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. சென்னையில் ஒரு கூட்டம் என்றால், பத்தாயிரம் பேர் திரளுகிறார்கள். முன்பு இது சாத்தியம் இல்லை.

பொறுப்புப் பகிர்வு நல்ல விஷயம். அதிகாரப் பகிர்வாகவும் அது அமைந்திருக்கிறதா?

அடிப்படையில் அரசியல் என்பது சேவைக்கான களம். இங்கே ஒருவருக்குப் பொறுப்பு அளிக்கப்படுவதானது, அவர் களத்தில் உழைப்பதற்கான ஓர் அங்கீகாரம். அதேசமயம், முன்பு 10 பேர் உட்கார்ந்து பேசி முடிவெடுத்து செயலாற்றிய இடத்தை இப்போது 300 பேர் உட்கார்ந்து பேசி செயலாற்றுவதாக மாற்றும்போது அது அதிகாரப் பகிர்வும்தானே!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுபவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு தொகுதிகள் தலைவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பொறுப்புப் பகிர்வா, அதிகாரப் பகிர்வா?

இரண்டுமேதான். குடும்ப/ வாரிசு அரசியலுக்கான பங்கு குறைய வேண்டும்; குறைந்திருக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்சிக்கு உழைப்பவர்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரித்திட முடியாது இல்லையா?