ஆபத்தில்லாத வேலைகள் உண்டா?
‘நீர், நிலம், வனம்!’ தொடரைத் தொடங்கும்போதே அபாயகரமான சில பயணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன். கடல் மக்கள் வாழ்வை அருகிலிருந்து எழுத வேண்டும் என்ற உந்துதலில் அவர்களை நெருங்கியபோது, கடல் பயணங்களுக்குத் தயாரானேன். அலைகள் அற்ற கடலில், சௌகர்யமான சுற்றுலாப் படகில் உல்லாசப் பயணம் போவது வேறு; அடித்துத் தூக்கும் மாசாவில் ஏறி, பறந்து, விழுந்து செல்லும் கட்டுமரத்தில் போகும் தொழில் பயணம் வேறு. நீச்சல் தெரியாதவனுக்கு, கடல் பயணங்கள்தான் அபாயகரமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். தமிழகத்தில் கடல் பயணத்தைவிடவும் கரைப் பயணங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைக் கனிம மணல் கரைப் பயணங்கள் உணர்த்தின.
தனி உலகத்துக்கு நல்வரவு
இந்தியாவின் நீளமான கடற்கரையைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. நாட்டின் கடற்கரையில் 13% இது. கடற்கரை என்றால், உடனே நம் ஞாபகத்துக்கு வரும் மெரினா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய கடற்கரைகளின் முகங்களையும் அங்கு காணப்படும் ஜன நெருக்கத்தையும் இதில் மிகச் சொற்ப இடங்களில், மிகச் சொற்பமான தூரத்திலே காண முடியும். நீரோடியில் புறப்பட்டு, பழவேற்காடு வரை கடற்கரை வழியாக வந்தால் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் நகரங்கள், 591 கடலோடிகளின் கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்கள் யாவும் மர்மப் பிரதேசங்கள். மனித நடமாட்டம் அற்ற இந்தப் பிரதேசங்கள் ஒருபுறம் இணையற்ற அழகு கொண்டவை; மறுபுறம் குற்றங்களுக்கேற்ற களங்கள். ஆலா கத்தும் காடுகளும் சவுக்குத் தோப்புகளும் நாட்டுக் கருவை மரங்களும் நிறைந்த இந்தப் பகுதிகளில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது.