முதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா?


தொடர்ந்து பயணங்கள். குறுக்கும் நெடுக்குமாக. தேர்தல் சூடு பரவும் சூழலில், தமிழக மக்களின் மனநிலை ஓரளவுக்குப் பிடிபடுவதுபோலவே தோன்றுகிறது. ரயிலோ, பஸ்ஸோ, ஆட்டோவோ உடன் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் பேச்சில் இயல்பாக வந்து அரசியல் ஒட்டிக்கொள்கிறது. நம்மூரில் மக்கள் தயக்கத்தைவிட்டு அரசியல் சூழலை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாலே, ஆளுங்கட்சிக்கு அனர்த்தம் என்று அர்த்தம். வெளிப்படையாக அதைப் பார்க்க முடிகிறது. அடுத்து யார் என்று கேட்டால், பொதுவாக, மறுபடியும் இவங்களேதான் சார் என்றோ அடுத்த பெரிய கட்சியின் தலைவர் பெயரோதான் பதிலாக இருக்கும். இப்போது அவற்றைத் தாண்டி “இரண்டு பேருமே வரக்கூடாதுங்க” என்கிற குரல்களும் சகஜமாக கேட்கின்றன. “சரி, அப்போ வேற யாரு?” என்றால், “அதாங்க குழப்பமா இருக்கு. நம்பிக்கையா யாருமே கண்ணுல தெரியலீயே!” என்கிறார்கள்.

தமிழகத்தில் ஏனைய கட்சிகளைத் தாண்டி இடதுசாரிகள் மூன்றாவது அணியாக உருவாக்கியிருக்கும் ‘மக்கள் நலக் கூட்டணி’ எல்லோர் கவனத்திலும் விழுந்திருக்கிறது; ஆனால், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் கூட்டணியாக அதுவும் உருவெடுக்கவில்லை. “கூட்டணியெல்லாம் சரி, யாரை நம்பி ஓட்டுப்போட? ஜெயிக்குறதுக்கு முன்னாடியே எங்காளு இவருதான்னு ஒத்துமையா ஒருத்தரை அவங்களால காட்ட முடியலீயே!” என்று கேட்டார் ஆட்டோக்காரர் குமரேசன். மக்களால் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாமல் இருக்கலாம்; தங்கள் தேவையைக் கோடிட்டுக் காட்ட ஒருபோதும் அவர்கள் தவறுவதில்லை.

இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.