சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிறதா?


சென்னை அண்ணா சாலை புகாரியில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். சாலை முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் பறந்தன. மாநிலச் சுயாட்சி மாநாடு நடந்த ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடல் கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது. சாயங்காலத்துக்கான வானிலை கனிந்திருந்தது. வெளியே சாலையில் போன கூட்டத்தின் இடையே ஒரு குதிரை ஊர்வலம் கவர்ந்திழுத்தது. இரண்டு குதிரைகளில் பதின்ம வயது சிறுவர்கள் இருவர் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார்கள். பேண்டு செட்காரர்கள்போல அவர்கள் உடை அணிந்திருந்தார்கள். ஒரு கையில் குதிரையின் லகான். ஒரு கையில் தட்டி. ‘தமிழ் வெல்லும்!’ என்றது அது. குதிரைக்கு முன்னே நான்கு பையன்கள் பறையடித்தபடி செல்ல, குதிரைக்குப் பின்னே ஒரு கூட்டம் உற்சாகமாக ஆடியபடியும் முழக்கமிட்டபடியும் அணிவகுத்துச் சென்றது. பெரும்பாலும் பதின்ம வயது ஏழைப் பையன்கள். எதிர்வரும் காலம் ஒன்றின் கனவைக் கூறுவதுபோல இருந்த அந்த ஊர்வலம் மன எழுச்சியைத் தந்ததோடு கூடவே ஒரு குற்றவுணர்வையும் உண்டாக்கியது. இந்தப் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு எந்த அளவுக்கு நேர்மையாக நம்முடைய இன்றைய தமிழ் அடையாள அரசியல் இருக்கிறது?

யோசித்துப்பார்க்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது விசிக மாதிரி ஒரு தலித் அரசியல் கட்சி மாநில உரிமைகள் சார்ந்து மாநாடு நடத்துமா? இந்தியாவில் இன்றைக்கு எந்த மாநிலத்தின் ஆட்சி ஒரு தலித் கட்சி அல்லது ஒரு தலித் தலைவர் கையில் இருக்கிறது? தம் கையில் இல்லாத, யார் கையிலோ இருக்கும் அதிகாரத்தைக் காக்க ஏன் இவர்கள் ஒரு மாநாடு நடத்த வேண்டும்? ஒரு தமிழராகப் பிறந்திருக்காவிட்டால் அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் பிறந்திருந்தால் தேசிய அளவில் பெரிய ஆளுமையாகக் கவனிக்கப்பட்டிருக்கக் கூடியவர் திருமாவளவன் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

தன்னுடைய ஆரம்ப நாட்களிலிருந்தே தலித் அடையாள அரசியலுடன் தமிழ் அடையாள அரசியலையும் சேர்த்துப் பொருத்தியே சமத்துவத்துக்கான சாதி ஒழிப்புப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் திருமாவளவன். தேசிய அடையாளத்தைத் தாங்கிய ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பிலிருந்து விலகி தமிழ் அடையாளத்துடன் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பை அவர் தொடங்கியதே இந்திய தலித் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பம். ஏனென்றால், மாநிலங்களில் பிறந்தாலும் தேசிய அடையாளத்துடன் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதாகவே தலித் அரசியல் இயக்கங்களின் வரலாறு இருந்திருக்கிறது.

திருமாவளவனின் முடிவு ஒரு விதத்தில் தமிழ்நாட்டிற்கே உரிய தனித்துவம் அல்லது தேசிய அரசியலுக்குத் தமிழ்நாடு கொடுத்துவரும் கொடையின் நீட்சி என்று சொல்லலாம். எப்படி சமூக நீதி அரசியலையும், மாநில சுயாட்சி முழக்கத்தையும் திராவிட இயக்கங்கள் வழி தமிழ்நாடு கொடுத்ததோ அப்படி. தமிழ்நாட்டின் தலித் அரசியலில் இதற்கு ஒரு வரலாற்று முன்னோடியும் உண்டு. சாதி ஒழிப்பை உரக்கப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசர், முதலில் திராவிட அடையாளத்தையும் தொடர்ந்து தமிழர் அடையாளத்தையும் சாதி ஒழிப்புப் புள்ளியில் பொருத்தியவர்.

மாநில சுயாட்சி எனும் தேசிய முழக்கம்!


இம்பாலில் உள்ள ‘இமா கைதேல் - அம்மா சந்தை’ மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்றது. முழுக்கவும் பெண்களால் நிர்வகிக்கப்படும் உலகின் பெரிய சந்தைகளில் ஒன்று இது. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டு செல்லும் இடம் இது. பூக்கள், காய் - கனிகளில் தொடங்கி கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை சகலமும் கிடைக்குமிடம். இந்தச் சந்தை வெறும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையம் மட்டுமல்ல; மணிப்பூர் வரலாற்றின் ஒரு பகுதி. தாய்வழி மரபின் செல்வாக்கு நிரம்பிய மணிப்பூரின் கலாச்சாரத்தில் மட்டும் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியிலும் பெண்களின் நேரடிப் பங்களிப்பு அதிகம். உள்ளூர் வாணிபத்தில் அவர்களுடைய நூற்றாண்டு செல்வாக்குக்கான தொடர்ச்சியின் மையம் ‘இமா கைதேல்’. பல்வேறு பழங்குடிகள், மீத்தேக்கள், முஸ்லிம்கள் என்று பல்வேறு இனக் குழுக்கள், மொழிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பாகுபாடின்றிக் கூடும் இந்தச் சந்தைக்குச் சென்றதன் நோக்கம் அங்குள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கை, சந்தைக் கதைகளை அறிவது. அரசியல் கதைகளும் பேசுவதற்கான இடமாக அது மாறியது ஆச்சரியம்!