மாபெரும் தமிழ்க் கனவு



இன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி கோயில் தேரடித் திடலில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியிருக்கிறது. சுற்றுக் கிராமங்களிலிருந்து நகரை நோக்கி வரும் சாலைகள் அத்தனையும் மனிதத் தலைகளால் நிரம்பியிருக்கின்றன. கால்நடையாகத்தான் வருகிறார்கள் பெரும்பான்மையோர்; குழந்தைகளைத் தோளில் உட்காரவைத்தபடி நடந்து வருபவர்கள் அதிகம். மேடையில் உள்ளூர்ப் பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிட்டு, மைக்கைப் பிடிக்கும் திமுக மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி சொல்கிறார், “நம் இதயங்களையெல்லாம் கொள்ளைகொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுவார்.” கூட்டம் பேரோசை எழுப்புகிறது.

அன்று பகல் ஒரு மணிக்கு அண்ணா பேசுவார் என்று முன்வரிசையில் இடம்பிடிக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வர ஆரம்பித்த கூட்டம் அது. மணி இப்போது மாலை ஐந்து. உள்ளூர்ப் பேச்சாளர்கள் தொடர்கிறார்கள். ஒரு மணி நேரம். மீண்டும் குறுக்கிடுகிறார் நாராயணசாமி, “வழியெல்லாம் மக்கள் அலை நடுவே நீந்தி வந்துகொண்டிருக்கிறார் நம் அண்ணன்.” இன்னும் அரை மணி நேரம். “தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளி அண்ணா வடுவூரைத் தாண்டிவிட்டார்.” மேலும் அரை மணி நேரம். “மன்னார்குடி எல்லையைத் தொட்டுவிட்டார் நம் தலைவர். இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் முன் உரையாற்றப்போகிறார், வரலாறு மாறப்போகிறது...” கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

ஐந்தடி உயரம். கசங்கிய வேட்டி, சட்டை. மேல்துண்டில் புகையிலைப் பொடிக் கறை. கலைந்த தலைமுடி. ஒரு நாளைக்கு 20 கூட்டங்களுக்குத் திட்டமிட்டுக் கிளம்பினாலும், அதைத் தாண்டியும் வழியெங்கும் வண்டியை மறித்து ஒரு நிமிஷமேனும் தங்கள் ஊரில் பேசிவிட்டுச் செல்லப் பணிக்கும் மக்களின் அன்புக்காகப் பேசிப் பேசிக் களைத்தவரின் சோர்வு முகத்தில் தென்படுகிறது. ஆனால், கண் முன் தெரியும் மக்கள் வெள்ளத்தின் எழுச்சி தரும் புத்துணர்வு அவர் முகத்தை மலர்விக்கிறது. காரிலிருந்து இறங்குபவர் கூட்டத்தை உற்றுநோக்கியபடி சட்டையை லேசாகத் தூக்கிவிட்டு, வேட்டி மடியை இழுத்துக் கட்டுகிறார். அவர் ஒரு பேருரைக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. எந்த வகையிலும் தன் உருவத் தோற்றத்தில் ஆளை வசீகரித்துவிடும் தன்மை அற்ற அந்த எளிய மனிதர் மேடை ஏறுகிறார். உன்மத்தம் பிடிக்கிறது கூட்டத்துக்கு. மைக்கைப் பிடிக்கிறார். பேரோசை; பேரோசை. அண்ணா பேச்சைத் தொடங்குகிறார். சன்னதம் ஆடிய கூட்டம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. அவர் உரையை முடிக்கிறார். ஒட்டுமொத்த கூட்டமும் விண்ணதிர அவர் பெயரைச் சொல்லி முழங்குகிறது, “அண்ணா... வாழ்க!”, “தமிழ்… வெல்க!” கூட்டத்தின் கண்களில் நீர் கசிகிறது.

திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ரா. பேட்டி


தமிழ்நாட்டின் வெகுமக்கள் மொத்தமாக அண்ணாவைப் பேரறிஞர் என்று கொண்டாடியிருந்திருக்கலாம். ஆனால், நவீனத் தமிழிலக்கிய கர்த்தாக்களில் பெரும் பகுதியினர் மத்தியில் அவர் மீது கீழான பார்வையே அக்காலத்தில் இருந்தது. “அண்ணாவின் குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு, குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப்போவதில்லை. அவரை அறிஞர் என மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்று பெருமூடர்களே அழைக்கலாயினர்” என்று அண்ணாவின் மரணத்தையொட்டி - எழுத்துலகில் மட்டும் அல்லாமல், சமூக அரசியல் தளத்திலும் கொண்டாடப்பட்ட எழுத்தாளுமையான - ஜெயகாந்தன் எழுதிய குறிப்பை இங்கே ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அண்ணாவைப் பற்றியோ, அவர் வழிவந்த திராவிடக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியோ ஆக்கபூர்வமான மதிப்பீடுகள், விமர்சனங்கள், இடையீடுகள் நம்முடைய அறிவுசார் தளத்தில் நடக்காமல்போனதும் திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்கால கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் துரதிர்ஷ்டம்தான். ஆனால், திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது. நம் காலத்தின் தலைசிறந்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனுடன் இது தொடர்பாக உரையாடினேன்.

சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம் அண்ணா- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி




தமிழ்நாட்டு அரசியலில் அரிதான அனுபவங்களைக் கொண்டவர்களில் ஒருவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. ஓர் ஏழை இந்துவாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த கொடிக்கால், தமிழ்நாட்டின் தலித் அரசியல் எழுச்சி முகங்களில் ஒன்றாக அறியப்பட்டவர். சாதிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது ஐம்பது வயதுக்கு மேல் அம்பேத்கர் வழியில் இந்து மதத்தைத் துறந்தவர், இஸ்லாத்தை வரித்துக்கொண்டார். பொதுவுடைமை இயக்கம்தான் இவரது ஆரம்ப அரசியல் களம். குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு அவருக்கு உண்டு. அதன் பின் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கை முகமாகப் பார்க்கப்பட்ட இளையபெருமாளுடன் இணைந்து பணியாற்றினார். சிறுபான்மையின முன்னேற்றப் பயணத்திலும் இணைத்துக்கொண்டவர். மைய நீரோட்ட அரசியல் பாதையே விளிம்புநிலையினருக்கான பாதை என்பவர். சுதந்திர  இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றுக்கான சாட்சியமான கொடிக்கால், தன்னுடைய பயணம் நெடுகிலும் காங்கிரஸையும் திராவிட இயக்கத்தையும் விமர்சனபூர்வமாக அணுகியவர், வாழ்வின் பிற்பகுதியில் காந்தியையும் அண்ணாவையும் அடையாளம் கண்டார்.
மொழியுரிமையில் உங்களுக்குள்ள பிடிப்பின் காரணமாகவே தெற்கெல்லைப் போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். சாதி எதிர்ப்பும் உங்கள் இயல்பிலேயே இருக்கிறது. அப்படியிருக்க, திராவிட இயக்கம் எப்படி உங்களை இழந்தது?
முதலாவது விஷயம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. நான் பெரிய கடவுள் பக்தன் அல்ல என்றாலும் ஆன்மிகம் எங்கோ மனிதனுக்கு அவசியம் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இரண்டாவது, இந்த திராவிட நாடு என்று சொல்லப்பட்ட இன்றைய ஐந்து மாநிலங்களில் நாங்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இருந்தோம். மலையாள மொழி ஆதிக்கமும், மேல் சாதி ஆதிக்கமும் இணைந்து எங்களைப் பல வழிகளில் இம்சித்துவந்த அன்றைய காலகட்டத்தில், திராவிட நாடு அமைந்தால் திருவிதாங்கூர் ராஜ்ஜியம் எப்படியானதாக மாறும் என்பதில் குழப்பம் இருந்தது. நான் சொல்லும் அந்த இம்சைகளின் தீவிரத்தையும் இங்குள்ள தமிழர்களின் எதிர்மனோநிலையையும் நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ.தாணுப்பிள்ளை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அது தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று சொல்லியும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.எஸ்.ராமசாமிப் பிள்ளையே சொந்தக் கட்சிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து  ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுத்தார் என்றால், இதை உங்களால் நம்ப முடிகிறதா? 
அப்படிப்பட்ட நாட்களில் ம.பொ.சி. தலைமை வகித்த தமிழரசுக் கழகம், திராவிட இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஈர்ப்பைத் தருவதாக இப்பகுதியைச் சேர்ந்த எங்களுக்கு இருந்தது. ஆனால், அங்கும் நான் தொடர்ந்து இருந்திடவில்லை. ‘மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் – தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறை சென்றேன் இல்லையா, சிறைக்குள் கிடைத்த அறிமுகங்களும் அனுபவங்களும் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி, நான் சார்ந்திருந்த தமிழரசுக் கழகத்தில் இல்லை என்பதை விரைவிலேயே உணர்த்திவிட்டன.  சிறையில் நான் சந்தித்த இடதுசாரி இயக்கத்தினர் “சாதி, இனம், வர்க்க விடுதலைக்குப் பரந்துபட்டு சிந்திக்கும் ஒரு அமைப்பின் கீழ் பணியாற்ற வேண்டும் – அதற்கு ஒரே வழி பொதுவுடைமை இயக்கம்” என்றார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கக் கனவுகாணும் சங்கம்புழாவின்  ஒரு கவிதையை அவர்கள் வாசித்தபோது கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன். அடுத்த இருபத்தைந்து வருஷங்கள் அதுவே என் இயக்கமாக இருந்தது.
அண்ணாவை முதன்முதலாக எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
திருத்தமிழகம் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வடசேரியில் உள்ள பெரியாரசிங்கம் தெருவில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்தார். தேதிகூட ஞாபகம் இருக்கிறது 30.7.1954. அன்றுதான் அண்ணாவைப் பார்க்கிறேன். ஆளையே அடித்துப்போடுவதாக அவருடைய பேச்சு இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறப்பட்டாலும், எப்படி வடக்கத்திய - சனாதன ஏகாதிபத்தியத்தின் கீழ் நாடு இருக்கிறது – ஏன் தமிழ் மக்களுக்கும் ஏனைய திராவிட இனத்தினருக்கும் சுயாட்சி வேண்டும் என்று பேசினார். இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்போது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பது புரிகிறது.