தமிழகக் கல்வித் துறையை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் நடுத்தெருவில் நிறுத்திவிட்டிருக்கிறது. அறிக்கைகள், பிரதமருக்கு அனுப்பும் கடிதங்களைத் தாண்டி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்ட முதல்வர் பழனிசாமியோ, அவர் சார்ந்திருக்கும் அதிமுகவோ தயாராக இல்லை. 98% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் ஒரு மாநிலத்தில், மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இத்தேர்வு எவ்வளவு அப்பட்டமான திணிப்பு என்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கல்வி பகிரங்கமாக மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. மறுபக்கம், மாநிலத்தின் அதிகாரவசம் இருக்கும் கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு மோசமடைந்துவருகிறது என்பதற்கு, நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் ஒரு சாட்சியமாக நிற்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் விவரம் இது: 2014-15-ல் 37 பேர். 2015-16-ல் 24 பேர். மருத்துவக் கல்விக்குத் தேர்வாகும் 95% மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.
ஆட்சியாளர்களே கல்வி வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் மாறியிருக்கும் நாட்டில், மத்திய அரசு, மாநில அரசு இரண்டோடும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கல்வித் துறையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானால் மட்டுமே அதிகாரப் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை இனி தமிழக அரசு தார்மிகரீதியாக எதிர்கொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளும் அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரச் சண்டை அரசின் பெரும்பாலான துறைகளை முடக்கியிருக்கும் நிலையில், விதிவிலக்காகப் பள்ளிக்கல்வித் துறையில் சலனங்கள் தெரிகின்றன. ஒரு பெரிய மாற்றத்துக்கான நீண்ட காலச் செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டிய தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து சீர்திருத்தங்கள் என்னென்ன?