ஆனிப் பெருந்திருவிழாத் தேரோட்ட நாளில் திருநெல்வேலி புறப்பட்டு வர நேர்ந்தது எதேச்சையாக அமைந்தது. நெல்லை வந்ததும்தான் பயணத்தின் விசேஷம் நமக்கே புரிந்தது. ஒட்டுமொத்த ஊரும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் நெல்லையப்பர் திருக்கோயிலின் முக்கியத் திருநாளே திருத்தேரோட்டம்தான். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான இந்தத் தேர், திருவாரூர் தேருக்கு அடுத்து மாநிலத்திலேயே பெரியது என்று கூறுகிறார்கள் (தொன்னூறு அடி உயரமும் இருநூற்று இருபது டன் எடையும் கொண்டது திருவாரூர் ஆழித்தேர்).
நீண்ட வீதிகள் எங்கும் மக்கள் சூழ, நடுவே முதலில் சுவாமித் தேர், அதைத் தொடர்ந்து அம்பாள் தேர், அதையடுத்து விநாயகர் தேர், அதற்குப் பின்னர் சுப்பிரமணியர் தேர், அதற்கும் பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் என்று வரிசையாக அசைந்தாடி தேர்கள் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி என்றால், நெல்லையப்பர் திருக்கோயிலைக் காண்பது அற்புத தரிசனம். கோயில் அழகும் தேர் அழகும் ஒன்றுகூடிய திருநாள் அழகும் ஒரு முழு நாளை எடுத்துக்கொண்டன. நாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது.
ஏற்கெனவே, கிடைத்திருந்த தகவலின்படி மாலை சரியாக 5 மணி அளவில் நெல்லையப்பர் கோயிலின் பிரதான வாயிலின் இடது திருப்பத்தையொட்டிய அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். மரக்கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சின்னக் கடையைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்தச் சின்ன இடமா ஒரு மாநகரின் அடையாள அடித்தளமாக இருக்கிறது? வியப்பு மேலிட்டது. பெயர்ப் பலகை இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் "இடம் இதுதானா?' என்று கேட்டு உறுதிசெய்துகொள்கிறோம். கடிகாரத்தைப் பார்க்கிறோம். மணி 5.30. சுற்றிக் கவனிக்கிறோம். இப்போது அந்த இடத்தில் நம்மையும் சேர்த்து ஒரு கூட்டம் நிற்கிறது. மணி 5.54. கூட்டம் அதிகரிக்கிறது. ஒருவரையொருவர் முந்திக்கொள்ளும் ஆர்வம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. சரியாக மணி 6. கடை திறக்கிறது. கடையில் எரியும் ஒரேயொரு ‘40 வாட்ஸ் பல்பு’ அந்தச் சூழலை எங்கோ கொண்டுசெல்கிறது. நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். ஆம், நாம் இப்போது ‘இருட்டுக்கடை’யில் நின்றுகொண்டிருக்கிறோம்.