டெல்லியிலிருந்து ரயில் கிளம்பிவிட்டது.
வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட டெல்லி தேர்தல் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், மன்மோகன் சிங் மௌனம் காக்க, ப.சிதம்பரம் உதிர்க்கும் அதே வார்த்தைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மறுஒலிபரப்பாகின்றன. அரசின் வியூகவாதியும் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி, “டெல்லி தேர்தல் முடிவுகள் அரசின் ‘பொருளாதாரச் சீர்திருத்த’ வேகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது” என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, அரசு பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது அவர் சொல்லும் செய்தி. வெளியே இப்படி வீறாப்பாகப் பேசிக்கொள்வதில் சிக்கல் இல்லை. உள்ளுக்குள்ளும் அப்படியொரு நினைப்பிருந்தால் அது பெரும் ஆபத்து. டெல்லி முடிவு அரசுக்குத் தெளிவாக சில சமிக்ஞைகளை அனுப்புகிறது.