இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேறொரு விஷயம் இருக்கிறது மோடி!


செய்தி அறையிலிருந்து நண்பர் பாஸ்கரன் ஒரு செய்தி அறிக்கையை நீட்டினார். “இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பகுதிகளில் ஒன்றான மண்டிக்குப் பிரதமர் மோடி போயிருக்கிறார். இரு நீர்மின் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விழாவில் அவர் இஸ்ரேலைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று சொன்னார் பாஸ்கரன். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவழியாகத் தண்ணீர் பிரச்சினை மோடியின் கண்களில் பட்டுவிட்டதோ என்று நினைத்தேன்.  செய்தி அறிக்கையை வாங்கிப் படித்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. மோடி ஒருநாளும், தேர்தல் காய்ச்சலிலிருந்து விடுபடப்போவதில்லை என்பதையே அவருடைய மண்டி பேச்சும் சொன்னது. பாகிஸ்தான் மீது சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலைக் குறிப்பிட்ட மோடி, அது சார்ந்தே இந்தியாவை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?


இந்த வருஷம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாளில் மேட்டூரில் இருந்தேன். அங்கிருந்து கரையோரமாக பூம்புகார் வரை போய் வரலாமா என்று தோன்றியது. ஆற்றுக்குப் புது வெள்ளம் வரும்போது அதை வரவேற்பதற்கு என்று ஒரு மரபு உண்டு. பேராசிரியர் தங்க.ஜெயராமன் அடிக்கடி அதை நினைவுகூர்வார். “அந்நாட்களில் ஆற்றில் இப்படித் தண்ணீர் வருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே காவிரிப் படுகையில், குடிமராமத்து நடக்கும். ஊர் கூடி ஆற்றைத் தூர்வாரி, இரு கரைகளையும் மேம்படுத்தி, கால்வாய்களையும் வாய்க்கால்களையும் சீரமைப்பார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாளில், காவிரிப் பெண்ணை ஆரத்தித் தட்டுடன் வரவேற்பார்கள். சூடம் கொளுத்திச் சுற்றுவார்கள். அப்படியே விழுந்து வணங்குவார்கள். புது வெள்ளம் நெருங்கியதும் அதன் மீது பூக்களைச் சொரிவார்கள். அவள் நம் வீட்டுப் பெண். அவள் வந்தால்தான் வயல் நிறையும். வீட்டில் அன்னம் நிறையும். செல்வம் பெருகும். ஆறா, அம்மா அவள். மகளாகப் பிறக்கும் தாய்.  அள்ளிக்கொடுக்கும் தாய். தெய்வம். வீட்டு தெய்வம்.” இதை ஜெயராமன் சொல்லி முடிக்கும்போதெல்லாம் அவருடைய கண்களில் நீர் கோத்திருக்கும்.

காவிரிக் கரையையொட்டிப் பயணிப்பது ஒரு பேரனுபவம். எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சிட்டியும் குடகில் தொடங்கி  பூம்புகார் வரை பயணித்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி..’ புத்தகம் ஒரு தனித்துவமான பதிவு. நான் கல்லணையையொட்டி மழை நாட்களில், தண்ணீர் பொங்கும் நாட்களில் கொஞ்சம் பயணித்ததுண்டு. காவிரியில் தண்ணீர் இல்லா நாட்களில், தண்ணீர் வரும் நாட்களில் பயணித்ததில்லை. அப்படிச் செல்ல நினைத்ததையும் அங்கு பார்க்க நேர்ந்ததையும் என்னவென்று சொல்வது? தீவினை. சபிக்கப்பட்ட ஒரு நாள் அது.

ஆறா? எங்குமே அது ஆறாக இல்லை. கரைகள் தளர்ந்திருந்தன. வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் காவிரிப் படுகைக்குச் செல்ல நேர்ந்தது. கல்லணையிலிருந்து இந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் தஞ்சாவூரில் இருந்தேன். அதே நாளில் கும்பகோணம் சென்றேன். மன்னார்குடி சென்றேன். திருவாரூர் சென்றேன். ஒரு இடத்திலும் தூர்வாரப்பட்டிருக்கவில்லை. எங்கும் புதர்கள், மணற்சூறை, கழிவுகள்... இரு மாநிலங்கள் தீப்பிடித்து எரிகின்றன; ஒவ்வொரு நாளும் இங்கு வந்தடையும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியே பெறுகிறோம். இந்தச் சூழலிலும் ஒரு நதியை இப்படித்தான் சீரழிப்போம் என்றால், எவ்வளவு கேவலமானவர்கள் நாம்!

தனிநபர் அந்தரங்கத்துக்கும் அரசின் வெளிப்படைத்தன்மைக்குமான எல்லை எது?


என்னுடைய செல்பேசியிலிருந்து தனிப்பட்ட வகையில் என் மனைவியிடம் எதையும் நான் பேச முடிவதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுக்கேட்கப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக இந்தச் சமூகத்தில் நான் இழக்கும் அந்தரங்க உரிமை இது. சமூகத்தை நொந்துகொள்ள ஏதும் இல்லை. இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்தது. நாம் இரண்டு வாழ்க்கை வாழ்கிறோம். பொது வாழ்க்கையில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சமூகத்தின் உள்ளே நுழைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சமூகம் உள்ளே நுழைகிறது. பொது வாழ்வின் பங்கேற்பால், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு அந்தரங்க உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படுபவர்கள், மறுபுறம் சமூகத்தில் எவ்வளவு உரிமைகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்.

சீன் போதும்... பேரம் பேசுங்கள்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது, மத்திய அரசுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பிரதமர் மோடி இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்றே தோன்றியது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சொன்னபோது, ஏமாற்றமாக இருந்தது. இந்த வாதம் சட்டப்படி சரியாக இருக்கலாம்; அறம் சார்ந்தோ, தேச நலன் சார்ந்தோ நிற்காது. நெருக்கடிகள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான தருணங்களை நமக்கு உருவாக்கி வழங்குகின்றன. மாறாக, பொறுப்புகளைத் தள்ளிப்போட்டு, தப்பித்தோடும் உத்தியையே நாம் பெரிதும் தேர்ந்தெடுக்கிறோம்.

அரசு சொல்வதுபோல, நாடாளுமன்றம் கூடி எடுக்க வேண்டிய முடிவாகவே இருக்கட்டும்; யார் முன்னின்று நாடாளுமன்றத்தைக் கூட்டுவது? அந்த முடிவை எடுப்பதற்கான செயல்திட்டம் என்ன? அதற்கான காலக்கெடு என்ன? இதுபற்றி எப்போது மோடி அரசு பேசும்? காவிரியில் நீதி கேட்டு தமிழகம் நீதிமன்றப் படியேறி அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. இறுதித் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எவ்வளவு காலம் தமிழகம் காத்திருக்க வேண்டும்?

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?


யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.