மாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்!

கிராஃபிக்ஸ்: ரெமோ

மோடி அரசின் மாநிலங்கள் உரிமைப் பறிப்பை இந்த அரசின் பத்தோடு ஒன்று பதினொன்று பிரச்சினையாக அணுக முடியுமா? முடியாது. கூடாது. துரதிர்ஷ்டவசமாக அப்படி அணுகும் போக்கே இந்திய அறிவுத் துறையினர் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் இன்றைக்குப் பெருமளவில் இருக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் அமைப்பு என்பது, பல்வேறு நாடுகளையும்போல நிர்வாக வசதிக்கான வெறும் பிராந்தியரீதியாலான பகுப்பு அல்ல. மாறாக, அது பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு பிணைக்கப்பட்டது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பல இன மக்களுக்கான பிரதிநிதித்துவமும் மாநில உரிமையிலிருந்தே தொடங்குகின்றன. ஆக, இன்று நடைமுறையிலிருக்கும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் எனும் அமைப்பே சங்கப்பரிவாரங்களுக்கும் அவற்றின் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேசியம்’ எனும் ஒற்றைக் கலாச்சாரக் கனவுக்கும் நேர் எதிரானது. ஏனென்றால், இந்த மொழிவாரி அமைப்பு ஒருவகையில் இந்தியாவின் பல்வேறு இன மக்களையும் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கிறது - மறுவகையில் மத அடிப்படையில் அவர்களைப் பிளக்கவிடாமல் தவிர்க்கிறது. ஆக, மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்பு ஒரு உறங்கும் புலி. சீண்டினால் அது எப்படிக் கிளர்ந்தெழும் என்பதற்கான சமீபத்திய உதாரணத்தையே ‘2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ வாயிலாக டெல்லி பார்த்தது. ஆக, இந்த நாட்டை எப்படியானதாக மாற்ற வேண்டும் என்று சங்கப்பரிவாரங்கள் வைத்திருக்கும் வரைபடத்தின்படி, அழிக்கப்பட வேண்டிய அடிப்படையான கூறுகளில் ஒன்றாகிறது இன்றைய மாநிலங்கள் அமைப்பு. அதன் ஆரம்ப கட்டப் பணியே மாநிலங்கள் உரிமைப் பறிப்பு.

ஆர்எஸ்எஸ்ஸைப் பற்றிப் பேசுகையில், ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ எனும் அது வெளியே அதிகம் வெளிக்காட்டும் ஒரு முகத்தைப் பற்றிதான் அதன் எதிரிகளும் விமர்சகர்களும் அதிகம் பேசுகிறார்கள். ‘ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்’ எனும் கனவையும் நெடுங்காலமாகக் கொண்ட இயக்கம் அது என்பதை நாம் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வல்கர், 1961-ல் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இன்றைய கூட்டாட்சி வடிவம், பிரிவினைவாத உணர்வுகளுக்கு வித்திடுவதுடன் அதற்கு ஊட்டம் அளிக்கவும் செய்கிறது. ஒரே தேசம் எனும் கருத்தாக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதுடன் அதைச் சிதைக்கவும் செய்கிறது. அது முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் சீரமைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி நிறுவப்பட வேண்டும்.”

இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் எப்படியான மாநிலங்களைக் கட்டமைக்க விரும்புகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்: “மையப்படுத்தப்பட்டதாக அரசு இருக்க வேண்டும். மாநிலங்கள் என்பவை நிர்வாகரீதியான பிரதேசங்களாக இருக்க வேண்டும்… நமது ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, துண்டாடக் கூடிய, பிராந்தியம் சார்ந்த, குறுங்குழுவாத, மொழி அடிப்படையிலான அல்லது வேறு எவ்விதமான பெருமித உணர்வும் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு, ‘ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடாளுமன்றம், ஒரே நிர்வாகி’ என்பது பறைசாற்றப்பட வேண்டும்.”

இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமே தேவை; நாட்டை இதற்காக 50 நிர்வாகப் பிரிவுகளாகக்கூடப் பிரித்து நிர்வகிக்கலாம் என்பதே ஆர்எஸ்எஸ் கனவில் உள்ள மாநிலங்களுக்கான வரைபடம். கோல்வல்கரின் வார்த்தைகளிலிருந்து பார்த்தால், மோடி இன்றைக்குச் சொல்லும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ எனும் சொல்லாடல் பின்னாளில் இந்திய மாநிலங்களை எப்படியானதாகப் பிரிக்க வழிவகுக்கும் என்பது புரியவரும்.

வாட்ஸப் சர்க்கார்!


வாரணாசிக்கு நான் போயிருந்த சில நாட்களுக்கு முன்புதான் மனோஜ் சின்ஹா அங்கு வந்து சென்றிருந்தார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர். “முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வழிபாடு நடத்த வேண்டும் என்று எண்ணியே வாரணாசிக்கு அவர் வந்திருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை; கடைசியில் ஆளை மாற்றிவிட்டார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். முன்னதாக, வாய்மொழி உத்தரவின்பேரில் புதிய முதல்வருக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எல்லாம்கூட நடந்திருக்கின்றன என்பதை உள்ளூர் பத்திரிகைகளைப் படித்தபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர், எப்படி, ஏன் யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார்?

அணையா நெருப்பின் நூற்றியைம்பது ஆண்டுகள்!


வடலூரைச் சென்றடைந்தபோது, உச்சி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. நீண்ட பிராயணத்தின் வழிச் சென்றடைந்ததாலோ என்னவோ, வடலூரே அன்றைக்கு ஒரு அடுப்பு மாதிரி கனன்றுகொண்டிருந்தது. நெய்வேலி சுரங்கம் விரிவாக்கம் நடக்க நடக்க சுற்று வட்டாரம் முழுக்க தகிப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார் உடன் வந்த உள்ளூர் செய்தியாளரும் நண்பருமான முருகவேல். உஷ்ணம் இடத்துக்குள் இருக்கிறதா, காலத்துக்குள் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. பசி வயிற்றை எரித்துக்கொண்டிருந்தது.

மே 22, 2017. வள்ளலார் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை மூட்டி ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி, 150 வருஷங்கள் நிறைந்த நாள் அது. 1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். சத்திய தருமச்சாலைக்குச் செல்வதற்கு முன்னதாக, உள்ளூரிலேயே வசித்துவரும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்று நூல் தொகுப்பாசிரியரும் சத்திய ஞான சபையின் நெடுநாள் அறங்காவலரும் சன்மார்க்க அறிஞருமான ஊரன் அடிகளாரையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வதாகத் திட்டம். அடிகளாருக்கு அன்றைய நாள் 85-வது பிறந்த நாள். தவிர, அவர் துறவறம் மேற்கொண்டு 50 வருஷ நிறைவு நாள். “பசியோடு வடலூர் வருவதும் பசியோடு சத்திய தருமச்சாலைக்குள் நுழைவதும் சன்மார்க்கத்தை அறிந்துகொள்ள வருபவர்களுக்கு ஒரு சரியான மார்க்கம்தான். ஜீவகாருணியத்தை ஏன் பசியாற்றுதலோடு வள்ளலார் பொருத்தினார் என்பது இங்கு பசியோடு வந்து பசியாறும்போது புரியும்” என்றார் ஊரன் அடிகளார். “150 வருஷங்கள்… எத்தனை லட்சம் வயிறுகள் பசியாறியிருக்கும், எத்தனை லட்சம் பேர் பசித்தீயை இந்த அடுப்பு அணைத்திருக்கும்!” என்றார்.

தீயைத் தீயால் அணைக்க முடியுமா? தீயை எப்படி தீயால் அணைக்க முனைந்தார் வள்ளலார்? பசி, வெப்பம், அடுப்பு, தீ… மாறி மாறி இந்த வார்த்தைகள் மோதிக்கொண்டே இருக்கவும் நாங்கள் சத்திய தருமச்சாலையில் நுழையவும் சரியாக இருந்தது. “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!” - உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலிருந்து ஒலித்த குரல்கள் நூறும் ஒன்றாய் சுவர்களில் மோதி எதிரொலித்து, ஒன்றுக்கு நூறாய் சிதறி வாசல் வழி வந்து வெளியே காற்றில் விழுந்தன.

தமிழிசையிடமே பேச முடியாவிட்டால் மோடியுடன் எப்படி பேசப்போகிறோம்?


கன்னியாகுமரி போயிருந்தேன். பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நாட்டின் பன்மைத்துவம் செதில் செதிலாகப் பெயர்க்கப்படுவது, வெறுப்பரசியலின் செல்வாக்கு, சகிப்பின்மை தொடர்பில் பேச்சு போனபோது, “மோடி நம் பிரதமர் எனும் உண்மையை அங்கீகரிக்க வேண்டும்; அவருடன் பேசுவதற்கான உரையாடல் புள்ளியை எதிர்க்கட்சிகள் முதலில் கண்டறிய வேண்டும்” என்று சொன்னேன்.

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்க்கும் ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். எந்தப் பிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்திலோ, பிரதமர் அலுவலகத்திலோ எதிர்க்கட்சிகளோடு சந்தித்துப் பேசும், விவாதிக்கும் ஆர்வம் மோடிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்ன விவகாரம் என்றாலும், அவர் நேரே பொதுமக்கள் மேடையை நோக்கிச் சென்றுவிடுகிறார்.

கேட்பதற்கான காதுகள் அவரிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பிரதமர் என்பவர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; இதை மறுதலித்து, ‘தன் ஆட்சி, தன் போக்கு’ என்று செல்லும் ஒருவரை அதே பாதையில் தொடர அனுமதிப்பது மறைமுகமாக எதிர்க்கட்சிகளும் அதே பாதையில் செல்வதற்கு ஒப்பானதுதான். நுட்பமாகக் கவனித்தால் தெரியும், மோடி பிரதமரான பின் அவருடனான உரையாடல் என்று மட்டும் இல்லாமல், ஆளுங்கட்சியினருடனான உரையாடல் என்பதே நாடு முழுக்க எல்லா மட்டங்களிலும் குறைந்துவருகிறது. இந்தக் கலாச்சாரம் நாட்டுக்கு நல்லதல்ல!”

கூட்டத்தில் இது சிறு சலசலப்பை உண்டாக்கியது.

இப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது இணையப்போகிறார்கள்?


இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இன்று முட்டுச்சந்தில் நிற்கிறார்கள் என்று குறிப்பிடலாமா? ஆம், சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால், அப்படித்தான் குறிப்பிட வேண்டும். இந்த நிலை முட்டுச்சந்துதான். இனி முன்னகர வேண்டும் என்றால், எதிரில் உள்ள சுவரை உடைத்துத்தான் முன்னேற வேண்டும். வேறு வழியில்லை. உடைக்க வேண்டும் என்றால், இந்தப் பலம் போதாது. கம்யூனிஸ்ட்டுகள் முதலில் ஒன்றிணைய வேண்டும். வேறு வழியில்லை!

ஓராண்டுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்தபோது கேட்டேன். “இந்தியாவில் இடதுசாரிகள் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு முக்கியமானது. இதை நீங்களும் உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. போராட்டக் களங்களிலும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்திருக்கிறீர்கள். அப்படியே கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த பெரும் சக்தியாக எழுந்து நிற்பதில் என்ன சிக்கல்?”

வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன?


நக்ஸல் இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைந்திருக்கிறது. 1967-ல் வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில், நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளின் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு பகுதியினரை ஆயுதப் புரட்சி நோக்கித் திருப்பி அரை நூற்றாண்டு ஆகிறது. இந்திய கம்யூனிஸத்தில் மார்க்ஸிய - லெனினிஸம், மாவோயிஸம் என்று பல போக்குகளுக்கு வழிவகுத்த நக்ஸல் இயக்கம், அடிப்படையில் இன்று நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து, ‘ஆயுதப் பாதை ஒன்றே புரட்சிப் பாதை’ என்று நம்பித் தொடங்கப்பட்டது. ஆயுதப் புரட்சி என்பது வெளிப்பூச்சுக்கான ஒரு கவர்ச்சிகரமான சொல்; எதிர்த் தரப்பை அழித்தொழிப்பதே அவர்களுடைய வழிமுறை.

இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலமும் தீப்பற்றத் தயாராக இருக்கிறது என்று சொன்ன நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர். ஆனால், இயக்கம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அது கடும் பின்னடைவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட சாரு மஜும்தார் இறந்தார். இயக்கம் பலவாக உடைந்தது. சிதறிய அமைப்புகளில் பல அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தன. சில தேர்தல் பாதைக்குத் திரும்பின. சில பழைய பாதையையே வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்தன. ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் வர்ணிக்கப்பட்ட ‘மாவோயிஸ்ட் இயக்கம்’ நக்ஸல் இயக்கத்தின் நீட்சி. நேரடியாக ஆயுத வழியில் அல்லாமல், ஜனநாயக அமைப்புகளின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் நக்ஸல் ஆதரவு மனநிலை கொண்ட இயக்கங்கள் ஏராளம் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் ‘மகஇக’, ‘மக்கள் அதிகாரம்’ போன்ற பெயர்களில் செயல்படும் அமைப்புகளை நக்ஸல் இயக்க வழிமுறையில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் என்று சொல்லலாம்.

பொதுவாக, மிகத் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள் என்றாலும், எண்ணிக்கை அளவில் நாடு முழுவதிலுமே லட்சங்களில் அடக்கிவிடக் கூடிய மிகச் சிறுபான்மை அரசியல் தரப்பு இவர்கள். ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று நக்ஸல் இயக்கத்தையும் நக்ஸல் ஆதரவு இயக்கங்களையும் இந்தப் போக்குகளையும் மதிப்பிடுகையில், அது பெரிய தோல்வி அடைந்திருப்பதாகப் பலரும் எழுதுகிறார்கள். தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூடவே தங்களுக்கு வெளியே இருக்கும், இடதுசாரிசார் ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்; மறைமுகமாக வலதுசாரிகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது என்னுடைய துணிபு.

இந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்பவர்கள் இதுகுறித்தும் ஆய்வுசெய்தால் நன்றாக இருக்கும்: ‘இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியில் நக்ஸல்களின் பங்கு!’

மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்?


கொல்கத்தா சென்றிருந்த சமயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘ஞான சங்க’ மாநாடு அங்கு நடந்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அவர்களில் 51 பேர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்ற நிகழ்வு இது. இந்தியாவின் கல்வி, கலாச்சாரத் துறையை, முக்கியமாக வரலாற்றை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். ‘’இதுவரை வேட்டைக்காரர்கள் பார்வையிலிருந்து கூறுவதாக இந்திய வரலாறு இருந்தது; இனி அது சிங்கம் சொல்லும் வரலாறாக மாற்றப்படும்’’ என்று பேட்டி அளித்திருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். இனி யாரெல்லாம் தேசத்தின் நாயகர்களாகவும் வில்லன்களாகவும் மாற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவின் தேசியவாதம் எப்படிப்பட்டதாக வடிவமைக்கப்படும் என்றும் மனதில் ஓட ஆரம்பித்தபோது எதிர்காலம் அச்சமூட்டுவதாக மாறத் தொடங்கியது.

தேசியவாதத்தை ஒரு கூர் ஈட்டியாக சர்வாதிகாரிகள் பயன்படுத்துவது உலகெங்கிலும் இயல்பு. இங்கே சங்கப் பரிவாரமும் மோடியும் அதைக் கையில் எடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. வளர்ச்சியையும் மதத்தையும் ஒரு பிரகடனம்போலப் பயன்படுத்தினாலும் மோடி தன் கூர் ஈட்டியாக தேசியவாதத்தையே பயன்படுத்துகிறார். தன்னை நோக்கி வரும் எல்லாப் பெரிய விமர்சனங்களையும் அவர் தேசியவாதத்தின் மூலமே எதிர்கொள்கிறார். வரலாற்று நடவடிக்கையான பணமதிப்பு நீக்கம் மக்களைக் கடுமையான வதைக்குள் தள்ளியது. இரண்டு மாதங்களுக்கும் மேல் அன்றாடம் ரூ.2,000 தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்காக வங்கி ஏடிஎம்களின் முன் கால் கடுக்க நின்றார்கள் மக்கள். இந்நடவடிக்கையின் மூலம் அரசு சாதித்தது என்னவென்று இன்று வரை நாட்டுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்று மக்களை மோடியால் நம்ப வைக்க முடிகிறது.

ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ கனவைக் கொண்ட மோடி அரசு தன்னுடைய செயல்திட்டத்துக்கு முன்னோட்டம்போல, ‘ஒரே நாடு.. ஒரே வரி’, ‘ஒரே நாடு.. ஒரே சந்தை’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்று இந்த அரசு அடுத்தடுத்து அடியெடுத்துவைக்கும் செயல்திட்டங்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன. ஏனென்றால், கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட இந்த நாடு அடிப்படையிலேயே அதன் பல்வேறு வண்ணங்கள், அடையாளங்களாலேயே தனித்துவம் பெறுகிறது. ஆனால், பொதுத் தளத்திலோ பெரிய தாக்கங்களை இவை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் கவலையோடு பேசினாலும்கூட சமூகம் அப்படியே கடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்திப் பேசினால், விமர்சிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ ஆக்கிவிடுகிறார்கள். ஆனால், இன்று மோடி ஆடுவதற்கேற்ப இந்தியாவின் தேசியவாதக் களத்தை அமைத்துக் கொடுத்ததற்காக, காங்கிரஸும் இடதுசாரிகளுமே முக்கியமான பொறுப்பேற்க வேண்டும் என்று கருதுகிறேன்.

கோயில்களில் என்ன நடக்கிறது?


திரிபுரா சென்றிருந்தபோது, அகர்தலாவிலுள்ள ‘சதுர்தசா தேவதா - 14 தேவதைகள் - கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன்னர் கிருஷ்ண மாணிக்க தேவ வர்மா காலத்தில் கட்டப்பட்ட கோயிலான இது, திரிபுராவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. நண்பர் வீ.பா.கணேசனுடன் உள்ளூர் நண்பர் அதுல் பானிக் உடன் வந்திருந்தார்.

நாங்கள் சென்றிருந்த நாள் அந்த நேரம் ஆச்சரியமாகக் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டே கோயிலினுள் அழைத்துச் சென்றார் பானிக். எனக்கு அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் வேறொன்று அங்கு காத்திருந்தது. கடவுளின் சந்நிதிக்கு முன்னே உட்கார்ந்து சாவகாசமாக சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார் புரோகிதர். எங்களைப் பார்த்ததும் “இன்னும் நாலு இழுப்புதான்; முடித்துவிட்டு வந்துவிடலாமா?’’ என்று பானிக்கிடம் கேட்டார்.  “ஒன்றும் அவசரம் இல்லை, நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் பானிக். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புரோகிதர் சிகரெட்டைப் புகையவிட்டபடியே பூஜைக்கு வந்தார். பூஜையை முடித்தார். பிரசாதம் கொடுத்தார். நானும் கணேசனும் எங்கிருந்து வருகிறோம் என்று விசாரித்துவிட்டு, கை குலுக்கினார். நான் அவரிடம் சிகரெட்டைக் காட்டிச் சொன்னேன், “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” அவர் விசேஷமாக எதையும் விளக்க முற்படவில்லை, “இதிலென்ன ஆச்சரியம்! கடவுள் வேறு, நாம் வேறா?” - இப்படிச் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப் புறப்பட்டார்.


நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?


ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது.
“ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!”
இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!”

ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா? ஏனென்றால், இங்குள்ள தாராளர்களின் இன்றைய அளவுகோல்படி நான் ஒரு தாராளனாக, நவீனத்துவனாக, மதச்சார்பின்மையாளனாக இருக்க வேண்டும் என்றால், மதத்தை நான் நிராகரிக்க வேண்டும்!

எத்தனையோ சமயங்களில் பலர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள், “மதச்சார்பின்மை பேசும் நீங்கள் நெற்றியில் விபூதிப் பட்டை போட்டிருப்பது அந்நியமாகக் காட்டுகிறது தோழர்.” நான் சிரித்துக்கொண்டே சொல்வேன், “இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய மக்களையே நான் பிரதிபலிக்கிறேன். மத அடையாளத்தைச் சூடியிருப்பதாலேயே அவர்கள் அத்தனை பேரையும் மதவாதிகளாக்கிவிட முடியுமா!”

சர்வாதிகார ஆட்சிக்கு முகங்கொடுக்க எத்தனை கட்சிகள் தயார்?


டெல்லியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா நேற்று பேசினார். “முன்பு தாராளர்கள், இடதுசாரிகள் தரப்பிலுள்ள குறைகளை ஹசன் சரூர் அக்கறையோடும் உரிமையோடும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விமர்சித்து எழுதுவார். இப்போது ‘தி இந்து’ தமிழில் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள். ஆக்கபூர்வ விமர்சனங்கள்தான் அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். வாழ்த்துகள்!”

தமிழகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் தொடர்புகொண்டு பேசினார்கள். அதேசமயம்,  ‘சங்கப் பரிவாரங்களின் பலத்தை எழுதுவதன் மூலம், அதன் எதிரேயுள்ள இயக்கங்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறீர்கள்’ என்ற தொனியிலான மின்னஞ்சல்களும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் பலரிடமிருந்தும் வந்திருந்தன.

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட நினைக்கிறேன். நாடு மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. பன்மைத்துவம் நொறுங்குகிறது. பாஜகவின் அசாதாரண வெற்றிகளுக்கான ஒரே காரணம் மோடி என்று நம்ப விரும்புவது ஒருவகையில் பாஜகவின் பிரச்சார வலையில் சிக்கிக்கொள்வதுதான். மோடி வெற்றியின் குறியீடு அல்ல; மாறாக, தாராளர்களின் பல்லாண்டு காலத் தோல்விகளின் திரட்சியின் குறியீடு. சங்கப் பரிவாரங்களின் உழைப்பு, மோடியின் ஆளுமை இவை எல்லாவற்றையும் தாண்டி, மோடியின் வெற்றியில் காங்கிரஸின் குடும்ப அரசியலுக்கும் மக்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அதன் ஊழல்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு மாற்றுத் தலைமையையும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையையும் மக்களிடம் கொண்டுசெல்லத் தவறிய கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது. தம்முடைய பதவி, அதிகாரத்துக்காக எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் மாநிலக் கட்சிகளுக்குப் பங்கிருக்கிறது. முக்கியமாக வெகுமக்களிடம் பேசும் மொழியை இன்று தாராளர்கள் இழந்து நிற்கிறார்கள். மோடி அலை என்று சொல்லப்படும் வெகுமக்கள் திரளை உண்மையில் இன்று எதிர்த் தரப்பில் இருப்பவர்களே திரட்டித் தருகிறார்கள். மோடியைத் திட்டித் தீர்ப்பதன் வாயிலாக மட்டுமே தாராளர்கள் தம் பொறுப்புகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது.