ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!


1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!


உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலில், பாஜகவின் வரலாறு காணாத 325/403 வெற்றிக்குப் பின் காங்கிரஸை நோக்கி ஏராளமான விமர்சனக் கணைகள் பாய்ந்துகொண்டிருந்த நாட்கள். சரியாக ஓராண்டுக்கு முன்பு, அதே காலகட்டத்தில் எழுதிய கட்டுரையை நினைவூட்டியது ஃபேஸ்புக்: ‘நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!’

132 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாட்டின் மூத்த கட்சிக்கு அதன் வரலாற்றில் பலவீனமான, சவால் மிக்க தருணம் ஒன்றில் தலைவராகப் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி. மக்களிடமிருந்து அவருக்குச் சொல்ல தலையாய செய்தி ஒன்று இருக்குமானால், அது இதுவாகவே இருக்கும்: மேலிருந்து கீழே, டெல்லியிலிருந்து இந்தியாவைப் பார்க்கும் பார்வையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும்!

தன்னுடைய 34-வது பிறந்த நாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு, 2004-ல் ராகுல் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த 13 ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளைக் கவனித்துவருகிறேன். மாறிவரும் புதிய யுகத்துக்கேற்ப காங்கிரஸையும் இந்தியாவையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருப்பதைப் பல தருணங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், நேரு தொடங்கி ராஜீவ் வரை பெரிதாகக் கவனம் கொடுக்காத ஒரு விஷயம் காங்கிரஸுக்குள் உள்ள உயர் சாதி  ஆதிக்கம். ஆச்சரியமூட்டும் வகையில், இந்தியாவில் சமூக மாற்றமானது கீழ்நிலைச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தில், அது வழியிலான அதிகாரப்பரவலாக்கலில் இருக்கிறது என்ற புரிதல் ராகுலிடம் இருக்கிறது.

2007-ல் பொதுச்செயலாளரானதும், இளைஞர் காங்கிரஸைக் கையில் எடுத்தவர் அதன் நிர்வாகிகள் தேர்தலை வெளிப்படையானதாக மாற்றியமைத்தார். சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கீழ்த்தட்டுகளிலிருந்து ஆளுமைகளைப் பொறுக்கியெடுத்தார். துடிப்பும் ஆளுமையும் மிக்க ஒரு புதிய கூட்டத்தைக் கட்சியால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2014 தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைக் கட்சியினரே தொகுதி அளவில் தேர்ந்தெடுக்கும் முறையை அவர் முன்மொழிந்தார். பரீட்சார்த்த முறையில் சிறு அளவில் முயற்சிக்கப்பட்டு, தோல்வியடைந்த காரியம் இதுவென்றாலும் முக்கியமான முயற்சி. அடுத்து, 2015-ல் கட்சியில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், கட்சிப் பதவிகளில் 50% இடங்களை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் தீர்மானித்தது ராகுல் முன்னெடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று.

ஆக, ராகுலிடம் நாம் நம்பிக்கை வைக்கலாம்; அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம். ஆனால், வரலாறு திரும்ப திரும்ப வாய்ப்புகளை வழங்காது என்பதை ராகுல் உணர வேண்டும். ஏனென்றால், இந்த 13 ஆண்டுகளில் அப்படிப் பல வாய்ப்புகளை அவர் வீணடித்திருக்கிறார்.