பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?


டுகொலைசெய்யப்பட்டார் காந்தி. மரணச் செய்தியை உள்ளடக்கிக்கொண்டு டெல்லியின் வீதிகள் வழியே பயணப்பட்டபோதே விஸ்வரூபம் எடுத்திருந்த கோட்ஸேவின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் நிறப் புகை பெரும் கருமேகமாகி நாட்டின் மேல் பரவுகிறது. மக்கள் வெடித்தழுகிறார்கள். பேரதிர்ச்சி, தாங்கொணா துயரம், கட்டுக்கடங்கா வலி. எல்லோர் மத்தியிலும் இரண்டு கேள்விகள். ‘‘ஐயோ... இது உண்மைதானா?’’, ‘‘கொலையாளி யார்?’’

பிரிவினைக் கலவரங்களின் ரத்தச்சகதிக்கு நடுவே ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசுக்கு இரண்டாவது கேள்வி எவ்வளவு பெரிய ஆபத்தைச் சுமந்திருக்கிறது என்பது தெரியும். ஆகவே, இரண்டாவது கேள்விக்கான பதிலுடன் இணைத்தே முதல் கேள்விக்கான பதிலையும் சொல்கிறார் பிரதமர் நேரு. அதே நேரத்தில், நாடு முழுக்க கலவரங்களைத் தடுக்கும் விதமாகச் செல்வாக்குள்ள தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பிராமணிய எதிர்ப்புக்குப் பேர்போன தமிழ்நாட்டில் காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு பிராமணர் என்ற தகவல் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குமோ என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்திலுள்ள சன்னாநல்லூரில் திராவிடர் கழகக் கூட்டம். வழக்கம்போல பிராமணியத்தை வெளுத்து வாங்கும் ஒரு இளம் பேச்சாளர் காந்தி படுகொலைச் சம்பவத்தை நோக்கி நகர்கிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதைச் சொல்லும் அவர், தமிழ் பிராமணர்களின் ஆதிக்கத்தோடு கோட்ஸேவின் மேலாதிக்கக் குணத்தைப் பொருத்த முற்படுகிறார். மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார் தன் கையிலுள்ள தடியைத் தட்டுகிறார். பெரியார் இப்படி தடியைத் தட்டினால், அது ஒரு சமிக்ஞை. அதற்கான அர்த்தம் திராவிடக் கழகத்தினருக்குத் தெரியும்: இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி




பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.

ஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. உருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா? இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது. அந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இடம்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா!

ஏன் ஒரு அரசு மக்களுக்குப் பொது வீடுகளைக் கட்டித்தர வேண்டும்?



பாரோ சந்தையின் கடைவீதி நடைபாதை ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியைப் பிடித்து இழுக்காத குறையாக போலீஸ்காரர் வண்டியில் ஏற்ற யத்தனித்துக்கொண்டிருந்தார். தேங்கி நின்றவனை ராஜ் இழுத்தார். முந்தைய நாள் இரவிலிருந்து ஒரு முழு நாளும் தொடர்ந்து பெய்துவந்த மழையை வழமையான மழையோடு ஒப்பிட முடியவில்லை. குளிரின் கடுமையைக் கன்னாபின்னாவென்று மழை கூட்டியிருந்தது. குளிர் எனக்குப் பிடித்தமானது. இந்தக் குளிர் அந்தக் குளிர் அல்ல. கொலைக் குளிர். கதகதப்புக்காக அணிந்திருந்த எல்லா உடைகளையும் ஊடுருவி உடலைப் பிளப்பதுபோல நிலைகுத்தி நின்றது அது. விரலெல்லாம் தெறித்துவிடும்போல் வலித்தது.

பிரிட்டன் வந்தது முதலாகக் குளிரைக் கவனிக்கலாயிருந்தேன். இங்கே அது தனி உருவம் எடுத்திருந்தது. அச்சுறுத்தியது. பிரம்மாண்டமான கட்டமைப்புகளைப் பார்க்கும்போதெல்லாம், இருட்டில் பனிப்பொழிவால் மூடப்பட்ட கோபுரங்களின் சுதைச் சிற்பங்களின் நடுவே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒட்டிக்கொண்டு தொங்கியபடி ஓலமிடுவது போன்று இருந்தது. பனி அவர்களை மூடிவிட்டிருக்க அவர்கள் மெல்ல ஊர்ந்தார்கள்.

காவிரிப் படுகையிலிருந்து வந்த எனக்கு, மழை நாட்களில் ஏழைகள் படும் துயரம் தெரியும். நாற்புறமும் சின்ன களிமண் சுவர்கள், மேலே தென்னங்கீற்றுக் கூரை என்று எளிமையாகச் சுருங்கிவிடும் நம்மூர் குடிசைகள் ஒரு மறைப்பை ஏற்படுத்தித் தருவதையன்றி ‘வீடு’ என்று சொல்வதற்கான எந்த வரையறைக்குள்ளும் அடங்காதவை. வெயில் காலத்தில்கூட சமாளித்துவிடலாம். மழைக் காலத்தில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஆயத்தத்துடனேயே இருக்க வேண்டும். மழைத் தண்ணீரோடு சேர்ந்து வீட்டினுள் பாம்புகள் நுழையும். சூறைக்காற்றில் கூரை பறந்துபோகும். பெருவெள்ளம் வீட்டையே அடித்துச்செல்லும்.

கடலூர் அருகேயுள்ள விசூரில், திடீரென வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் அடுப்படியில் தீபாவளிக்கு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த அம்மாவையும் அக்காவையும் கண் முன்னே வாரிச் சுருட்டிச்சென்று ஒரு புதைகுழிக்குள் கொண்டுதள்ள, இருவரையும் பறிகொடுத்து பிரமை பிடித்தவனாக முகாமில் அரற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மணிவேல் கண் முன்னே வந்துசென்றான்.

ஏழைகள் எங்கும் ஏழைகள்தான். பிரிட்டனில் கூடுதல் கொடுமை குளிர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மூன்று மாதங்களிலும் குளிரில் ஏராளமான ஏழைகள் செத்துப்போகிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதமும் சேர்ந்துகொண்டிருந்தது. “நீங்கள் வந்திருக்கும் நேரமோ என்னவோ, பிரிட்டன் வரலாற்றிலேயே குளிர்மிக்க மாதம் என்று இந்த மார்ச்சைச் சொல்கிறார்கள்” என்றார் ராஜ். வெறுமையாக அவரைப் பார்த்தேன்.

“பிரிட்டனில் குளிரை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

“கஷ்டம். குளிர்காலத்தில் பகலிலேயே அதிகபட்சம் 15டிகிரி வெப்பநிலைதான் இருக்கும். இரவுகளில் சமயத்தில் -10 டிகிரி வரைகூட கீழே செல்லும். அதுவும் வட இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளில் இன்னும் மோசம். நம்மூரில் எப்படி வெயில் காலத்தில் ஏசி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோமோ, அப்படி இங்கே குளிர்காலத்தில் ஹீட்டர் பயன்படுத்துவார்கள். ஏசி இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம்; ஹீட்டர் இல்லாமல் வாழ முடியாது. குளிர்காலத்தில் வீட்டைப் போதுமான அளவுக்கு கதகதப்புக்குக் கொண்டுவர வசதியில்லாமலேயே வருடத்துக்கு மூவாயிரம் பேர் இங்கே சாகிறார்கள்.”

“குளிர் என்று சாவுக்கு இயற்கையை நாம் காரணமாக்கினாலும், வறுமைதான் உண்மையான காரணம், மக்களைப் பாதுகாக்காத ஆட்சியாளர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் இல்லையா?”

“ஆமாம். ஆனால், வறுமையால் குடிமக்கள் சாகக் கூடாது என்ற சூழலை உருவாக்க ஆட்சியாளர்கள் ஓரளவுக்கு இங்கே திட்டமிட்டுத் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எதன் பொருட்டெல்லாம் பிரிட்டனில் மக்கள் அதிகம் இறந்தார்களோ, அவை அத்தனைக்கும் எதிரான செயல்திட்டங்களைக் கொண்டுவந்து, மரணங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள். குளிருக்கு லட்சம் பேர் செத்த காலமும் இங்கே இருந்திருக்கிறது. இன்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தொழிற்சாலைக் கடுஞ்சூழல், சாலை விபத்துகள், புகை மாசு இப்படி அதிகமான மரணங்களை உண்டாக்கிய எல்லா விஷயங்களிலும் நிலைமையை மாற்றியமைத்திருக்கிறார்கள். பிரிட்டனின் அரசு வீடு - கவுன்சில் ஹவுஸ் தொடர்பில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?”

“ஓ… ராஜ், நானே அதுபற்றி உங்களிடம் கேட்கவிருந்தேன்.”

விரியும் நகரங்களில் பெருகும் மக்கள்தொகைக்கேற்ப வீட்டு வசதியை உண்டாக்குவதற்கான பிரிட்டனின் முயற்சி இந்தப் பொது வீடுகள். அரசே வீடுகளைக் கட்டிவிடும். அவரவர் வருமானப் பிரிவுக்கேற்ப குறைந்த வாடகையில் இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் இந்த வீடுகளை வாடகைதாரர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி வீட்டை வாங்குபவர்களுக்கு, வீட்டின் மதிப்பில் ஒரு கணிசமான தொகையை அரசு மானியமாகவும் தருகிறது.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்றால், ஒரே சிகிச்சை கொடு அரசே!

பிரிட்டன் அரசு மருத்துவமனைகளைப் பார்வையிடச் சென்ற நாளில், ஹெலன் சேர்ந்துகொண்டார். “பிரிட்டனின் பெருமிதம் என்ஹெச்எஸ் (National Health Service – தேசிய சுகாதார சேவை). குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான, கட்டணமற்ற, உயர்தரமான சிகிச்சை. லண்டனிலேயே ஏராளமான என்ஹெச்எஸ் மருத்துவமனைகள் இருக்கின்றன. நீங்கள் எங்கே விரும்புகிறீர்களோ அங்கே செல்லலாம்.”

நாங்கள் அப்போது ஃபிட்ஸ்ரோவியாவில் நின்றிருந்தோம். காந்தி  படித்த லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைப் பார்த்துவிட்டு, நாடாளுமன்றச் சதுக்கத்தில் புதிதாக நிறுவப்பட்டிருந்த காந்தி சிலையைப் பார்ப்பதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சன்னமாக வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. “நாம் கடக்கும் பாதையைச் சுற்றி எங்கெல்லாம் மருத்துவமனைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் செல்வோம். அப்புறம், ராயல் லண்டன் மருத்துவமனையையும் நீங்கள் எனக்குக் காட்ட வேண்டும்.”

இந்த யோசனை ஹெலனுக்கும் பிடித்திருந்தது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்றது ராயல் லண்டன் மருத்துவமனை. அவசர சிகிச்சைக்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவையின் தாயகமும் அது.

ஒரு கல்வி நிறுவனம் யாரை உருவாக்க வேண்டும்?



நானும் ராஜும் பேடிங்டன் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தோம். “பிரிட்டனின் கிராமப்புறங்களைப் பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று சொன்னீர்கள் இல்லையா? நாம் நாளைக்கு அங்கு செல்வோம். அதற்கு முன் கூடுதலாக இன்னும் இரண்டு விஷயங்களை மட்டும் இந்தப் பயணத்தில் நீங்கள் இணைத்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். பிரிட்டனின் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு. இது அவசியம் நம் மக்களுக்குச் சென்றடைய வேண்டியது. நாம் இப்போது ஆக்ஸ்ஃபோர்டு செல்கிறோம்.”

வட சென்னை: ஆளப்படுவோரின் அரசியல்



நகரத்தின் இரவு. ஒரு உணவு விடுதி. மங்கிய வெளிச்சம். ஒரு கொலையை விடுதிக்குள்ளேயே முடித்துவிட்டு, சிகெரெட் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் கொலையாளிகள் பேசிக்கொள்கிறார்கள், “அடுத்து ஜெயலலிதா - அந்தம்மாதான் வரப்போறாங்க. இன்னும் இருவத்தியஞ்சு வருஷத்துக்கு நீ நிம்மதியா தொழில் செய்யலாம்…”

ராஜன், செந்தில், குணா, தம்பியண்ணன், முத்து, சந்திரா, அன்பு என்று ஏழு பாத்திரங்களைச் சுற்றி, விசுவாசத்துக்கும் துரோகத்துக்கும் இடையில் காவிய மரபில் கட்டப்பட்டிருக்கும் ‘வடசென்னை’ படத்தை, ‘மேலும் ஒரு கேங் வார் சினிமா’ என்று கடக்கவே முடியாது. விளிம்புநிலையினர் மையம் நோக்கி நகர முற்பட்டாலும், இங்கே காலம் முழுமைக்கும் அவர்கள் உதிரிகளாகவும், கும்பல்களாகவுமே நீடிக்கக் காரணம் யார், எது என்பதைத் தீவிரமான கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

குறைந்தபட்ச வாழ்வூதியம் நமக்கு எப்போது சாத்தியமாகும்?




களங்கமற்ற மாலை. வைரத்தில் ஊடுருவி சிதறுண்டு வெளிவரும் கதிர்கள்போல, நகரத்தின் கட்டிடங்களில் மோதிச் சிதறி வீதிகளில் வந்து விழுந்திருந்தது சூரிய ஒளி. இன்னும் இரண்டு நாட்கள். மூன்றாவது நாளன்று இந்தியா புறப்பட வேண்டும். அதற்குள் இன்னும் மூன்று விஷயங்கள் தொடர்பில் தெரிந்துகொண்டுவிட விரும்பினேன்: பிரிட்டனில் தொழிலாளர் நிலை, பிரிட்டன் கிராமங்களின் இன்றைய சூழல், பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழ்க்கை.

இதற்கு லண்டனுக்கு வெளியே கொஞ்சம் பயணிக்க வேண்டும். விடுதி வாழ்க்கையைத் தாண்டி, வீட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். யாரேனும் ஒரு தமிழ் நண்பர் உடனிருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. நண்பர் ஷங்கரிடம் பேசினேன். அவருடைய நண்பர் ராஜை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜ். லண்டனில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஹால்போன் பகுதியில் அவர் அலுவலகம் இருந்தது. புறநகர்ப் பகுதியில், பிரஸ்டனில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். விடுதிக்கு என்னை அழைக்க வந்திருந்தார்.

டாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?

எந்த ஒரு கருவியும் யார் கைகளில் இருக்கிறதோ அதற்கேற்ப அதன் பண்பும் மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. முதல் / மூலதனம் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்காக இருக்க முடியும்? ஒரு பேட்டியில் ரத்தன் டாடாவிடம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோது ரத்தன் டாடா சொன்னார், “அவர்கள் வியாபாரிகள், நாங்கள் தொழிலதிபர்கள்.”


சராசரி இந்தியக் குடும்பம் ஒன்றுக்கு அறிமுகமாவதுபோலவே பொருட்கள் வாயிலாக எனக்கு டாடா நிறுவனம் அறிமுகமானது. பலசரக்குக் கடையில், டாடா நிறுவனம் தயாரிக்கும் டீ தூளுக்குப் பதிலாக வேறு ஒரு நிறுவன டீ தூளை வாங்கி வந்த ஒரு நாளில், வீட்டில் டாடா நிறுவனத்தின் மகாத்மியங்கள் எனக்குச் சொல்லப்பட்டன. அந்தக் கதையை என்னுடைய தாத்தா இப்படி முடித்தார். “டாடா நுழையாத இடமே கிடையாது. ஆனா, எவ்வளவு வரும்படி வரும்னாலும் பீடி, சிகரெட்,சாராய விற்பனையில் நீ டாடாவைப் பார்க்க முடியாது. ஏன்னா, டாடாவுக்குன்னு அறம் சார்ந்த ஒரு கொள்கை இருக்கு!”


பிரதிபலன் பாராது கொடுப்பதைத்தான் டாடாக்களிடம் இந்தியத் தொழில் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்: சுந்தர் சருக்கை பேட்டி


சுந்தர் சருக்கை, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க தத்துவவியலாளர்களில் ஒருவர். டாடா நிறுவனத்தின் வரலாற்றை சமூக - தத்துவப் புலத்தில் ஆராய்ந்தவர். டாடா நிறுவனம் 150-வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நவீன இந்தியாவுக்கு, டாடா என்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்று பேசினோம்.

ஒரு முஸ்லிம் - இந்து கதை



ஊர்கள் எப்போதும் என் நினைவுகளில் மனிதர்களாகத்தான் படிகின்றன. ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “ஒரு நிமிஷம் கண்களை மூடி ஊரை யோசித்துப்பார்” என்று சொன்னால், நிலப்பரப்பையோ, கட்டிடங்களையோ, நீர்நிலைகளையோ காட்சிக்குக் கொண்டுவரும் முன், அங்கிருந்த மனிதர்களைத்தான் முதலில் மனம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. லண்டன் அப்படி நினைவுகளில் அள்ளிக்கொண்டுவரும் மனிதர்களில் சாதிக் கான் தவிர்க்கவே முடியாத மனிதராக இருப்பார்.

மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது. லண்டன் மேயர் தேர்தலில் வெல்லுதல் எளிதானதல்ல. ஐரோப்பாவில் நடக்கும் பெரிய தேர்தல்களில் ஒன்று அதற்கானது. ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம் - ஓர் உதாரணம் லண்டன் மெட்ரோ ரயில் சேவை, காவல் துறை மேயரின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

ரஃபேல்: ராகுல் கை வைத்திருக்கும் உயிர்நாடி… இந்தியா அதை விரிவாக்கிப் பேச வேண்டும்!



நாட்டுப்பற்று கொண்ட ஒரு இளைஞன் ராணுவம் சம்பந்தமான செய்திகளை எப்படி அணுகுவான்? அதுவும் ஒரு போர் வந்தால், பத்து நாட்களுக்கு சண்டையிடுவதற்கான போர்த் தளவாடங்கள்கூட நம்முடைய வீரர்களிடம் இன்று இல்லை என்ற செய்தி வந்தால், அவன் எப்படிக் கொந்தளிப்பான்?

கல்லூரி நாட்களில், ‘அமெரிக்க ராணுவம், சீன ராணுவத்தோடு ஒப்பிட இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள், தளவாடங்கள் குறைவு’, ‘இந்திய ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது’ என்றெல்லாம் டெல்லியிலிருந்து ‘தேசிய ஊடகங்கள்’ செய்தி வெளியிடுகையில் கடுமையான கொந்தளிப்பு உருவாகும். மூளை உஷ்ணம் அடையும். உடல் தடதடக்கும். நரம்புகளுக்குள்ளான ரத்தக் கொப்பளிப்பைத் தோலுக்கு வெளியிலும் பார்க்க முடியும்.

ஊடகத் துறைக்கு இரண்டு பண்புகள் உண்டு. வெளியே இருப்பவர்களுக்கு அது கற்பனைகளை அள்ளிக்கொடுக்கும். உள்ளே வந்தடைபவர்களிடம் முதலில் அது அவர்களுடைய கற்பிதங்களை உடைக்கும்.

செய்தி ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன் செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்று ஊடக வகுப்பு எடுத்த ஒரு மூத்த சகாதான் என்னுடைய கற்பிதங்களை உடைத்தார். “ஒரு காவல் நிலையத்தின் உள்விவகாரங்களை நாம் வெளிக்கொண்டுவந்தாலே விஷயம் வெளியே போனதற்காக அங்குள்ள போலீஸ்காரர்களை மேலதிகாரிகள் கிழித்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு போர் வந்தால் பத்து நாட்களுக்கான ஆயுதங்கள்கூட ராணுவத்திடம் இல்லை என்பது மாதிரியான தகவல்கள் எப்படி இவ்வளவு சாதாரணமாக தேசிய ஊடகங்களை வந்தடையும்? உண்மையில் நம்முடைய ராணுவத்திடம் எவ்வளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றன என்பது ராணுவ ரகசியம் இல்லையா? ராணுவத் தலைமை, அரசு இரண்டுக்கும் இது உள்ளபடியே சங்கடம் தரும் செய்தி என்றால், இத்தகைய செய்திகள் ஏன் ஊடகங்களுக்குக் கசியவிடப்படுகின்றன?”

அவர் மேலும் பேசலானார். “இங்கே எல்லாவற்றிலும் லாபக் கணக்குகள் உண்டு. லாபி உண்டு. ராணுவத்திடம் உள்ள வாகனங்கள் பழசாகிவிட்டன என்று டெல்லியிலிருந்து வரும் ஒரு செய்தியை நீ படிக்கிறாய் என்றால், அந்தச் செய்திக்குப் பின் ஏதோ ஒரு வாகன நிறுவனம் இருக்கலாம், யாரோ சில அதிகாரிகள், யாரோ சில இடைத்தரகர்கள், யாரோ சில அரசியல்வாதிகள் இருக்கலாம் என்று சந்தேகி. செய்திகளில் சமூக அக்கறை மட்டும் அல்ல; வர்த்தக அக்கறைகளும் செயல்படலாம். ஆளுங்கட்சியில் மட்டும் இல்லை; எதிர்க்கட்சியிலும் அவர்கள் இருக்கலாம். செய்திகளைச் சந்தேகப்படு. நான் சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்களின் சொத்து விவரங்களை விசாரி. பத்திரிகையாளர்களாக மட்டும் இருந்துகொண்டு அவர்களால் எப்படி இத்தனை கோடி சொத்துகளைக் குவித்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடு. புரியும்!”

பிற்பாடு டெல்லியில் சுற்றிய நாட்களில் எல்லாம் புரிபட்டது. 2014 மக்களவைத் தேர்தல் தருணத்தில் இந்திய ஒன்றியம் முழுவதும் பயணித்து, பல்வேறு தரப்பினரும் இங்கு ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று ‘இந்தியாவின் வண்ணங்கள்’ கட்டுரைத் தொடர் எழுதினேன். அப்போது நாடறிந்த சில பத்திரிகையாளர்களின் பேட்டியையும் அதில் கொண்டுவர விரும்பினேன். டெல்லியில் நடக்கும் பேரங்கள், பேச்சுவார்த்தைகளில் பத்திரிகையாளர்களின் இடையீட்டை அதில் பதிவுசெய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. ஜனநாயகத்தில் இத்தகைய இடையீடுகள், லாபிகளுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் அதைச் செய்ய முயன்றேன். ஏனென்றால், அமைச்சர்களாலேயே செய்து தர முடியாத காரியங்களைக்கூட அனாயாசமாகப் பிரதமர்களிடம் பேசி முடித்துத் தரும் பத்திரிகையாளர்களின் கதைகளை நான் கேள்விப்பட்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு பேட்டிக்கு யாரும் தயாராக இல்லை.

உலகெங்கும் இன்றுள்ள அரசதிகாரக் கோட்டைகளின் உள் சூட்சமப் பாதைகளை அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்: நவீன அரசில் ஊழல்களின் தாய் ராணுவப் பேரங்களிலேயே குடிகொண்டிருக்கிறாள். தேச நலன் என்ற இரு வார்த்தைகள் போதும், தேசியத்தின் பெயரால் ஒரு அரசு எதையும் செய்யலாம்; எவ்வளவு பேரையும் பலியிடலாம்.

பூனைக்கால் சிங்கங்கள்


மத்திய லண்டன் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் டிரஃபால்கர் சதுக்கம் தன்னை நோக்கி இழுத்தது. பிரெஞ்சு, ஸ்பானிய கடற்படைகளை 1805-ல் ஸ்பெயின் நாட்டின் டிரஃபால்கர் முனையில் பிரிட்டிஷ் கடற்படை தளபதி நெல்சன் தோற்கடித்ததன் ஞாபகார்த்த சதுக்கம் இது. நெல்சனுக்கு ஒரு பெரிய நினைவுத் தூணும் அமைத்திருக்கிறார்கள். பீடத்தில் நான்கு பிரமாண்ட சிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க 169 அடி உயரத்தில் நிற்கிறார் நெல்சன்.

குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இருவரும் சதுக்கத்தை நோக்கி நடந்தோம். சதுக்கக் கதைகள் சொன்னபடி வந்தார் ஹெலன். “இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்கள் கூடும் ஒரு கலாச்சாரத் திடலாக இது இருக்க வேண்டும் என்று 1812-ல் இதைப் பொது இடமாக மேம்படுத்தினார் கட்டுமானவியலாளர் ஜான் நாஷ். 1830-ல் இதற்கு டிரஃபால்கர் சதுக்கம் என்று பெயரிட்டார்கள். 1838-ல்  நெல்சனுக்குச் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. பீடத்தின் நான்கு புறங்களிலும் சிங்கங்களைச் சேர்க்கும் பணி 1867-ல் முடிந்தது. இந்தச் சிங்கங்கள் ஒவ்வொன்றின் எடையும் ஏழு டன்கள். சிங்கத்தின் கால் விரல்களைக் கவனியுங்கள். வித்தியாசமாக இருக்கும். இவை சிங்கத்தின் கால்கள் அல்ல; பூனையின் கால்கள் என்ற பேச்சு இங்குண்டு. உலகப் போரில் லண்டனைக் கைப்பற்றினால் இந்தச் சிலைகளை அப்படியே ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஹிட்லரின் படைகளுக்கு இருந்திருக்கிறது.”

பூனைக்கால் சிங்கங்களைப் பார்த்தேன். ஏனோ அவை மிகுந்த பரிதாபத்துக்குரியவையாகத் தோன்றின. வருடிக்கொடுத்தேன். பரிச்சயமான தமிழ் முகம் ஒன்றை அப்போது கண்டேன். இயக்குநர் கே.வி.ஆனந்த். நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படப் பணிகளுக்காக வந்திருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு கலைந்தோம். சதுக்கத்தில் ஒரு இளைஞர் குழு நடனமாடி காசு வசூலித்துக்கொண்டிருந்தது. ஹல்க் வேஷத்தில் தரையில் கால்கள் படாமல் நின்றபடி காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண். எல்லா நாட்டுக் கொடிகளையும் தரையில் வரைந்திருந்தார் ஒரு இளைஞர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரவர் நாட்டு கொடிக்கு அருகில் காசு போட்டார்கள்.

லண்டன்: சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களுக்கா?


லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த தடங்களில் உற்சாகம் பொங்க கடந்த சைக்கிளோட்டிகளைப் பார்க்கும்போது ஏக்கமாக இருந்தது. நகரில் சைக்கிள்களுக்கான அதிவேகத் தடம் அமைப்பதில் இப்போது உத்வேகமாக இருக்கிறார்கள். “நீங்கள் விரும்பினால், விக்டோரியா வீதி, வால்டிங் வீதி, ப்ரெட் வீதி வழியே ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். சிலிர்ப்பை உணர வேண்டும் என்று விரும்பினால், ‘சிஎஸ்3’ அதிவேகத் தடத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும். டவர்ஹில்லில் கிளம்பி வெஸ்ட்மினிஸ்டர் வரைக்குமான பாதையில் ஒருமுறை பயணித்தால் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள்” என்றார் ஹெலன்.

மனிதக் கண்டுபிடிப்புகளில் சைக்கிள் ஒரு எளிய அற்புதம். நிதானப் பயணத்துக்கு ஏற்ற, சூழலைப் பெரிதாக நாசப்படுத்தாத, ஆபத்துகள் அதிகம் விளைவிக்காத, எவ்வளவு எளிமையான வாகனம். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்தபோது ஒரு நாளைக்கு 20 கி.மீ. சைக்கிள் மிதித்தேன். சென்னை வந்த பிறகு அது 25 கி.மீ. ஆக உயர்ந்தது. நீண்ட நாளைக்கு அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. பெருகிவரும் மோட்டார் வாகன நெரிசலானது இப்போதெல்லாம் அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்று திரும்புவதோடு சைக்கிளுடனான உறவைச் சுருக்கிவிட்டது.

சென்னையில் சைக்கிள் ஓட்டுவது என்பது இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்து நடத்தும் ஒரு சாகசம். இந்தியாவில் மோட்டார் வாகனப் பெருக்கம் மிகுந்த நகரங்களில் முன்னிலையில் இருக்கிறது சென்னை. தமிழர்கள் இதற்காகப் பெருமை கொள்ள முடியாது. அதிகரிக்கும் மோட்டார் வாகனங்களின் அடர்த்தி சுற்றுச்சூழலிலும் சுகாதாரத்திலும் எவ்வளவு மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை வருஷம் முழுக்க ஊடகங்கள் பேசுகின்றன. ஆட்சியாளர்கள் காதில் எது விழுகிறது?

லண்டன்: நடப்பதற்கு ஒரு நகரம்



ஒரு ஆரோக்கியமான மாற்றம் உருவாகியிருந்தது. லண்டன் வந்தது முதலாக அன்றாடம் சுமார் 20 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்திருந்தேன். நடை, மிகுந்த விருப்பத்துக்குரியதாக ஆகியிருந்தது. மரங்களின் நிழல் தரித்த, மேடு பள்ளங்கள் - குறுக்கீடுகள் அற்ற, அகல விரிந்த நடைபாதைகள் மேலும் மேலும் நடக்கும் உத்வேகத்தை அளித்தன. உடலைத் துளைக்கும் குளிரானது நடையில் அபாரமான ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது. கதகதப்பான கோட்டும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய மழையை எதிர்கொள்ள கையில் ஒரு குடையும் இருந்தால் நாளெல்லாம் நடந்துகொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

நகரம் சில்லிட்டிருந்தது. நகரின் கடை வீதிகளைச் சுற்றிவர அன்றைய மதியப் பொழுதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நண்பகலுக்குப் பிந்தைய, சாயங்காலத்துக்கு முந்தைய, இந்த இரண்டுக்கும் இந்த இடைப்பட்ட பொழுதானது கடைகளை வேடிக்கைபார்த்தபடி நடக்கவும், விருப்பமான கடைகளில் சடாரென்று உள்ளே நுழைந்து ஒரு பார்வையிட்டு திரும்பவும் வசதியானது. எந்த நகரின் கடைவீதியும் சோம்பல் முறிக்கும் நேரம் அது.

லண்டன்: நீர்நிலைதான் சமூக வாழ்வுக்கான அளவுகோல்!


அன்றாடம் இரவு தூங்கச்செல்வது சவாலான ஒரு காரியமாகிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் விழும் பகல்கள், ரம்மியமான வானிலை, பிடித்தமான குளிர், புதுப்புது மனிதர்கள் - அனுபவங்கள், பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. ஒவ்வொருநாளும் அதன் அடர்த்தியின்  சுமை அதிகமானபடி இருந்தது. இரவில் வீதியில் படர்ந்திருந்த மஞ்சள் விளக்கொளி வேறொரு காலகட்டத்துக்கு, வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை வேறொரு வெளியோடு பிணைத்திருந்தது.


அன்றைய தினம் இரவு முழுவதுமாகவே உறங்கவில்லை. ஜன்னலின் வழியே விடியலின் கிரணங்களை எதிர்நோக்கியிருந்தேன். அதிகாலையில் முதல் கீற்று தென்பட்டபோது, ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி கண்ணாடியைத் திறக்கிறேன். உள்ளே குத்தீட்டிகள்போல பாயும் குளிர்க்காற்று. தேம்ஸ் நதி நோக்கி அது அழைத்தது. 


அந்த அதிகாலையில் நீளமான கருநீல கோட் அணிந்த ஒரு முதிய தம்பதி என் கார் நிறுத்தப்பட்ட இடத்தில், பாலத்தின் கைப்பிடியைப் பற்றி ஓடி விரையும் தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அதிகாலை நேர தேம்ஸ் சூழல் ஒரு ஓவியம்போல இருந்தது. ஆமாம், ஓவியத்துக்குள் நுழைவது மாதிரிதான் அது இருந்தது. சுமார் அரை மணி நேரம் இருக்கும். அந்தத் தம்பதி புறப்பட்டனர். பெரியவர் என்னைக் கடந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “தேம்ஸைத் தெரிந்துகொள்ள அருங்காட்சியகம் செல்லுங்கள். அங்குள்ள பொருட்கள் தேம்ஸை மட்டும் அல்லாது மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார்.

கருணாநிதி சகாப்தம்


உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.

ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக் காட்டிலும் அதிகமான, ஜெர்மனிக்கு இணையான மக்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் கருணாநிதி; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவர். ஐம்பதாண்டு காலம் திமுக எனும் பெரும் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்தார். அவர் கட்சி வென்றாலும் தோற்றாலும் அவருக்குத் தோல்வி தராமல் அறுபதாண்டு காலம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் திரும்பத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்தனர். எண்பதாண்டு காலப் பொது வாழ்க்கை. என்றாலும் ஆறடி நிலத்துக்கு, ஆளுங்கட்சியுடன் மரணத்துக்குப் பிறகும் அவர் போராட வேண்டியிருந்தது. காவிரி நதிப் படுகையில் பிறந்த கருணாநிதி, கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை வந்தடைந்த 95 ஆண்டு பயணத்தில் தூக்கிச் சுமந்த பாரம் மிக்க கனவு தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது.

லண்டன்: இயந்திரமும் விலங்கும்


நண்பர்களிடமிருந்து இரவு உணவுக்கான அழைப்பு வந்தது. அன்று மால்ட்பீ வீதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார் ஆசாத். பிராட்வே, பெர்விக், ப்ராக்லி, கேம்டன், மால்ட்பீ இவையெல்லாம் லண்டனில் சாலையோரக் கடைகளுக்குப் பிரசித்தமான சந்தை வீதிகள். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரம் வகை உணவுகள் இந்த வீதிகளில் ஒரே இடத்தில் கிடைக்கும். மால்ட்பீ வீதியிலுள்ள மெக்ஸிகன் உணவகம் ஒன்றில் சால்மன் மீன் வறுவல் விசேஷம் என்று சொன்னார் ஆசாத். வழக்கத்துக்கு மாறாக எனக்கு வெளியே எங்கும் செல்ல அன்று மனதில்லாமல் இருந்தது. தாமதமாக விடுதி திரும்பியவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனம் இருநூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கி தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்தது.

இன்று நாம் எதிர்கொண்டுவரும் எத்தனையோ பிரச்சினைகளுக்கான வேர்கள் தொழில் புரட்சியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதகுல வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தொழில் புரட்சியானது, அளவில் சின்னதான பிரிட்டனை வேறு எந்த நாட்டைவிடவும் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டதாக மாற்றியதோடு மட்டும் நிற்கவில்லை; ஒட்டுமொத்த உலகின் போக்கையும் திருப்பியது. உலகின் எல்லாக் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மீதும் மோதியது. நவீனத்துவத்தை ஏகாதிபத்தியமாக்கியது.

ரஷ்யப் புரட்சி, பிரான்ஸ், ஜெர்மனியின் எழுச்சி, அமெரிக்காவின் பாய்ச்சல், இரு உலகப் போர்கள் தந்த பின்னடைவு, சீனாவின் விஸ்வரூபம் இவற்றுக்கெல்லாம் பிறகு இன்று பிரிட்டன் சிறுத்துவிட்டிருக்கலாம். ஆனால், அது முன்னெடுத்த பாதையைத் தனக்கேற்பக்   கட்டமைத்துக்கொள்வதன் வாயிலாகவே நவீனப் பேரரசுகள் உருக்கொள்கின்றன. பிரிட்டன் உருவாக்கிய கற்பனையிலிருந்து உலகத்தால் விடுபடவே முடியவில்லை. தொழில்மயமாகும் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாயத்தை வளர்ச்சிவாதத்திலிருந்தே பெறுகின்றன.

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம்



அன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மரங்களுக்காக அந்த ஒரு முழு நாளை ஒதுக்கிக்கொள்வது என்று முந்தைய இரவில் முடிவெடுத்தேன். ஏழு நாள் லண்டன் பயணத்தில், மரங்களுக்காக ஒரு நாள் எனும் திட்டம் யோசித்தபோது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. அது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பது விடுதியை விட்டுக் கிளம்பி சாலையில் கால் வைத்ததும் புரிந்தது. விடுதியைச் சுற்றியே இப்போது ஏராளமான மரங்கள் நின்றன. பெரிய பெரிய மரங்கள். நிறைய வயதான மரங்கள். எப்படி முதல் நாள் முழுமையிலும் கண்ணில் படாமல் போயின!

அன்றைக்கு மழை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. இரவு மழை பெய்த தடம் காற்றில் கலந்திருந்தாலும் மண்  உலர்ந்திருந்தது. வானம் கருநீலம் பூத்திருந்தது. மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. லண்டனிலிருந்து கடல் தூரம். ஆனால், காற்றில் கடல் வாடையடித்தது. ஒருவேளை இதுவரை அறிந்திராத ஏதேனும் ஒரு மரத்திலிருந்து வெளிப்படும் மணமாகவும் இருக்கலாம். அதிகாலைகளை மரங்கள் தங்களுடையதாக மாற்றிவிடுகின்றன. கருத்த, வெளுத்த, பழுப்பேறிய, சாம்பல் பூத்த மரங்களை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இன்னும் வெளிச்சம் முழுவதுமாகச் சூழாத அந்த அதிகாலையிலேயே நகரம் சுறுசுறுப்பாகியிருந்தது.

விக்டோரியா பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்தார் ஹெலன். அங்கிருந்து ஒவ்வொரு பூங்காவாகப் பார்க்கலாம் என்று திட்டம். வாழ்க்கையை எவ்வளவு எளிமையாகத் திட்டமிட்டுவிடுகிறது ஒரு தமிழ் மனம்? மூன்று பூங்காக்களைப் பார்த்த மாத்திரத்தில் திட்டத்தின் அபத்தம் பல் இளித்தது. நகரம் எங்கிலும் மொத்தம் 3,000 பூங்காக்கள். பூங்கா என்பது பெயர்தான். எல்லாம் சிறு, குறு காடுகள். 35,000 ஹெக்டேருக்கு இவை பசுமை போர்த்தியிருக்கின்றன. சொல்லப்போனால், லண்டன் பெரிய நகர்ப்புறக் காட்டைத் தன்னுள்ளே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெருநகரம் என்று அதைச் சொல்லலாம் அல்லது வளர வளரப் பெருக்கும் ஒரு பெருநகரத்தைத் தன்னுள் உள்ளடக்கி  விரித்துக்கொண்டேயிருக்கும் காடு என்றும் அதைச் சொல்லலாம். ஹெலன் சிரித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர் போர்த் தளபதி மாதிரி தயாராக இருக்க வேண்டும்: பொன்முடி


திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி அரசியல் அறிவியல் பட்டதாரி. கல்லூரி ஆசிரியராக இருந்தபோது, திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். திமுகவின் உயர்நிலைக் குழுவிலும் கருணாநிதியின் அணுக்க வட்டத்திலும் இடம்பெற்றிருக்கும் பொன்முடி, இன்றும் விழுப்புரம் மாவட்டத்தின் செயலாளராகவும் நீடிப்பவர். கட்சியின் மேல்மட்டம் தொடங்கி வேர்மட்டம் வரை முழு அமைப்போடும் நேரடித் தொடர்பில் இருப்பவர், திமுக அமைப்புரீதியாக எப்படிச் செயல்படுகிறது என்பதை விவரித்தார்.

திமுகவின் கட்டுக்கோப்புக்கு ஜனநாயகமே காரணம்- துரைமுருகன்


திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த வரிசைத் தலைவர்களில் முக்கியமானவர் என்பதோடு, அவருடைய அன்றாட ஜமாவிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் துரைமுருகன். 1971-ல் சட்ட மன்றத்தில் நுழைந்த துரைமுருகனிடம்தான் கருணாநிதி தன் பொறுப்பில் வைத்திருந்த பொதுப்பணித் துறையைக் கையளித்தார். தமிழக நீர்நிலைகளை முற்றுமுதலாக உணர்ந்தவர் என்று கருணாநிதியிடம் பெயரும் வாங்கினார். ஒரு அரசியல் தலைவராக, கட்சியையும் ஆட்சியையும் எப்படி கருணாநிதி கையாண்டார் என்பதை துரைமுருகன் பகிர்ந்துகொண்டார்.

கருணாநிதியின் ஜமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் நீடிக்கிறீர்கள்... என்னவெல்லாம் பேசுவீர்கள்?
அவருக்கும் எனக்கும் 15 வயது வித்தியாசம். அடுத்தடுத்த தலைமுறையினர் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் பெரிய ஆர்வம் அவருக்கு உண்டு. அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவனாக நான் அவர் வீட்டுக்குள் போனேன். கட்சிக்குள் அடுத்தடுத்த மட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, தேசிய அரசியல் எப்படிப் போகிறது, புதிதாக என்ன நாவல் வந்திருக்கிறது, புதிதாக வந்த சினிமாவில் எது நன்றாக இருக்கிறது - இப்படி எதுபற்றியும் பேசுவோம். வரையறை எல்லாம் கிடையாது. அவர் அதிகமாக எதைப் பேசுவார் என்றால், இயக்கம் கடந்துவந்த பாதையைப் பேசுவார். வெளியூர்ப் பயணங்கள் என்றால், வண்டி ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போது அந்தந்த ஊர் முன்னோடிகள், அவர்களுடைய தியாகங்களைச் சொல்வார். அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கட்சி வரலாற்றைக் கடத்திவிட வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருப்பார்.

லண்டன்: மிட்டாய்க்குள் கிராமம்



குளிர் அப்பிக்கொண்டது. கைகளை இறுகக் கட்டிக்கொண்டேன். இந்தியாவில் எவ்வளவோ சுற்றியிருக்கிறேன் என்றாலும், இந்தக் குளிர் அந்நியமாக இருந்தது. விரல்கள் ஐஸ் வில்லைகள் மாதிரி இருந்தன. ஹெலன் கை குலுக்கினார். “ஒரு காபியோடு நாம் இங்கிருந்து புறப்படலாம். குளிருக்கு ஈடு கொடுக்கும்!” என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயண வழிகாட்டலுக்கு அனுப்பப்பட்டிருந்தவர் இவர். பார்க்க கல்லூரி மாணவிபோல இருந்தார். பிரிட்டன் வரலாறு, பிரிட்டிஷ் சமூகவியலைச் சொல்வதில் மிகுந்த தேர்ச்சியுடன் இருந்தவர் பகுதிநேரப் பணியாக பயண வழிகாட்டியாகப் பணியாற்றுவதாகச் சொன்னார். குறுகிய நாட்களில் பிரிட்டிஷ் வாழ்க்கையைக் கொஞ்சம் ஊடுருவிப் புரிந்துகொள்வதற்கு ஹெலனுடனான சம்பாஷனைகள் பெரிய அளவில் உதவின.

அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்



பிடிவாதமாக சென்னைக்கு வெளியே தன்னை இருத்திக்கொண்டிருக்கும் தலைவர் ராமதாஸ். திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் செல்லும் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள பிணைப்பைக் குறுக்குவெட்டாகப் பார்க்க உதவுகிறது. அகலமான சாலையின் இருபுறங்களி
லும் நீளும் வயற்காட்டின் பெரும் பகுதி தரிசாகக் கிடக்கிறது. பிரதான சாலையிலிருந்து பிரிபடும் கிராமத்துச் சாலைகளின் நுழைவாயிலை ஒட்டி ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மரங்கள், பிராந்தியத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சமூகச் சூழலைச் சொல்கின்றன. சிறுத்தைகள், சிங்கங்கள் படங்களும் பொம்மைகளும் மாறி மாறி கடக்கின்றன. சாதிக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையான மக்கள் வறண்ட கண்களுடனேயே நிற்கிறார்கள். வழிநெடுகிலும் தென்படும் மாடுகள் விவசாயிகளை மேய்ச்சல் எப்படி காத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கின்றன. ராமதாஸ் வீட்டு எல்லையின் தொடக்கத்தில் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் மூவரின் சிலைகளும் நிற்கின்றன. மதில்கள் உயர்ந்த, மரங்கள் அடர்ந்த வீட்டில் வரவேற்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு


விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.

என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.

லண்டன்


குதூகலம் தொற்றிக்கொண்டது. ஆசிரியர் அசோகன் அப்போதுதான் கூப்பிட்டு சொல்லியிருந்தார். “லண்டன் போகிறீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக. ஒரு வாரம். கொண்டாடிவிட்டு வாருங்கள்.” லண்டன் காமன்வெல்த் மாநாட்டையொட்டி வந்திருந்த அழைப்பு அது.
எந்த ஊர்ப் பயணமுமே குதூகலத்தைக் கொண்டுவந்துவிடக் கூடியதுதான் என்றாலும், என்னளவில் இது கூடுதல் விசேஷத்துக்குரியது. சிறுவயது தொட்டு என்னை வசீகரித்துவந்திருக்கும் சொற்களில் ஒன்று லண்டன்.
வரலாற்றின் ஒரு மாணவனாக லண்டன் கதைகள் எனக்கு எப்போதுமே வியப்பூட்டிவந்திருக்கின்றன. அலெக்ஸாண்டிரியா, கான்ஸ்டான்டிநோபிள், பாக்தாத் இப்படி எத்தனையோ நகரங்கள் வரலாற்றில் ஓங்கி நின்றிருக்கின்றன - ஒரு காலகட்டத்தை வசப்படுத்த முடிந்த அவற்றால் இன்னொரு காலகட்டத்துக்கும் அதை நீட்டிக்க முடிந்ததில்லை. ரோம், டெல்லி போன்ற நகரங்கள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட செல்வாக்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பராமரித்துவந்திருக்கின்றன. எனினும், இவை எவற்றோடும் லண்டனை ஒப்பிட முடியாது.

இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி


இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி கோவை ஞானி. இந்தியத் தளத்தில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைப்பது ஞானியினுடைய சிந்தனையின் மையம். 30 ஆண்டுகளுக்கு முன், அவருடைய 50-களில் நீரிழிவு நோய் முழுமையாக ஞானியின் பார்வையைப் பறித்தது. எனினும், தன்னுடைய வாசிப்பையோ, எழுத்தையோ, பேச்சையோ எது ஒன்றும் நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை அவருடைய சிஷ்யையான மீனாட்சி வாசிக்கக் கேட்கிறார். நினைத்ததைச் சொல்லி எழுதுகிறார். முதுமை அவரைச் சங்கடத்துக்குள்ளாக்குவதையும் உணர முடிகிறது. உரையாடலில் உட்கார்ந்துவிட்டால் உற்சாகமாகிவிடுகிறார்.

கி.பழனிசாமி, எப்போது ஞானி ஆனீர்கள்?

என்னுடைய பால்ய கால சினேகிதர் துரைசாமி. ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தோம். அவர் ஞானி என்ற பெயரில் எழுதுவார். ஒருநாள் ‘இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததால், இளம் வயதிலேயே நான் ஞானி ஆகிவிட்டேன்.

மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்



இந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. சமூகவியலாளர். எழுத்தாளர். மார்க்ஸின் இருநூற்றாண்டையொட்டி, நடத்தப்பட்ட உரையாடல் இது. நாகராஜன் காட்டாறு. ஒவ்வொரு கேள்வியும் அவருள்ளிருந்து வெளிக்கொணரும் எண்ணக் கூட்டத்திலிருந்து சில வரிகளில் பதிலைத் தொகுப்பது எளிதானதல்ல. பல நாட்கள், பல மணி நேர உரையாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுருக்கம் இது.


இந்தப் பெயர் நீங்களாகச் சூட்டிக்கொண்டதா? பொதுவாக, ஐயங்கார் குடும்பங்களில் நாகராஜன் என்ற பெயர் அரிதானது என்பதால் கேட்கிறேன்...
சரியாகத்தான் பிடிக்கிறீர்கள். என் பெற்றோருக்கு நான் ஒன்பதாவது பிள்ளை. மூத்தவள் அக்கா. அதற்கு அப்புறம் ஏழு பிள்ளைகள். எல்லாம் செத்துவிட்டன. சீனிவாஸ சேஷன் என்றுதான் பெயர் சூட்ட யோசித்திருக்கிறார்கள். நானாவது நிலைக்க வேண்டும் என்ற யோசனைப்படி, தவிட்டுக்குத் தத்துக்கொடுத்து வாங்கி வைக்கப்பட்ட பெயர்தான் நாகராஜன்.

எப்போது கம்யூனிஸ்ட் ஆனீர்கள்?
கம்யூனிஸ்ட் ஆகவில்லை; எனக்குள்ளிருந்த கம்யூனிஸ்ட்டைக் கண்டுகொண்டேன். கல்லூரி நாட்களில் என்னுடைய பேராசிரியர் ஏ.கே.என்.ரெட்டி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்ட மாத்திரத்தில், நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று உணர்ந்துகொண்டேன். நம் மரபிலேயே இது இருக்கிறது. வைணவத்தில் ‘முக்குறும்பைத் துறத்தல்’ என்று சொல்வார்கள். சாதிச் செருக்கு, செல்வச் செருக்கு, ஞானச் செருக்கு இது மூன்றையும் கைவிட்டால்தான் சக மனுஷனைச் சமமாக ஒருவன் பாவிக்க முடியும். சமத்துவம் பேச முடியும். மார்க்ஸியத்தை வைணவத்துடன் நான் பொருத்தும் புள்ளியும் இதுதான். வீட்டுச் சூழல், ஊர்ச் சூழல், காலச் சூழல் இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை உருவாக்கின.

உங்கள் வீட்டுச் சூழலைச் சொல்ல முடியுமா?
பிறந்து வளர்ந்தது சத்தியமங்கலம். பின்னாளில் பெங்களூர், கல்கத்தா, சென்னை என்று படிப்பு - உத்தியோகம் சார்ந்து பல ஊர் பார்த்தாயிற்று. பல சாதி பிள்ளைகளும் படிப்பதால், பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்தாலே, “உடுப்பை அவிழ்த்துப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வா” என்று சொல்லும் அளவுக்குப் பிராமண வீடுகளில் ஆச்சாரம் இருந்த காலகட்டம் அது. எங்கள் வீடு அப்படி இல்லை. கொஞ்சம் திறந்த சூழல் இருந்தது. என்னுடைய தகப்பனார் படித்தது கிறிஸ்தவக் கல்லூரி. பிற்பாடு அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அதனால் எல்லோருடனும் பழக்கம் இருந்தது. நேர்மையாளர். உத்தியோகத்தில் பாகுபாடு காட்ட மாட்டார். மகாவீரப்பா என்று அவருக்கு ஒரு சினேகிதர். லிங்காயத்து. கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டவர். அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வீட்டில் என்னுடைய தகப்பனார் கை நனைக்க மாட்டார். ஆனால், என் வீட்டுக்கு வந்தால் மகாவீரப்பா சாப்பிட்டுவிட்டுப் போவார். அம்மாவுக்கு வீட்டு வைத்தியம் பார்க்கும் பழக்கம் இருந்தது. பல வீட்டுப் பெண்களும் குழந்தைக்கு முடியவில்லை என்று தூக்கிக்கொண்டு வருவார்கள். எல்லாக் குழந்தைகளையும் தொட்டு வைத்தியம் பண்ணுவாள். ஆனால், பட்டுத்துணியை மேலே போட்டுக்கொள்வாள். இந்த அளவுக்குத்தான் அந்தத் திறப்பு. அப்பா நிறைய மதிப்பீடுகளைப் பேசுவார். அவராலேயே எல்லைகளை முழுமையாகக் கடக்க முடியவில்லை. ஏன் என்று ஒரு கேள்வி வரும் இல்லையா? நாளெல்லாம் கடவுளைப் பற்றி பேசுபவர்களாலேயே ஏன் முக்குறும்பை விட முடியவில்லை என்ற கேள்வி வந்தது. சமூகத்தில் எழுந்துவந்த பிராமண எதிர்ப்பானது ஒரு பிராமணனான எனக்குள்ளும் இந்த எதிர்ப்புக்கான காரணம் என்னவென்று யோசிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவான கேள்விகள்தான் என்னை உருவாக்கின.

தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் எழுச்சி பெற்ற ஒரு காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். பிராமணிய எதிர்ப்புக்கான காரணமாக எது இருந்தது?
பிராமணர்களோட அகங்காரம். அதிகாரம். பிராமணன் இங்கே பெரிய பணக்காரன் கிடையாது. நிலமெல்லாம் பெருவாரியாகப் பிராமணர் அல்லாத சமூகங்களிடம் இருந்தது. ஆனால், அரசாங்க அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு ஏனையோரைத் துச்சமாகப் பார்ப்பது என்பது பிராமணர்களிடம் இருந்தது. இங்கே உள்ள அமைப்பு என்ன மாற்றத்தைக் கண்டாலும் அதைத் தங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளும் தந்திரமும் இருந்தது. புதிதாகப் படிக்கப்போன சமூகங்களுக்கு இது புரிபட்டது. பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் எழுந்தது.

ஆனால், பிராமணியத்துக்கு எதிரான போராட்டம் சாதியத்துக்கு எதிரான போராட்டமாக மாறவில்லை. பிராமணர்கள் இடத்தில் தங்களை இருத்திக்கொள்வதுதான் ஒவ்வொரு சாதியின் வேட்கை என்றாகிவிட்டது. பாகுபாட்டைக் களைய முடியவில்லையே ஏன்?
இந்தியாவின் சாபக்கேடே அதுதான். பிராமணர்கள் உட்கார்ந்திருக்கிற இடம் பிரச்சினை இல்லை. அதில் யார் உட்காருவது என்பதில்தான் பிரச்சினை. ஆக, பிராமணியம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஒரு உதாரணம். இன்று இந்தியாவின் பெரும்பான்மை கிராமங்களில் பிராமணன் இல்லை. அவன் நகரத்துக்கு வந்து ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்துவிட்டான். சரி. அப்படியென்றால், கிராமங்களில் சாதியத்தைக் காப்பவர்கள் யார்? பிராமணியத்தை எதிர்த்தவர்களால் ஏன் பிராமணியத்தின் ஆதிக்கத்தை இம்மியளவுகூடத் தகர்க்க முடியவில்லை?

தூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன?


குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது காலகட்டத்தில், அது பண்டைத் தமிழ்நாட்டின் முத்து நகரமாக இருந்தது. நம் ஞாபகங்களின் நினைவடுக்குகளில் ஒரு தொன்மமாகப் பதிந்திருக்கும் அந்த முத்து நகரமானது, அரேபியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று உலகளாவிய ஒரு பெரும் வாணிப பட்டாளத்துடனான உறவில் திளைத்திருந்தது. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் போன்ற பாரசீகக் கலாச்சாரத்தின் மிச்சங்கள் தங்கிய ஊரும், ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த ஊரும் பண்டை தூத்துக்குடியின் வாணிப மரபின் எல்லை கடந்த வேர்களுக்கான அத்தாட்சிகள்.

இரண்டாவது காலகட்டத்தில், அது இந்திய சுதந்திரப் போராட்டக் குரல்களை எதிரொலிக்கும் எழுச்சி மிக்க சுதேசி நகரமாக உருமாற முனைந்தது. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல்களை இயக்கியது ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’. பிரிட்டிஷாரின் வியாபார ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிதம்பரனாரின் ‘சுதேசி நாவாய் சங்கம்’ இங்குதான் பிறந்தது. அவருடைய ‘எஸ் எஸ் காலியோ’, ‘எஸ் எஸ் லாவோ’ கப்பல்கள் இங்கிருந்தே கொழும்புக்குப் புறப்பட்டன. தொழிற்சங்கம் எனும் சொல் சாமானியர்களின் புழக்கத்தில் வந்திராத நாட்டில் 1908-ல் பிரிட்டிஷாரின் ‘கோரல் நூற்பாலை’க்கு எதிராக ஊரே திரண்டு தொடர் வேலைநிறுத்தம் நடத்தி, தொழிலாளர் உரிமையை நிலைநாட்டிய நகரமும் இது. அந்தக் காலகட்டத்திய தூத்துக்குடியின் வாணிபச் செல்வாக்கை சொல்லும் சின்னங்கள் நகரின் பழைய துறைமுகம் பகுதியில் இந்தோ சார்சனிக் கட்டிடங்களாக நிற்கின்றன. கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் செழுமையை தூத்துக்குடிக்கு இந்தப் பக்கத்திலுள்ள மணப்பாடு கிராமத்துக்குச் சென்றால், தேவாலயங்கள், மாளிகை வீடுகள், ஸ்தூபிகளில் பார்க்கலாம்.

மூன்றாவது காலகட்டத்தில், இன்று அது பின்காலனிய யுகத்தின் தொழில் நிறுவனங்களுடைய வேட்டை நகரமாகி சிதைவை எதிர்கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தொழில் கொள்கைக்கான பரிசோதனைக் களங்களில் ஒன்றாக தூத்துக்குடியையும் சொல்லலாம். அனல் மின் நிலையங்கள், தொழிற்பேட்டைகள், தனியார் – அரசு கூட்டுறவில் உருவாக்கப்பட்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்பிக்’, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்டெர்லைட்’, உள்ளூரிலிருந்து சர்வதேசம் நோக்கி விரியும் ‘விவி மினரல்ஸ்’ என்று இந்திய அரசுக்கு சாத்தியப்பட்ட எல்லாத் தொழில் கற்பனை வகைமையிலும் தொழிற்சாலைகளை உள்வாங்கி அது நிற்கிறது.

இங்கு ஒரு கேள்வி. இன்று நாம் பார்க்கும் தூத்துக்குடிதான் ஒரு வாணிப நகரம் என்றால், முந்தைய இரு காலகட்டத்திய தூத்துக்குடியை என்ன பெயரிட்டு அழைப்பது?

ரஜினி அரசியலின் பேராபத்து


அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிடைத்த செய்திகள் ஆச்சர்யமூட்டின.

ஃபிலெடெல்பியா நகரிலுள்ள ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடைக்கு 21 வயதான ராஷன் நெல்சன், டாண்டே ராபின்சன் இருவரும் செல்கின்றனர். இருவரும் கறுப்பர்கள். அங்கே அவர்களுடைய இன்னொரு நண்பர் ஆண்ட்ரூவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த இளைஞர்களில் ஒருவர் கழிப்பறைக்குச் செல்ல முனையும்போது அனுமதி மறுக்கிறார் கடையின் மேலாளர் - வெள்ளையர். சாப்பிடுவதாக இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம் அல்லது உடனே வெளியேற வேண்டும் என்கிறார். பேச்சு போய்க்கொண்டிருக்கும்போதே போலீஸாரை அழைக்கிறார். போலீஸார் அங்கு வந்த வேகத்தில் இரு இளைஞர்களையும் கைதுசெய்து விலங்கு மாட்டுகிறார்கள். இதற்குள் அவர்கள் சந்திக்கவிருந்த நண்பர் – அவர் வெள்ளையர் - வந்து சேர்கிறார். இவையெல்லாமும் சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் பெரும் சங்கிலி உணவகங்களில் ஒன்றும், உலகெங்கும் 27,500-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்ட ‘ஸ்டார்பக்ஸ்’ விதிகளின்படி, சாப்பிட வருபவர்கள்தான் அதன் காபி கடைகளுக்கு வர வேண்டும் என்பதில்லை. சும்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டிருந்தும் செல்லலாம். இந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வியாபாரப் பேச்சின் நிமித்தம் அங்கு வந்திருந்திருக்கிறார்கள். பேசிவிட்டுக் கலையலாம் என்றிருந்தார்களா அல்லது நண்பர் வந்ததும் சாப்பிடலாம் என்றிருந்தார்களா என்பது தெரியாது. அங்கு வழக்கமாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்பது பின்பு தெரியவந்திருக்கிறது. போலீஸார் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வந்த வேகத்தில் அவர்கள் இளைஞர்களுக்கு விலங்கிட்டதை மெலிசா டிபினோ என்ற வெள்ளைப் பெண்மணி படம் எடுக்கிறார். தார்மிக உணர்வோடு அதைப் பகிர்கிறார்.

சமூக வலைதளங்களில் இந்தக் காணொலி பரவுகிறது. பார்ப்பவர்கள் கொந்தளிக்கிறார்கள். கறுப்பர் – வெள்ளையர் வரையறைகளைத் தாண்டி ‘ஸ்டார்பக்ஸ்’ கடைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விளைவாக ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ஜான்சன் மன்னிப்பு கேட்கிறார். “இனி கடைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கழிப்பறையைப் பயன் படுத்திக்கொள்ளலாம்” என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். கூடவே, வரும் மே 29 அன்று அமெரிக்கா முழுவதுமுள்ள கடைகள் மூடப்பட்டு, நிறபேதம் உட்பட எந்தப் பாரபட்சத்தையும் தங்களை அறியாமலும்கூட வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி விடாமல் இருக்க ‘ஸ்டார்பக்ஸ்’ ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார். காவல் துறை தனியே விளக்கம் அளித்திருக்கிறது.

இந்தியாவின் சாதி பேதத்துடன் அமெரிக்காவின் நிற பேதத்தை ஒப்பிடலாம் என்றாலும், பாகுபாட்டுக்கு எதிரான குடிமைச் சமூகத்தின் இப்படியான எதிர்வினைகளையெல்லாம் இங்கே எப்போது பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஜனநாயகம் என்பது இதெல்லாமும்தான். ஆனால், வெறும் தேர்தலை மட்டும், அதிலும் தனிப் பெரும்பான்மையினரின் முடிவுகளை மட்டும் ஜனநாயகமாக நம்முடைய ஜனநாயகத்தைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியர்கள் போராட வேண்டும்?


கிரெம்ளின் அரண்மனையின் ஆந்திரயேவ் அரங்கில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் பழைய சிவப்புக் கொடியைச் சிலருக்கேனும் ஞாபகப்படுத்தியிருக்கலாம். மீண்டும் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் விளாடிமிர் புடின். வழக்கமாக ஜெர்மனி தயாரிப்பான ‘மெர்ஸிடிஸ்’ காரில் வலம்வருபவர், இந்த விழாவுக்கு உள்நாட்டுத் தயாரிப்பான ‘நமி - சொல்லர்ஸ்’ லிமோஸில் வந்தது அவர் திட்டமிட்ட விளைவை உண்டாக்கியது. “தேசத்தின் சுயாதீன வளர்ச்சியையும் தேசபக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார் புடின்” என்று பெரும்பான்மை ஊடகங்கள் எழுதின. கார் ஒரு தேசியவாதக் குறியீடானது.

ஆசியா – ஐரோப்பா இரு கண்டங்களுக்கும் இடையே ஒரு தனி கண்டம் அளவுக்கு விரிந்து பரந்திருக்கும் ரஷ்யாவை சமகால அரசியல் சூழல் சார்ந்து ஆசியாவோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். பரப்பளவில் உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவையும், மக்கள்தொகையில் உலகிலேயே பெரிய நாடான சீனாவையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் ஆசியாவில் ஜனநாயகத்தின் போக்கை யூகிக்க சில சாத்தியங்கள் தென்படுகின்றன.

விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?


சென்னை ஸ்ரீனிவாசா திரையரங்கம் செல்லும் வழியிலுள்ள மது விடுதியில் கோபாலசாமி அறிமுகமானார். எழுபது வயதிருக்கும். தலை முழுவதும் நரை. நல்ல தாட்டியமான உடலமைப்பு. குடியர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டை, மடித்துக் கட்டிய வேட்டி, கண்ணாடி அணிந்திருந்தவர் தன் தோளில் தேங்காய்ப்பூ துண்டைப் போட்டிருந்த விதம் அவரைத் தொடர்ந்து கவனிக்கத் தூண்டியது. சென்னைக்காரர்களின் தோற்றம் அல்ல அது. மெல்ல அவரிடம் பேசலானேன்.

தஞ்சாவூர் பக்கம். விவசாயம் நொடித்ததும், இங்குள்ள சினேகிதர் அழைக்க வந்திருக்கிறார். சினேகிதரும் விவசாயிதான். அவர் இப்போது ஒரு அடுக்ககத்தில் காவலாளியாக இருக்கிறார். கோபாலசாமிக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கும் அவருக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. மது குடிக்க வருபவர்கள் கேட்கும் பண்டங்களை வாங்கி வந்து பரிமாறுகிறார். புறப்படுகையில் அவர்கள் கொடுத்துச் செல்லும் பத்து, இருபது அவருக்கான வரும்படி. ஒரு நாளைக்கு இருநூறு, முந்நூறு கிடைக்கும் என்றார். எங்கே தங்கியிருக்கிறார் என்ற போது பக்கத்திலுள்ள சேரியைச் சுட்டிக்காட்டினார். ஊரில் அவருக்கு நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் யாருக்கும் உதவிக்கொள்ளும் சூழலில் இல்லை.

‘‘எங்கப்பாவுக்கு பத்து ஏக்கர் நிலம் இருந்துச்சு. என்னோட அண்ணனுக்கும் எனக்கும் சரிபாதியா பிரிச்சுக் கொடுத்தார். எனக்கு ரெண்டு பிள்ளை, ஒரு மகள். பொண்ணு கல்யாணத்தப்போ ஒரு ஏக்கர் நிலத்தை விக்க வேண்டியதாச்சு. மிச்ச நாலு ஏக்கர் நிலத்தை ரெண்டு மவன்களுக்கும் ஆளுக்கு ரெண்டு ஏக்கரா கொடுத்தேன். அந்த ரெண்டு ஏக்கரா நெலத்துல விளையறது அவனவன் குடும்பத்துக்கே சாப்பாட்டுக்குக் காணாது. ஒரு போக சாகுபடிக்கு ஏக்கருக்கு உழுவுறது தொடங்கி அறுக்குற வரைக்கும் ஆறு ஆளுங்களுக்கு மூணு நாள் வேலை (18 வேலை நாட்கள்). டிராக்டரெல்லாம் வந்த பின்னாடி அதுவும் குறைஞ்சுடுச்சு. வயலுக்குச் சொந்தக்காரன் நெதமும் வயலுக்குப் போய் வந்தாலும் நாலு மாசத்துல நெல்லு விளைஞ்சுரும். விளைஞ்ச நெல்லு சோத்துக்குக் காணும். மிச்சத்துக்கு என்ன பண்ணுவான்? மிச்ச எட்டு மாசம் என்ன வேலைக்குப் போவான்? நம்ம யாருக்கும் சுமையா இருக்கக் கூடாது. இங்கே வந்தாச்சு. கிராமத்துல சேரியை நாம ஒதுக்குனோம். நகரத்துல சேரிதான் நம்மளைச் சேத்துக்குது.’’

புனிதங்கள் பொசுங்கட்டும்!


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விமர்சகன் நான். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்த மாநிலத்தில் பிறந்த மரபும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியை மையப்படுத்தியிருக்கும் அதிகாரங்கள் சமூகநீதிக்கும் ராஜியநீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடைத்துப் பரவலாக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவன். ஆனால், சமத்துவத்துக்கான இந்த உணர்வானது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமானது அல்ல. சமத்துவத்துக்கான இந்தத் தேட்டமே அதன் ஆன்மா. பாரபட்சத்துக்கு எதிரான என்னுடைய பேச்சுக்கு அது சக்தி தருகிறது. ஆன்மாவுக்கேற்ப அதன் உடல் உறுப்புகளும் அமைய வேண்டும் என்று பேசுகையில், நான் கோரும் அற விழுமியங்களில் அரசியலமைப்புணர்வுக்கும் ஒரு பங்கிருப்பதை உணர்கிறேன்.

சட்டங்களுக்கு வெகுதூரத்தில் மக்கள் கூட்டத்தில் நிற்கும் எனக்கு, இந்நாட்களில் ஒரு சந்தேகம் எழுகிறது. சட்டத்தோடு ஒவ்வொரு நாளும் புழங்கக்கூடிய, நிபுணத்துவம் பெற்ற சட்ட வடிவமைப்பாளர்களான ஆட்சியாளர்களும், சட்டக் கண்காணிப்பாளர்களான நீதிபதிகளும் உண்மையிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தரும் இந்த அரசியலமைப்புணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் எழுத்துகளாக உள்ள அதன் ஆன்மா இந்த எழுபதாண்டுகளில் எங்கேனும் இவர்கள் உடலுக்குள் புகுந்து ஒரு கலாச்சாரமாக ஆகியிருக்கிறதா அல்லது அவை தத்தமது தேவைக்கும் சௌகரியத்துக்கும் ஏற்ப அணிந்துகொண்டு தூக்கிப்போடும் உடைகள்போல வெறும் எழுத்துகளாகவே நிற்கின்றனவா? ஏனென்றால், விழுமியங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அவை தார்மிகத்தின் ஒரு அங்கமாகவும் வெளிப்படுகின்றன. அரசியலமைப்புணர்வானது சட்டப் புத்தகங்களில் உள்ள எழுத்துகளாலேயே வந்துவிடுவதில்லை. ஒரு சமூகம் தன் நடத்தையின் மூலம் அந்த எழுத்துகளுக்குக் கொடுக்கும் அர்த்தமே அதன் ஆதாரம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நம்முடைய அமைப்பு எதிர்கொள்ளும் முறை நிலைக்குலைய வைக்கிறது. ஆட்சிமன்றமோ, நீதிமன்றமோ; எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை.

விவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது?


பள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம். கவிஞன். நல்ல வாசகன். அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்த எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவனே முதன்மையானவன். எங்கள் குழுவில் எல்லோருமே ஆங்கில இலக்கியம் படிக்க ஆசைப்பட்டோம். அவனும் அப்படி படித்திருக்க வேண்டும். சம்பா சாகுபடி வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வருஷம் தண்ணீர் இல்லாமல் போக, முதல் அடி சம்பாவுக்கும் அடுத்த அடி கார்த்திகேயனுக்கும் விழுந்தது. இலக்கியம் படித்திருக்க வேண்டியவன் பன்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டான். கொஞ்ச நாட்களில் கார்த்திகேயனின் அப்பா ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போனார். கார்த்திகேயன் இப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கிறான். அப்பா உயிரோடு இல்லை.

ராதாநரசிம்மபுரத்தில் ஆசைத்தம்பி என்று ஒரு நண்பர் உண்டு. சிறு விவசாயி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். வசதியில்லாததால் படிக்க முடியாமல்போய்விட்ட ஏக்கம் அவருக்கு நிறைய உண்டு. இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும். அதுவே லட்சியம். விவசாயம் பொய்த்தபோது உள்ளூரிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அப்புறம் கடலை விற்றார். சென்னைக்கு கட்டிட வேலைக்குச் சென்றார். ஒன்றும் எடுபடாதபோது யாரோ சொன்னார்கள் என்று கடன் வாங்கி வளைகுடா நாடு ஒன்றில் பனை வெட்டச் சென்றார். கொத்தடிமை வாழ்க்கை. பதினாறு மணி நேர வேலைச் சூடு தாங்காமல் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களிலேயே ஊர் திரும்பியபோது கண் பார்வை மங்கிவிட்டிருந்தது. அந்த வருஷம்தான் அவருடைய மகள் பிளஸ் டு எழுதியிருந்தாள். பொறியியல் கனவைச் சுமந்தவள். நன்கு படித்தவள். ஏற்கெனவே உள்ள சுமைகளோடு அப்பாவின் கடனும் முடக்கமும் சேர, வீட்டு கஷ்டத்தைச் சுமக்க படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். மகன் லாரி கிளீனர் ஆனான்.

ஒரு பருவம் ஆற்றில் தண்ணீர் வரவில்லை அல்லது வழக்கமான மழை இல்லை என்றால், நம் கிராமங்களில் அது ஏற்படுத்தும் தெறிப்புகள் சாமானியவை அல்ல. ஒரு குடும்பத்தின் பல்லாண்டு கால கனவுகள் அத்தனையையும் கணத்தில் பொசுக்கிவிடக் கூடியது ஒரு பருவத்தின் வெள்ளாமைப் பொய்ப்பு. ‘விவசாயிகள் தற்கொலை’ என்ற தலைப்பில் வெளியாகும் செய்திகள் கிராமங்களில் நடக்கும் உடல்ரீதியிலான மரணங்களை மட்டுமே பேசுகின்றன. கொடிய வலி மண்டலங்களான விவசாயக் குடும்பங்களிலிருந்து பார்த்தால்தான் இந்நாட்டின் அதிகார வர்க்கம் வருஷக்கணக்கில் விவசாயப் பிரச்சினைகளை இழுத்தடிப்பதும் விவசாயிகளை அலைக்கழிப்பதும் எவ்வளவு தீவிரமான சமூகக் குற்றம் என்பதை உணர முடியும். அதுவும் நதிநீர் விவகாரத்தை சாவதானமாக ஓர் அமைப்பு அணுகுவது, ரத்தம் ஆவியாகிக்கொண்டிருக்க மூச்சிரைப்போடு சிகிச்சைக்கு வந்திருப்பவனைப் பார்த்து, “போய் வரிசையில் நில்!” என்று சொல்லும் அதிகாரத்தடித்தனமே அன்றி வேறில்லை.

மாநிலங்களிலிருந்து ஒரு தேசியத் தலைவன்!


மேலே மஞ்சள், கீழே சிவப்பு, நடுவில் வெள்ளை; நடுவே மாநில அரசின் சின்னம். கர்நாடகக் கொடி அதன் எல்லைகளைக் கடந்து முழு இந்தியாவுக்கும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்திய வரலாற்றில் மாநிலங்களால் என்றைக்கும் மறக்க முடியாத தலைவராகிவிட்டார் சித்தராமையா.

வங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!



நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”

அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”

அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது. ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை. வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.

காவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன?


ஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்நாட்டின் ஊடகங்களும் கருத்தாளர்களும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் அணுகும் விதத்தைப் பார்க்கையில், ஒரு வார காலமாக இந்தச் சொலவடைதான் திரும்பத் திரும்ப மனதில் ஓடுகிறது. ‘ஏதோ ஒருவிதத்தில் இது முடிவுக்கு வந்துவிட்டால் சரி’ என்ற நினைப்பு பலரிடத்திலும் உருவாகிவிட்டிருப்பதை உணர முடிகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஒரு விவகாரத்தின் முடிவாக அல்ல; எண்ணற்ற விவகாரங்களின் தொடக்கமாகவே தோன்றுகிறது.

எந்த ஒரு நதியின் நீரும் அது பாயும் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய வகையில் பங்களிக்கப்பட வேண்டும். காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆரம்ப கால ஒப்பந்தங்கள், கர்நாடக விவசாயிகளின் சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்றால், மாறியிருக்கும் காலச் சூழலுக்கேற்ப உரிய நியாயம் செய்யப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். எல்லா உயிர்களும் ஓர் உயிரே, எல்லா விவசாயிகளும் ஓர் நிறையே!

காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டின் பங்காக ஒதுக்கிய 192 டிஎம்சி தண்ணீரை 177.5 டிஎம்சி ஆக இந்தத் தீர்ப்பில் குறைத் திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழ்நாடு தன்னு டைய பங்கில் மேலும் 14.5 டிஎம்சி தண்ணீரை இழந்திருக்கிறது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி தண்ணீரைக் குறிக்கும். விவசாயிகளின் கணக்கில், ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது கிட்டத்தட்ட 7,000 ஏக்கர் நெல் பாசனத்தைக் குறிக்கும். அதாவது, நம்மூரில் 1,00,000 ஏக்கர் நிலம் இனி தரிசாகிவிடும். குறைந்தபட்சம் 50 லட்சம் வேலைநாட்களை, விவசாயிகளின் வேலைவாய்ப்புகளை இது காலியாக்கிவிடும்.

போகட்டும். இந்தப் பக்கம் தமிழக விவசாயிகளுக்கு இழப்பாகும் நீரும் பலன்களும், அந்தப் பக்கம் கர்நாடக விவசாயி களுக்கு வரவாகும் என்றால், அது கர்நாடக விவசாயிகள் இதுநாள் வரை கோரிவந்த நியாயத்துக்கான ஈடாக அமையும் என்றால், எல்லா வலிகளைத் தாண்டியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், அந்தத் தண்ணீர் யாருக்குச் செல்லவிருக்கிறது? “பெங்களூரு மாநகரத்தின் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதையும், தொழிற்சாலைகளுக்கான நீர்த் தேவை அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டே கர்நாடகத்துக்கான தண்ணீர் ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறோம்” என்கிறது உச்ச நீதிமன்றம். சிக்கல் இங்கே பிறக்கிறது!

ஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!


இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஜெயலலிதாவை எப்போதுமே முக்கியமானவராகக் கருதிவந்திருக்கிறேன். வாழ்ந்த காலம் நெடுகிலும் இந்நாட்டின் அமைப்பு எவ்வளவு ஓட்டைகள் நிரம்பியது என்பதை நமக்குத் தொடர்ந்து உணர்த்திவந்தவர் அவர். முக்கியமாக, நம்முடைய நீதி பரிபாலனத்தின் முன் எல்லோரும் சமம் என்கிற மாயையைப் பகிரங்கமாக உடைத்துக் காட்டியவர்.

வழக்குகள் இடையே வாழ்ந்தவர் ஜெயலலிதா. வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமே நெடுங்காலம் அவரால் கடக்க முடியாததாக இருந்தது. அதையும் மரணத்தால் ஜெயித்தார். 18 ஆண்டுகள். 14 நீதிபதிகள். வாய்தாக்களால் நீதிமன்றத்துக்கு அவர் தண்ணீர் காட்டியபோது ஒருகட்டத்தில் நீதிபதி பச்சாபுரே வெறுத்துப்போய் கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது, “ஆறு மாத காலமாக விசாரணையே நடக்கவில்லை. விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு ஒத்துழைப்பு தருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் தனியாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்து செல்கிறேன். தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்கிறேன்!’’

கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்

திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.

திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
அரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள். ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு, தலைவர் உடல் நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம். களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது!

இரு ஒளிக் கலைஞர்கள்!

 ‘ஸ்ருதி டிவி’ கபிலன், பிரபு காளிதாஸ்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு. மார்கழி பனி சன்னமாக நகரத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையின் புதிய கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றாகிவரும் புத்தாண்டு புத்தக இரவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி.

சாலை என்றோ தெரு என்றோ முழுமையாகச் சொல்லிவிட முடியாத குறுகலான அந்த வீதியில் அந்த இரவிலும் சரசரவென்று போகின்றன வாகனங்கள். வீதியின் இடது ஓரத்தில் எதற்காகவோ நீளமான பள்ளம் தோண்டப்பட்டு கிடக்க வலது ஓரத்தில் விழா மேடையை அமைத்திருந்தார்கள். திறந்தவெளி மேடை. மேடைக்கு முன் மூன்று வரிசையாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஐம்பது அறுபது பேர். எல்லோருக்கும் பின்னால் ஒரு மூலையில் நின்றபடி, கசியும் பனியிலிருந்து தன்னுடைய வீடியோ கேமராவைப் பாதுகாக்க தான் கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்து கேமராவுக்குச் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கபிலனை முதன்முதலாக நான் பார்த்தேன். பிரபு காளிதாஸைப் பார்த்ததும் அதே இரவில்தான். இன்னொரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ அது. விடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் அங்கு வந்திருந்த எழுத்தாளர்களையும் தருணங்களையும் படம் எடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

சென்னையின் இந்த நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் தவறாமல் பார்க்கக் கூடிய முகங்கள் இவர்கள் இருவரும். பிரபுவின் ஸ்டில் கேமரா சமகால தமிழ் இலக்கிய ஆளுமைகளைத் துரத்துவது; கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளையும் உரைகளையும் சமூக ஊடகங்கள் வழி நேரடியாக ஒளிபரப்புவதோடு, காணொலி ஆவணங்களாகவும் அவற்றை மாற்றிவிடுகிறார். சமகாலத்தில் சென்னைப் புத்தகக்காட்சியோடு பிரித்துப் பார்க்கவே முடியாத இந்த இரு ஒளிக்கலைஞர்களின் பின்னணியிலும் சுவாரசியமான கதைகள் உண்டு.

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?


உலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார்கள். கதைகளின் வழியாகவே அதிகாரத்தின் சூட்சமக் கயிறுகள் இயக்கப்படுகின்றன.

நரேந்திர மோடி அதிகாலை நான்கு மணி வரை உழைக்கிறார் என்று நேற்று செல்பேசிக்கு வந்த ஒரு கதை சொன்னது. ஆச்சரியம் என்னவென்றால், அவர் நள்ளிரவு மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார் என்று முந்தைய வாரத்தில்தான் இன்னொரு கதையை வாசித்திருந்தேன். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பின் இப்படி தமிழ்நாட்டைச் சுழற்றியடிக்கும் ஒரு கதை, ‘தமிழ்நாட்டு அரசியலில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது!’