ஜனநாயக ஓட்டைகள்

                                        ந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?
அதை எல்லோரும் பேசட்டும். நாம் உருப்படியான ஒரு விஷயம் பேசுவோம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?
  
                                    குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் வர மொத்தம் 4,896 பேர் ஓட்டு போட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4120 பேர். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் - அவர் மக்களை உறுப்பினராக இருந்தாலும் சரி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும் சரி - ஒருவரின் ஓட்டு மதிப்பு 708. ஆக, 776 பேரின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,408. சரி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மதிப்பு எவ்வளவு? மொத்தம் 5,49,474. ஆனால், ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மதிப்பு நீங்கள் இருக்கும் மாநிலத்தைப் பொறுத்தது; உத்தரப் பிரதேசமாக இருந்தால் 208; தமிழகமாக இருந்தால் 176; சிக்கிமாக இருந்தால் 7. அதாவது, சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருபத்தி ஒன்பது பேர் ஓட்டை ஓர் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் ஓட்டு தோற்கடித்துவிடும்!
ஏன் இப்படி? 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலத்தின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப மதிப்பு இது!
  
                                    இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயம் உதைக்க வேண்டும். அப்படி என்றால், குறைந்த அளவிலான மக்கள் தொகையைப் பெற்றிருப்பது ஒரு மாநிலத்தின் சாபமா? மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது ஒரு மாநிலத்துக்கு கிடைக்கும் தண்டனையா? ஏனென்றால், தேசிய அரசியலில் உத்தரப் பிரதேச அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துவதும், அருணாசலப் பிரதேச அரசியல்வாதிகளுக்கு அடையாளமே இல்லாமல் இருப்பதும் இந்தப் பிண்ணனியில்தான். அடுத்த மறுவரையறையின்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவ மதிப்புகூட இறங்கலாம். மக்கள்தொகை குறைந்த மாநிலங்கள் எப்படியெல்லாம் அழுத்தப்படுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது!
இன்னொரு கேலிக்கூத்தும் இதில் உண்டு. மாநிலங்கள் அவைக்கு நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள், மக்கள் அவைக்கு நியமிக்கப்படும் 2 ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தலில் ஓட்டு கிடையாது. அதாவது, சச்சினைக் கௌரவப்படுத்த நாம் அவருக்கு உறுப்பினர் உதவி அளிப்போம். ஆனால், அவருக்கு ஓட்டு கொடுக்க மாட்டோம். என்னே கௌரவம்?
  
                                    குடியரசுத் தலைவர் அதிகாரமற்றவராக இருக்கலாம். எனினும், அவரைத் தேர்ந்தெடுப்பது தேசிய விவகாரம். நாம் வளர்ச்சிப் பணிகள் போன்ற விஷயங்களை மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம். ஆனால், தேசிய அளவிலான முடிவுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும். அதேபோல, ஒரு துறை சார்ந்த சாதனைக்காகக் கௌரவிக்கப்படும் நியமன உறுப்பினர்களுக்கு, தேச நலன் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.    இந்திய நாடாளுமன்றம் தன்னுடைய 60 ஆண்டு வரலாற்றைக் கொண்டாடும் இந்தத் தருணத்திலேனும், நம்முடைய ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பதுபற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்!
ஆனந்த விகடன் மே 2012

1 கருத்து:

  1. ஜெய்சங்கர்30 மே, 2012 அன்று AM 8:48

    ஜனநாயக அமைப்பில் இருக்கும் ஓட்டைகளால் வாழ்பவர்கள், அதை அடைக்கப் பார்ப்பார்களா என்ன சமஸ்? அப்படி ஓட்டைகளுக்குள் இருந்து கொண்டு கை நீட்டுபவர்களிடம் வாக்குச்சீட்டை பரிசளிப்பவர்களாக வாக்காளர்கள் இருக்கும் போது, ஓட்டையை அடைக்க யார் யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு