குறைந்தபட்ச வாழ்வூதியம் நமக்கு எப்போது சாத்தியமாகும்?




களங்கமற்ற மாலை. வைரத்தில் ஊடுருவி சிதறுண்டு வெளிவரும் கதிர்கள்போல, நகரத்தின் கட்டிடங்களில் மோதிச் சிதறி வீதிகளில் வந்து விழுந்திருந்தது சூரிய ஒளி. இன்னும் இரண்டு நாட்கள். மூன்றாவது நாளன்று இந்தியா புறப்பட வேண்டும். அதற்குள் இன்னும் மூன்று விஷயங்கள் தொடர்பில் தெரிந்துகொண்டுவிட விரும்பினேன்: பிரிட்டனில் தொழிலாளர் நிலை, பிரிட்டன் கிராமங்களின் இன்றைய சூழல், பிரிட்டனில் தமிழ் மக்கள் வாழ்க்கை.

இதற்கு லண்டனுக்கு வெளியே கொஞ்சம் பயணிக்க வேண்டும். விடுதி வாழ்க்கையைத் தாண்டி, வீட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். யாரேனும் ஒரு தமிழ் நண்பர் உடனிருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. நண்பர் ஷங்கரிடம் பேசினேன். அவருடைய நண்பர் ராஜை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜ். லண்டனில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். ஹால்போன் பகுதியில் அவர் அலுவலகம் இருந்தது. புறநகர்ப் பகுதியில், பிரஸ்டனில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். விடுதிக்கு என்னை அழைக்க வந்திருந்தார்.



“வீட்டுக்குப் புறப்படும் முன் என் அலுவலகத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பக்கத்தில்தான் செயின்ட் பால் பேராலயம். லண்டன் வந்துவிட்டு அதைப் பார்க்காமல் நீங்கள் நாடு திரும்பக் கூடாது. அப்படியே தேம்ஸ் நதியோரம் கொஞ்சம் நடக்கவும் செய்யலாம். இரவு உணவை முடித்துவிட்டு நாம் வீட்டுக்குச் செல்லலாம்.”

வெளியூர் செல்லும்போது கூடுமானவரை பயணத்தின் போக்கை நண்பர்கள் கைகளில் ஒப்படைத்துவிடுவது என்னுடைய வழக்கம். அறையைக் காலிசெய்துவிட்டு இருவரும் புறப்பட்டோம். இருவருக்குமே நடப்பதில் ஆசை இருந்ததால் நடந்தே அவர் அலுவலகத்துக்குச் செல்வது என்று முடிவெடுத்து நடந்தோம்.

“இங்கிருந்து ஐந்து மைல் தொலைவு என்னுடைய அலுவலகம். ஊரில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்க மாட்டேன். இங்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற சௌகர்யம் பத்து மைல் என்றாலும் அலுக்காமல் நடக்கச் சொல்கிறது. அப்புறம், இது முடிவே இல்லாத வேடிக்கை நகரம். அதுவும் சாயங்காலம் ஆகிவிட்டால், உற்சாகத்தைக் கேட்கவே வேண்டாம்.”

பிரதான சாலையைத் தவிர்த்து, குறுக்கு நெடுக்காக அழைத்துச் சென்றார் ராஜ். நகரின் சந்து பொந்துகள் அவருக்கு சகஜமாக இருந்தன. ஒரு புராதன அழகு அந்தச் சந்துகளில் கவிந்திருந்தது. இரு பக்கங்களும் உயர்ந்து நின்ற கட்டிடங்களைத் தாண்டி உள்ளே வந்த வெளிச்சம் குறைவு என்பதால், வேறு ஒரு காலகட்டத்தின் ஒளி அங்கே புகுந்ததுபோல் இருந்தது. கடந்து சென்ற பெண்கள் யாவரும் அழகாகத் தெரிந்தார்கள். நம்மூரில் டீக்கடைகள் முன் நின்று கூட்டமாக டீ குடிப்பதுபோல மதுக் கடைகளின் முன் நான்கைந்து பேராகப் பேசியபடி பீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். நுரை ததும்பும் பெரிய பீர் கோப்பை ஒன்றைக் கையில் ஏந்தியிருந்த பெண் சிரித்தபடி கையை ஆட்டினாள்.

“நான் ஊர் திரும்புவதற்குள் ஒரு துப்புரவுத் தொழிலாளியைச் சந்திக்க விரும்புகிறேன். முடியுமா?”

பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகப் பார்த்தார் ராஜ்.

“இங்குள்ள உயர்மட்ட உலகத்தை ஓரளவுக்குப் பார்த்துவிட்டேன். என்னுடைய ஆர்வம் இங்குள்ள சாமானிய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதிலேயே இருக்கிறது. முடிந்தால், இங்கே பதுங்கி வாழும் அகதிகளையும்கூடச் சந்திக்க நினைக்கிறேன்.”

“நீங்கள் அவர்களைச் சந்திப்பதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால், அவ்வளவு சீக்கிரம் இங்கு யாரும் பேச மாட்டார்கள்.”

பேசிக்கொண்டே நடந்தோம். ஒரு மணி நேர நடையில் ஹால்போனை வந்தடைந்திருந்தோம். அது அலுவலகப் பணி முடிவடையும் நேரம். அலுவலக வரவேற்பறையின் மையப் பகுதியை காபி-மதுவிடமாக வைத்திருந்தார்கள். ஆண் – பெண் இருபாலரும் தானியங்கி இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி, நீண்ட குவளைகளில் பீரை நிரப்பிப் பருகியபடி சென்றனர்.

“பிரிட்டனில் தண்ணீரைக் காட்டிலும் பீர் அதிகம். நல்ல தரமான பீர். இந்தக் குளிருக்கு இதமாக இருக்கும். கொஞ்சம் குடிக்கிறீர்களா?”

நான் ரெட் ஒயின் கேட்டேன். அலுவலகத்தில் பணியிடம் ஒவ்வொருவருக்கும் பரந்து விரிந்திருந்தது. நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார் ராஜ். கொஞ்ச நேரம் அளவளாவினோம். “நாம் கிளம்பலாம்” என்றார். செயின்ட் பால் பேராலயம் நோக்கி நாங்கள் நடந்தோம். “நாளெல்லாம் அலுவலகத்திலேயே குடிக்க வாய்ப்புள்ள இந்த நாட்டில், யாரும் வீதியில் போதையடித்துக் கிடப்பதை நாம் பார்க்க முடியாது. குடி அவர்களுக்கு ஒரு கிக். நாம் காபி குடிப்பதுபோல. நம்மூர் சூழலை நினைத்தால் வேதனைதான் மிகுகிறது.”

“எல்லாவற்றையும்போல குடிக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஏழைகள் – பணக்காரர்கள் என்ற வரையறைக்கு அப்பாற்பட்டு, இங்கே குடிக் கலாச்சாரம் கொண்டாட்டத்துடன் இணைந்திருக்கிறது; நாம் அதைக் குற்றத்துடன் இணைத்து வைத்திருக்கிறோம்.”

“நீங்கள் துப்புரவுப் பணியாளர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்றீர்கள் அல்லவா, அங்கே ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்.”

உணவு விடுதியின் வெளியே சாலையைப் பார்த்தபடி போடப்பட்டிருந்த மேஜை – நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்தச் சீருடை மனிதர் பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அன்றைய பணியை முடித்திருக்க வேண்டும். முகத்தைக் களைப்பு போர்த்தியிருந்தது. ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். தாடி முழுக்க நரைத்திருந்தது. தாட்டியமான உடல். காலையில் நான் பிரதமர் வீட்டின் முன் பார்த்த ராணுவ வீரரை நினைவூட்டுவதுபோல இருந்தது அவருடைய கூரிய பார்வை. அவர் சாப்பிடும் வரை காத்திருந்து, பின்னர் நாங்கள் அவரை அணுகினோம். ராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னைப் பற்றி கூறினார். சினேகப் பார்வையுடன் கை குலுக்கியவர் பேட்டியை மட்டும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மீண்டும் நடக்கலானோம்.

“பொதுவாகவே பிரிட்டிஷார் எடுத்த எடுப்பில் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள். ஆனாலும், நாம் முயற்சிப்போம்.”

“துப்புரவுப் பணியிலும் துப்புறவுப் பணியாளர்களிடத்திலும் ஒரு அரசாங்கம் வெளிப்படுத்தும் அக்கறையையே அந்தச் சமூகம் கொண்டிருக்கும் மனிதத்தன்மைக்கான அளவுகோலாக நான் நினைக்கிறேன். அதனாலேயே ஒரு துப்புரவுத் தொழிலாளியையேனும் இங்கு பேட்டி கண்டுவிட நினைக்கிறேன்.”

ராஜ் ஆமோதித்தார். “கொஞ்சம் உங்கள் கண்களை மேல் நோக்கி எதிரே பாருங்கள். உலகின் மகத்தான கட்டிடங்களில் ஒன்றின் முன் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்…”.

மனித குலத்தின் ஆற்றல்கள் அத்தனையும் ஒன்று சேர்ந்து நிற்பதுபோல எதிரே வானுயர நின்றது செயின்ட் பால் பேராலயம். பிரம்மாண்டம். பேரழகு. பிரமிப்பு. வலி. ஆழமான துயரம்.

“ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு இதற்குண்டு. மீண்டும் மீண்டும் அழிபட்டு, மீண்டும் மீண்டும் எழுந்த பேராலயம் இது. இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது 1666-ல் லண்டனில் ஏற்பட்ட பெருந்தீவிபத்துக்குப் பிறகு கட்டப்பட்டது. அந்த விபத்துக்குப் பிறகு லண்டன் நகரை உயிர்ப்பித்த கட்டிடக் கலைஞர் கிறிஸ்டோபர் ரென்தான் இந்தப் பேராலயத்தையும் கட்டினார். அவரது சமாதி உள்ளேயே இருக்கிறது. இங்கே புதைக்கப்படுவதை மனிதப் பிறவியின் பேறுகளில் ஒன்றாகப் பேசுவார்கள் பிரிட்டிஷார். ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், வில்லியம் பிளேக், அலெக்ஸாண்டர் பிளம்மிங், வின்சென்ட் சர்ச்சில் என்று உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு மட்டுமே அந்தப் பெருமை வாய்த்திருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய குவிமாடக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 366 அடி உயரம். ‘முழு வாழ்க்கையின் மூன்று பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் இங்கே மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய சொற்பொழிவு உலகப் பிரசித்தம்.” என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார் ராஜ்.

பிரிட்டன் வந்தது முதலாக மனதின் அடியாழத்தில் படர்ந்துகொண்டிருந்த அந்த இனம் புரியாத வலி இன்றைக்கு நெஞ்சின் மேல் பரப்புக்கு வந்திருந்தது. அது இப்போது இனம் புரிந்தது. “பிரிட்டனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது ராஜ். இங்குள்ள குடிமைக் கலாச்சாரம், பன்மைக் கலாச்சாரம் ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், இந்தப் பிரம்மாண்டம், உடலைக் குத்திக் கிழிக்கும் இந்தக் குளிர், கொட்டும் பனி, மழை இடையே நிறுவப்பட்டிருக்கும் இந்தப் பிரம்மாண்டம்.. அது பெரிய வலியையும் துயரத்தையும் தருகிறது. யோசித்துப்பார்த்தால், ஒவ்வொரு பிரம்மாண்டத்துக்கும் பின் எவ்வளவு பெரிய சுரண்டல், மனித ரத்தம், மானுடத் துயரம் இருக்கிறது?”


இருவருமே சிறிது நேரம் பேச்சற்றவர்களாகிப்போனோம். பின்னர், ஒவ்வொரு இடமாகச் சுட்டி விளக்கினார் ராஜ். இருட்டு பரிபூரணமாக இறங்கியிருந்தது. வீட்டுக்கு காரில் போய்விடலாம் என்றார். சாலையின் மறுபக்கம் நின்ற டாக்ஸிக்காரருக்கு சமிக்ஞை காட்டினார். டாக்ஸிக்காரர் கவனிக்கவில்லை. கூப்பிட்டிருக்கலாம். ராஜ் சாலையைக் கடந்து சென்று டாக்ஸியை அழைத்து வந்தார். “இங்கே டாக்ஸிக்காரர்களை ‘டாக்ஸி’ என்று கூவி அழைக்க முடியாது” என்றபடி சிரித்தவர், டாக்ஸிக்குள் என்னை உள்ளடக்கிக்கொண்டு, “சகோதரரே, லண்டனின் டாக்ஸி கலாச்சாரத்தைப் பற்றி இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் நண்பருக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று ஓட்டுநரிடம் சொன்னார்.

“லண்டன் மாநகரின் கலாச்சாரச் சின்னங்களில் ஒன்று இந்தக் கறுப்பு டாக்ஸி. இங்கே டாக்ஸியைக்கூட பணம் கொடுத்து வாங்கிவிடலாம், டாக்ஸி ஓட்டுநர் உரிமம் வாங்குவது எளிதல்ல. ஓட்டுநராக விரும்புபவர் லண்டன் சாலைகளைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். நகரின் மையத்தில் சாரிங் கிராஸ் என்று ஒரு பகுதி இருக்கிறது, அந்த ஆறு மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 320 வழித்தடங்கள், 25,000 வீதிகள், 20,000 பொது அடையாளச் சின்னங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நகரில் இன்றைக்கு 21,000 கறுப்பு டாக்ஸிகள் ஓடுகின்றன. இந்த வண்டிகளை இங்கே ‘ஹேக்நே’ என்று சொல்வார்கள். லண்டன் மக்களுக்கு பொதுப் பயன்பாட்டுக்கான தனி வாகனம் 1639-ல் உருவானது. அப்போது பயன்பட்ட குதிரை கோச்சுகளுக்கு ‘ஹேக்நே’ என்று பெயர். பிரெஞ்சு மொழி வார்த்தை அது. 1908-ல் குதிரைகளுக்குப் பதில் மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்ட வண்டிகள் வந்தன. என்றாலும் அந்தப் பெயர் அப்படியே நீடிக்கிறது.”




ஓட்டுநரிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்றேன். “ஆப்கன். இப்போது இதுவே என் நாடாகிவிட்டது” என்றார். “ஆறு பேர் உட்காரலாம் இல்லையா... இதில் உள்ள தாராள இட வசதி என்னை மிகவும் கவர்கிறது” என்றேன். “என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்தால் ஏழு பேர் உட்காரலாம். இந்த கோச்சின் கேபின் எப்படி செய்யப்பட வேண்டும், எவ்வளவு நீள, அகலம், உயரம் இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு. வெள்ளையர்கள் ‘பவ்லர் ஹேட்’ என்று ஒரு தொப்பி போடுவார்கள்.  அதைக் கழற்றாமல், தலை இடிக்காமல் அப்படியே உள்ளே உட்கார்கிற அளவுக்கு கோச்சின் உயரம் இருக்க வேண்டும். அதேபோல, 25 அடிக்குள் வண்டி சக்கர வட்டமாகத் திரும்பும் வகையில் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் லண்டனில் சவாய் ஹோட்டல் முன் திரும்பும் இட அகலம் அவ்வளவுதான். அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதிகளைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நல்லதுதான். லண்டன் டாக்ஸியில் பயணிக்கும் ஒருவர் தனி கார் வேண்டும் என்று நினைக்க மாட்டார்” என்றார்.

ராஜ் பேசலானார்.

“டாக்ஸிக்காரர்களைப் பெயரிட்டு அழைக்க முடியாது என்றேனே ஏன் தெரியுமா?”

“ம்ஹூம்…”

“உடலுழைப்புத் தொழிலாளர்களைத்தான் நாம் இப்படிப் பெயரிட்டு அழைக்கிறோம். உடலுழைப்பைக் கீழானதாகக் கருதும் மனோபாவம்தான் காரணம். பிரிட்டனைப் பொருத்தளவில் இங்கே தொழிலின் பெயரால் யாரும் யாரையும் அவமானப்படுத்திவிட முடியாது. அதைச் சுட்டுவதுபோலவே டாக்ஸிக்காரர்களை ‘ஏ... டாக்ஸி’ என்றழைப்பதைச் சட்ட விரோதமாக்கி வைத்திருக்கிறார்கள்.”

லண்டன் நகருக்கு வெளியே டாக்ஸி பயணப்பட்டபோது வீடுகளின் அடர்த்தி குறைந்து, மரங்களின் அடர்த்தி அதிகமானது. குளிரைப் பொருட்படுத்தாது கார் கண்ணாடியை இறக்கச் சொன்னேன். தாவரங்களின் மணம் காருக்குள் சீறிக்கொண்டு வந்தது. ஏற்ற இறக்கம் மிக்க சாலையில் வண்டி பாய்ந்தது. ராஜ் தங்கியிருந்த வெம்ப்ளி - பிரஸ்டன் பகுதியே முன்பு கிராமப்புறமாக இருந்தது என்று அவர் சொன்னார்.

 “பிரிட்டிஷார் நினைவுகளில் வெம்ப்ளி இன்னமும் பெரிய பெரிய மரங்கள், நீரோடைகள், மர அறுவை ஆலைகள், பண்ணை வீடுகள் பொதிந்த படிமம். 1934-ல் இதை நகரமைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். நிர்வாகரீதியாக இன்று லண்டனின் ஒரு பகுதியாக இது ஆகிவிட்டாலும், மிச்சமிருக்கும் கிராமத்தன்மையை இன்னமும் நீங்கள் உணர முடியும்.”


ராஜ் வீட்டின் முன் கார் நின்றது. கீழே இரண்டு, மேலே இரண்டு என்று நான்கு வீடுகள் சேர்ந்தமைந்த வீடாக அது இருந்தது. ஒரு படுக்கையறை, குளியலறை, இரு குடும்பங்களுக்குப் பொதுவான சமையலறையைக் கொண்ட ராஜ் வீட்டின் வாடகை இந்திய மதிப்பில் எழுபத்தைந்தாயிரம் ரூபாய். புத்தகங்களால்  வீட்டை   நிறைத்திருந்தார். சுந்தர ராமசாமியால் இலக்கியம் நோக்கி உள்ளிழுக்கப்பட்டவர்களில் ஒருவர் ராஜ் – முழுப் பெயர் ராஜகோபால். ‘க’ என்று ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பேச்சுவாக்கில் இதையெல்லாம் கடந்துவிட்டு உணவைத் தயாரிக்கலானார்.

நல்ல சாண்ட்விச், ஒரு முழு நீளக் கோப்பையில் பால் கொடுத்தார். “இங்கே பால், காய் – கனிகள் விலை மலிவு. ஏனையவற்றுடன் ஒப்பிடும்போது. உள்நாட்டு உற்பத்தியும் உண்டு என்றாலும், ஐரோப்பாவிலிருந்து வருவது அதிகம்.”

‘‘மேற்கில் இயற்கை வேளாண்மைக் கருத்தாக்கம் எந்த அளவில் இருக்கிறது?”

“தீவிரமான விவாதங்கள் போகின்றன. இயற்கை வேளாண் பொருட்களுக்கு கிராக்கியும் தனிச் சந்தையும் உருவாகியிருக்கிறது. இன்னொருபுறம் விலங்குகளைக் கொல்லாமல் நாமாகவே இறைச்சியை உற்பத்திசெய்ய முடியுமா எனும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.”

“அதாவது, சைவ அசைவம்… ஹாஹ்ஹா….”

பேச்சு சுவாரஸ்யம் வீட்டிலேயே முடக்கிவிட்டது. காலையில் சீக்கிரமாகவே புறப்பட்டோம். ரயில் அல்லது பஸ்ஸில் மட்டுமே பயணம் என்று முடிவெடுத்தோம். “வெம்ப்ளி இன்றைக்கு ஒரு குட்டி இந்தியா என்று சொல்லலாம். இங்கே வசிப்பவர்களில் சரிபாதியினர் இந்தியர்கள். சொல்லப்போனால், ஆங்கிலேயர்கள் வெறும் ஐந்து சதம்கூட இருக்க மாட்டார்கள். ஆசியர்கள்தான் பெரும்பான்மையினர். ஆப்பிரிக்கர்களும் கணிசமாக இருக்கின்றனர்.”


பிரஸ்டன் ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு குஜராத்தி உணவு விடுதியில் டீ வாங்கிக் கொடுத்தார். அவர்களுடன் கொஞ்சம் உரையாடினோம்.

முப்பதாண்டுகளுக்கு முன் குஜராத்தி தம்பதியால் தொடங்கப்பட்ட அந்த உணவு விடுதி, இன்று அந்தத் தம்பதி, அவர்களுடைய பொறியியல் பட்டதாரி மகன், மேலும் ஐந்தாறு பேருக்கு வேலை அளிக்கும் களமாக இருந்தது. “இந்தியாவில் வாழ்வதற்குப் பெரிய வழிகள் இல்லாமல், ஆப்பிரிக்கா சென்றோம். அங்கே வேலை செய்து சம்பாதித்த பணத்துடன் இங்கே வந்து இந்தக் கடையைத் தொடங்கினோம். ஐந்தாண்டுகளுக்கு ஓரிரு முறை குஜராத் செல்வதுண்டு. உறவுகள் எல்லாம் அங்கே இருந்தாலும், இனி இந்தியா திரும்பும் நினைப்பெல்லாம் இல்லை” என்று அந்தப் பெண்மணி சொன்னார்.

இளைஞன் – அந்தப் பெண்மணியின் மகன் சமீபத்தில் குஜராத் சென்று திரும்பியிருந்தான். தனக்கு விவரம் தெரிய இப்போதுதான் இந்தியா சென்றுவந்ததாகச் சொன்னான். இந்திய அனுபவம் எப்படியிருந்தது என்று கேட்டேன். “பயங்கரம். தட்பவெப்ப நிலை, உணவு, மக்களின் பழக்கவழக்கம், மக்களை அரசு நடத்தும் விதம் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. நான் உங்கள் நாட்டைப் பற்றி இப்படிச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும்” என்றான் - அவன் பிரிட்டிஷ் பிரஜை.

பேச்சு அரசியல் நோக்கி நகர்ந்தது. இப்போது அவன் அப்படியே மாறினான். பிரதமர் மோடி மீது அபாரமான மரியாதை அவனுக்கு இருந்தது. “இந்தியா ஒரு மிகப் பெரிய சக்தி; மக்கள் ஊழல்வாதிகள். அதிகாரிகள் மோசம். பாஜகவும் ஒழிசல் கட்சி. யார் துணையும் இல்லாததால், மோடியால் மாற்றங்களை உண்டாக்க முடியவில்லை; மோடி ஒரு உலகத் தலைவர்” என்றான். இன்னும் சில வாரங்களில் மோடி லண்டன் வரவிருந்தார். மோடி பங்கேற்கும் கூட்டம் தொடர்பில் ஆர்வமாகப் பேசினான். பிரிட்டனில் வாழும் பஞ்சாபிகள், தமிழர்கள், ஏனைய இந்தியச் சமூகங்கள் இடையே ஏதும் பிணைப்பு இருக்கிறதா என்று கேட்டேன். குஜராத்தி சம்மேளனத்தைத் தாண்டி அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தமிழ்நாடு சம்பந்தமாக அவன் அறிந்திருந்த ஒரே சொல் ரஜினி. நாங்கள் விடைபெற்றோம்.

“புலம்பெயர் இந்தியச் சமூகங்களின் இன்றைய மனநிலையை உணர்ந்துகொள்ள நீங்கள் இந்த இளைஞனைச் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அவனைப் பொறுத்த அளவில் குஜராத், குஜராத்திகள் வழியே அவனுக்குத் தெரிவதுதான் இந்தியா. குஜராத்திகளுக்கு அடுத்து, இங்குள்ள பெரும்பான்மை இந்தியச் சமூகம் பஞ்சாபி சமூகம். பிராந்தியரீதியாக இரு சமூகங்களும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பவர்களும்கூட. ஆனால், பாகிஸ்தான் பஞ்சாபிகளுக்கு, இந்திய பஞ்சாபிகளுடன் உள்ள உறவுகூட குஜராத்திகளுக்கும் பஞ்சாபிகளுக்கும் இடையே கிடையாது.”

“நம் தமிழர்களும் அப்படித்தானே?”

“உண்மைதான். ஆனால், நான் சொல்வதில் வேறு அரசியலும் உண்டு. இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியச் சமூகத்தினரில் மூன்றில் ஒருவர் குஜராத்தி. பிரிட்டனில் உள்ள இந்தியச் சமூகத்தினரில் சரிபாதியினர் குஜராத்திகள். இந்தியப் பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கு குஜராத்திகளுடையது என்பது உங்களுக்குத் தெரியும். பிரிட்டனிலும் இந்திய முதலீட்டில் குஜராத்திகளுக்குப் பெரிய பங்குண்டு. அவர்கள் தங்களுக்கான அரசியல் ஒன்றை இங்கே உருவாக்க நினைக்கிறார்கள். மோடியை சரியான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். இந்தியன் டயாஸ்பரா என்ற பெயரில் இன்றைக்கு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் நடந்துகொண்டிருக்கும் எல்லா ஆட்டங்களுக்கும் பின்சக்தி குஜராத்தி லாபிதான். 2016-ல் இங்கே வெம்ப்ளி மைதானத்தில் மோடி பங்கேற்ற பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் குஜராத்தி தொழிலதிபர் மனோஜ் லட்வா. பிரச்சினை என்னவென்றால், இவர்களின் வெளி அடையாளம் மூவர்ணக் கொடி என்றாலும், அரசியல் ஒட்டுமொத்த இந்தியச் சமூகங்களை உள்ளடக்கியது அல்ல.”

“கேள்விப்பட்டேன். இப்போதைய காமன்வெல்த் லாபியில்கூட மனோஜ் லட்வாவுக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்று சொன்னார்கள்.”

“இங்கே மட்டும் அல்ல; இங்கிருந்தபடியே இந்தியாவிலும் தங்களுக்கான அரசியல் தளத்தை நிறுவ நினைக்கிறார்கள். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குஜராத் வங்கிகளில் உள்ள பத்தில் ஒரு பங்கு பணம் - ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வெளிநாடுவாழ் குஜராத்திகளுடையது. ஒருபோதும் திரும்பாத ஊரின் அரசியலை இங்கிருந்து தீர்மானிக்க விரும்புகிறார்கள். குஜராத்திகள் மட்டும் அல்ல; இந்தியாவுக்கு வெளியே வாழும் ஒவ்வொரு சமூகமும் இன்று இந்தியாவில் இதைச் செய்ய முற்படுகிறார்கள்.”

“இந்தியச் சமூகங்கள் இங்கே ஒரு குடையின் கீழ் திரள்வது சாத்தியம் இல்லையா?”

“ம்ஹூம். தமிழர்களிடையே இங்கே எவ்வளவு பிளவுகள் உண்டு தெரியுமா? ஏனைய இந்தியச் சமூகங்களுடனும் உறவு கிடையாது. தமிழ் பேசுவோர் இடையிலும், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற பெரிய பிளவு உண்டு. அந்தந்தப் பிரிவுகளுக்குள்ளும் சாதிப் பிளவுகள் தனியே உண்டு.”

ரயில் நிலையத்தை வந்தடைந்திருந்தோம். ரயில் நிலைய பெஞ்சுகளைப் பார்த்தேன். நான்கு பேர் அமரக்கூடிய ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு இருக்கை இயலாதாருக்காக ஒதுக்கப்பட்டு, அதில் சின்ன அளவில் அறிவிப்பு பொதிக்கப்பட்டிருந்தது. ஏதேனும் உதவி தேவைப்படின், நடைமேடையில் நின்றிருந்தபடியே ரயில் நிலைய மேலாளரைத் தொடர்புகொள்ள தகவல் தொடர்புக் கருவிகள் நடைமேடையில் நிறுவப்பட்டிருந்தன. “உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்கூட, ரயில் நிலைய மேலாளரை நீங்கள் அணுகலாம். ஒரு பேட்ஜ் கொடுப்பார்கள். அதை அணிந்துகொண்டால் ரயிலில் நீங்கள் நிற்க வேண்டியிருக்காது. உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து இடம்கொடுப்பார்கள்.”

“இதையெல்லாம் செய்ய நிதி ஒரு விஷயம் அல்ல; சக மனிதர் மீதான அக்கறை மட்டுமே வேண்டியிருக்கிறது, இல்லையா?”

ரயிலில் பெரிய கூட்டம் இருந்தது. பெரும்பாலானோர் கைகளில் புத்தகம் இருந்தது. ஒரு பெண் தன்னுடைய கணவரை ஒரு குழந்தைபோல மார்பில் சாய்த்து தூங்கச் செய்துகொண்டிருந்தாள். ஒரு இளம்பெண் கையில் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தபடி கடந்தாள். குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வலியுறுத்தியது அந்தப் பிரசுரம். பிரிட்டனில் நீங்கள் யாரை வேலைக்கு அமர்த்தினாலும், ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்ச ஊதியம் என்று அரசு நிர்ணயித்திருக்கும் தொகைக்குக் குறைவில்லாத ஊதியத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். 2018 கணக்குப்படி லண்டனில் ஒரு மணி நேர குறைந்தபட்ச வாழ்வூதியம் 8.75 பவுண்டு – கிட்டத்தட்ட 850 ரூபாய். ஊதியத்தைக் குறைத்தால் அது குற்றம். நான் உற்சாகமானேன்.

“ராஜ் குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயம் இங்கே எப்படி வேலை செய்கிறது?”

“பிரிட்டிஷ் அதிகாரிகளே உங்களுக்கு இதுபற்றி நிறையச் சொல்லியிருப்பார்களே...”

“ஆமாம், கேட்டேன். கடந்த கால் நூற்றாண்டில் பிரிட்டன் மக்களிடையே பெருவரவேற்பு பெற்றிருக்கும் திட்டம் இது என்று சொன்னார்கள். சில குறைபாடுகள் இருந்தாலும் ஏழை - பணக்காரர் வேறுபாட்டுணர்வைக் குறைப்பதில் இது ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என்று என்னுடைய தோழி ஹெலன் சொன்னார்.”

“ஆமாம், முதலாளித்துவ நாடு என்றாலும், தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் இவற்றிலெல்லாம் இங்கே பெரிய அக்கறை காட்டுவார்கள்.”

“எனினும், ஒட்டுமொத்த ஐரோப்பாவுடன் ஒப்பிட பிரிட்டன் கொஞ்சம் கீழேதான் இல்லையா? ஜெர்மனியில்

2015-லேயே மணிக்கு 8.5 யூரோ குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவு.”

“உண்மை. ஜெர்மனி அந்த முடிவை எடுத்தபோது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அதிர்ந்தது. ஐரோப்பா முழுவதும் ஒரே விதமான குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயத்தைக் கொண்டுவரலாம் என்றுகூடப் பேசப்பட்டது.”

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரும்பான்மையினர் இன்று குறைந்தபட்ச வாழ்வூதியம் உயர்த்தப்படுவதை ஆதரிக்கின்றனர். எல்லா நாடுகளிலுமே செலாவணியின் மதிப்பு குறைந்துவருகிறது. வெளியே ஊதியம் உயர்த்தப்படுவதுபோலத் தெரிந்தாலும் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டேவருகிறது என்பதுதான் உண்மை. அத்துடன் எல்லா நாடுகளிலுமே மக்களுக்குக் கல்வி, சுகாதாரச் செலவுகள் பெரும் சவாலாக உருவெடுத்துவருகின்றன. ஊதியம் உயராவிட்டால் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து, சமூக அமைதி கெடும் என்ற எண்ணம் வளர்ந்த நாடுகள் முழுவதுமே பரவுகிறது.

பொருளாதாரரீதியாக முன்பு குறைந்தபட்ச வாழ்வூதியத்துக்கு எதிராகப் பல்வேறு தர்க்கங்கள் பேசப்பட்டன. இன்று அந்தக் குரல்களும் மாறுகின்றன. தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாகக் கொடுக்கப்படும் தொகையின் பெரும் பகுதி செலவுசெய்யப்படுவதால், அது பொருளாதாரச் சுழற்சியை வேகப்படுத்துகிறது. மிச்சப்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் சேமிப்பும்கூட அரசுசார் வங்கிகள், சேமிப்புப் பத்திரங்கள், வீடுகளில் முதலீடுசெய்யப்படுவதால், சமூகத்துக்கு அது திரும்புகிறது. எல்லாவற்றுக்கும் மேல் மக்களின் அடிப்படையான தேவைகள் இதன் மூலம் பூர்த்திசெய்யப்படுவதால், சமூக அமைதியை அது உத்தரவாதப்படுத்துகிறது என்கிற வாதங்கள் வலுவடைகின்றன.

“வீட்டு வாடகை, உள்ளாட்சி அமைப்புகளின் வரிகள், மின் கட்டணம், சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவு இவையெல்லாம் மட்டும் அல்லாமல், ஒரு ஊழியர் குடும்பத்துடன் மாதம் ஒரு வெளியூர் சிற்றுலாவுக்கேனும் சென்று வர முடியுமா? கிறிஸ்துமஸ், பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களிலேனும் விருந்து கொடுக்க முடியுமா? வாரம் ஒரு நாடகத்துக்கோ, சினிமாவுக்கோ சென்று வர முடியுமா? இதையெல்லாமும் யோசித்து ஊதியத்தை நிர்ணயிங்கள் என்று அரசே சொல்கிறது.”

“லண்டனில் வீட்டு வாடகை எப்படி?”

“நம்மூர்போலத்தான். தேர்ந்தெடுக்கும் பகுதியைப் பொறுத்தது. லண்டன் பெருநகரப் பகுதியில் ஒரு படுக்கையறை அடுக்ககத்துக்கே 1000 பவுண்டுகள் – நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் ஆகும். இரு படுக்கையறை என்றால், 1200 பவுண்டுகள். லண்டனுக்கு வெளியே கொஞ்சம் குறைவு. தென்கிழக்கு அல்லது தென்மேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் மேலும் குறைவு. ஆனால், அங்கே போய் வருவது சிரமம்.”

“அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது எப்படியான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்?”

“நிறைய ஏமாற்றுபவர்களும் உண்டு என்பதால், கடுமையான அபராதத்தை வசூலிப்பார்கள். அதாவது, நீங்கள் ஒருவரை ஏமாற்றினால், ஒட்டுமொத்த ஊழியர்களின் சம்பளம் எவ்வளவோ அதுபோல இருநூறு சதம் வரை அபராதம். கடந்த வருடம் மட்டும் 140 லட்சம் பவுண்டுகள் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அரசைத் தாண்டியும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சமூகத்தில் ஒவ்வொரு தரப்பிலும் இதை அக்கறையோடு பார்ப்பார்கள். உதாரணமாக, குறைந்தபட்ச வாழ்வூதியத்தை வழங்க மறுத்த நிறுவனங்கள் மீதான அபராதத்தைக் கடுமையாக உயர்த்த வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுப்பவர்களில் பிஷப் ஜஸ்டின் வெல்பியும் ஒருவர். ஏமாற்றும் நிறுவனங்களை ஊடகங்கள் அசிங்கப்படுத்திவிடும். நாட்டின் எல்லா பெரிய தொழில் நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தின் தலைமை அதிகாரி வாங்கும் ஊதிய விகிதத்துக்கும் கடைநிலை ஊழியர் வாங்கும் ஊதிய விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை வெளியிட வேண்டும். இது குறைக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஒலிக்கின்றன.”

நான் இந்தியா திரும்பிய பிறகு, ‘தி கார்டியன்’ செய்தித்தாளை எனக்கு அனுப்பியிருந்தார் ராஜ். விம்பிள்டனில், உணவகப் பிரிவில் இரவில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குப் பகலில் கொடுக்கும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக அல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக பகல் ஊதியம் வழங்கப்படுவதைப் பெரிய செய்தியாக்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நாறடித்திருந்தது அந்த நாளிதழ்.

 நான் தேவயானி கோபர்கடே விவகாரத்தை ராஜிடம் நினைவுபடுத்தினேன். இந்திய தூதரக அதிகாரி அவர். 2013-ல் அமெரிக்காவில், தன்னுடைய வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை அளிக்காததால், கைதுசெய்யப்பட்டார். இந்திய அரசும் ஊடகங்களும் கொந்தளித்தன. “ஒரு தூதரக அதிகாரிக்கான அந்தஸ்தை அளிக்காமல், கையில் விலங்கு போட்டு எப்படி ஒரு இந்திய அதிகாரியை அமெரிக்கா கைதுசெய்யலாம்?” என்பதே இந்தியத் தார்மிகமாக வெளிப்பட்டது. ஒரு பெரிய இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி தன் வீட்டில் சொற்ப சம்பளத்துக்கு உள்ள பெண்ணிடம் சுரண்டலில் ஈடுபட்டதாக யாருமே அந்த விஷயத்தை அணுகவில்லை. “பொருளாதாரத்தில் அமெரிக்காவாகவோ, பிரிட்டனாகவோ ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நம்மவர்களிடம் இருக்கிறது. ஆனால், விழுமியங்களில் ஆண்டானடிமை நிலையிலேயே நீடிப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்,”

இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதை ரயில் ஜன்னல் வழியே சுட்டினார் ராஜ். “நாம் போக வேண்டிய தொலைவு நீண்டு கிடக்கிறது” என்றேன் நான்.

(பயணிப்போம்....)

‘இந்து தமிழ்’, அக்டோபர், 2018

1 கருத்து:

  1. நாம் போக வேண்டிய தூரமும் இன்னும் அதிகமாக இருக்கிறது.

    'நமக்கு விளம்பரம் கொடுக்கிற கம்பெனியை பத்தி தப்பா நியூஸ் போடாதனு சொல்லும் பத்திரிகை நிறுவனங்கள் வாழ்வூதியம் பற்றி இந்த ஜென்மத்தில் சிந்திக்காது.

    பதிலளிநீக்கு