ஏன் ஒரு அரசு மக்களுக்குப் பொது வீடுகளைக் கட்டித்தர வேண்டும்?



பாரோ சந்தையின் கடைவீதி நடைபாதை ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியைப் பிடித்து இழுக்காத குறையாக போலீஸ்காரர் வண்டியில் ஏற்ற யத்தனித்துக்கொண்டிருந்தார். தேங்கி நின்றவனை ராஜ் இழுத்தார். முந்தைய நாள் இரவிலிருந்து ஒரு முழு நாளும் தொடர்ந்து பெய்துவந்த மழையை வழமையான மழையோடு ஒப்பிட முடியவில்லை. குளிரின் கடுமையைக் கன்னாபின்னாவென்று மழை கூட்டியிருந்தது. குளிர் எனக்குப் பிடித்தமானது. இந்தக் குளிர் அந்தக் குளிர் அல்ல. கொலைக் குளிர். கதகதப்புக்காக அணிந்திருந்த எல்லா உடைகளையும் ஊடுருவி உடலைப் பிளப்பதுபோல நிலைகுத்தி நின்றது அது. விரலெல்லாம் தெறித்துவிடும்போல் வலித்தது.

பிரிட்டன் வந்தது முதலாகக் குளிரைக் கவனிக்கலாயிருந்தேன். இங்கே அது தனி உருவம் எடுத்திருந்தது. அச்சுறுத்தியது. பிரம்மாண்டமான கட்டமைப்புகளைப் பார்க்கும்போதெல்லாம், இருட்டில் பனிப்பொழிவால் மூடப்பட்ட கோபுரங்களின் சுதைச் சிற்பங்களின் நடுவே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒட்டிக்கொண்டு தொங்கியபடி ஓலமிடுவது போன்று இருந்தது. பனி அவர்களை மூடிவிட்டிருக்க அவர்கள் மெல்ல ஊர்ந்தார்கள்.

காவிரிப் படுகையிலிருந்து வந்த எனக்கு, மழை நாட்களில் ஏழைகள் படும் துயரம் தெரியும். நாற்புறமும் சின்ன களிமண் சுவர்கள், மேலே தென்னங்கீற்றுக் கூரை என்று எளிமையாகச் சுருங்கிவிடும் நம்மூர் குடிசைகள் ஒரு மறைப்பை ஏற்படுத்தித் தருவதையன்றி ‘வீடு’ என்று சொல்வதற்கான எந்த வரையறைக்குள்ளும் அடங்காதவை. வெயில் காலத்தில்கூட சமாளித்துவிடலாம். மழைக் காலத்தில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஆயத்தத்துடனேயே இருக்க வேண்டும். மழைத் தண்ணீரோடு சேர்ந்து வீட்டினுள் பாம்புகள் நுழையும். சூறைக்காற்றில் கூரை பறந்துபோகும். பெருவெள்ளம் வீட்டையே அடித்துச்செல்லும்.

கடலூர் அருகேயுள்ள விசூரில், திடீரென வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் அடுப்படியில் தீபாவளிக்கு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த அம்மாவையும் அக்காவையும் கண் முன்னே வாரிச் சுருட்டிச்சென்று ஒரு புதைகுழிக்குள் கொண்டுதள்ள, இருவரையும் பறிகொடுத்து பிரமை பிடித்தவனாக முகாமில் அரற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மணிவேல் கண் முன்னே வந்துசென்றான்.

ஏழைகள் எங்கும் ஏழைகள்தான். பிரிட்டனில் கூடுதல் கொடுமை குளிர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மூன்று மாதங்களிலும் குளிரில் ஏராளமான ஏழைகள் செத்துப்போகிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதமும் சேர்ந்துகொண்டிருந்தது. “நீங்கள் வந்திருக்கும் நேரமோ என்னவோ, பிரிட்டன் வரலாற்றிலேயே குளிர்மிக்க மாதம் என்று இந்த மார்ச்சைச் சொல்கிறார்கள்” என்றார் ராஜ். வெறுமையாக அவரைப் பார்த்தேன்.

“பிரிட்டனில் குளிரை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

“கஷ்டம். குளிர்காலத்தில் பகலிலேயே அதிகபட்சம் 15டிகிரி வெப்பநிலைதான் இருக்கும். இரவுகளில் சமயத்தில் -10 டிகிரி வரைகூட கீழே செல்லும். அதுவும் வட இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகளில் இன்னும் மோசம். நம்மூரில் எப்படி வெயில் காலத்தில் ஏசி இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோமோ, அப்படி இங்கே குளிர்காலத்தில் ஹீட்டர் பயன்படுத்துவார்கள். ஏசி இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம்; ஹீட்டர் இல்லாமல் வாழ முடியாது. குளிர்காலத்தில் வீட்டைப் போதுமான அளவுக்கு கதகதப்புக்குக் கொண்டுவர வசதியில்லாமலேயே வருடத்துக்கு மூவாயிரம் பேர் இங்கே சாகிறார்கள்.”

“குளிர் என்று சாவுக்கு இயற்கையை நாம் காரணமாக்கினாலும், வறுமைதான் உண்மையான காரணம், மக்களைப் பாதுகாக்காத ஆட்சியாளர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் இல்லையா?”

“ஆமாம். ஆனால், வறுமையால் குடிமக்கள் சாகக் கூடாது என்ற சூழலை உருவாக்க ஆட்சியாளர்கள் ஓரளவுக்கு இங்கே திட்டமிட்டுத் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எதன் பொருட்டெல்லாம் பிரிட்டனில் மக்கள் அதிகம் இறந்தார்களோ, அவை அத்தனைக்கும் எதிரான செயல்திட்டங்களைக் கொண்டுவந்து, மரணங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள். குளிருக்கு லட்சம் பேர் செத்த காலமும் இங்கே இருந்திருக்கிறது. இன்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தொழிற்சாலைக் கடுஞ்சூழல், சாலை விபத்துகள், புகை மாசு இப்படி அதிகமான மரணங்களை உண்டாக்கிய எல்லா விஷயங்களிலும் நிலைமையை மாற்றியமைத்திருக்கிறார்கள். பிரிட்டனின் அரசு வீடு - கவுன்சில் ஹவுஸ் தொடர்பில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?”

“ஓ… ராஜ், நானே அதுபற்றி உங்களிடம் கேட்கவிருந்தேன்.”

விரியும் நகரங்களில் பெருகும் மக்கள்தொகைக்கேற்ப வீட்டு வசதியை உண்டாக்குவதற்கான பிரிட்டனின் முயற்சி இந்தப் பொது வீடுகள். அரசே வீடுகளைக் கட்டிவிடும். அவரவர் வருமானப் பிரிவுக்கேற்ப குறைந்த வாடகையில் இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்னர் இந்த வீடுகளை வாடகைதாரர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி வீட்டை வாங்குபவர்களுக்கு, வீட்டின் மதிப்பில் ஒரு கணிசமான தொகையை அரசு மானியமாகவும் தருகிறது.



முதல் உலகப் போர் முடிந்ததும், போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு வீடு வழங்குவதாக பிரிட்டன் அரசுக்கு உதித்த திட்டம் இது. பின்னர், தொழிலாளர்கள், ஏழைகளுக்கானதாகவும் அது விரிந்தது. குடிசைகளில் மக்கள் இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கம் இத்திட்டத்துக்கு உண்டு. இதன் பின்னணியிலும் இருந்தவர் அவேய்ரன் பெவன்.

“பொது வீடுகள் தொடர்பில் நிறைய வாசித்திருக்கிறேன். எங்கேனும் நேரில் சென்று நாம் பார்க்க முடிந்தால், அது நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும்.”

“நம் வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே நிறையக் குடியிருப்புகள் இருக்கின்றன. பிரிட்டிஷின் ஏழை மக்கள் தவிர, உலகெங்கிலும் இருந்து பிழைப்புக்காக இங்கே வந்து குடியேறுவோரின் முதல் பாதுகாப்பிடமும் இந்தப் பொது வீடுகள்தான். ஈழத்திலிருந்து வந்த நம்மவர்களே நிறையப் பேர் இத்தகைய வீடுகளில் இருக்கிறார்கள். நாம் அங்கே செல்லலாம். விசேஷம் என்றால், எல்லோரையும் உள்ளடக்கிய வீடுகளாக இவை இருக்கும்.”




“எப்படிச் சொல்லுங்கள்?”

“ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் குடியிருப்புகளை உண்டாக்கி, ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தில் இருக்கும் மக்களை மட்டும் அங்கே இருத்துவதாக இந்தக் குடியிருப்புகள் இருக்காது. லண்டனை எடுத்துக்கொண்டால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பொதுக் குடியிருப்புகள் இருக்கின்றன. ஏனைய குடியிருப்புகளோடு குடியிருப்பாக இவையும் இருக்கும். ஒரு படுக்கை அறை, இரண்டு படுக்கை அறை, மூன்று படுக்கை அறை என்று வெவ்வேறு அளவிலான வீடுகள் இவற்றில் இருக்கும். நெருக்கடியாக இல்லாமல் இடம் தாராளமாக இருக்கும். ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என்று பல்வேறு கண்டங்களையும் சேர்ந்தவர்கள் இங்கே கலந்திருப்பதால், பொருளாதாரரீதியாகக் கொஞ்சம் கீழே இருந்தாலும், கலாச்சாரரீதியாக ஒரு பன்மைத்தன்மை இங்கே உருவாகிவிடும்.”

“வீடு ஒதுக்கீட்டை எப்படிச் செய்கிறார்கள்?”

“சமீபத்தில்கூட ஒரு ஆயிரம் வீடுகளுக்கான ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. ‘35% வீடுகள் எளியோருக்கு அவர்களுக்குக் கட்டுப்படியாகும் வாடகைக்கு அளிக்கப்படும் அல்லது கூட்டு உரிமை அடிப்படையில் சொந்தமாகவும் அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். 15% வீடுகள் சந்தை விலைக்கு விற்கப்படும். மீதி 50% வீடுகள் சந்தை நிலவர வாடகைக்குத் தரப்படும்’ என்று சொன்னார்கள். அதாவது, மூன்றில் ஒரு பங்கினர் நீங்கலான ஏனைய இரு பங்கினருக்குச் சந்தை விலை அல்லது வாடகைக்கே இந்த வீடுகள் கிடைக்கும் என்பதால், பொருளாதாரரீதியாகவும்கூட எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இது மாறும் வாய்ப்பிருக்கிறது.”

“லண்டனில் சேரிகள் உண்டா?”

“இது கொஞ்சம் சிக்கலான கேள்வி. ஒரே வார்த்தையில் பதில் சொல்வது என்றால், இல்லை. விக்டோரியன் காலத்தில் இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். சேரிகள் அற்ற லண்டன் என்ற கனவைச் சாத்தியமாக்கும் திட்டம் என்றும் இதைச் சொல்லலாம். அதேசமயம், லண்டனின் எல்லாப் பகுதிகளுக்கும் சமமான மதிப்பு கிடையாது. உதாரணமாக, மத்திய லண்டனுக்குள்ள கிழக்கு லண்டனுக்குக் கிடையாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதும் உங்கள் அந்தஸ்தைத் தீர்மானிக்கும்.”




“பொது வீடுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?”

“வசதியானவர்கள் மத்தியில் கொஞ்சம் கீழான பார்வை இருக்கும். ஆனால், அதற்கான எந்த நியாயமும் அந்த வீடுகளில் கிடையாது. என்னுடைய ஒரு படுக்கையறை வீட்டுக்கு நம்மூர் மதிப்பில் மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கொடுக்கிறேன். அதைக் காட்டிலும் பல மடங்கு வசதியுள்ள பொது வீடு அதில் மூன்றில் ஒரு பங்கு வாடகைக்குக் கிடைக்கும். எப்படியும் இந்த வீடுகளை வாங்க மக்களிடம் கடுமையான போட்டி இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாடகைக்குப் பொது வீடுகளுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள்.”

எந்தச் சூழலிலும் மனிதர்களுக்கு ‘மேல் - கீழ்’ வரையறையை உண்டாக்க வேண்டியிருப்பது அவலம். அன்று மாலை நாங்கள் இரண்டு தமிழ் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றோம். பசுமையான புல்வெளியின் பின்னணியில் எழிலார்ந்து கட்டப்பட்டிருந்த அந்தக் குடியிருப்புகள் எந்த வகையிலும் குறையானவையாகத் தெரியவில்லை. “நகரில் முக்கியமான இடங்களில் மக்களுக்கு இப்படி சலுகை விலையில் வீடுகள் கட்டிக்கொடுப்பதை எல்லாத் தரப்பினரும் ஆதரிக்கிறார்களா?”

“எப்படி ஆதரிப்பார்கள்? வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் வீடுகளிலிருந்து இரண்டு லட்சம் வீடுகள் வரை இப்படிக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இன்று நாட்டில் உள்ள ஆறில் ஒரு வீடு பொது வீடு. ‘ஐரோப்பிய நாடுகள் அத்தனையிலும் உள்ள பொது வீடுகளைக் கூட்டினாலும் பிரிட்டனில் பொது வீடுகள் அதிகம்; அரசின் இடங்களை இப்படி வாரியிறைக்கக் கூடாது’ என்று பேசும் கூட்டமும் இருக்கிறது. சமூக நலத் திட்டங்களுக்கு அரசின் செலவு குறைகிறது. ஆனால், நகரங்கள் நோக்கி வரும் வீடற்றவர்கள் அரசுக்குத் தார்மிகச் சங்கடம். உழைக்கும் தொழிலாளர்கள்தான் ஒரு நாட்டை நேரடியாகக் கட்டுகிறார்கள், இயக்குகிறார்கள். அவர்களை வீடற்றவர்களாக நிறுத்துவது வெட்கக்கேடு என்ற எண்ணம் இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதனால், பொது வீடுகள் நீடிக்கும்.”

“நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள். குடிமக்களை ஒரு அரசு எப்படிப் பார்க்கிறது என்பதற்கான அடையாளம் அரசு வழங்கும் வீடுகள். ஒயிட் ஹாலில் முதல் நாள் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அங்கு வந்திருந்த அமைச்சர்களிடம் வீடற்றவர்களைப் பற்றி நான் கேள்வி எழுப்பினேன். அவர் சட்டென்று எழுந்து, தன் தலையைத் தாழ்த்தி ‘இதைக் கூற நான் வெட்கப்படுகிறேன்; வீடற்றவர்களின் பிரச்சினை இன்னும் இங்கே முழுமையாகத் தீரவில்லை. ஆனால், குளிரால் வீதியில் ஒருவரும் இறந்துவிடக் கூடாது என்று பணியாற்றுகிறோம்’ என்று சொன்னார்.”

“நாம் வரும்போது கடைவீதியில் ஒரு மூதாட்டியை போலீஸ்காரர் இழுத்துக்கொண்டிருந்தார் இல்லையா? குளிர்கால முகாமுக்குத்தான் அவரை இழுத்துக்கொண்டி ருந்தார்.”

“மழை, பனி, குளிர் இவையெல்லாம் எங்கோ ஓரிடத்தில் மனிதர்களின் அறவுணர்வை அசைக்கின்றன. இது நல்லது. கொடுமைகளை இயல்பாக்கிக்கொள்வது ஒரு சமூகத்தைக் காருண்யமற்றதாக்கிவிடும். அது மனிதத்தன்மையையே இழந்துவிடும்.”

“குளிர்காலத்தில் இங்கே ஒரு விளம்பரம் செய்வார்கள். ‘கண்களைத் திறந்திருங்கள்’ என்பதுதான் அந்த விளம்பரம் சொல்லும் செய்தி. வீட்டிலிருந்து இறங்கும் ஒருவன் சாலையில் நடக்கும்போது, தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண் கொண்டு பார்த்தாலே போதும். யாரும் இங்கே இல்லாமையால் சாக மாட்டார்கள்.”

வீட்டுக்கு டாக்ஸி ஏறினோம். ‘கண்களைத் திறந்திருங்கள்.’ மனதுக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டேன்.

- நவம்பர், 2018, ‘இந்து தமிழ்’

(பயணிப்போம்...)

1 கருத்து:

  1. இந்தியாவில் இப்படி ஒரு திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு