சமஸ் சிந்தனைகளின் அர்த்தம்: தமிழவன்


சமஸின் ‘அரசியல் பழகு’ நூலைப் படித்தபோது என் மனம் மிகுந்த உற்சாகம் கொண்டது.

சமீப காலத்தில் பலர் அவ்வப்போது சமஸ் பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் சமஸுக்கும் சுமார் 35 வயது வேறுபாடு. சமஸ் நூலைப் படிக்க ஆரம்பித்தபோது, ‘மரபையும் மேற்கையும் கலந்து சுவீகரித்துக்கொண்டு வளர்ந்துள்ளாரே, என் போன்ற ஒருவரிடம் இல்லாத பல விஷயங்களை இவர் கொண்டுள்ளாரே!’ என்ற வியப்பு எழுந்ததோடு, சமஸின் சிந்தனை அடிப்படைகள் எவையாக இருக்கும் என்ற கேள்வி தோன்றியது. அதோடு சமஸின் தலைமுறையில் யார் யார் இவரைப் போல் சிந்திக்கிறார்கள் என்று தேடவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இன்றைய அரசியலின் பகட்டுக்கும் பதவி போகங்களுக்கும் வெளியில் இலக்கியம், சிந்தனை எனப் பயணப்பட்டு மேற்கத்தியச் சிந்தனைகளின் ஆழமான சில பகுதிகளைத் தமிழோடு சேர்க்க மிகுந்த பிரயத்தனங்கள் செய்பவர்களில் ஒருவன். பெருவாரித் தமிழ்ச் சமூகம் எங்களைப் போன்றவர்களின் போக்குகளை உடனடியாக அங்கீகரிக்காது என அறிந்து சிறுபத்திரிகைகளோடு கடந்த ஐம்பதாண்டுகளாக சிறுவாரித்தன்மையோடு அணி சேர்ந்திருப்பதே எங்களுடைய இயல்பாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பெருவாரியின் தமிழ் வெளிப்பாட்டை Subvert  செய்பவர்கள், அவர்களோடு உறவற்று இருப்பதில் மகிழ்ந்திருப்பவர்கள் என்றும்கூட எங்களைச் சொல்லலாம். இவ்வளவுக்கும் பல பல்கலைக்கழகங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தாலும், சிறுவாரியே என்னைப் போன்றவர்கள். சமஸ், பெருவாரித் தமிழ்ச்சமூகத்தோடு தொடர்புடையவர். கலாச்சாரம் மட்டுமே எல்லை என்று என்னைப் போல் குறுகாமல், அரசியலும் சார்ந்து பெருவாரித் தமிழ்ச் சமூகத்தோடு உரையாடும் – எனக்குத் தொடர்பில்லாத – ஊடகத் துறை சார்ந்தவர்.

நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, இதழியலாளர் ஏ.என்.சிவராமன் எழுதிய மார்க்சியத்துக்கு எதிரான விஷயங்கள் அவரது சிந்தனைக் கனத்தை கவனிக்க வைத்தாலும் பொதுவான எம்போன்றோரின் திராவிட – மார்க்சிய பங்கெடுப்பு, காரணமாக அவரை மனதளவில் மறுதலித்ததோடு, ‘ஊடகத் துறையில் ஒருவர் சிந்தனையாளராய் வந்துவிடுவாரா என்ன!’ என்ற இளக்காரமான பார்வையையே இருந்தது. அதனால்தான் சமஸின் 13 கட்டுரைகளைக் கவனமாய் படித்த எனக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படித் தமிழகத்தில் ஊடகத் துறையானது சிந்தனைத்தளத்தோடு தொடர்புற்றிருக்க முடியும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதனாலேயே சமஸ் மீதான என் வியப்புப் பன்மடங்கு ஆயிற்று.


அரசியல் பற்றிய மேலோட்டமான கருத்துகளையே தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைகளிலும் கவனித்துவந்த நான் இந்நூலில் உள்ள ‘அரசியமும் மக்களியமும்’ கட்டுரையைப் படித்தபோது பிரமித்துப்போனேன். காரணம், அக்கட்டுரையின் தமிழ் வாக்கியம் சார்ந்து செல்லும் சுயத் தீவிரம் கொண்ட மன இயக்கமும் அனைத்துலக அரசுகளின் இயங்குபோக்கைப் பற்றிய கிரகிப்பும் ஒன்றை விஞ்சி ஒன்று போட்டியிகின்றன. அரசைப் பற்றி நான் நவமார்க்ஸியம் சார்ந்து எழுதிய பலரைப் புரிந்துகொண்டதாக நினைத்திருந்தேன். சமஸ் எழுதுகிறார்: ‘மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு உருவான அரசின் ஆன்மாவை தனித்த உயிரினமாக்கி மக்களை ஒடுக்க ஆட்சியாளர்கள் முற்படும்போது அரசியம் பிறக்கிறது.’ இதுவரை தமிழில் இல்லாத ‘அரசியம்’ என்ற சொல் வழியே மதவாதத்தோடு ஸ்டேட்டிஸத்தை சமஸ் இணைக்கும் இடம் அற்புதம். ஹிட்லர் என்ற படிமத்தை / பாத்திரத்தைப் பயன்படுத்தி  இந்தியாவில் பாசிஸம் வருவது தொடர்பில் ஷம்பாலா நாவலை  வெளிக்கொணர்ந்திருந்த நான் அந்த நாவலை எழுதிய நேரத்தில் இந்த நூல் வாசிக்கக் கிடைக்காமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன்.

அண்ணாவைக் கடந்த பத்தாண்டுகளாகப் புதுமுறையில் நான் அறிந்துவருகிறேன். சமஸ், அண்ணாவின் பிரிவினைசார் கருத்துக்களுக்கு உள்ளேபோய், அரசிய இறுக்கல்வாதத்தோடு அவற்றை ஒப்பிடுவதன் மூலம், வளமான ஒரு பிராந்தியவாத ஏற்பு சார்ந்த இந்திய விளக்கத்தைத் தருகிறார். ‘பிராந்தியங்களால் ஆனது இந்தியா, அது மையமற்றது’ என்ற இடத்துக்கு மேற்கத்தியச் சிந்தனைமுறைகள் வழி நான் வந்து சேர்ந்தால், சமஸ் வெகு சல்லிசாக அவரது இயல்பான புத்திநுட்பத்தால் இதே இடத்துக்கு வேறு வழியில் வந்து சேர்கிறார். அரசமைப்பு நிர்ணய சபை விவாதத்தில் “இந்துஸ்தானி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் தங்க உரிமையில்லை” என்று ஆர்.வி.துலேகர் கூறியதை மேற்கோள் காட்டும் சமஸுக்கு, இங்கே அண்ணாவின் இந்தி எதிர்ப்புக்கு ஒரு வியக்கத்தக்க விளக்கம் கிடைக்கிறது. ஒரு சமத்துவச் சிந்தனை அண்ணாவிடம் கிரமமாய் வளர்ந்துவந்ததன் இறுதி முடிவுதான் இந்தி எதிர்ப்பு என்ற புது Thesis அவருக்குக் கிடைக்கிறது. அண்ணாவின் இந்தி எதிர்ப்பானது மைய அரசின் அதிகார வெறியை எதிர்ப்பதாய் புது விளக்கம் தந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் காந்தியின் அதிகார வெறுப்பை அண்ணாவோடு இணைக்கிறார் சமஸ். இது சமூக விஞ்ஞான நெறியியலில் புதுப்பாய்ச்சல் என்பேன். அத்துடன், ‘சமத்துவம் என்பது அடையக் கூடியதல்ல’ என்கிற சமஸ், ‘அது கீழ்ப்படுத்தப்பட்டோரைச் சார்ந்து நிற்கும் அறம்’ என்று முடிக்கிறார்.

இந்தச் சிறுநூலிலுள்ள ‘ஜனநாயகம் ஒரு தொடர் பயணம்’ கட்டுரை எனக்குப் பல காரணங்களால் முக்கியமானது. என்னைப் பொருத்த அளவில், இந்தியா இன்று எதிர்கொள்ளும் குடியுரிமை விவகாரம் தொடர்பிலான பல கருத்துகளுக்கு இதுவரை யாரும் சொல்லாத பதில் இந்தப் பத்துப் பக்கக் கட்டுரையில் வரிகளுக்கு இடையில் (Between the lines) இருக்கிறது. இந்த ஒரு கட்டுரையையே சமஸ் ஒரு நூலாய் விரித்தெழுதலாம். அந்த அளவுக்கு ஆழமான கட்டுரை. 

இப்படி மிகப் பல முக்கியமான விஷயங்களை இந்த நூல் விளக்குகிறது.

சமஸ் கட்டுரைகளில் ஒரு கவிதையைப் படிக்கும் அழகு இருக்கிறது. அதற்கான காரணம் இவரது படைப்பியல் அழகுடன் கூடிய சிந்தனை ஆகும். பெரியாரையும் இந்த அழகியல் பார்வை மூலம் சமஸ் அளக்கிறார். கருத்தும் அழகியலும் இணைவது, ஒருவருக்கு மன இயக்கத்தில் நுட்பம் கூடும்போதுதான்.  கவிதை என்பது வேறல்ல என்றே எனக்குப் படுகிறது.

இப்படி ஒரு நூலை அளித்தமைக்கு சமஸுக்கு நாம் நன்றி சொல்வோம்.



தமிழவன், சமூக அறிவியலாளர், ‘திராவிடம் தமிழ் தேசம் கதையாடல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: carlossa253@hotmail.com

1 கருத்து: