மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் எல்லோருமே கூட்டாளிகள்: கெஜ்ரிவால்


                 இந்தியாவிலேயே அதிகம் கவனிக்கப்படும் நபராகி இருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் வாயைத் திறந்தாலே, அது செய்தியாகிறது. அவருடைய வீட்டை எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன, 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு வாகனங்கள். நூற்றுக்கணக்கான கேமராக்கள் எந்த நேரமும் அவரை மொய்க்கின்றன. அரசு நிர்வாகத்தில் புரையோடிக்கிடக்கும் லஞ்ச ஊழலைப் பார்த்து வெறுத்து, இந்திய வருவாய்ப் பணியை உதறித் தள்ளியவர், தன்னுடைய தொடர் போராட்டங்களால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர், 'மகசேசே’ விருது பெற்றவர் என்கிற அடையாளங்கள் அவர் மீது நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. இந்திய அரசியல்அமைப்புச் சட்ட விரிவாக்கம் தொடங்கிய நவம்பர் 26-ம் தேதி அன்று தன்னுடைய கட்சியின் பெயரை அர்விந்த் அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அக்டோபர் மாதத்திலேயே அவருடைய அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தின் முதல் வாரம், அவர் அம்பலப்படுத்திய ராபர்ட் வதேராவின் நில மோசடி, காங்கிரஸின் அடி மடியில் கை வைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காக வெளிப்படையாகப் புலம்பினார் பிரதமர். இரண் டாவது வாரம், சல்மான் குர்ஷித் குடும்பம் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் எப்படி எல்லாம் நிதி முறைகேடு நடந்து இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்தார். மூத்த மத்திய அமைச்சரான சல்மான் குர்ஷித் வெளிப்படை யாக அர்விந்துக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு, அவரை நிலைகுலைய வைத்தது இந்த விவகாரம். மூன்றாவது வாரம், நிதின் கட்காரி யின் மோசடிகளை அம்பலப்படுத்தி, பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வைத் துவைத்துக் காயப் போட்டார். அடுத்து யார் என்று மிரட்சியுடன் பார்க்கும் அரசியல் வர்க்கம், அர்விந்த் மீது அவதூறுகளை வீசுகிறது. அவரோ, 'நான் சாமானியன்’ என்கிற வாசகத்தை மிக சக்தி வாய்ந்த கோஷமாக மாற்றி அசாத்திய துணிச்சலுடன் முன்னேறுகிறார்.

''நீங்கள் போராடிக் கொண்டுவந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உங்களுடைய நடவடிக்கைகளுக்குப் பயந்தே    செல்லாக்காசு ஆக்கிவிடுவார்போல இருக்கிறதே மன்மோகன் சிங்?''
''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் செல்லாக்காசு ஆக்கிவிட வேண்டும் என்று மட்டும் இந்த அரசு நினைக்கவில்லை; அதைக் கொன்றுவிட வேண்டும் என்றும் நினைக்கிறது. ஆனால், அந்தச் சட்டம் இப்போது ஆட்சியாளர் கள் கைகளில் அல்ல; மக்களின் கையில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான, வலுவானஆயுதமாக. அவ்வளவு சீக்கிரம் அந்தச் சட்டத்தை அரசால் ஒன்றும் செய்துவிட முடியாது.''

''காங்கிரஸை வீழ்த்த எளிய இலக்காகத்தான் ராபர்ட் வதேராவைத் தேர்ந்தெடுத்தீர்களா?''
''இல்லை. புரையோடிப்போன ஒட்டுமொத்த அமைப்பையும் எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க., அ.தி.மு.க. என எல்லோருமே எங்கள் இலக்குதான். மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இவர்கள் எல்லோருமே கூட்டாளிகள். இவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. கட்சி பேதம் இல்லாத வியாபாரம் இது. இதில் சிக்குபவர்களைத் தனிநபர்களாகப் பார்க் காதீர்கள்.''

''ஒரு சாதாரண அரசு அதிகாரியான அர்விந்தை அரசியலை நோக்கி நகர்த்திய தருணம் எது?''
''இது சட்டென ஒரு நாளில் நடந்த மாற்றம் கிடையாது. நம்முடைய ஊழல் மிக்க அரசு இயந்திரத்தின் குரூர முகத்தை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து, மனம் வெதும்பி, வெறுத்துப்போய் நடந்த மாற்றம். பல ஆண்டுக் கோபத்தின் வெளிப்பாடு என்றுகூடச் சொல்லலாம்.''

''உங்கள் கட்சியின் இலக்கு என்ன?''
''அதிகாரத்தைப் பணமாகவும் பணத்தை அதிகாரமாகவும் மாற்றும் இன்றைய அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்களுடைய கைக்கு உண்மையான அதிகாரத்தைக் கொண்டுசெல்வது.''

''தேர்தல் கூட்டணி வைப்பீர்களா?''
''அமைப்போம்.''

''எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்கள்?''
''எங்கள் சித்தாந்தத்துடன் அனுசரித்துப்போகும், கறை படியாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.''

''அப்படிப்பட்ட கட்சிகள் இருக்கின்றனவா என்ன?''
''இருந்தால் கூட்டணி அமைப்போம். இல்லாவிட்டால் தனித்தே நிற்போம்.''

''லட்சக்கணக்கான கிராமங்களில் இருக்கிறது இந்தியா. ஆனால், நீங்கள் டெல்லியில் இருந்தே அரசியல் நடத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?''
''கிராமங்களை நோக்கிச் செல்லாமல், இந்தியாவில் எந்த மாற்றமும் நடக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். டெல்லியில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஆனால், அதன் வீச்சு காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. இரண்டு கோடி உறுப்பினர்கள் எங்களுக்கு நாடு முழுவதும் இருக்கிறார்கள். இந்தியாவின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள். எங்கள் போராட்டங்களைக் கிராம மக்கள் சொல்வார்கள்.''

''வெறும் அறிக்கைகளும் போராட்டங்களும் மட்டுமே அரசியல் ஆகிவிடுமா?''
''இல்லை. ஆனால், அவை அரசிய லின் தவிர்க்க முடியாத அங்கம் அல்லவா? போராட்டங்கள்தானே வரலாற்றை உருவாக்கி இருக்கின்றன? அதேபோல, நாங்கள் வாய்ச் சவடா லுக்காக அறிக்கைகள் விடவில்லை. எங்கள் அறிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தகவல்களைக் கொண்டுசெல்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அரசு இயந்திரத்தின் முறைகேடுகளைக் கொண்டுசெல்கின்றன. எல்லாமே ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகள்தானே?''

''முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்னையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?''
''உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்னைகளுமே இருக்கின்றன. ஆனால், ஊழல்தான் இவற்றில் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில், இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இன்னும் பிறக்காத குழந்தைகூட இந்தியாவில் லஞ்சத் தாலும் ஊழலாலும் பாதிக்கப்படுகிறது. எனில், ஊழல்தானே முக்கியப் பிரச்னை?''

''நம்முடைய ஓட்டு அரசியல் முறையே ஊழலாக இருக்கும்போது, அதன் வழியே சென்று எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?''
''ஒழிப்போம். ஓட்டு அரசியல் முறையையே நாங்கள் சுத்தப்படுத்துவோம்.''

''மக்களே அற உணர்வுகளைப் பொருட்படுத்தாதபோது, அரசியல்வாதிகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?''
''உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். ஆனால், எது அவர்களை அற உணர்வு அற்றவர்களாக மாற்றுகிறது? நீங்களோ, நானோ பிறக்கும்போதே லஞ்ச - ஊழல் மனோபாவத்துடனா பிறந்தோம்? நாம் சார்ந்து இருக்கும் அமைப்புதானே நம்மையும் ஊழலை நோக்கித் தள்ளுகிறது? ஒரு நல்ல பாதையை வகுத்துக் கொடுத்தால், நிச்சயம் இந்திய மக்கள் அதில் சரியாகப் போவார்கள். அரசியல்வாதிகள்தான் அதைக் கெடுக்கிறார்கள்.''

''இந்தியாவில் கார்ப்பரேட் துறையின் வருகைக்குப் பிறகுதான் ஊழலின் வீச்சு ஆயிரக்கணக்கான கோடி களில் எகிறியது. ஆனால், அவர்களிடம் நிதி வாங்கித்தான் நீங்கள் இயக்கம் நடத்துகிறீர்கள். இதில் என்ன தர்மம் இருக்கிறது?''
''இது அபாண்டம். கோடிக்கணக்கான சாமானியர்கள் தரும் கொடைதான் எங்கள் இயக்கத்துக்கான ஆதாரம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் இயக்கத்துக்கு நன்கொடை அளித்தன என்பது உண்மை. ஆனால், அவர்கள் தந்த நிதியில்தான் நாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்பது நியாயமற்றது. ஊழலில் அரசுத் துறை ஊழல், கார்ப்பரேட் துறை ஊழல் என்ற பாகுபாடு எல்லாம் எங்களுக்கு இல்லை.''

''அப்படியென்றால், உங்கள் அரசியலுக்குப் பின் கார்ப்பரேட் துறையின் நிழல் இல்லை என்று உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?''
''எங்களை கார்ப்பரேட் துறையுடன் சேர்த்துப் பேசுவதே சங்கடத்தைத் தருகிறது. 'சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்காத, கடைசி மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருளாதாரமே இந்தியாவுக்குத் தேவை’ என்று நாங்கள் சொல்கிறோம். 'வளர்ச்சி என்பது சந்தைச் சக்திகளால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என்றும் சொல்கி றோம். பின் எப்படி கார்ப்பரேட் துறை எங்களுக்குப் பின் இருக்கும்?''

''பணக்கார, ஆதிக்கச் சாதியினரின், கார்ப்பரேட் குழந்தைகளின் கத்துக்குட்டி அரசியல் என்று உங்கள் அரசியலைக் குறிப்பிடுகிறார்கள் உங்கள் விமர்சகர்கள்...''
''குப்பங்களிலும் சேரிகளிலும் இருக்கும் எங்கள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைப் பற்றித் தெரியாதவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் இவை. பொறுத்திருந்து பாருங்கள். இது யாருடைய அரசியல் என்று புரியும்.''

''எனில், நீங்கள் யாருடைய பிரதிநிதி?''
''சாமானியர்களின் பிரதிநிதி.''

''ஆரம்பத்தில் நீங்கள்தான் அண்ணா ஹஜாரேவின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். இன்றைக்கு அவர் முற்றிலுமாக உங்களிடம் இருந்து விலகிவிட்டார். என்ன நடந்தது இடையில்?''
''சின்ன வேறுபாடுதான். 'அரசியல் ஒரு சாக்கடை; அதில் இறங்கினால், நாமும் நிச்சயம் அசிங்கப்பட வேண்டும்’ என்று அண்ணாஜி சொன்னார். ஆனால், அரசியலில் இறங்காமல் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் கொண்டுவர முடியாது என்று நாங்கள் நினைத்தோம். சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னோம். அவ்வளவுதான். அண்ணாஜியின் மானசீக ஆசி எங்களுக்கு உண்டு.''

''உங்களுடைய அரசியல் ஆசையும் உங்கள் சகாக்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கேலிக்கூத்தாக மாறக் காரணம், இல்லையா?''
''இல்லை. உண்மையில் எங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்தன. அண்ணா இயக்கத் தைப் பார்த்துப் பயந்த அரசியல் வர்க்கம் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி, மக்களிடம் எங்கள் மதிப்பைக் குலைக்கப் பார்த்தது. இடையில் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்தோம். ஆனால், இப்போது மக்கள் எங்களை நோக்கி மீண்டும் திரும்புகிறார்கள்.''

''உங்கள் அமைப்பினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?''
''எல்லாமே அவதூறுகள். ஆனாலும், விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.''

''அரசு வேலையை உதறினீர்கள். பிரதமரையே எதிர்க்கிறீர்கள். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பகையையும் சம்பாதித்துக்கொண்டு நிற்கிறீர்கள். இதை எல்லாம் உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள்?''
''என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் இந்தப் பயணத்தில் இறங்கினேன். நாம் எவ்வளவு மோசமான ஒரு சூழலில் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறோம் என்ற குற்ற உணர்வுதான் அரசியலை நோக்கி என்னைத் தெருவில் இறங்கவைத்தது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தைத் தங்களுடைய இயக்கமாகத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால், நான் தோற்றுப் போவேன். ஆனால், அது ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலின் தோல்வியாக இருக்காது. இந்த நாட்டின் ஒவ்வொரு சாமானியனின் தோல்வியாகவும் இருக்கும். நான் தோற்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்!''
 ஆனந்த விகடன் அக். 2012

5 கருத்துகள்:

  1. அற்புதமான பேட்டி.
    -சாந்தி பாலகிருஷ்ணா,
    ஹைதராபாத்.

    பதிலளிநீக்கு
  2. என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் இந்தப் பயணத்தில் இறங்கினேன். நாம் எவ்வளவு மோசமான ஒரு சூழலில் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறோம் என்ற குற்ற உணர்வுதான் அரசியலை நோக்கி என்னைத் தெருவில் இறங்கவைத்தது.

    பதிலளிநீக்கு
  3. இந்த பேட்டியை சரியான தருனத்தில் மீன்டும் பதிவு செய்துள்ளீர்கள்......

    பதிலளிநீக்கு
  4. உங்களது கேள்விகள் முதல்வன் பட அர்ஜூன்-ரகுவரன் பேட்டியை நினைவுபடுத்துகின்றன. ஆனந்தவிகடனில் வெளிவந்த திரு.சோ பேட்டியில் அநாயசமாக அவரை கேள்விகளால் திணறடித்தது அருமை. பத்திரிக்கையாளர்களிடமிருந்து ஒளிந்து வாழும் நம்து நிதி அமைச்சர் திரு.சிதம்பரம் பேட்டியையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.இயலாதபட்சத்தில் கருத்து சுதந்திரத்துக்காக கனிமொழியுடன் இணைந்து 'கருத்து' என இணையதளம் ஆரம்பித்துவிட்டு facebook-ல் கருத்து தெரிவித்தவரை கைது செய்ய வைத்த கார்த்தி சிதம்பரத்தையாவது கேள்விக்கணைகள் தொடுக்க விரும்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. அரசியல் பின்புலம் இல்லாதவர்கள் பொதுவானவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியல் என்ற சாக்கடையை சுத்தம் செய்யமுடியும் என்று வாய்கிழிய நாம் சொல்லிவிட்டு பிறகு கெஜ்ரிவால் போன்றவர்கள் வரும்போது தடைக்கல் போடுவது என்ன நியாயம்.

    பதிலளிநீக்கு