இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்!

முஸ்லிம் சமூகம் கர்வம் கொள்ளத் தக்க இரு கலைஞர்களுக்கு ஃபத்வா அறிவித்திருக்கிறார் சயீத் நூரி. யார் இந்த சயீத் நூரி? தெரியாது. அறிமுகமில்லாத ஓர் உலமா. ஆனால், ஃபத்வாவுக்கு உள்ளாகியிருக்கும் இரு கலைஞர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஒருவர், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இருவரும் சேர்ந்து பணியாற்றும் ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் தி காட்’ படத்தின் தலைப்பு சயீத் நூரிக்குப் பிடிக்கவில்லை. ஃபத்வா போட்டுவிட்டார். கூடவே, அவர்கள் இருவரையும் மதத்தைவிட்டு விலக்கியிருப்பதோடு, அவர்களுடைய திருமணங்களையும் இவரே ரத்துசெய்திருக்கிறார். மேலும், படத்துக்குத் தடை கேட்பதோடு, மஜித் – ரஹ்மான் இருவர் மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஹ்மான் அவருக்கே உரிய பணிவோடு உருக்கமாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். மஜித் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக, இப்படி மத அமைப்புகள் / மதத் தலைவர்களால் கலைஞர்கள் குறிவைக்கப்படும்போது, இந்தியாவில் அறிவுஜீவிகளிடமிருந்து வெளிவரும் எதிர்வினைகள் அலாதியானவை. மதவெறியர்கள் இந்துத்வர்கள் என்றால், அறிவுஜீவிகள் வர்க்கம் பாயும்; இஸ்லாமியத்துவர்கள் என்றால், கோமாவில் படுத்துவிடும். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி என்ற வித்தியாசமெல்லாம் இருக்கிறதா என்ன? ரஹ்மான் - மஜிதி விவகாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
காலம் அறிவுஜீவிகளைக் கடந்து செல்கிறது. பொதுச் சமூகம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அரங்கேறுகின்றன. அபாரமான எதிர்வினைகள் பறக்கின்றன அங்கே. ஆளாளுக்கு சயீத் நூரியைக் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். கடுமையான எதிர்வினைகளுக்குப் பெரும் பகுதி சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். மிகுந்த நம்பிக்கை தரக் கூடியது மட்டும் அல்ல; மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான மாற்றமும் இது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் ‘காலச்சுவடு’ இதழில் அற்புதமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் தமிழக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டிய அறிஞர்களில் ஒருவரான களந்தை பீர் முகம்மது. நம்முடைய தனிப்பட்ட மதம்சார் நம்பிக்கைகளை சமூகம்சார் வாழ்க்கையில் எந்த எல்லையில் பிரித்து நிறுத்த வேண்டும் என்பதை அதில் அற்புதமாக விளக்கியிருந்தார் களந்தை பீர்முகம்மது. கேரளத்தில் நடந்த கலாச்சார விழா ஒன்றில் நிகழ்ச்சியை மங்களகரமாகத் தொடக்கிவைக்கும் விதத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வை வைத்திருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் முஸ்லிம் லீக் தலைவரும் அம்மாநிலக் கல்வி அமைச்சருமான அப்துல் ரப். இஸ்லாமியப் பண்பாட்டுக்கு எதிரானதாகக்கூடும் எனக் கருதிய அவர், குத்துவிளக்கு ஏற்ற மறுக்கிறார். விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியையும் சங்கடமான உணர்வையும் உருவாக்கும் நிலையில், இன்னொரு சிறப்பு  விருந்தினர் சூழலையே மாற்றுகிறார். அமைச்சர் ஏற்க மறுத்த மெழுகுவத்தியைக் கையில் வாங்கி அவர் குத்துவிளக்கை ஏற்றிவைக்கிறார். கூட்டத்தில் பலத்த கரகோஷம். பின்பு, “ஒளியை ஏற்றி இருளை விலக்குவதை இஸ்லாம் எந்தக் கட்டத்திலும் மறுக்கவில்லை” என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார். மம்மூட்டி என்று இந்தியத் திரையுலகம் கொண்டாடும்  முஹம்மது குட்டிதான் அவர்.

இந்நிகழ்வைக் குறிப்பிட்டு அமைச்சர் அப்துல் ரப்பை விமர்சித்திருக்கும் களந்தை பீர்முகம்மது தன் கட்டுரையில் எழுதுகிறார்: “ஒரு நாட்டில், ஒரு சமூகத்தின் வாழ்வும் மலர்ச்சியும் அந்த மக்களைக் கொண்டு மாத்திரமே உருவாவதில்லை. உலகில் அப்படியான வரலாறே கிடையாது. எல்லாச் சமூகங்களின் உறவாடல்களும் வணிகம் போன்ற ஏனைய தொடர்புக் கூறுகளும் இணைந்தே அனைத்துச் சமூகங்களின் நாகரித்தையும் வளர்ச்சியையும் மேலே எடுத்துச் சென்றிருக்கின்றன. அவரவர் மத உணர்வுகள், இறை விசுவாசங்களுக்கு ஊறு நேர்ந்திடாமல் பிற பண்பாட்டுச் சூழல்களுக்குள் நம்மை அமிழ்த்திக்கொள்ள முடியும். காலந்தோறும் இயல்பாக நடந்துவருவதே இது. ஆனால் மனம் குறுகிய நிலையில், நம் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அணுகும்போது அங்கு எல்லாம் தேய்ந்து இற்றுவிழும். இந்த அபத்தத்தைத் தவிர வேறு எதுவும் வாய்த்துவிடப்போவதில்லை நமக்கு. ஒரு சாரார் பகிரங்கமாகப் பின்பற்றுவதால் யோகாவையோ குத்துவிளக்கு ஏற்றுதலையோ எவராலும் நிராகரித்துவிட முடியும். ஆனால், நம் கண்களுக்கும் அறிவுக்கும் தட்டுப்படாமல் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தது எந்த இனம் அல்லது எந்த மதம் என்பதை வெறுப்புக் கண்ணாடியின் வழியாகப் பார்த்து இங்கே எவராலும் தட்டிக் கழித்துவிட இயலாது.

பொதுச் சமூகத்துடன் கலந்துறவாடுவதுதான் முதல் இறை விசுவாசம். எல்லா மதங்களும் அன்பைப் போதிப்பதாகச் சொல்லியவண்ணமே நம்மைப் பிளவுபடுத்தும் மதவாதச் சக்திகள் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளப்பார்க்கின்றன. மதப் பற்றும் கடவுள் பக்தியும் அவற்றின் உள்ளார்ந்த ஆன்ம சக்தியோடு இணைவதில்லை. இத்தகைய கோளாறான மத விசுவாசங்களால் சமூகம் எந்தப் பயனையும் அடையாது. நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொருந்தாத சக்திகளால் பொதுச் சமூகம் பிளவுபடுவதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை நமக்குள் உருவாக்கிக்கொள்வோம்!”

உண்மைதான். ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு இந்துத் தலைவர் குல்லா அணிந்துகொள்வது, எவ்வளவு மத நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியோ, அதற்கு இணையான நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிதானே ஒரு முஸ்லிம் தலைவர் குத்துவிளக்கு ஏற்றுவதும்!

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றைப் பதிவுசெய்யும் ‘யாதும்’ ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வர் முஸ்லிம் இளைஞர்களிடையே ஆற்றிய ஒரு உரையைக் கேட்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல் ஒன்றை மிக நுட்பமாகத் தன் உரையில் சுட்டிக்காட்டினார் அன்வர். அதாவது, தன்னுடைய ஆவணப் படப்பிடிப்புக்காகக் கடற்கரைக் கிராமம் ஒன்றுக்குச் செல்கிறார் அன்வர். அங்கே கடற்கரையில் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்குகின்றன. திடீரென்று அங்கு வரும் ஒரு போலீஸ்காரர் குறுக்கிடுகிறார். அன்வர் குழுவினரின் படப்பிடிப்புக் கருவிகளைப் பறித்து, விசாரனை என்ற பெயரில் படப்பிடிப்பை முடக்குகிறார். தேசப் பாதுகாப்பு, படப்பிடிப்புக்கான முன் அனுமதி என்று எதைஎதையோ பேசி அந்த முழு நாள் படப்பிடிப்பையும் காலியாக்குகிறார். மேலும் அதுவரை பதிவுசெய்யப்பட்ட காட்சிகளையும் அழிக்கவைக்கிறார். பின் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் வந்து உதவ எல்லோரையும் கடைசியில் விடுவிக்கிறார். ஒரு படப்பிடிப்புக்கான பண விரயம், ஒட்டுமொத்தக் குழுவினரின் உழைப்பு விரயம், நாள் விரயத்தோடு ஏகப்பட்ட அவதிகளையும் அவமானங்களையும் சுமந்து அங்கிருந்து புறப்படுகிறது அன்வர் குழு.

இதை விவரிக்கும்போது அன்வர் சொன்னார்: “என்னுடைய வரலாற்று ஆய்வுகள், இதுவரை நான் செய்திருக்கும் பணிகள், கைவசமுள்ள ஆவணங்கள் எல்லாவற்றையும் நான் அந்த போலீஸ்காரரிடம் கொடுத்தேன். எந்தப் பயனும் இல்லை. அவர் ஒரு சதிகாரனாகவே என்னைப் பார்த்தார். அந்தக் கணத்தில் அந்தப் பிரச்சினை எனக்குள்ளும் இப்படி ஓர் உணர்வை உண்டாக்கியது: ‘ஒரு முஸ்லிம் என்பதால்தான் இங்கே இத்தனை சிக்கல்களை, பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனோ?’ சென்னை திரும்பினேன். பின்னாளில் இதை வெவ்வேறு நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது, எனக்கு மட்டும் அல்ல; மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஆவணப்பட இயக்குநர்கள் பலரும் இங்கே இதே போன்ற பிரச்சினைகளை, என்னைவிடவும் மோசமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது. அப்புறம் புரிந்துகொண்டேன்: ‘இங்கே நான் எதிர்கொண்ட பிரச்சினை நான் ஒரு  முஸ்லிம் என்பதால் ஏற்பட்டது அல்ல; மாறாக, நான் ஒரு ஆவணப்பட இயக்குநராக இருப்பதால் ஏற்பட்டது’ என்று. இங்கே ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. அது வேறு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரவர் தனிப்பட்ட இயல்பு, அவரவர் மேற்கொள்ளும் பணி, வாழ்க்கைச் சூழல் சார்ந்து ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. இது வேறு. சமூகம் சார்ந்து நாம் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோமா என்று கேட்டால், நிச்சயமாக நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அதேசமயம், நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நாம் சார்ந்திருக்கும் சமூகம்தான் காரணம் என்று நம்புவது பிழையானது. இன்றைய முஸ்லிம் சமூகம் இது இரண்டுக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ள வேண்டும்!”

அன்றைக்கு அன்வர் பேசிய இந்த வார்த்தைகளை இன்றைக்கு மும்பையில் யாகூப் மேமன் இறுதி நிகழ்ச்சிக்குத் திரண்ட பெரும் திரள் கூட்டத்தின் பின்னணியில் பொருத்திப் பார்த்தால், எத்தனை பெறுமதி கொண்டவை அந்த வார்த்தைகள்! யாகூப் மேமனுக்குத் திரண்ட கூட்டம் உண்மையில் புரிந்துகொள்ள முடியாத பல செய்திகளை உள்ளடக்கியவை. எனினும், இரு விஷயங்கள் தெளிவானவை: இந்திய முஸ்லிம் சமூகம் இன்றைக்கு உணரும் புறக்கணிப்புணர்வும் அரசியல் தளத்தில் அது எதிர்கொள்ளும் வெற்றிடமும்.

தன்னுடைய அரசியல் முன்மாதிரிகள் என்று மலாலா குறிப்பிடும் மூவரில் ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான், இந்திய அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் கொடுத்த மாணிக்கம். ஜின்னாவுக்கு எதிரான நேர் எதிர் அரசியல் குறியீடாக கான் அப்துல் கபார் கானைக் குறிப்பிடலாம். ஆனால், இன்றைக்கு அரசியல் வெற்றிடத்தை உணரும் முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியலில் ஒரு கான் அப்துல் கபார் கானுக்கான இடம் என்ன? கான் அப்துல் கபார் கான் மட்டும்தான் என்று இல்லை. ஒரு அபுல் கலாம் ஆசாத்துக்கான இடம் என்ன; ஒரு நேருவுக்கான இடம் என்ன; ஒரு காந்திக்கான இடம் என்ன? அதன் நாளைய தலைவர்கள் யாரைப் பார்த்து உருவாகப்போகிறார்கள்?  நாம் வரலாற்றை மறக்கும்போது எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறோம்.

சயீத் நூரி போன்றவர்களும் அவர்களுடைய ஃபத்வாக்களும் முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டும் விளைவுகளை உருவாக்கவில்லை; ஒட்டுமொத்த சமூகத்திலும் தாக்கங்களை உருவாக்குகின்றன. முக்கியமாக, பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலக்கும், முஸ்லிம் சமூகத்தை அடுத்தத் தளத்துக்கு எடுத்துச் செல்பவர்களையே பெரிதும் அவை குறிவைக்கின்றன.

தமிழகத்தின் மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அடிக்கடி சொல்வார்: “இன்றைக்கெல்லாம் ஆளாளுக்கு முற்போக்கு முகமூடி போட்டுக்கொள்கிறோம். மதச்சார்பின்மை என்கிறோம். சமய நல்லிணக்கம் என்கிறோம். நம் பாட்டன் முப்பாட்டன்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் காலத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் காதில்கூடக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், நாடு முழுக்கச் சுற்றிப் பாருங்கள்.. எத்தனை கோயில்களில் முஸ்லிம்களுக்கும் எத்தனை பள்ளிவாசல்களில் இந்துக்களுக்கும் முறை இருக்கிறது என்று தெரியவரும். இவர்கள் விசேஷத்தை அவர்கள் தொடங்கிவைப்பதும், அவர்கள் விசேஷத்துக்கு இவர்கள் பந்தி பரிமாறுவதும், ஏன் இன்றைக்கும் எத்தனையோ கிராமங்களில் மாமன் – மச்சான் உறவு அப்படியேதானே இருக்கிறது? இதெல்லாம்தானே சமூகத்துடன் ஒன்றுகலக்க வாய்ப்புகள்? மதத்தில் தீவிரமாக இருக்கிறேன் என்று மேலும் மேலும் உள்ளே சென்று தனிமையில் பூட்டிக்கொள்வதால் என்ன பயன்? இந்த நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுடைய முதல் இலக்கு சிறுபான்மையினரைப் பொதுச் சமூகத்திடமிருந்து தனித்துப் பிரிப்பது. இன்றைக்குப் பல முல்லாக்களே அந்தக் காரியத்தை எளிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

நான் ஒரு முஸ்லிம், ஒரு இந்து, ஒரு கிறிஸ்துவன், ஒரு யூதன்; நீங்களும் அப்படித்தான் என்றார் காந்தி. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதுதான் மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டுக்கான இலக்கணம். காந்தியும் இந்துதான். கோட்சேவும் இந்துதான். ஆனால், வேறுபாடு இருக்கிறது. இந்து மதம் வேறு; இந்துத்வம் வேறு. பிள்ளையார் வழிபாடு வேறு; பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களின் அரசியல் வேறு. கடவுளை நேசிப்பவர்களும்கூட இந்த வேறுபாட்டையெல்லாம் சொல்லிக்கொடுத்துதான் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது.

கடவுளை மதத்திடமிருந்து பிரிக்க முடியுமா? எந்த இறைநம்பிக்கையாளருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. கடவுளை மதத்திலிருந்து பிரிப்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கைகளைத் தம் கையில் வைத்துக்கொண்டு நம் மீது அதிகாரம் செலுத்தும் மதவாதிகளிடமிருந்து கடவுளை நிச்சயம் பிரிக்க முடியும். இன்றைக்கு இந்து மதத்தில் துளியளவேனும் அது சாத்தியமாகி இருக்கிறது. இந்து மதம் தன்னுடைய கொடுமைகளின் ஒரு சிறு பகுதியையேனும் கடந்த நூறாண்டுகளில் களைந்திருக்கிறது என்றால், அது இந்து மதத்துக்குள் நடந்த உள்போராட்டங்களின் விளைவாக உருவானதே. இன்றைக்கும் இந்துத்துவத்துக்கு எதிராக வலுவாக ஒலிக்கும் குரல்களின் சத்தத்தில் கணிசமான குரல்கள் இந்துகளிடமிருந்து வெளிப்படும் குரல்கள் அல்லவா? துரதிர்ஷ்டவசமாக, இந்திய முஸ்லிம் சமூகத்தில் அரிதாகவே அப்படியான குரல்கள் ஒலிக்கின்றன.  களந்தை பீர்முகம்மதுவும் கோம்பை அன்வரும் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவும் அப்படியான குரல்கள். இப்போது அந்தக் குரல்களின் எண்ணிக்கை உயர்கிறது.  சயீத் நூரிக்கு எதிரான குரல்கள் அப்படியான குரல்கள். முக்கியமான குரல்கள்; அதேசமயம், உரிய கவனம் கொடுக்கப்படாத குரல்கள். இந்தக் குரல்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்போது, மேலும் மேலும் அவை கவனம் பெறும்போது ஒட்டுமொத்த சமூகத்தின் குரலுமே மாறும். அப்படி மாறும் நாட்களில் சயீத் நூரிகளின் ஃபத்வாக்களுக்காக ரஹ்மான்களும் மஜிதிகளும் விளக்கம் அளிக்கும் அவலம் நேராது!

செப். 2015, ‘தி இந்து’

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி , உங்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கின்றேன் , உங்களின் சமூக நலன் சார்ந்த எழுத்துக்கள் எனக்கு மிகப்பெரிய வரம்..... அன்புடன் க.தமிழ்செல்வன்.

    பதிலளிநீக்கு
  4. Arumayana article comrade. Religion should not be come into the forerun of the social life.

    பதிலளிநீக்கு
  5. முதலில் உங்கள் விரல்களுக்கு முத்தங்கள்,
    இவ்வளவு விரிவாக ஒரு எரிகின்ற பிரச்சனையைப் பற்றி இங்கே யாரும் பேசாமல் இருக்கும் பொழுது நீங்கள் விரிவாக பேசியிருக்கிரீர்கள்.

    உண்மையில் பலநூறு பீர்களையும் ஷேக்குகளையும் மானசீகமாக உணரமுடியும் இல்லையா... அவர்கள் இருப்பதால்தானே இந்தியா இன்னும் வாழத்தகுதியுடன் இருக்கிறது... அருமையான முன்னெடுப்பு - கொண்டாடப்படவேண்டியவர்கள் அவர்கள் ...

    அதே சமயம் வேறு யாரும் இதை குருரமான பயன்பாடுகளுக்கு கொண்டுபோயவிடக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும் ...முஸ்லீம்களுக்குள் பிளவை ஏற்படுதிவிடகூடிய இயக்கமாக மாறிவிடவும் கூடாது.

    எல்லா மதங்களிலும் மனிதம் பேசும் இதயங்கள் இருக்கத்தானே செய்கின்றன.
    உண்மையில் மதம்தான் மனிதனை மலினப்படுதுவதாக நான் கருதுகிறேன். இவர்கள் அந்த பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள். உங்களைப்போலவே .
    வாழ்த்துக்கள் சமஸ்
    பீடுகலந்த வணக்கத்தோடு
    (இன்னும் எழுத ஆயிரம் வரிகள் இருக்கிறது ..;-)இருப்பினும்

    பதிலளிநீக்கு