வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு: வாண்டுமாமா


                                      வாண்டுமாமா.
இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்... பேசும் கிளியும்... பலே பாலுவும்... உங்கள் நினைவில் மின்னினால்... சபாஷ்... உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?
சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது...

                                      ‘‘கிருஷ்ணமூர்த்தி வாண்டுமாமா ஆனது எப்படி?’’
‘‘நானா வாண்டுமாமா ஆகலை. வாழ்க்கைதான் ஆக்கினுச்சு. என் சின்ன வயசு கனவெல்லாம் நான் ஒரு ஓவியனாகனுங்கிறதுலதான் இருந்துச்சு. படிப்பு முடிஞ்சதும் பத்திரிகைத் துறையில் நுழைஞ்சதும்கூட அந்தக் கனவோடதான். விகடன்லதான் மாலிக்கு கீழ லெட்டரிங் ஆர்டிஸ்டா வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா, அந்தக் காலகட்டம் என் வாழ்க்கையில ஒரு மோசமான காலகட்டம். சென்னைக்கு வந்த புதுசு. தனிமை. பணக் கஷ்டம். திருச்சிக்கே திரும்பிட்டேன். அப்போ திருச்சியில் இருந்து ‘சிவாஜி’ பத்திரிகை வெளியாயிட்டு இருந்த நேரம். சிவஞானம்கிறவர் நடத்திக்கிட்டு இருந்தார். அதுல உதவி ஆசிரியர் வேலைக்கும் ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப அதுக்கு திரிலோகசீதாராமன் ஆசிரியரா இருந்தார். அவர் நாடறிந்த பேச்சாளர். அதனால, ஊர் ஊராப் பேசப் போய்டுவார். தலையங்கம், போட வேண்டிய கதைகளை மட்டும் அனுப்பிடுவார். பத்திரிகையைப் பார்த்து அனுப்புற முழுப் பொறுப்பும் என்னோடது. ஓவியம், வடிவமைப்பு தவிர எழுதுற வேலையும் சேர்ந்துகிடுச்சு. ஏற்கெனவே, கையெழுத்துப் பத்திரிகை நடத்தின அனுபவம் உண்டு. எழுத்தாளன் ஆகிட்டேன். அந்தக் காலகட்டத்தில் திருச்சியில் எம்.ஆர்.எஸ்.மணிங்கிறவர் சரஸ்வதி அச்சகம்னு ஒரு அச்சகத்தை நடத்திக்கிட்டு இருந்தார். அவருக்கு பத்திரிகை ஆரம்பிச்சு சம்பாத்திக்கணும்னு ஒரு ஆசை. என்னைக் கூப்பிட்டார். போனேன். ‘வானவில்’னு குழந்தைகளுக்கான மாதம் இருமுறை பத்திரிகையைத் தொடங்கினோம். வாண்டுமாமானு ஒருத்தன் தோன்றுனது அப்போதான். சும்மா இல்லை... அந்தக் காலகடத்திலேயே 20 ஆயிரம் பிரதிகள் போனுச்சு ‘வானவில்’. தமிழ்ல மொதமொதல்ல காமிக்ஸ்ங்கிற சித்திரக்கதை உத்தியைக் கொண்டுவந்தது ‘வானவில்’தான். ஆனா, மணி தன்னோட தவறான நிர்வாகத்தால் ரொம்ப சீக்கிரம் அதுக்கு மூடுவிழா நடத்திட்டார்.’’

                                      ‘‘குழந்தைகள் பத்திரிகை தொடங்கினால், சம்பாதிக்கலாம் என்கிற அளவுக்கு அன்றைக்கு குழந்தைகள் வாசிப்பு இருந்ததா?’’‘‘ஆமாம். அந்தக் காலகட்டத்தில் ‘அணில்’, ‘டமாரம்’, ‘குரங்கு’, ‘கோமாளி’, ‘பாப்பா மலர்’... இப்படி ஏராளமான புத்தகங்கள் வந்துக்கிட்டு இருந்துச்சு. உங்ககிட்ட அச்சகமும் பத்திரிகையைப் பார்த்துக்க நிர்வாகத்துக்கு ஒருத்தரும் ஆசிரிய இலாகாவுக்கு ஒருத்தரும்னு ரெண்டு பேர் இருந்தா பத்திரிகை ஆரம்பிச்சிடலாம்கிற சூழல் இருந்த காலகட்டம் அது. உள்ளூர் பத்திரிகைகளுக்கும் அந்தந்தப் பகுதிகள்ல நல்ல செல்வாக்கு இருந்துச்சு. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் படிக்க புஸ்தகம் வாங்கித் தர்றதை ஒரு வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தாங்க. தவிர, பெரியவங்களேகூட, குறிப்பா பெண்கள் நிறைய குழந்தைகள் புஸ்தகங்களை வாசிச்சாங்க. ஆனா, என்னதான் செல்வாக்கு இருந்தாலும் என்னவோ தெரியலை... குழந்தைகள் பத்திரிகைகள் காலத்துக்கும் நீடிக்க முடியலை. சின்ன குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் வர்றதை பாலாரிஷ்டம்னு சொல்வாங்க. குழந்தைகள் பத்திரிகைகளுக்கும் பாலாரிஷ்டம் வரும்.’’

                                      ‘‘குழந்தைகளுக்கு எழுதுவது - பெரியவர்களுக்கு எழுதுவது... என்ன வித்தியாசம்?’’
‘‘அடிப்படையில, எளிமைதான் வித்தியாசம். ஆனா, அது ஒரு தனி உலகம். இந்த உலகத்தோட தர்க்க நியாயங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. நான் மொதமொதல்ல எழுத ஆரம்பிச்சது பெரியவங்களுக்கான கதைகளைத்தான். விகடன்ல வேலை செஞ்சப்ப மாலி சார்கிட்ட ஒரு கதையை எழுதிக் கொடுத்தேன். கதையை வாங்கினவர் வாசிச்சுட்டு, ‘பெரியவங்களுக்கு எழுத ஏராளமானவங்க இருக்காங்க. நீ குழந்தைகளுக்கு எழுது. நான் பாப்பா மலரில் போடச் சொல்றேன்’னார். எனக்கு அப்போ அதில விருப்பம் இல்லை. அவர் கேட்டாரேனுதான் எழுதிக் கொடுத்தேன். அவரே அதுக்கு ஓவியங்கள் வரைய மூர்த்திங்கிற பெயரில் விகடன் பாப்பா மலரில் மூணு கதைகள் வெளியானுச்சு. ஆனா, பின்னாடிதான் உணர்ந்தேன். அவர் எனக்கு எவ்வளவு பெரிய வழியைக் காட்டி இருக்காங்கிறதை. குழந்தைங்க எழுத்தாளன் ஒரு வகையில் அவனே குழந்தையாயிடுறான். காலமெல்லாம் குழந்தையா இருக்குறது எவ்வளவு பெரிய பாக்கியம்?’’

                                      ‘‘இவ்வளவு கதைகளுக்குமான கரு எங்கிருந்து உருவானது?’’
‘‘என்னோட அத்தைகள்கிட்டே இருந்து வந்தது. என்னோட வறுமையான வாழ்க்கை தந்த அனுபவங்கள்லேர்ந்து வந்தது. எங்கப்பா சின்ன வயசுலேயே தவறிட்டார். அம்மா, பாட்டி, அப்பாவோட பிறந்த இரண்டு அத்தைகள்... வசதியும் இல்லாமல் படிப்பும் இல்லாமல் இப்படி வீட்டில நாலு விதவைகள். அவர்கள் கையில் நான், என் அண்ணன், தங்கை... மூன்று குழந்தைகள். வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் பாருங்கோ... கிராமத்துல வாழ வழி இல்லாம திண்ணியத்தில் இருந்து எங்க சின்ன அத்தையோட கணவர் ஆதரவுல திருச்சி வந்தோம். திருச்சியில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கென்றே ‘ஸ்டோர்கள்’ நிறைய இருக்கும். ஒரு வீடு இருக்கும் இடத்தில் பத்து வீடு இருந்தால் அது ‘ஸ்டோர்’. அப்படி ஒரு ‘ஸ்டோர்’ வீட்டில், காற்றோட்டோமோ வெளிச்சமோ இல்லாத இரு சின்ன அறைகளில்தான் இத்தனை ஜீவன்களும் வாழ்ந்தோம். சாப்பிட எதாவது இருந்தால் சந்தோஷம். இல்லாடிட்டாலும் கேள்வி கேட்பது கிடையாது. அப்படியோரு வாழ்க்கை. ஆனாலும், சின்ன பிள்ளைகளான நாங்கள் சந்தோஷமா இருந்தோம். காரணம்... என் அத்தைகள். கதைகளால் எங்களை ஒரு கற்பனாலோகத்தில் வாழவைச்சாங்க என்னுடைய அத்தைகள். பசி, வியர்வை, கொசுக்கள்... பெரும்பாலான ராத்திரிகள் இவற்றோடத்தான். ஆனா, எனக்கு எதுவும் தெரியாது. நான்தான் வானலோகக் கதைகள்ல சஞ்சரிச்சுக்கிட்டு இருப்பேனே?
எனக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுத்தது உறவுகளோட நெருக்கம்தான். இன்னைக்கெல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்க. எங்க சின்ன அத்தையோட கணவர்கிட்ட என் அண்ணன், அப்பா போயிட்டார் நீங்கதான் எங்களை ஆதரிக்கணும்னு கேட்டுருக்கான். நான் பார்த்துக்கிறேன்டா குழந்தைனு பதிலுக்குச் சொல்லி இருக்கார் அவர். ஒரு வாக்கியம்தான். ஆனா, அதைக் காப்பாத்த எவ்வளவு உழைச்சார் தெரியுமா மனுஷன்? எங்களுக்குனு ஒரு வீடு எடுத்துக் கொடுத்து, சகல செலவுகளையும் அவரே ஏத்துக்கிட்டு, என் தங்கைக்கு கல்யாணம் செஞ்சுவைச்சு... இத்தனைக்கும் அவர் வசதியா இல்லை... ஓட்டல் வைச்சு நொடிச்சுப்போய், கடை ஜப்தியாகி, உயிரைவிட்ட மனுஷன் அவர். ஒரு காலத்துல எங்க அத்தையை ராணி மாதிரி வெச்சிருந்த எங்க மாமாவைப் பார்த்தோம். வியாபாரம் நொடிச்சு ந்டுத்தெருவுக்கு வந்தப்ப அதே அத்தையைக் கண் மண் தெரியாம அடிச்சுட்டு, பெண் பிள்ளைபோல அழற மாமாவையும் பார்த்தோம். மாமா போனதுக்கு அப்புறம் ரெண்டணாவுக்கும் மூணணாவுக்கும் எங்களுக்காக ஓட்டல் ஓட்டலா போய் பெரிய ஆட்டுக்கல்லில் மாவு அரைச்சு... பள்ளிக்கூடம் அனுப்பினஅத்தைங்களையும் பார்த்தோம். எல்லாத்தையும் பார்த்து வளர்ந்ததுதான் பின்னாடி எவ்வளவோ கஷ்டங்களை எதிர்கொள்ள உதவுச்சு. அந்தக் கஷ்டங்கள் எல்லாம் தெரியாம வளர்றதாலதான் ஆன்னா ஊன்னா இன்னைய குழந்தைகள் தற்கொலை முடிவை எடுக்குதுங்க.’’
                                      
                                       ‘‘சரி, இந்தக் காலத்து குழந்தைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘பாவம்னுதான் சொல்லத் தோணுது. இவங்களுக்கு யாருமே இல்லையே? கதை இல்லாத குழந்தைகளைக் கற்பனையே செய்ய முடியலையே... நவீன சாதனங்களின் வளர்ச்சியை வரவேற்க வேண்டியதுதான். ஆனால், நவீன சாதனங்கள்தான் வாழ்க்கையேன்னா இது என்ன வாழ்க்கை?
உங்களுக்குக் குழந்தை இருந்தா, தயவுசெஞ்சு கதை சொல்லுங்கோ... படிக்கச் சொல்லுங்கோ... கதை புஸ்தகம் வாங்கிக்கொடுங்கோ... முருகா!’’

                                      ‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?’’
‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே?’’
ஆனந்த விகடன் ஜூன் 2012  

2 கருத்துகள்:

  1. வாண்டுமாமா A true Legend. I am so fortunate to have வாண்டுமாமா in my childhood. Thanks a lot for this post.

    Thanks
    Rajesh Kumar Raj

    பதிலளிநீக்கு
  2. /////உங்களுக்குக் குழந்தை இருந்தா, தயவுசெஞ்சு கதை சொல்லுங்கோ... படிக்கச் சொல்லுங்கோ... கதை புஸ்தகம் வாங்கிக்கொடுங்கோ... முருகா!’’//////

    இதைவிட எளிமையாய் இன்றய குழந்தைகளின் நிலையை எவறாலும் வெளிக்காட்டிவிட முடியாது.

    பதிலளிநீக்கு