இதுவும் தேசிய அவமானம்தான்!

ரு வரலாற்றுச் சாதனை இது. நிகழ்த்தியவர்கள்... நம்  இந்திய விவசாயிகள். வரலாறு பார்த்திராத  அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, அரிசி உற்பத்தி 10.34 கோடி டன்; கோதுமை உற்பத்தி 9.23 கோடி டன்.
விவசாயிகளுக்காகத் துரும்பையும் இழக்க விரும்பாத ஓர் அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தி எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வேண்டும்? ஆனால், டெல்லியில் நம் உணவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இந்தியத் தானியக் கிடங்குகளில் இடம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 1.3 டன் தானியங்களைக் கூடுதல் ஒதுக்கீடு செய்தாலும், வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது? இருபது வருடங்களுக்கு முன் இதே நிலை ஏற்பட்டு இருந்தால், இராக்குக்கோ, இரானுக்கோ கூடுதல் சரக்கு ஏற்றுமதி ஆகி, கச்சா எண்ணெயாக இங்கே திரும்ப இறங்கி இருக்கும். இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.
    இந்தியாவின் சேமிப்புக் கிடங்குகளின் அதிகபட்சக் கொள்ளளவு 7.85 கோடி டன்தான். அறுவடைக்குப் பிந்தைய இழப்பு வேளாண் துறை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால். இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு 7.15 கோடி டன் பழங்களையும் 13.37 டன் காய்கறிகள், எண்ணெய் வித்துக்களையும் உற்பத்தி செய்கிறார்கள். இவற்றில் 35 சதவிகிதம் வரை வீணாவதாக நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த ஆண்டு சொன்னது. தானியக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்குமாறு அரசுக்குக்கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டபோது, நீதிமன்றத்துடன் முட்டி மோதிக்கொண்டு நின்றது அரசு. ''விரைவில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்'' என்று அப்போது சொன்னார் பிரதமர். சரியாக ஒரு வருடத்துக்குப் பின் அதே இடத்துக்கு வந்து நிற்கிறது அரசு.
     கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரித் தானிய நுகர்வு குறைந்துகொண்டேவருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 880 கிலோ தானியங்களை எடுத்துக்கொண்ட ஒரு குடும்பம், இன்றைக்கு எடுத்துக்கொள்வது 770 கிலோதான் என்கிறது பொருளாதார நிபுணர் உஷா பட்நாயக்கின் ஆய்வு. உலகின் எடை குறைவான குழந்தைகளில் சரிபாதியினர் நம் குழந்தைகள். எப்போதாவது இதெல்லாம் நினைவுக்கு வந்தால், இதெல்லாம் தேசிய அவமானம் என்பார் இந்தியப் பிரதமர். இதுவும் தேசிய அவமானம்தான்!
ஆனந்த விகடன் மே  2102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக