புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்


                 காத்திருத்தல் ரொம்பவும் கொடுமை. ஆனால், வாழ்வில் சுவையான அனுபவங்களைப் பெரும்பாலும் காத்திருந்தே பெற வேண்டி இருக்கிறது. இதுவரை என்னென்ன காரணங்களுக்காகவோ காத்திருக்க நேர்ந்திருக்கிறது. என்றாலும், புத்தூர் அனுபவம் உள்ளபடியே வித்தியாசமானது-ரசமானது!

                 மயிலாடுதுறை-சிதம்பரம் இடையேயுள்ள சின்ன கிராமம் புத்தூர். கொள்ளிடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள ஒரு கூரைக்கட்டு சாப்பாட்டுக் கடையில் அசைவச் சாப்பாடு ரொம்பவும் பிரசித்தம் என்றும் ஆனால், மதுரை வீரனே வந்தாலும் காத்திருந்தால்தான் இங்கு சாப்பிட இடம் கிடைக்கும் என்றும் ஒரு நண்பர் சொன்னார். பசிக்க ஆரம்பிக்காத ஒரு நண்பகல் வேளையில் புத்தூரை நோக்கிப் பயணமானோம். புத்தூர்க் கடை வீதியில் இறங்கி வழி கேட்ட நமக்கு, உள்ளூர்க்காரர் சுட்டிக்காட்டிய இடம் சற்றே பெரிய கீற்றுக் கொட்டகை. பெயர்ப் பலகைகூட இல்லை. கடைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பந்தல் வழியை மறித்து நிற்கிறது கூட்டம். சாமர்த்தியமாக மெல்ல முன்னேற முயலும் நாம் நெருக்கி வெளியே தள்ளப்படுகிறோம். கூட்டத்திலிருந்து சப்தம் கிளம்புகிறது.

"நிக்கிறோம்ல. எடையில பூந்தா என்ன அர்த்தம்?''

"இல்ல, வெளியூரிலேருந்து வந்திருக்கோம்.''

"அப்ப, நாங்க எல்லாம் எங்கிருந்து வந்திருக்கோமாம்?''

"இல்ல. சாப்பிட வரல; எழுத வந்திருக்கோம்.''

"ஓஹோ! அப்படியா கத? அப்ப ஓரமாப் போய் நில்லு. நாங்கெல்லாம் சாப்பிட வந்திருக்கோம்; ரொம்பப் பசியோட. நாங்க சாப்பிட்டுப் போனதும் நீ எழுதிகிட்டுப் போ.''

இதற்கிடையே, கடையின் உள்ளேயிருந்து ஒரு குரல் வருகிறது.
"அய்யா, வரிசையில மொதல்ல நிக்கிற நாலு பேரு மட்டும் உள்ள வாங்க.''

                 நமக்கு முன்னுள்ள வரிசை மெல்ல கரைய, பின்னுள்ள வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. இதற்குள் கடைக்காரருக்கு நாம் தகவல் தெரிவிக்க, அவர் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார். கூட்டம் கொலை வெறியுடன் நம்மைப் பார்க்கிறது.

                 உள்ளே ரொம்பவும் சாதாரணமான மர பெஞ்சுகள், முக்காலிகளில் அமர்ந்து வியர்க்க விறுவிறுக்கக் கருமமே கண்ணாக கன ஜோராய் மீன் வறுவல், இறால் வறுவல் சகிதமாய்ச் சாப்பாட்டை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது கூட்டம். ஏற்கெனவே கடைக்காரர்களால் உள்ளே அழைக்கப்பட்ட அந்த நால்வரைக் கவனிக்கிறோம். தயிர் போட்டுச் சாப்பிடுபவர்களுக்கு முன்பாக இடத்தைக் கைப்பற்றத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். நாம் கடைக்குப் பின்புறம் செல்கிறோம். கல்யாண வீட்டின் கொல்லைப்புறத்தில் போடப்பட்டிருக்கும் சமையல் கொட்டகைபோல் இருக்கிறது அந்தக் கடையின் சமையலறை. இறால், கோழி, வஞ்சிரம் மீன்களை வண்டியிலிருந்து இறக்கிக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் மசாலா போட்டு அவற்றைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குழம்பு, வறுவல், பிரட்டல் என அதுஅது போய் சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர் வேறு சிலர். "இறாலுக்கு மெனக்கெடு அதிகம் சார். இறால் உரிக்கிறதுக்காகவே பத்து பேர் இருக்கோம்'' என்கிறார் அவர்களில் ஒருவர். சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருக்கும் மீன் குழம்பு வாசனை நம் நாசியைத் துளைக்கும் அந்த நேரத்தில் - ஈறால் வறுவல் "வா மகனே வா' என்று அழைக்கும் அந்த நேரத்தில் - பசி நம் வயிற்றில் பூதாகரமாய்க் கிளம்புகிறது. கடைக்காரர் சலுகையில் நமக்கும் ஓர் இடம் கிடைக்கிறது. அமர்கிறோம்.

                 எளிமையான உணவுப் பட்டியல். சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன் குழம்பு, இறால் குழம்பு, ரசம், கீரை, வெங்காயப் பச்சடி. அவ்வளவே. வறுவல், பிரட்டல் எல்லாம் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்; மிக முக்கியமாகக் கெட்டித் தயிரை. கேட்கக்கேட்கப் போடுகிறார்கள். புளிப்பு ஏறாமல் புளித்த தயிர் எப்படி ஈருக்கும்? அப்படி இருக்கிறது. வரிசையாய்க் குழம்பு, ரசம் ஊற்றிச் சாப்பிட்ட பின்னர், பொன்னி அரிசி சாதத்தில் கெட்டித் தயிரை நிறைய ஊற்றி வழியவழியப் பிசைந்து இறால் வறுவலையோ மீன் வறுவலையோ தொட்டுக்கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே... எத்தனையோ தொலைவிலிருந்து இந்தச் சின்ன கிராமத்துக் கடையைத் தேடி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரகசியம் புரிகிறது. அருகில் ஆமர்ந்திருந்த கடை ஊரிமையாளர் பி. ஜெயராமனிடம் பேசினோம். "அசைவச் சாப்பாடு சிறக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். மீனோ கறியோ எதுவென்றாலும் உயிர் விட்டு நீண்ட நேரமாகக் கூடாது. அதாவது கட்டு குலையக் கூடாது. சுத்தத்தில் பிசிறு கவுச்சி தங்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தாலே பாதி ருசி வந்துவிடும். எங்கள் கடையில் வீட்டுப் பக்குவத்தில் மசாலா அரைத்துப்போட்டு விறகு அடுப்பில் சமைக்கிறோம். தயிருக்கு ஒரு பங்கு பாலை அரைப் பங்கு பாலாகச் சுண்டக் காய்ச்சி உறை எற்றுகிறோம். வேறு எந்த ரகசியமுமில்லை'' என்றார் ஜெயராமன்.

                 வயிற்றைத் தள்ளிக்கொண்டு நாம் ஏழுந்த அடுத்த நொடி அந்த இடத்தில் துண்டு ஒன்று பறந்து வந்து விழுகிறது. திடுக்கிட்டுப் பார்க்கும் நம்மைப் பார்த்து துண்டை வீசியவர் சொல்கிறார்.
"என்ன மொறைக்குற, பசி வயித்தைக் கிள்ளுதுல்ல; நகருய்யா!''

'சாப்பாட்டுப் புராணம்' புத்தகத்திலிருந்து...
தினமணி 2008

2 கருத்துகள்:

  1. சீக்கிரம் அந்த ஊருக்கு போயி சாப்பிடனும் வாயில எச்சில் ஊருது

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே நாவில் ... வெள்ளம்......
    கொள்ளை போகுதே உள்ளம்......

    பதிலளிநீக்கு