தமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்?


டெல்லியில் இருந்தபோது நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப்பார்க்க ஒரு நாளை ஒதுக்கினேன். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று நானூறு ரூபாய் செலவில் ஏசி பஸ்ஸில் டெல்லியைச் சுற்றிக்காட்டுகிறது. நாம் தனியாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு சுற்றுவதைவிடவும் இது சிக்கனமான ஏற்பாடு என்று நண்பர்கள் சொன்னதால், இதைத் தேர்ந்தெடுத்தேன். குதுப் மினார், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி செங்கோட்டை வரை சுற்றிக்காட்டுவது பயணத் திட்டம். பஸ்ஸில் மைக்கோடு ஒரு சுற்றுலா வழிகாட்டியை அந்தத் தனியார் நிறுவனம் அமர்த்தியிருந்தது. பஸ் முக்கியமான இடங்களைக் கடக்கும்போது அந்தந்த இடங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார் வழிகாட்டி. ஜன்பத் சாலையில் பஸ் நுழைந்தபோது மன்மோகன் சிங் இல்லம், சோனியா காந்தி இல்லம் என்று காட்ட தொடங்கியவர் தொடர்ந்து இந்நாள் -முன்னாள் அமைச்சர்கள் இல்லங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் என்று வரிசையாக அறிமுகப்படுத்திக்கொண்டேவந்தார். திடீரென்று ஒரு வீட்டைக் காட்டி பீடிகை போட ஆரம்பித்தார்.

"இந்த வீடு உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒருவரின் வீடு. யாருடையது சொல்லுங்கள் பார்ப்போம்... ஒரு நிமிஷத்துக்குள் சொன்னால் பரிசு தருவேன்..."

பயணிகள் விழிக்கின்றனர். ஓர் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நூல்விட ஆரம்பித்தார்.

"இவரும் ஒருவகையில் சக்ரவர்த்திதான்... எங்கே கண்டுபிடியுங்கள்..."

"சரி, இவர் தென்னாட்டைச் சேர்ந்தவர்..."

"இவர் ஒரு மதராஸி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்..."

இப்போது பயணிகளிடமிருந்து இரு குரல்கள்.

"ஹே... இது கஷ்டம்..." "ஆமாம்... நிறையப் பேர் ஞாபகத்துக்கு வருகிறார்கள்..."

உடனே வழிகாட்டி கடைசித் துருப்பைப் போடுகிறார்...

"சரி... கடைசியாக ஒரு குறிப்பு தருகிறேன். முயற்சித்துப் பாருங்கள். ஒரே டீல்... ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி..."

இப்போது மொத்த பஸ்ஸும் ஒரே கூச்சலாலும் கைத்தட்டல்களாலும் அதிர்கிறது...

"ராசா... ராசா வீடு..."


அப்படியே கூனிக்கூறுகிப்போனேன். அது வெறும் தனியொரு ராசா மீதான கிண்டலாக, ஓர் அரசியல்வாதி மீதான கிண்டலாக எனக்குப் படவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதான தாக்குதலாகவே பட்டது. மாலை, பயணம் முடிந்தபோது அந்த வழிகாட்டியை ஓரங்கட்டினேன்.

"ராசா மீது எனக்கு எந்தக் கரிசனமும் இல்லை. ஆனால், நீ நடத்தியது அசிங்கமான விளையாட்டு" என்றேன்.

"ஒரு நகைச்சுவைக்காகத்தான் அப்படிச் செய்தேன். ஆனால், உள்ளதைத்தானே சொன்னேன்? நீதிமன்றம் விசாரிக்கும் ஒரு விஷயத்தைத்தானே பேசினேன்? " என்றார்.

"அப்படியென்றால், மன்மோகன் சிங் வீட்டைக் காட்டும் போது, இதுதான் திருவாளர் நிலக்கரி சுரங்கம் வீடு என்று நீ ஏன் சொல்லவில்லை? அதுவும் விசாரணையில் உள்ள ஒரு விஷயம்தானே? நீ காட்டிய ஒவ்வொருவர் வீட்டுக்கும் இப்படி ஒரு விளையாட்டை நடத்தலாம். ஆனால், நீ செய்யவில்லை..." என்றேன்.

"தவறென்று நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..." - இப்படிச் சொல்லிவிட்டு அவர் கடந்தாலும், உண்மையில் அவர் தன் செய்கைக்கு வருந்தியதாகத் தெரியவில்லை. "போடா போடா கிறுக்கா" என்பதுபோல் ஓர் அலட்சியமான உடல்மொழியை வெளிப்படுத்திவிட்டே அகன்றார்.

சாமர்த்தியசாலி தமிழனின் இன்னொரு முகம்

நண்பர்களிடம் மறுநாள் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவர்கள், பின் என்னை நோக்கிக் கேட்டார்கள்: "இதில் அதிர்ச்சியடையவோ, ஆச்சரியப்படவோ என்ன இருக்கிறது?"

"இன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தை ஏனைய சமூகங்கள் எப்படிப் பார்க்க ஆரம்பிக்கின்றன என்பதற்கான உதாரணம் இது. ராசா இங்கு ஒரு குறியீடு அவ்வளவுதான். நீங்கள் வெளியிலிருந்து யோசித்துப்பாருங்கள். ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சித் தலைவரின் குடும்பம் ஆசிய அளவில் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக மாறியிருப்பதையும்; ஒரு கட்சித் தலைவியின் காலில் அத்தனை அமைச்சர்களும், பார்க்கும் இடங்களிளெல்லாம் படபடவென்று விழுவதையும் உலகம் எப்படிப் பார்க்கும்? தமிழ்நாட்டிலிருந்து மந்திரியானவர்கள் யாருக்கும் நல்ல பெயர் இல்லை. கொஞ்சநஞ்சம் நம்மாட்கள் ஏதாவது துறை சார்ந்து திட்டங்கள் கொண்டுவந்தால்கூட அதைத் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார்கள்; நாடு முழுமைக்கும் இவர்கள் சிந்திப்பது இல்லை என்று நினைக்கிறார்கள்."

"அரசியல்வாதிகள்தான் என்று இல்லை; எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலை. தமிழர்களிடம் கட்டுமானப் பணியை நம்பிக் கொடுக்கவே அஞ்சுவார்கள். ஒரு பஞ்சாபியிடம் வீட்டு வேலையைக் கொடுத்தால், கூலியோடு வாங்கும் சாமான்களில் கிடைக்கும் கமிஷன் அடிப்பார்; தமிழரிடம் வேலையைக் கொடுத்தால் கூலி, கமிஷன் தவிர வாங்கும் பொருட்களிலும் போலியைக் கலப்பார்; வேலையையும் இழுத்துவிடுவார் என்பார்கள். ஒரு அசாமியத் தொழிலாளியிடம் வேலையைச் சொல்லிவிட்டு சாயங்காலம் நீங்கள் சென்றால், முழு வேலையும் முடிந்திருக்கும்; நம்மாட்களுக்கோ வேலை கொடுப்பவர்கூடவே நின்றாலும் பாதி வேலை மிச்சம் இருக்கும் என்பார்கள். முடிந்த மட்டும் காசு பார்ப்பதை நம்மாட்கள் சாமர்த்தியமாக நினைக் கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றுதானே? தமிழ் நாட்டுக்கு இங்கிருந்து கூலி வேலைக்கு வரும் வட மாநிலத் தொழிலாளிகளை நம்மாட்கள் எப்படி நடத்து கிறார்கள்? கொத்தடிமைகளைப் போலத்தானே நடத்துகிறார்கள்! மும்பையிலும் கொல்கத்தாவிலும் இருபது இருபத்தைந்து ரூபாய்க்கும் நாம் டாக்ஸியிலேயே ஏறலாம். சென்னையில் ஆட்டோக்காரர்கள் தொடங்குவதே நாற்பது ஐம்பது ரூபாயில்தான். இதையெல்லாம் பார்க்கும் ஒரு வெளியூர்க்காரருக்குத் தமிழர்கள் மீது என்ன சித்திரம் வரும்? நீங்கள் இப்போதுதானே இந்தியாவைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறீர்கள்? முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டுப் பாருங்கள். நம் ஆட்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு அசிங்கமாகப் பேர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவரும்."

இது வெறும் சோற்றுப் பிரச்சினையல்ல!
நண்பர்கள் சொன்னதில் உள்ள உண்மை வெகு விரைவிலேயே எனக்கு நேரடியாக உரைக்கத் தொடங்கியது. பல விஷயங்கள். முக்கியமாக, சாப்பாட்டு விஷயத்தை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்பவர்களுக்கு நம்மூர் உணவு கிடைப்பது இப்போது சிரமம் அல்ல. அநேகமாக எல்லாப் பெருநகரங்களிலும் நம்மூர் உணவு கிடைக்கிறது. ஆனால், அதற்கு நம்மாட்கள் நிர்ணயிக்கும் விலை இருக்கிறதே… கொஞ்சமும் நியாயம் அற்றது.

அது டெல்லியோ, கொல்கத்தாவோ, மும்பையோ… எங்கு சென்றாலும் நூறு ரூபாய் இருந்தால் நல்ல பஞ்சாபி அல்லது குஜராத்தி அல்லது மராத்தி சாப்பாடு வயிறு நிறையச் சாப்பிட்டுவிடலாம். ஆனால், தமிழ் உணவு சாப்பிட்டால், பாதி வயிற்றுக்குத்தான் அது அடங்கும். ஒரு கொடுமையான உதாரணம், டெல்லியில் உள்ள நம்மூர் பிரபல பவன் உணவகச் சாப்பாடு. உடன் வந்த நண்பருக்குச் சின்னக் கிண்ணத் தில் வைக்கப்பட்ட கூட்டு போதவில்லை. கொஞ்சம் கூட்டு கிடைக்குமா என்று கேட்டார். கிடைக்கும்; ஆனால், அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். சாதாரணச் சாப்பாடுதான். விலை எவ்வளவு தெரியுமா? ரூ. 210.

நான் இங்கு நம்மூர் சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, தென்னிந்தியச் சாப்பாடு என்று குறிப்பிடாமல், தமிழ்ச் சாப்பாடு என்று குறிப்பிடக் காரணம் இருக்கிறது. நம்மாட்கள் கடையில் சாப்பிடும்போதுதான் இப்படி யானை விலை, குதிரை விலை. ஆந்திர மெஸ்களில் இந்த நிலை இல்லை. நியாயமாக வாங்கிக்கொண்டு, வயிறும் மனதும் நிறையப் பரிமாறு கிறார்கள். உடுப்பி உணவகங்களிலும் இதே நிலைதான்.

இந்தப் பயணத்தில் தமிழ்ச் சாப்பாடு கிடைத்த இடங்களில் ஒரே மரியாதைக்குரிய உணவகம் மும்பை மாதுங்கா பகுதியில் இருக்கும் ‘மணீஸ் லஞ்ச் ஹோம்'. நியாயமான விலை, நல்ல தரம், ருசிக்குப் பேர்போன இந்த உணவகம் 1937-ல் தொடங்கப்பட்டது; சாப்பிடுவது சாப்பாடோ, தோசையோ, பொங்கலோ எதுவானாலும் வயிறாரப் பரிமாறு கிறார்கள். கடை நிர்வாகி கே.எஸ். நாராயணசாமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். "ஒருகாலத்தில் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதே பாவம் என்பார்கள். ஏதோ காலச் சூழல். இதுவும் ஒரு தொழிலாகிவிட்டது. காசையும் வாங்கிக் கொண்டு வயிற்றையும் நிரப்பாமல் அனுப்புவது மகா பாவம் இல்லையா? எனக்கே சொல்லச் சங்கடமாக இருக்கிறது. நம்மாட்கள் இங்கும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன் இப்படி மாறினார்கள் என்று புரியவில்லை" என்பவர், "உண்மையில் கடவுள் நமக்கு வேலை கொடுப்பவர் மூலமாகத் தான் நம்மை வாழவைக்கிறார். அவர்களை ஏமாற்றிவிட்டு எந்தத் தர்மம் பேசுவதிலும் புண்ணியம் இல்லை" என்கிறார்.

நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விடவும் முக்கியம் அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது. எல்லாச் சமூகங்களிலுமே நியாயவான்களும் அநியாயக்காரர்களும் அடங்கியிருக் கிறார்கள். பணத்துக்காகப் பண்பு மாறுவது எல்லாச் சமூகங்களிலுமே நடக்கிறது. ஆனால் இந்த நியாயங்கள் நம் தவறுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள உதவுமா?

ஏப்ரல், 2014, ‘தி இந்து’

5 கருத்துகள்:

  1. அன்புடையீர்..

    இங்கே கூறப்பட்டிருக்கும் மாதுங்கா மணீஸ் உணவகத்தில் உணவருந்திய அனுபவம் இருக்கின்றது..

    மேலும் - இந்தப் பதிவில் நியாயத்தைக் கண்டேன்.. மனம் வருந்துகின்றேன்.
    ஏனெனில் - நான் தற்சமயம் - இருப்பதும் இப்படியானதோர் இக்கட்டான சூழ்நிலையில் தான்!... நம்மவர்கள் கடல் கடந்து வந்தும் - அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் - கனிந்த மனம் உடையவர்களுக்கு எத்தனை எத்தனையோ பிரச்ச்னைகள்.. அவமானங்கள்!..

    இவர்கள் - தம் தவறுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதேயில்லை..

    பதிலளிநீக்கு
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
    என்னு உரைத்து, உலகில் உள்ள அனைவரையும்
    சகோதரர்களாக எண்ணிப் பழகியத அந்தக் காலம்.
    சுயநலம் மிக்க மனிதர்கள் நிறைந்த இனமாக மாறிவிட்டது ஐயா, நம் இனம்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் எழுத்துக்களீல் உள்ள வலியும் வலிமையையும் உணர பெற்றவன் நான்.வணங்குகிறேன் உங்கள் வாசகனாக...மென்மேலும் உங்கள் எழுத்துக்களீன் மூலம் உச்சம்பெற பெரியவர்க்ளீன் ஆசீர்வாதமும் ஆண்டவன் அனுகிரஹமும் பெற வாழ்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சில தாந்தோன்றித்தனமாக இனத்தை பதவிக்காக கட்டி கொடுக்கும் பச்சோந்திகளை
    தமிழர்கள் என்றும் தனிமைப்படுத்தி வைத்திருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கருதிக்கள் உண்மை என்பதற்கு இன்னுமோர் சாட்சி ..சுமார் 5 வருடர்த்திற்கு முன்பு என் கல்லூரி டெல்லி க்கு அழைத்து சென்றபோது தமிழ் நாட்டு உணவிற்காக மாணவர்கள் தேடி கொண்டிருந்த போது அம்மா மெஸ் என்று கோட்டை எழுத்தில் நடு ரோட்டில் வைக்கப்பட்ட ஹோட்டல் தேடி நாங்கள் அனைவரும் சென்று பார்த்த அதிர்ச்சி ...பாதி வெந்து போன அரிசி கஞ்சி சாப்பாடு, தண்ணி சாம்பார் விலை 200 :(வருடம் : 2000). நம் தமிழ் சரளமாக பேசும் அவன் தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறான் ...எங்கே பொய் யாரிடம் சொல்வது ....சாப்பிடாமல் பணம் வீணானது தான் மிச்சம் .....

    பதிலளிநீக்கு