இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண்டால் என்ன?


சாதிய வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் ஏன் வாய்மூடி இருக்கிறது?' என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால்தான் ‘இப்போது ஏன் பேசுவதில்லை' என்ற கேள்வியும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்எஸ்எஸ் வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த கீழவெண்மணி சம்பவத்தின்போது - 44 தலித்துகள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டபோது - ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? சுந்தூரில் 8 தலித்துகள் கொன்றழிக்கப்பட்டபோது என்ன செய்தது? பதானில் 21 தலித்துகள் கொல்லப்பட்டபோது என்ன செய்தது? சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு என்று அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் குறிப்பிடப்பட்ட, 58 தலித்துகள் கொல்லப்பட்ட லக்ஷ்மண்பூர் பதே சம்பவத்தின்போது என்ன செய்தது?
 

சில நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. 2002-ல் டெல்லி வஸந்த்குஞ்சில் வேதக் கல்வி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவுக்கு அத்வானி வந்தபோது, இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் வசித்துவந்த தலித் குடும்பங்களை வெளியேற்றினார்கள். வேதக் கல்வி நிறுவனம் தொடங்கும் சமயத்தில் தலித்துகள் அங்கு இருந்தால், புனிதம் கெட்டுவிடும் என்றார்கள்.  அத்வானியோ, ஆர்எஸ்எஸ்ஸோ இதற்கு ஆட்சேபித்ததாக நினைவில்லை. அதே வருஷத்தில்தான் துலினா சம்பவமும் நடந்தது. இறந்துகிடந்த ஒரு மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐந்து தலித்துகளை அடித்தே கொன்றார்கள். குற்றவாளிகள் ‘விஷ்வ ஹிந்து பரிஷத்' தொண்டர்கள் என்ற செய்தி வந்தபோது, “எத்தனை மனித உயிர்களையும்விட உயர்வானது ஒரு பசுவின் உயிர்” என்று அந்தப் படுகொலையை நியாயப்படுத்தினார் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர். ஆர்எஸ்எஸ் இதைக் கண்டித்ததாக நினைவில்லை. அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்து மதத்தின் மிகப் பெரிய விரோதி சாதி. இந்துக்களை இந்து மதத்திலிருந்து விரட்டும் மாபெரும் தீயசக்தியும் அதுதான். இந்து மதத்தைக் காப்பதையே தன் பிரதான கடமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு நூற்றாண்டை நோக்கி நகரும் தருணத்திலேனும் அதன் உண்மையான எதிரியை அங்கீகரிக்க வேண்டுமா, இல்லையா?



நாக்பூரில் கடந்த ஆண்டு நடத்திய மூன்று நாள் மாநாட்டில் ஒரு முக்கியமான முழக்கத்தை அறிவித்தது ஆர்எஸ்எஸ். “இந்துக்கள் அனைவருக்கும் ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே இடுகாடு!” அப்போதுதான் அம்பேத்கரைச் சுவீகரித்துக்கொள்ளும் இன்றைய திட்டங்களும் திட்டமிடப்பட்டன. கூடவே, தீண்டாமை ஒழிப்பு, சாதி வேறுபாடு ஒழிப்பு ஆகியவற்றுக்கு இனி பிரதான கவனம் அளிக்கவிருப்பதாகவும் கூறியது ஆர்எஸ்எஸ். இந்து மதத்திலிருந்து வெளியேறுபவர்களைத் தடுக்கவும் வெளியேறியவர்களை மீண்டும் மதத்துக்குள் கொண்டுவரவுமான உத்திகளில் ஒன்றாகவே இந்தச் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.


ஆக, இந்து மதத்துக்குள் சாதி தொடரும் வரை, சமத்துவத்தைக் கொண்டுவராதவரை இந்து மதத்தின் சாபக்கேட்டுக்கு விமோசனமே இல்லை எனும் நிலைப்பாட்டை நோக்கி ஆர்எஸ்எஸ்ஸும் நகர்வதாகத் தெரிந்தது. காலம் கடந்த ஞானோதயம் என்றாலும், வெளிப்பார்வைக்கு இவையெல்லாமேகூட பெரிய மாற்றங்களாகத் தோன்றின. ஏனென்றால், சாதிய அமைப்பை ஆரம்பக் காலம் தொட்டு போற்றிவந்த அமைப்பு அது.
 

இன்றைக்கு அம்பேத்கரின் பிராபல்யத்தை வீதிக்கு வீதி கொண்டுசெல்லப்போவதாகக் கூறும் ஆர்எஸ்எஸ், சாதிய அமைப்பைப் பொருட்படுத்தவில்லை என்ற காரணத்துக்காகவே அன்றைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வெறுத்து ஒதுக்கியது. இந்திய அரசியல் நிர்ணய சபை நமது அரசியலமைப்புச் சட்டத்தை இறுதிசெய்திருந்த வேளையில், ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசஸர்’ தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: “நமது புதிய அரசியலமைப்புச் சட்டம் நமது தொன்மையான பாரதத்துக்கே உரித்தான, தனித்துவமான அரசியலமைப்புச் சட்டத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஸ்பார்டாவின் லிகர்கஸ், பாரசீகத்தின் சாலோன் போன்ற சட்டங்களுக்கெல்லாம் முன்னால் எழுதப்பட்டது மனுநீதி. இன்று வரை மனுவின் சட்டங்கள் உலகின் பல்வேறு தரப்பாலும் உயர்ந்து பார்க்கப்படுகிறது. ஆனால், நம் அரசியல் சட்ட மேதைகளுக்கோ அது எந்தவிதத்திலும் பொருட்டில்லாததாகிவிட்டது.”
 

ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தப் பின்புலத்தை வடிவமைத்த எம்.எம்.கோல்வால்கர் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார், “மேலைநாடுகளின் வெவ்வேறு அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக உருவி சிக்கலானதும் கலவையானதுமாக உருவாக்கப்பட்டிருக்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். இது நம்முடையது என்று சொல்வதற்கு ஒர் அம்சமாவது அதில் இருக்கிறதா?” சாதிய அமைப்பின் வேறுபாடுகளை ஒரு விஞ்ஞானபூர்வ சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளாகப் பார்த்தார் கோல்வால்கர். “சமூக நல்லிணக்கத்துக்கான பிணைப்புச் சக்தி சாதியமைப்பு” என்றார் அவர்.

சாதியத்துக்கு எதிரான அரிதான குரல்கள் ஹெட்கேவார் காலத்திலிருந்தே ஆர்எஸ்எஸ்ஸில் ஒலித்தாலும், ‘சாதிய அமைப்பு வேண்டும்; தீண்டாமை - சாதிய மோதல் கூடாது’ என்பதைத் தாண்டி அது நகர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் நாக்பூர் மாநாட்டு முடிவுகள் திரும்பிப் பார்க்க வைத்தன.
 

இன்றைக்கு இந்தியாவில் சாதியமைப்பை ஒழிப்பது என்று எந்த அமைப்பாவது சங்கல்பம் எடுத்துக்கொண்டு உழைத்து, பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரவும் முடியும் என்றால், ஆர்எஸ்எஸ்ஸுக்கே அதற்கான சாத்தியங்கள் அதிகம். நாட்டின் பட்டித்தொட்டிகள் எங்கும் 56,000-க்கும் மேற்பட்ட கிளைகளைப் பரப்பியிருக்கும் அமைப்பு அது.  எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்க சமூகத்தில் வேர் வரை ஊடாடி உரையாடும் அர்ப்பணிப்புணர்வு கொண்ட ஒரு தொண்டர் படை எப்போதுமே அதனிடம் உண்டு. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்துடன் அதற்கிருக்கும் நெருக்கமான உறவு இப்போது உச்சத்தில் இருக்கிறது. எல்லாவற்றைவிடவும் முக்கியமான காரணி, ஆர்எஸ்எஸ் பெருமளவில் யாருடைய தரப்பாக இருக்கிறது என்பது. சமூகத்தின் மேல்தட்டு சாதிக்காரர்களைப் பெரிதும் ஈர்த்துவைத்திருக்கும் அது சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம் தொடர்பாக அவர்களிடம் உரிமையோடு உரையாட முடியும். இந்தச் சாதிய அமைப்பு - குறிப்பாக மேல்தட்டு சாதிகள் - எப்படியெல்லாம் கீழ்த்தட்டு சாதிகளை மிதித்து நசுக்கி சாகடிக்கின்றன என்று அவர்கள் தரப்பைக் கொண்டே விவாதிக்க வைக்க முடியும்.
 

சாதி ஒழிப்பின் மிக முக்கியமான அம்சம் சொந்த சாதியைத் தாண்டிய புறமணம். சமூகங்களிடையே இணக்கமான சூழல் நிலவும்போதே அதை இயல்பாகச் சாத்தியமாக்க முடியும். அங்கிருந்தே சாதியற்ற நிலையை நோக்கி நகர முடியும். சமூகத்தில் கீழ்த்தட்டில் இருக்கும் சாதிகள் சாதி ஒழிப்பைப் பேசுவதால் மட்டுமே மாற்றங்கள் வந்துவிடாது. மேல்தட்டில் இருக்கும் சாதிகள் பேச வேண்டும். சுயசாதி விமர்சனம் வேண்டும். மேல்தட்டு சாதிகளிடம் செல்வாக்குடன் இருக்கும் அமைப்புகளின் பங்களிப்பு இதில் முக்கியமானது. காந்தி இந்தப் புள்ளியைத்தான் தொட்டார். அவருக்குப் பின் பெரிய வெற்றிடம் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆர்எஸ்எஸ் நினைத்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். சாதியம் என்பது நம்முடைய முன்னுரிமைப் பிரச்சினைகளில் முதன்மையானது என்பதைச் சொல்ல முடியும். சாதிப் பாகுபாட்டால் ஒவ்வொரு 18 நிமிடத்துக்கும் 3 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் ஒரு சமூகத்தில், ஒவ்வொரு நாளும் 27 வன்கொடுமைகள் நடக்கும் ஒரு சமூகத்தில், ஒவ்வொரு வாரமும் 13 பேர் கொல்லப்படும் ஒரு சமூகத்தில், இது தள்ளிப்போடக் கூடிய பிரச்சினை இல்லை என்பதை வலுவான குரலில் சொல்ல முடியும். ஆனால், ஆர்எஸ்எஸ்ஸின் வெளிப்பூச்சு என்றைக்கும் அதன் ஆன்மாவைப் பிரதிபலிப்பதில்லை.
 

ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோகன் பாகவத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் பையாஜி ஜோஷி எழுதியிருக்கும் சாதி தொடர்பான - ‘இந்து சர்மாகார் ஜாதி’, ‘இந்து கட்டிக் ஜாதி’, ‘இந்து வால்மிகி ஜாதி’ - மூன்று புத்தகங்கள் குறித்த ராம் புண்ணியானியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. “இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடிகளின் விளைவாகவே தீண்டாமையும் கீழ்த்தட்டு சாதிகள் ஒதுக்கப்படும் கொடுமையும் நிகழ்ந்தது” என்பது இந்தப் புத்தகங்கள் வாயிலாக ஜோஷி முன்வைத்திருக்கும் ‘கண்டுபிடிப்பு’. ராம் புண்ணியானி கேட்கிறார், “இந்தியாவின் வேதங்களின் வயது எத்தனை? இந்தியாவுக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் படையெடுப்புகளின் வயது எத்தனை? கி.பி. முதலாவது நூற்றாண்டில் தீண்டாமை அறிமுகமானது. ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த மனுவால் மனுநீதி வந்தது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே - அதாவது 11-வது நூற்றாண்டில்தான் - முஸ்லிம்களின் படையெடுப்பு நடந்தது. ரிக் வேத காலத்திலேயே சமூகம் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டது. மனுநீதியின் காலத்தில் அது கட்டாயமான சாதி முறையாக உருவெடுத்தது. தீண்டாமை உருவெடுத்தது.”
 

ஆர்எஸ்எஸ் மீதான நம்முடைய மதிப்பீடு என்ன; அதை நமக்குப் பிடிக்கிறதா, இல்லையா; அது நிலைத்திருக்க வேண்டிய சக்தியா, இல்லையா என்பதையெல்லாம் தாண்டி அது இன்றைய சமூகத்தில் ஒரு வலிமையான  பண்பாட்டு அரசியல் சக்தி. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை, இந்து மதத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கம் என்றால், அதற்கு சாதியை ஒழித்தாக வேண்டும் என்பது.
 

ஆர்எஸ்எஸ் இந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் ஒருபக்கம் தீண்டாமை ஒழிப்பைப் பேசுகிறது; மறுபக்கம் மனுநீதியைக் கையில் தாங்கியிருக்கிறது. ஒருவகையில், இந்து மதத்தின் கொடிய எதிரி அதன் கையில்தான் இருக்கிறது. ஆனால், எதிரிகளை வெளியே தேடிக்கொண்டிருக்கிறது அல்லது உருவாக்கிக்கொண்டிருக்கிறது!

மார்ச் 2016, ‘தி இந்து’


2 கருத்துகள்:

  1. நல்ல கேள்விதான். நடக்க வேண்டுமே!

    Unique and Bold perspective Samas.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு