ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?


கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

நான் சொல்வேன், “தம்பி, தங்கைகளே... அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டம். தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது! இந்நாட்டில் இன்றைக்கு ஆங்கிலம் நீடிக்கிறது என்றால் அது தமிழகம் நடத்திய போராட்டத்தினால்தான். அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்டபோது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது? இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது!”

இப்போது அந்த ஏற்பாட்டின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ தொடங்கிவிட்டது. குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருக்கும், ஆட்சிமொழி தொடர்பிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னொரு மொழிப் போருக்கான தேவையைக் கூறுகின்றன. இதைப் பரிந்துரைத்த குழுவின் தலைவர் ப.சிதம்பரம் ஒரு தமிழர் என்பதும் இப்போது அதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒரு வங்காளி என்பதும் சோகமுரண். ஏனைய இனங்களுக்கான முடிவுரை முயற்சிகளைக்கூட இன்றைக்கு அவரவர் கைகளாலேயே எழுதவைக்கிறது இந்தி தேசியம்!

என்ன பரிந்துரைக்கிறது ஆட்சிமொழிக் குழு?

மொத்தம் 117 பரிந்துரைகள். அவற்றில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில இவை.
* இந்தி படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்களில் பத்தாவது வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்.
*எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்விக்கூடங்களிலும் இந்தி மூலம் பாடம் கற்பிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
* மத்திய அரசின் எல்லா விளம்பரங்களிலும் 50% செலவு இந்திக்காகவும் எஞ்சிய செலவு ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்காகவும் இருக்க வேண்டும்.
* அறிவியல் ஆய்வு இதர ஆய்வு நிறுவனங்கள் ஏராளமான தொகையைப் புத்தகங்கள் வாங்கச் செலவிடுகின்றன. இவற்றில் 50% இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஆணையிட வேண்டும். நூல்கள் வாங்க நிதி ஒதுக்கப்படாத துறைகளில் அலுவலகத்தின் மொத்தச் செலவில் 1% புத்தகம் வாங்கச் செலவிடப்பட வேண்டும். அந்தத் தொகையில் சரிபாதி இந்திப் புத்தகங்களுக்குச் செலவிடப்பட வேண்டும். நூல்கள் வாங்குவதற்கான தொகையில் 50% அல்லது மொத்த அலுவலகச் செலவில் 1% என்ற இரண்டில் எது அதிகமோ அந்தத் தொகைக்கு இந்திப் புத்தகங்கள் வாங்கச் செலவிட வேண்டும்.
* குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவியாளர்களும், அமைச்சர்களும் இந்தியில் பேச, படிக்க முடியும் என்றால் இந்தியில் மட்டுமே பேச வேண்டும், அறிக்கைகளை அளிக்க வேண்டும்!

இதைப் பரிந்துரைத்த மூளைகள் இந்தி பேசாத மாநில மக்களை எவ்வளவு துச்சமெனக் கருதுபவை என்பதை இந்தப் பரிந்துரைகளைத் தாண்டியும் புரிந்துகொள்ள குடியரசுத் தலைவர் அனுமதி தராத பரிந்துரைகள் மேலும் அடையாளம் காட்டுகின்றன.

* அரசியல் சட்டத்தின் 120 (2) ஷரத்துப்படி, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது தாய்மொழியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
* ஆங்கில ஆதிக்கத்தை (பயன்பாட்டை அல்ல) முடிவுக்குக் கொண்டுவர, இந்தி அல்லது தாய்மொழியைக் கற்பிக்காத பள்ளிக்கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடாது.
* மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தித் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும்.
* ஆட்சிமொழிச் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று இது என்பது போக, ஆங்கிலத்தின் மீதான நேரடியான, குரூரமான தாக்குதலும் இது. ஏன் ஆங்கிலத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்? ஏனென்றால், இந்தி பேசாத மாநிலங்களுக்கும் அதிகாரத்துக்குமான நேரடிப் பாலம் ஆங்கிலம். அந்தப் பாலம் இந்திய ஒன்றியத்துடன் மட்டும் இன்றி, சர்வதேசத்துடனும் ஏனைய சமூகங்களை இணைக்கிறது; மறைமுகமாக இந்தி தேசியர்களின் ஒரே கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் பிற்போக்குத்தனங்களை அது உடைத்து நொறுக்கும் கருவியாகிறது. பன்மைத்துவத்துக்கான ஊடகமாகிறது.

ஆங்கிலத்தின் மீதான இந்த வெறித் தாக்குதல் புதிதல்ல. அதற்கு நீளமான வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1957-ல் நடத்தப்பட்ட ‘ஆங்கிலத்தை ஒழிப்போம் இயக்கம்’ (அங்க்ரேஸி அடாவோ) இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்களின் வளர்ச்சிக்கு உதவிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. 1963-ல் “பள்ளிக்கூடங்களில் மட்டும் அல்ல; கடைப் பெயர்ப் பலகைகளிலும் கார் நம்பர் பிளேட்டுகளிலும்கூட ஆங்கிலம் கூடாது” என்று நடந்த போராட்டங்களில் முதலில் முன்னின்றவை ஆர்எஸ்எஸ்ஸும் இன்றைய பாஜகவின் அன்றைய முகமான ஜனசங்கமும்.

குஜராத் வளர்ச்சியை முன்மாதிரியாக வைத்து மோடி பேசத் தொடங்கியிருந்த நாட்களில் வெளியானவற்றில் முக்கியமான ஒன்று ‘ப்ரதம்’ அறிக்கை. தேசிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் இந்த அமைப்பு, “ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே மாணவர்கள் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் குஜராத்” என்றது.  பிற்பாடு  நான் குஜராத் சென்றேன். ‘குஜராத் மாதிரி’ தொடர்பில் தெரிந்துகொள்ள குஜராத்தின் தொழில் துறை, கல்வித் துறை தொடர்பில் கொஞ்சம் தெரிந்துகொள்ள விரும்பினேன். குஜராத்திலுள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது என்பதும் அங்குள்ள மாணவர்கள் ஆறாம் வகுப்பில்தான் ‘ஏ,பி,சி,டி’ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உடன் வந்த நண்பர் அரசு சொன்னார், “இது தேவலாம். முன்பு எட்டாவது வரை ஆங்கிலம் கிடையாது. தொடக்கக் கல்வியிலேயே ஆங்கிலத்தைக் கொண்டுவர பல வருஷங்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசாங்கத்தில் முயன்றார்கள். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் விடவில்லை!”

குஜராத்தில் ஒரு சாதாரண தொழிலாளியின் வருமானம் நம்மூர் தொழிலாளியைக் காட்டிலும் அதிகம். அதற்குக் காரணம் அவர்கள் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை என்று இரண்டு வேலைகள் பார்ப்பது அல்லது ஒரே வேலையை அதிக நேரம் பார்ப்பதே என்பதும் அங்கு சென்ற பின்னரே தெரியவந்தது. உண்மையில் நம்மூரில் திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஒயிட் காலர்’ வேலைகளை அதிகம் வளர்த்திருக்கின்றனர்; மாறாக குஜராத் ‘ப்ளூ காலர்’ வேலைகளையே  அதிகம் வளர்த்தெடுத்திருக்கிறது.

குஜராத் மக்கள்தொகையில் 20% பேர் படேல்கள். மாநிலத்திலுள்ள 120 சட்டசபை உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் அவர்கள்தான். இவ்வளவு பெரிய அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தும், நிலவுடைமையாளர்களான அவர்கள் இன்று ஏன் இடஒதுக்கீட்டுக்காகப் போராடும் நிலையில் இருக்கிறார்கள்? வேலைவாய்ப்பின்மை. உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுக்க முடியாமை. ஆங்கில எதிர்ப்புக்கு இதில் முக்கியமான பங்குண்டு.

உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோதே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தீவிரமாகத் தொடங்கின. இன்றைக்கு இந்தி பேசும் மாநிலங்கள் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, உலமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத அவர்களுடைய பிற்போக்குத்தனமான ஆங்கில எதிர்ப்புக் கொள்கை. வட இந்தியாவில் குஜ்ஜார்கள், ஜாட்டுகள் என்று பல நிலவுடைமைச் சமூகங்கள் இன்று வேலைவாய்ப்பின்மையால் இடஒதுக்கீட்டின் பெயரால் வீதியில் நிற்பதற்கும் இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்கள் செல்வாக்கு ஓங்கியிருப்பதற்கும் முக்கியமான தொடர்பு உண்டு. இந்தி வெறி பிடித்த ஆங்கில எதிர்ப்புக் கொள்கை இதன் அடிநாதங்களில் ஒன்று.

தமிழகம் உலகமயமாக்கல் சூழலில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் நிமிர்ந்து நிற்கக் காரணமும் அதே ஆங்கிலம்தான். அண்ணா தேர்ந்தெடுத்த இருமொழிக் கொள்கை. பெரும்பான்மைவாதத்துக்காக இந்தியை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்து நிற்பவர்களுக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்நாட்டின் சாமானிய மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரம் போன்ற ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை முஸ்லிம் இந்நாட்டின் மக்களின் ஜனாதிபதியாக உயர்ந்தது ஆங்கிலத்தின் துணையால்தான். ஒரு ஏழை விவசாயியும், ஒரு ரிக்‌ஷாக்காரரும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியும்கூட இந்நாட்டில் தம் பிள்ளைகளுக்கு எப்பாடு பட்டாவது தாய்மொழியோடு இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தைப் புகட்டிவிடத் துடிப்பது அதனால்தான்.

உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை கல்வி ஆய்வுகளும் தாய்மொழிக்கல்விக்கே முதல் கவனத்தை அளிக்கச் சொல்கின்றன. அடுத்து, ஆங்கிலத்தின் மேன்மையை அவை உரக்கச் சொல்கின்றன. முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவதாக இந்தி போன்ற ஒன்றைப் பிற்பாடு கற்பதில் தடை ஏதுமில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் எல்லாமே கற்றுக்கொள்ளலாம். ஆனால், தொடக்கக் கல்வியிலேயே இந்தி நுழைப்படும் அளவுக்கு உலகமயமாக்கல் சூழலில் இந்தியின் பொருத்தப்பாடு என்ன என்பதற்குப் பதில் வேண்டும். தாய்மொழியும் ஆங்கிலமும் தராத எதை ஒரு இந்தி பேசா மாநிலக் குழந்தைக்கு இந்தி தந்துவிடும் என்பதற்குப் பதில் வேண்டும். இந்தி தவிர, ஏனைய எல்லா பிராந்திய மொழிகளையும் துச்சப்படுத்தும் அதிகாரத்தை இந்திக்காரர்களுக்கு யார் வழங்கியது என்பதற்கான பதில் வேண்டும்.

இந்திய அரசு இதே அக்கறையை ஆங்கில வளர்ச்சியில் திருப்பினால், உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில் மகத்தான மாற்றங்கள் நிகழும். மக்களை அது மேன்மை அடையச் செய்யும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், உண்மையான சமூக, நாகரிக வளர்ச்சியையும் அது வளர்த்தெடுக்கும். மாறாக, இந்நடவடிக்கை இதுநாள் வரையிலான நம்முடைய அத்தனை வளர்ச்சிகளையும் பின்னோக்கித் தள்ளும். தாய்மொழி - ஆங்கிலம் இரண்டையுமே வேர் அறுக்கும்.

பள்ளிக்கூடங்களில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்தி ஆதிக்கத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது மோடி அரசு. இந்தி பேசும் மாநிலங்களின் அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் யாவருடைய உரைகளும் இனி இந்தியில்தான் இருக்கும் என்பதற்கும் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்று அறிவிப்பதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. “இந்தி பேசத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று ஐம்பதுகளில் நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் ஞாபகத்துக்குவருகிறது. ஆதிக்கத்துக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து நம் முன்னோர் நடத்திய இடையறாத எதிர்ப் போராட்டமும் நினைவுக்குவருகிறது.  இன்று தமிழகத்தின் அரசியல் கட்சிகளிடம் அறிக்கைகளைத் தாண்டி இது தொடர்பில் சலனங்கள் ஏதும் இல்லை. பெரியார், அண்ணா என்று வந்த ஆதிக்க எதிர்ப்பு மரபில், ஒரு கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட இன்று அரசியல் களத்தில் இல்லாதது அப்பட்டமாக இச்சூழலில் தெரிகிறது. மத்தியில் பெரும்பான்மைவாத அரசு எக்களித்துச் சிரிக்கிறது. இளைஞர்கள் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சொல்ல முடியும், அந்த மௌனம் அமைதி அல்ல!



ஏப்ரல், 2017, ‘தி இந்து’

16 கருத்துகள்:

  1. Nice article. Should be translated and given in The Hindu English version also. I mean this article should be printed in entire India.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well said. Almost all your articles deserve to be translated and published in "The Hindu " on the same day . Keep up the good work Samas !!

      நீக்கு
  2. முதலில் தாய்மொழி பிறகு தேச மொழி பிறகு அன்னிய மொழி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய மொழி இந்தி கசக்கிறது, அந்நிய மொழி ஆங்கிலம் மட்டும் இனிக்கிறதா? இந்தி ஆதிக்கம் தவறு, ஆனால் ஆங்கில ஆதிக்கம் சரியா? பிழைப்பிற்காக ஆங்கிலம் என்றால் நாளை இந்தியால் பிழைப்பு கிடைக்கும் என்றால் இந்தி ஜிந்தாபாத் ஆ? ஆங்கிலத்தை முன்னிறுத்தி தமிழை அழித்தது போதாதா? இந்திக்கு இணையாக தமிழை முன்நிறுத்துங்கள், வளருங்கள். ஆங்கிலம் தீர்வல்ல.
      நீங்கள் பட்டியலிட்டுள்ள பரிந்துரைகளில் இந்தி மட்டுமே என்று எதையும் நான் காண இயல்வில்லை. இந்தி, தாய்மொழி இருக்கும் என்றுதான் புரிகிறது. உதாரணம்: "அரசியல் சட்டத்தின் 120 (2) ஷரத்துப்படி, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது தாய்மொழியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்". இந்தி மட்டும்தான் இருக்கும் என்று ஏன் திரிக்கிறீர்கள்? ஆங்கிலம் இல்லாதுதான் உங்கள் பிரச்சினையா?

      பா ராஜேந்திரன்

      நீக்கு
    2. purinju pesunga rajendran. if Hindhi will help me to succeed in this competitive corporate culture then i can consider Hindhi, other wise why i have to lean. with english i can communite into any part of the world, i can do my studies at any country and can access world litterature... hindhi la enna irukku..

      நீக்கு
  3. ஆங்கிலம் பேச்சிலும், பெயர்பலகையிலும், படிப்பிலும், வாசிக்கப்படும் புத்தகங்களிலும், என பலவகையில் ஆதிக்கம் செலுத்துவது தமிழுக்குப் பெருமையா? இன்று யூ.கே.ஜி இல் குழந்தைகள் இந்தி படிக்கிறார்கள். ஏன்? தமிழர்களைத் தவிர வேறு மொழிவாரி மாநிலத்தவருக்கு மொழி உணர்வே இல்லையா? இரு மொழிக்கொள்கை காலாவதியான ஒன்று. அரசியல்வாதிகளும் அறிந்தே உள்ளார்கள் போலும். இந்தியை ஒழித்து ஆங்கிலத்தை காப்பாற்றுவதைவிட்டு தமிழை வளர்த்தெடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில் மகத்தான மாற்றங்கள் நிகழும். மக்களை அது மேன்மை அடையச் செய்யும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், உண்மையான சமூக, நாகரிக வளர்ச்சியையும் அது வளர்த்தெடுக்கும். சமூக நாகரிக வளர்ச்சியை வளர்த்தெடுக்கும் ஆங்கிலம் என்ற தங்கள் கருத்து கொஞ்சம் இடிக்கவே செய்கிறது. ஓர் மொழி பேசும் இனம் தனக்கேயுரிய மேம்பட்ட நாகரீகத்தைக் கொண்டிருக்கும் போது அது எப்படி அடுத்த மொழி பேசுபவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.இதை ஆங்கில மோகத்தின் வெளிப்பாடு போல் தோன்றவில்லையா ?தாங்கள் எதை வைத்து தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களோ தெரியவில்லை. எனது சிற்றறிவுக்கு இதை இப்படித் தான் எடுக்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  7. " இந்தி பேசும் மாநிலங்களின் அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் தங்கள் தாய் மொழியில் பேசினால் அது தவறா? அதை விடுத்து அயல்மொழி ஆங்கிலத்தில் பேசவேண்டுமா? அவர்கள் இந்தியில் பேசுவது இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கும் என்றால் அவர்கள் தங்கள் தாய்மொழியை தவிர்த்து அன்னிய மொழி ஆங்கிலத்தில் பேசுவது நம்மை மூன்றாம்தர காலனி ஆதிக்க அடிமைகள் ஆக்காதா? சரியான மாற்று இந்திய மொழிகளுக்குள்தானே அமைய வேண்டும். ஏன் மற்ற இந்திய மொழிகளில் அம்மொழி அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் பேசலாம் என்ற கோரிக்கையை நீங்கள் வைக்கவில்லை. தமிழுக்கு இந்திக்கு சமமான உரிமை இருக்கிறது என்று நீங்கள் உண்மையிலேயே எண்ணினால் அதைத்தானே கேட்கவேண்டும்? ஆங்கிலத்தை தூக்கி பிடித்துகொண்டிருப்பதால்தானே தமிழின் உரிமை மறந்து போகிறது? எந்த மொழியில் அவர்கள் பேசினாலும் அனைத்து இந்திய மொழிகளிலும் அதை உடனே மொழிபெயர்த்து ஒளி/ஒலி பரப்ப முடியாதா? அதற்கான தொழில்நுட்பம் இல்லையா என்ன?

    பதிலளிநீக்கு
  8. இந்திய அரசு இந்திக்கு அளிக்கும் அதே அக்கறையை தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் அளிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லை. இந்திக்கு பதில் ஆங்கில வளர்ச்சியில் திருப்பவேண்டுமாம். இல்லையெனில், ஆங்கிலத்தோடு தமிழும் அழியுமாம். இந்திய மொழி இந்தி தமிழை அழித்துவிடுமாம். அந்நிய மொழி ஆங்கிலம்தான் தமிழை காபாற்றுமாம். என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
  9. "தாய்மொழியும் ஆங்கிலமும் தராத எதை ஒரு இந்தி பேசா மாநிலக் குழந்தைக்கு இந்தி தந்துவிடும் என்பதற்குப் பதில் வேண்டும்." ஆதவன் தீட்சண்யா சென்ற ஆண்டு ஓசூர் புத்தகத் திருவிழாவில் சொன்னார், தான் ஓசூரில் சிறு வியாபாரிகள் இந்தியில் விற்பனை செய்வதை பார்த்ததாக. காரணம் இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள். வட மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளால் வருமானம் பெருகும். இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களும் மொழி தெரியாத அந்நிய மாநிலங்களாக தமிழர்கள் அவதிப்படத் தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  10. இந்தியாவில் அதிக மக்களால் புரிந்துகொள்ளப்படும் மொழி இந்தியே என்பதை மறுக்கமுடியுமா? நிச்சயம் ஆங்கிலம் அல்ல. தமிழ்நாட்டைத் தவிர மற்ற இந்தி தாய்மொழி அல்லாத மாநிலங்கள் மும்மொழிக் கொள்கை என்று இந்தியை கற்பிப்பது ஏன்? மும்மொழிக் கொள்கைபின்பற்றும் மாநிலங்கள்அகில இந்திய அளவிலான தேர்வுகளில் தமிழ்நாட்டை பின் தள்ளியது எப்படி?

    பதிலளிநீக்கு
  11. வரலாற்றுக் காலத்தில் இந்தியா என்றொரு நாடு கிடையாது. ஆங்கிலேயர்கள் நாடு பிடித்தபோடு பல்வேறு பகுதிகளையும் ஒன்றிணைத்து அரசாட்சி புரிந்தனர். அப்போது அனைத்து பகுதிகளும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தன. அப்போது ஏற்பட்ட சுதந்திரப் போராட்டங்களின் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த மக்கள் ஆங்கில மொழி வழி இணைந்து போராடி சுதந்திரம் பெற்றனர். சுதந்திரம் பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் பிறகு வங்காளதேசம், பர்மா என்று தனித்தனியாகப் பிரிந்தனர். இந்தியா என்ற நாடு உருவானது சுதந்திரத்தின்போதுதான். இந்தியாவில் வசிக்கும் அனைத்து மொழி பேசும் மக்களும் சம உரிமை கொண்டவர்களே. ஒரு போட்டித் தேர்வு எழுதும்போது தாய்மொழி இந்தியில் எழுதுபவர்களுக்கும் இரண்டாம் மொழியாக இந்தியைப் படித்து எழுதுபவர்களுக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா? தாய்மொழியில் எழுதுபவர்கள்தானே அதிக மதிப்பெண்கள் எடுப்பர்? எனவேதான், இரண்டாவது பொது மொழியாகிய ஆங்கிலத்தில் எழுதினால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இரண்டாவது மொழி என்ற வகையில் சம வாய்ப்பு கிடைக்கும்? இதை விடுத்து இந்திய மொழி என்று இந்தியை பெருமை பேசாதீர்கள்? இந்தி என்ற ஒரு மொழியே பிற்காலத்தில் உருவானதுதான். இந்தி மொழி வரலாறு படித்துப் பாருங்கள். இந்தி மொழியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்ற ஒரு மொழி. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற இரண்டு வங்கியின் பெயர்ப் பலகைககளிலும் உள்ள இந்தியன் என்ற வார்த்தையை இந்தியில் பாருங்கள். இந்தி மொழியின் லட்சணம் புரியும். சம வாய்ப்பும், உலக அரங்கில் போட்டி போடக்கூடிய பொது மொழியான ஆங்கிலம் தெரிந்ததால்தான் இன்று தமிழர்கள் கணிப்பொறி மென்பொருள் துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இந்தி பேசும் எந்த மாநிலத்திலாவது கணிப்பொறித்துறையில் வெற்றி பெற முடிந்ததா?

    பதிலளிநீக்கு
  12. அருமையான விளக்கம். மொழிப்பட்டியலில் தேசீய மொழி என்ற அங்கீகாரம் எம்மொழிக்கும் இல்லாத பொழுது, ஹிந்தியை தேசீய மொழியாக்கிட துடிக்கும் சிலரின் எண்ணம்தான் கட்டாய ஹிந்தி திணிப்பு.ஆங்கிலத்தை எதிர்க்கும் இவர்கள் ஆங்கிலம் பேசும் நாட்டவர்களிடம் நட்புறவு பாராட்ட நினைப்பதேன். அந்நிய மொழி ஆங்கிலம் வேண்டாமெனில், அந்நிய முதலீடு இங்கே எதற்கு. ஆங்கிலம் வேண்டாமு எனில், ஆங்கிலேயன் விட்டுச் சென்ற சட்ட திட்டங்கள், மாவட்ட ஆட்சியர் போன்ற அரசியல் பணி முறைகள்,பெரும் அணைகள், இந்தியாவின் மிகப் பெரும் இரயில்வே துறை என ஆங்கிலேயனின் எச்சங்களை எதற்கு பயன்படுத்துகின்றீர்கள். அணைத்து ஆங்கிலேய திட்டங்களால் உருவாக்கப்பட்டவைகளை உடைத்தெறியுங்களேன். பல நாடுகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள் நமக்கெதற்கு.

    எல்லாவற்றிற்கும் மேல் ஆங்கிலேயனின் கிரிக்கெட் விளையாட்டு நமக்கெதற்கு. நம் நாட்டின் ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுங்களேன். நீங்கள் (ஹிந்தியர்கள் மட்டும்) நாட்டை ஆளவும், உயர் பதவிகளை வகிக்கவும் எண்ணி பிற ஒருங்கிணைந்த மாநில மொழிகளை ஒழித்து அழித்துவிட எண்ணினால் எப்படி?
    வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்தி பேசும் மாநிலத்து மக்கள் ஏன் அந்நாட்டு மொழியினை கற்றுக் கொள்கின்றனர். ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். அங்கெல்லாம் ஹிந்தியை பயன்படுத்தலாமே. உதாரணமாக ஒரு ஹிந்தி மொழியாளன் அமெரிக்கா சென்றால் ஆங்கிலமும், ஜெர்மன் சென்றால் ஜெர்மனும், பிரான்சு சென்றால் பிரெஞ்ச்சும் கற்றுக்கொள்கிறான். ஆங்கில மொழியை பயன்படுத்திக் கொள்வானாம். இங்கு தமிழ்நாடு, போன்ற ஒரு சில ஹிந்தியை ஏற்றுக்கொள்ளாத மாநிலத்திற்கு வந்து ஏன் இவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்கிறான்.


    வேலைக்காக ஹிந்தி படிக்க வேண்டும் என்றால் அது எங்களுக்கு வேண்டாம்.

    பதிலளிநீக்கு