இந்தியா உடைந்தால்...

‘‘எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - கோயபல்ஸ்

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற அந்தச் சின்ன செய்தி வெளியானது 1962-ல். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது ‘மலையாள மனோரமா’ பத்திரிகை மூலம். பி.ஜி. குரியகோஸ் எழுதிய அந்தச் செய்தி அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்றுவரை அந்தப் பொய்யே ஆள்கிறது.


உண்மை 1: அணை, நோக்கங்கள், லாபங்கள்

இந்தியாவின் சராசரி மழை அளவு 1215 மி.மீ. ஆனால், இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ. மழை பொழியும். மேகாலயத்தின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான், நதிநீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில்தான்.
தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில், கேரளத்தின் நீர்வளம் வீணாகிக்கொண்டிருந்தது. இங்கு பயிர் விளைந்தால், அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களையே எடுத்துக்கொண்டு, தனக்கு ரூ. 6 லட்சம் பணமும் அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ்தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால், அதைச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்.
முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 2.5 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக் கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்திசெய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகமே பூர்த்திசெய்கிறது. அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய்கனிகள், முட்டை, இறைச்சி என்று சகலமும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரிகளில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.
தமிழகத்தின் பார்வையில் இருந்துப் பார்த்தால், இது ரூ. 1780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தாலோ, அவர்களுக்கு உணவு அளிப்பவர்களாக தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்.

உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்


முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் பென்னி குயிக் காலத்தில் தொடங்கப்பட்டது அல்ல. 1808-லேயே சர் ஜேம்ஸ்கால்டுவெல் என்ற பொறியாளர் இத்திட்டம்குறித்து யோசித்தார். அது கைகூடாத நிலையில், பொறியாளர் மேஜர் ரைவ்ஸ் 1860-களில் ஒரு திட்ட வரைவை உருவாக்கினார். அந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட சாத்தியங்களை ஆய்வுசெய்யவந்தவர்தான் பொறியாளர் பென்னிகுயிக். பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் அவர் அளித்த திட்ட வரைவு, மேலும் பல நிபுணர்களின் பரிசீலனைகள், திருத்தங்களுடன் உருவானதே முல்லைப் பெரியாறு அணைத் திட்டம். ஏராளமான உயிர் பலிகள், பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்த இத்திட்டம் ஒருகட்டத்தில் ஆங்கிலேய அரசால் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது தன்னுடைய மனைவியின் நகைகளை முதற்கொண்டு விற்று அணையைக் கட்டி முடித்தார் பென்னி குயிக்.
1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை சுண்ணாம்பு சுர்க்கி கலவையைக் கொண்டு கருங்கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது. 1979-ல் அணையின் பாதுகாப்பு விவகாரமானபோது, மக்களின் அச்சத்தைப் போக்க அணையைப் பலப்படுத்த நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980&1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணிகளின்போது, 1200 அடி நீளம், 24 அடி அகலத்துக்கு கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் எஃகு கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனைபடி, புதிய வடிகால் மாடங்கள், மதகுகள் அமைக்கப்பட்டன. ஆக, பழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் இப்போது கூட்டப்பட்டு இருக்கிறது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்த சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ‘‘அணையின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் அர்த்தமற்றது’’ என்றார். 

உண்மை 3: கேரளத்தின் அச்சங்கள், உள்நோக்கங்கள்

அணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை 6 ரிக்டர் அளவுக்குப் பதிவாகும் பூகம்பம் ஏற்பட்டால், அணை உடையும். அணை உடைந்தால் 35 கி.மீ கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடையில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும், இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும். கேரளத்தின் அச்சமும் கோரிக்கையும் இதுதான்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம் கேரளம் அஞ்சுவதுபோல, பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடைவதாகவே கொண்டாலும், அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையைப் போல 7 மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளி, ஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் முறையே அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1960 அடிகள் உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?
பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக்கொள்வது 2254 மில்லியன் கனமீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்கமாகச் சொன்னால், சற்றே பெரிய 4 குழாய்களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது). எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.
புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில் கொண்டு நாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தை இங்கு நிர்ணயிப்பதே கேரளத்தின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகா வாட் மின் உற்பத்திசெய்யும் இலக்கோடு கட்டப்பட்ட இந்த மின் நிலையம் முழு அளவில் இயங்க வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணை இல்லை என்றால் _ தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால் _ அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக்கிறது. மேலும், சில மின் உற்பத்தித் திட்டங்களை அது மனதில் வைத்திருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால், அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப்பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால், அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக அணையில் 136 அடி  வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர் எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள், ரிசார்ட்டுகள் கட்டப்பட்டன. சுற்றுலா அங்கு பெரும் தொழிலாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், அவை காணாமல் போகும். கேரளத்தின் உள்நோக்கங்களில் இது ஒன்று.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கேரள அரசியல்வாதிகளின் ஆபத்பாந்தவன் முல்லைப் பெரியாறு அணை. எப்போதெல்லாம் கேரள அரசியல்வாதிகளுக்கு அரசியல் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் முல்லைப் பெரியாறு அணையை விவகாரமாக்குவது கேரள அரசியல்வாதிகளின் வாடிக்கை. சட்டப்பேரவையில் வெறும் மூன்று இடங்கள் பெரும்பான்மையில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி விரைவில் ஓர் இடைத்தேர்தலை  எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தலின் வெற்றி கேரளத்தின் ஆட்சியையே தீர்மானிக்க வல்லது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை விவகாரம் விசுவரூபம் எடுத்திருப்பதற்கும் கேரளக் கட்சிகளின் ஆவேச அரசியல் ஆட்டத்துக்கும் இது ஒரு முக்கியக் காரணம்.   

உண்மை 4: உடையப்போவது அணை அல்ல!


காவிரியில் தனக்குள்ள பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது இந்தியா. வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும் ரூ. 1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால், இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாக சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை. முல்லைப் பெரியாற்றில், அணை பலமாக இருந்தபோதே, அணையைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை கேரள மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் ஏற்றுக்கொண்டது. அணையைப் பலப்படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைப்பதையும் ஏற்றுக்கொண்டது. இதனால், தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒருபோக சாகுபடியானது. பாசனப்பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும் ரூ. 4200 கோடி இழப்பைச் சந்தித்தது. ஆனால், அணை பலப்படுத்தப்பட்ட பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ‘‘உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்த தீர்பளித்த பின்னர், அதை நடைமுறைப்படுத்துவதை மறுக்கும் வகையில், கேரளம் இப்படிச் சட்டம் இயற்றுவது சரியா?’’ என்றும் ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?’’ என்றும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்றுவரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை, உரிமைகளைப் பெற்றுத்தர முடியவில்லை. எனில், உச்ச நீதிமன்றம், மத்திய நீர்வள ஆணையம், மத்திய அரசு... இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன?
முல்லைப் பெரியாறு அணை வெறும் அணை அல்ல. அவை நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் சின்னங்கள். இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டு என்கிற வார்த்தைக்கு ஏதேனும் அர்த்தம் உண்டு என்றால், அது இத்தகைய விஷயங்கள்தான்! கர்நாடகமோ, கேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்ல; நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீதுதான்.
ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். கடைகள் சூறையாடப்படுகின்றன. போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. கடையடைப்புகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என இரு மாநிலங்களும் அதிர்ந்துகொண்டிருகின்றன. மாநில உணர்வுகள் எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமரே நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
ஆனந்த விகடன் 2011


2 கருத்துகள்:

  1. நியாயமான பார்வையுடன் நிதானமான வார்த்தைகளில் எழுதப்பட்ட கட்டுரை சமஸ்.விகடனிலேயே படித்தேன். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தெளிவான விளக்கம்.. என்னதான் பிரச்சனைன்னு தெரியாம இருந்துச்சு.. ! சமஸ்.. மிக்க நன்றி.. :)

    பதிலளிநீக்கு