கேரளத்தில் உருவாகும் கும்பல் ஆவேசம்: பால் சக்கரியா

பால் சக்கரியா. மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேல் தமிழகம், தமிழர்கள்பால் மிகுந்த நேசம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.
‘‘தமிழகம் - கேரளம் இடையே இப்போது நிலவும் கசப்பான சூழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கஷ்டமாகத்தான் இருக்கிறது. நம்முடைய பழைய வரலாறுகள் ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரளமும் இருந்ததைச் சொல்கின்றன. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அனேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் லட்சக் கணக்கான மலையாளிகளுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளிகளும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் சூழல் வருந்தத் தக்கது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் பல சுயநலக் கட்சிகள் தமிழகத்தையும் கேரளத்தையும் இந்தியா - பாகிஸ்தான்போல எல்லைத் தகராறை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலுக்கு ஊடகங்கள் பொறுப்பற்ற ஆதரவைத் தருவதுடன் அவர்களுக்குப் பிரசாரமும் நடத்திக்கொண்டிருக்கின்றன. இது மிக ஆபத்தானது.

‘‘இந்த விவகாரத்துக்குப் பின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் பார்வை எப்படி இருக்கிறது?’’

‘‘நாம் எப்போதுமே சகோதரர்கள்தான். ஆனால், அணையை வைத்து அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் அரசியல் சிலரின் மனதிலாவது பாதிப்பை உருவாக்கத்தான் செய்திருக்கிறது.’’

‘‘அணை விவகாரத்தில் கேரளத்தின் நியாயம் என்ன? தமிழர்களிடமிருந்து மலையாளிகள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் ஓடும் 7804 கோடி கன அடி தண்ணீரில் 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதி தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்துக்குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் கேரளத்துக்குத் தமிழகத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதைப் பெரும்பான்மை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
மலையாளிகள் உண்ணும் சோறும் குழம்புக்கு காய்கறியும் தின்னும் பழமும் பூஜைக்கு மலர்களும்... அவ்வளவு ஏன்... கறிவேப்பிலைகூட தமிழகத்திலிருந்துதான் வருகிறது. உண்மையில் மலையாளிகள் தங்கள் எதிர்காலத்துக்காகச் செய்ய வேண்டியது, தாங்கள் வீணாக்கும் 92 சதவிகித தண்ணீரைத் தமிழகத்திலுள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு அதிக அளவு கொடுத்து அதற்குரிய நியாயமான விலையைப் பெறுவதும் தங்களிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களைத் தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க அவர்களிடமிருந்து உறுதி பெறுவதுதான். இதை நானே பல முறை பேசியும் எழுதியும் இருக்கிறேன்.
ஆக, தண்ணீர் இங்கு ஒரு பிரச்னை அல்ல. மலையாளிகள் தண்ணீரைப் பிரச்னையாகப் பார்த்தால், அது தவறு. அதேசமயம், அணையின் பழமை _ எல்லா அணைகளையும்போல_ அச்சத்தை உருவாக்கக் கூடியதுதான். இந்தப் பழமையும் நிலநடுக்க வாய்ப்புகளும்தான் இப்போது அரசியல் நடத்த வாய்ப்புகளாகி இருக்கின்றன. சாதாரண மக்கள் _ குறிப்பாக அணை ஒருவேளை உடைந்தால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள மக்கள் _  அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் பிரசாரத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அணை இருக்கும் பகுதிக்கு அருகில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அணையை வைத்து நடத்தப்படும் அரசியலுக்கும் அணை மீதான அச்சத்துக்கும் வலு சேர்த்திருக்கின்றன. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்தச் சூழலைப் பெரும் ஆராவாரத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றன.
மொத்தத்தில் புரிந்துணர்வுடனும் அறிவியல் நோக்குடனும் அணுகப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வைத்து ஒரு கும்பல் ஆவேசத்தை (மாஸ் ஹிஸ்டீரியா) உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேறு வழியில்லாத சாதாரண மக்கள் இதற்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மக்களின் அச்சத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் விமர்சிக்கும் இந்தத் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?’’

‘‘இது ஜனநாயக நாடுதானே? இங்கு ஒரு குடிமகனுக்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாகச் சொல்ல உரிமை இருக்கிறதுதானே? கருத்து சுதந்திரத்துக்கு எதிரான சக்திகள் எல்லா இடங்களிலும் இருக்கும். அவற்றைப் பார்த்து எல்லாம் பயந்துகொண்டு இருந்தால் ஒரு படைப்பாளி ஒருபோதும் வாயைத் திறக்கவே முடியாது. மாறாக, மக்களை ஆட்டிப்படைப்பவர்களுக்கு எடுபிடியாகத்தான் அவன் இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் படைப்பாளி அல்ல; மக்கள் விரோதி.’’

‘‘இந்தப் பிரச்னைக்கு எதைத் தீர்வாக நீங்கள் பார்க்கிறீர்கள்?’’

‘‘அணை என்பது ஒரு பொறியியல் உருவாக்கம். என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது. ஒரு குடைக்கம்பியைக் கொண்டு அணையின் பலத்தைச் சோதித்துச் சொல்லும் திறன் என்னிடம் இல்லை (கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஒருமுறை அப்படிச் செய்துக் காட்டிவிட்டு, அணை பலம் அற்றது என்று சொன்னார்). அதேசமயம், எனக்குத் தெரிந்து ஒரு தீர்வு இருக்கிறது. அணைப் பொறியியல் தொடர்பாக மிகச் சிறந்த வல்லுநர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் சர்வதேச அளவில் மிகச் சிறந்த சிலரைக் கொண்ட தன்னிச்சையான ஒரு குழுவை அமைக்கலாம். அந்தக் குழு சொல்லும் எந்தத் தீர்வையும் இரு மாநிலங்களும் நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் உறுதியைத் தந்து, அவர்களிடம் அணையைப் பற்றி ஆய்வு நடத்தச் சொல்லலாம். (இந்த இடத்தில் இன்னோர் ஆய்வா என்று என்னைச் சந்தேகக் கண்ணோடுப் பார்க்கக் கூடாது. இதுவரை ஐ.ஐ.டி. உட்பட இரு மாநிலங்கள் சார்பிலும் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்கள் அந்தந்த மாநிலங்களின் வாதங்களுக்கு ஏற்ப முடிவு சொல்லியிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்). அந்தக் குழு சொல்வதைக் கேட்கலாம். இப்படி ஓர் ஆய்வை நடத்தினால், அதிகபட்சம் ஓர் ஐந்து கோடி ரூபாய் செலவாகலாம். இரு மாநில அரசுகளுக்கும் இந்தத் தொகை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் ஒரே மாதிரியான அக்கறையின்மையைத்தான் வெளிக்காட்டுகின்றன.’’
 ஆனந்த விகடன் 2011

1 கருத்து: