காவிரி... 10 உண்மைகள்!


உண்மை 1: இந்த ஆண்டும்   குறுவைச் சாகுபடிக்குத் திறக்க மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இப்படி ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போவது மேட்டூர் அணையின் வரலாற்றில் இது  53-வது ஆண்டு. தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள்.

உண்மை 2: காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அதைவைத்து 2,000 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடி செய்துவருவது தமிழக விவசாயிகள்தான். நதி நீர் உரிமையைப் பொறுத்த அளவில், அது உற்பத்தியாகும் இடத்தைவைத்துத் தீர்மானிக்கப்படுவது இல்லை. பாரம்பரிய மாக அதைப் பயன்படுத்தி வருவோருக்கே முதல் உரிமை. இது சர்வதேச அளவிலான நடைமுறை.

உண்மை 3: தமிழகத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை, அதற்குப் பின் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணை, கீழணை நீங்கலாக, காவிரியில் 1924 வரை அணைகள் எதுவும் கிடையாது. இங்கு மேட்டூர் அணையைக் கட்டும்போது, இன்றைய கர்நாடகத்தின் முதல் அணையான கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் மன்னருக்கு ஆங்கிலேய அரசு அனுமதி அளித்தது. கர்நாடகம் நெல் சாகுபடியை ஆரம்பித்ததும் காவிரி அரசியலை ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான். கிருஷ்ணராஜசாகர் அணை நீங்கலாக கர்நாடகம் காவிரியில் கட்டிய அனைத்து அணைகளும் சட்டத்துக்குப் புறம்பானவை. அதாவது, மத்திய அரசின் அனுமதி பெறாதவை. ஒரு மாநில அரசு இப்படி முறைகேடாக நடந்துகொண்டால், அந்த அரசைக் கலைக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. கர்நாடகத்தின் இந்த முறைகேடு அரசியலை முதலில் தொடக்கிவைத்தது காங்கிரஸ் அரசு.

உண்மை 4: 1901-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் சாகுபடிப் பரப்பு - 1.11 லட்சம் ஏக்கர். 1970-ல் கர்நாடகத்தின் சாகுபடிப் பரப்பு - 6.83 லட்சம் ஏக்கர். 1991-ல் நடுவர் மன்றத்தில் தன்னுடைய சாகுபடிப் பரப்பு 11.2 லட்சம் ஏக்கர் என்று சொன்னது கர்நாடக அரசு. இதற்கு மேல் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக் கூடாது; தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் தீவிரமாகும் என்று கர்நாடகத்துக்குக் கட்டுப்பாடு விதித்தது நடுவர் மன்றம். ஆனால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு அதே நடுவர் மன்றம் 18.85 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் ஒதுக்கியது. இப்போது தன்னுடைய பாசனப் பரப்பை 23.85 லட்சம் ஏக்கராக விரிவாக்கியுள்ளது கர்நாடகம். மேட்டூர் அணை பயன்பாட்டுக்கு வந்த 1934-ல் தொடங்கி 1970 வரை ஆண்டு தோறும் அணைக்கு வந்த சராசரி நீரின் அளவு 378 டி.எம்.சி. காவிரி நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு இதை 205 டி.எம்.சி. ஆக்கியது; இறுதித் தீர்ப்பு 192 டி.எம்.சி. ஆக்கியது.

உண்மை 5: காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாக் காலங்களிலும் சேர்ந்தே செயல்படுகின்றன. மாநில நலனே அங்கு பிரதானம். தமிழகத்திலோ நேர் எதிர்நிலை. காவிரிப் பிரச்னையில் ராஜதந்திரரீதியாக ஒரு வரலாற்றுத் தவறைத் தமிழகம் செய்தது. காவிரிப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவருடைய சமரசத்தை ஏற்று பேச்சுவார்த்தைக்காக அந்த வழக்கைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே காவிரியை அரசியல்ரீதியாகவே அணுகினார்கள்.

உண்மை 6: இதற்கிடையே 1983-ல் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடித்து, 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தபோது, மீண்டும் உச்ச நீதிமன்றப் படியேறி தன்னையும் அந்த வழக்கில் இணைத்துக்கொண்டது தமிழகம். உச்ச நீதிமன்ற ஆணைப்படி, 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பின் இறுதித் தீர்ப்பை வழங்கியது நடுவர் மன்றம். காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தை 740 டி.எம்.சி. எனக் கணக் கிட்டு அதில், தமிழகம் 562 டி.எம்.சி., கர்நாடகம் 465 டி.எம்.சி., கேரளம் 92.9 டி.எம்.சி., புதுவை 9.24 டி.எம்.சி. கேட்டன. இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி., கடலில் கலக்கும் அளவு 4 டி.எம்.சி. என ஒதுக்கீடு செய்தது நடுவர் மன்றம். தமிழகத்துக்கு இது சேதம் தரும் தீர்ப்பு. எனினும், இரு தரப்பு விவசாயிகளின் நலன்களையும் ஒப்பிட்டு, அரை மனதோடு ஏற்க வேண்டிய நிலை. ஆனால், இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனது கர்நாடகம். வேறு வழி இல்லாமல் தமிழகமும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த முறையீடுகள் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.

உண்மை 7: காவிரிப் படுகையில் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள்  இருந்தன. ஊருக்கு ஊர் கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்புப் பகுதி இருந்தது. குடிமராமத்து முறை வழக்கொழிந்த பின், படிப்படியாக இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்தன. அரசு ஆழ் குழாய் விவசாயத்தை ஆதரித்தது. இதனால், நாலைந்து அடிக்குள் பிள்ளைக்கேணி தோண்டி விவசாயம் செய்த இடங்களில், இன்றைக்கு நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழே போய்விட்டது. இந்த நீர்நிலைகளை மீட்டுருவாக்குவதுடன் காவிரி நீர்ப் பாதையைப் புனரமைத்துக் கட்டுக்கோப்பாக்கி, மழைக் காலங்களில் உபரியாகக் கிடைக்கும் நீரைத் தேக்கிவைக்க கதவணைகள் கட்டினால், சுமார் 50 டி.எம்.சி. வரை நீராதாரத்தை உருவாக்க முடியும். 1980-களில் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 1,000 கோடி ஆகலாம் என்று சொன்னது உலக வங்கி. இன்றைக்கு ரூ. 10,000 கோடி ஆகலாம். ஆனால், தமிழக அரசு அதை இன்றுவரை பொருட்படுத்தவே இல்லை.

உண்மை 8: காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையத்தின் வழிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு... இப்படி எதையும் கர்நாடகம் இதுவரை மதித்தது இல்லை. தமிழகத் துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறாத கர்நாடக முதல்வர்களே வரலாற் றில் இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம் ஆகிய தேசியக் கட்சிகளே கர்நாடகத்தையும் ஆண்டன; ஆள்கின்றன.

உண்மை 9: உலகில் எத்தனையோ நாடுகள் நதி நீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்கின்றன. தண்ணீருக்கு அலையும் சூழலில் உள்ள பரம்பரை வைரிகளான இஸ்ரேலும் பாலஸ்தீனமும்கூட நியாயமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்திய அரசால் பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், உள்நாட்டுக்குள் பகிர்ந்தளிக்க முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் பல முறை வறட்சியிலும் பஞ்சத்திலும் அடிபட்டனர். நாட்டுக்கே உணவு கொடுத்தவர்கள் கஞ்சித் தொட்டியில் கஞ்சி வாங்கிக் குடிக்கும் நிலைக்கும் வயல்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டனர். ஆனால், மத்திய அரசு துளியும் அலட்டிக்கொள்ள வில்லை. இயற்கைக்கு முரணான நதி நீர் இணைப்புபற்றி நம்முடைய ஆட்சியாளர் கள் நிறையப் பேசுகின்றனர். ஆனால், நதிகளை தேசிய உடைமையாக்கி - அதாவது, நதி நீர்ப் பங்கீடு உள்ளிட்ட சகல உரிமைகளையும் மத்திய அரசே நிர்வகிக்க - எவரும் குரல் கொடுக்கவில்லை.

உண்மை 10: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு... துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்!

ஆனந்த விகடன் 2011

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஒருத்தன் நமக்கு எவ்ளோ பெரிய எதிரியா இருந்தா கூட... "தண்ணி"னு வாய் தொறந்து கேட்டா குடுக்காம இருக்க மாட்டோம் இது மனித இயல்பு, ஆனால் இதற்கு எப்போதும் மாறாக செயல்பட்டு கொண்டிருக்கும் கன்னடர்களை நினைத்து பார்க்கும் போது மனம் கனத்து தான் போகிறது அதுவும் அனைத்து அதிகாரம் கொண்ட நீதித்துறை சொல்லியே இவர்கள் நமக்கு தண்ணி காட்டுவது எந்த வகையில் நியாயம்??? ஒரு காலத்தில் நாட்டுக்கே உணவளித்து வந்தோரையெல்லாம் வாழவைத்த நாம் இன்று அடிப்படை தேவையான தண்ணீருக்கும், மின்சாரத்துக்கும் அடுத்தவர்களிடம் மடிப்பிச்சை கேட்கும் மகா கேவலத்திற்கு யார் காரணம்? வேறு யாரு நம் அரசியல் கட்சி தலைவர்கள் தான். காவிரிப் பிரச்சனை என்றால் மட்டும் கட்சி பேதமின்றி கன்னட அரசியல்வாதிகள் ஒன்று கூடுவதை பாருங்கள். ஆனால் இங்கே??

    குடும்ப நலனையும், காழ்ப்புணர்ச்சியும் மனதில் வைத்து கொண்டு மக்கள் நலன்களை மண்ணில் புதைத்து கொண்டிருக்கும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அல்லது வருங்கால வேறு அரசியல் கட்சி தலைவர்களாவது இந்த விஷயங்களிலேனும் ஒன்றிணைந்து செயல்பட்டு நம் உரிமைகளை நமக்கு மீட்டு தர வேண்டும்.. காரணம் இன்னும் பல வருடங்கள் கழித்து என் மகனோ மகளோ இந்த காவிரிப் பிரச்சனையை ஒரு கருத்தாக பதிவு செய்யக்கூடாது என்பதே என் எண்ணம்..

    பதிலளிநீக்கு
  4. கல்லணையைக் கடந்தபின் மணல் அள்ளப்படுவதால் சுரண்டப்படும் காவிரி குறித்தும் பதிவு செய்யப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு