சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்தை உண்டாக்கும் - எஸ்.எஸ்.ஆர். பேட்டி


சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும் அறுவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. மூணாவதா ஒரு ஆள் வந்தா, பாயை விரிச்சி உட்கார்ந்துருவோம்” என்றவாறே பழைய இரும்பு மடக்கு நாற்காலி ஒன்றை நான் உட்கார விரித்துப்போடுகிறார். அவர் உட்கார்ந்திருக்கும் சாய்வு நாற்காலியைச் சுற்றி அன்றைய தினம் வந்திருந்த பத்திரிகைகள் கிடக்கின்றன. எண்ணுகிறேன். ஐந்து தினசரிகள். கூடவே சில சஞ்சிகைகள். “ஒரு நாளைக்கு ஏழு தினசரி படிக்கிறேன். நான் வாங்குறது நாலு. பக்கத்து வீடுகள்லேர்ந்து அவங்க படிச்சு முடிச்சதும் மூணு வந்துரும். தினசரிகள் நீங்கலா முப்பது இதழ்கள் வருது. இது தவிர ‘பிபிசி’, ‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’லாம் இணையத்துல படிச்சுருவேன். அப்புறம், ஒரு ஆசிரியரா ஆங்கிலமும் கணிதமும் என்னோட ஏரியா. தினம் அதுல என்ன மாற்றம் வந்துருக்கோ அது சம்பந்தமா ஒரு கட்டுரையாச்சும் படிச்சுருவேன். இது போக புத்தகங்கள் இருக்கு. இப்ப ‘ஜீன்’ படிச்சுக்கிட்டிருக்கேன்” என்பவர், புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்? இந்த 86 வயதில் வாசிப்பு, புத்தகங்கள் மீதான மதிப்பீடுகள் ஏதேனும் மாறியிருக்கின்றனவா?
காலைல 4.30 மணிக்கு எழுந்துருவேன். காலைக் கடன்களை முடிச்சுட்டு வந்து உட்கார்ந்த உடனேயே வாசிப்பு தொடங்கிடும். சின்ன வயசுல அப்பா ஊட்டின ஆர்வம் இது. ஆசிரியர் உத்தியோகத்துக்கு வந்த பின்னால, உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது போக மாணவர்கள் கேட்குற எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டியாயிடுது இல்லையா? அதனால, வாசிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு. எங்க வீட்டுக்காரம்மாவும் நல்ல வாசகர். படிச்சு முடிச்சதும் மனசுக்குப் பட்டதை ஆசிரியர் கடிதமா எழுதி அனுப்பிடுறது என்னோட வழக்கம். கணினி நம்ம வேலையை இன்னும் சௌகரியம் ஆக்கிடுச்சு. எதுவா இருந்தாலும், மின்னஞ்சலைத் தட்டிவிட்டுர்றது. வாசிப்பு நம்மளை ஒவ்வொரு நாளும் புதுசாக்கிடுது. பாருங்க, எனக்கு 86; வீட்டுக்காரம்மாவுக்கு 83. இந்த வயசெல்லாம் எங்க உடம்புக்குத்தான். மனசு எப்பவும் புதுசு!

வாசிப்பு நீங்கலாக ஆரோக்கியத்துக்கு வேறு என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்?
நம்ம வீடு, நம்ம வாசல்னு குறுக்கிக்காம சமூகத்தோட நம்மளைப் பிணைச்சுக்குறது. இந்தப் பார்வை வந்துடுச்சுன்னாலே காசு இருந்தாக்கூட, உங்க தேவைக்கு அதீதமா ஒண்ணைக்கூட வாங்க மாட்டீங்க. போதும்கிற நிறைவு வந்துரும். சந்தை இழுக்குற வேகத்துக்கு ஓட மாட்டீங்க. இன்னைக்கும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் படுத்துருவோம். சின்ன வயசுல வீட்டுல விளக்கு எரியுறப்ப தேவையில்லாம விளக்கு எரிஞ்சா எண்ணெய் விரயமாகும்னு அம்மா ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. இன்னைக்கு மின்சாரத்துல விளக்கு எரிஞ்சாலும் அது தொந்தரவு செய்யுது. அப்புறம் ராத்திரி சீக்கிரம் படுத்து, காலைல சீக்கிரம் எழுந்துக்குறது உடம்போட இயல்பா பொருந்துறதா எனக்குப் படுது.


எந்த வயதில் கல்வித் துறை மீது நாட்டம் வந்தது?
எங்க அப்பா சருக்கை சீனிவாச அய்யங்கார் தலைமை ஆசிரியரா இருந்தவர். காந்தியர். அப்பா ரெண்டு விஷயங்கள்ல பிடிமானமா இருந்தார். ஒண்ணு, தாய்மொழி வழிக் கல்வி, ரெண்டாவது, பெண் கல்வி. சென்னை மாகாணத்துலயே மொதமொதல்ல தாய்மொழி வழிக் கல்வியைத் தன் பள்ளியில கொண்டுவந்தவர் அவர். பெண்கள் படிச்சாதான் சமூகம் மாறும்னும் நம்பினவர். நல்ல வாசிப்பாளி. பத்திரிகை படிச்சு முடிச்சதும் ஆசிரியருக்குக் கடிதம் எழுதிடுவார். மூவாயிரத்துக்கும் மேலான ஆசிரியர் கடிதங்கள் எழுதியிருக்கார். பல நூறு கட்டுரைகளை எழுதினார். கல்வித் துறை மேலயும் வாசிப்பு மேலயும் அப்பா வழியா பெரிய மதிப்பு உருவாயிருக்கும்னு நெனைக்கிறேன். கல்லூரியில படிச்சப்ப முடிவுசெஞ்சுட்டேன். நாம ஆசிரியராத்தான் போகணும்னு. பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சியானேன். எந்த உத்தியோகத்துக்கு விண்ணப்பிச்சிருந்தாலும் கிடைச்சிருக்கும். ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’வில் ஆபீஸர் உத்தியோகமே வந்தது. எனக்கு ‘இம்பீரியல்’கிற வார்த்தையே ஆகாது. வேணாம்னுட்டேன். கல்வி கொடுக்குறது, அதிலும் காலங்காலமா கல்வி மறுக்கப்பட்டவங்களுக்குக் கல்வி கொடுக்குறதுதான் நம்ம வேலைனு மனசுக்குப் பட்டுச்சு.

உங்கள் அளவில், நாம் கல்வியில் பின்தங்கியதற்கான காரணமாக எதைக் கருதுகிறீர்கள்?
சுதந்திரம் அடைஞ்சு எழுவது வருஷமாகுது. இன்னும் அனைவருக்கும் தொடக்கக் கல்விங்கிறதே சாத்தியமாகலை. இதுவரைக்கும் நம்முடைய அரசாங்கங்கள் தொழில்துறைக் குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கல்விக்குக் கொடுக்கலை. தொழில்துறையோட முன்னேற்றம் ஏனைய துறைகள்லேயும் எதிரொலிக்கும்கிற நம்ம அரசாங்கத்தோட நம்பிக்கை பலிக்கலை. அப்புறம் இன்னைக்கு வரைக்கும் தொடக்கக் கல்வியோட முக்கியத்துவத்தை நாம உணரலை.

நேரு காலத்தில் தொடங்கி வலுவான, பலமான தொடக்கக் கல்வியின் அவசியத்தைப் பேசிவருகிறோம். ஆனால், அரசாங்கங்கள் உயர் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தொடக்கக் கல்விக்குக் கொடுப்பதில்லை. என்ன காரணம்?
நாட்டோட மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் 6% நிதியைக் கல்விக்கும், அதில் 3% நிதிக்குக் குறையாமல் தொடக்கக் கல்விக்கும் ஒதுக்கணும்னு பரிந்துரைச்சது கோத்தாரி குழு. ஆனா, மொத்தமாகவே 4% நிதிக்கு மேல் இதுவரைக்கும் கல்விக்கு ஒதுக்கப்பட்டதே இல்லை. கடந்த சில வருஷங்களா அதுவும் குறைஞ்சுக்கிட்டிருக்கு. கல்விக்கு ஒதுக்கப்படுற நிதியைச் செலவுனு நெனைக்கக் கூடாது; மூலதனமா கருதணும். நம்மளோட ஆட்சியாளர்கள் மாத்தி யோசிக்கிறாங்க.

மோடி அரசு முன்மொழிந்திருக்கும் மாதிரிக் கல்விக் கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வளவு எதிர்ப்புச் சத்தம் கேட்கக் காரணம் என்ன?
கோத்தாரி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1968 கல்விக் கொள்கையும், ராஜீவ் காந்தி அரசு தயாரித்த ‘கல்வி ஒரு சவால்’ என்ற கல்வியாளர்கள் அறிக்கையின் அடிப்படையில் 1986 கல்விக் கொள்கையும், ஆசார்யா ராம்மூர்த்தி குழுவோட அறிக்கையின் அடிப்படையில் 1992 கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டன. இவை எதுவும் ஏற்படுத்தாத எதிர்ப்பை, இன்னைக்கு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கை அடிப்படையில வெளியாகியிருக்குற புதிய கல்விக் கொள்கைக்கான மாதிரி ஆவணம் உருவாக்கக் காரணம், அதுல கல்வி நோக்கைவிட நிர்வாக நோக்கு அதிகமா இருக்குறது. ஒரு நாட்டோட கல்விக் கொள்கை சமநீதி, சமத்துவம், மத நடுநிலை போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையணும். ஆண்டான் - அடிமை உறவுகளை வற்புறுத்துற கொள்கைகளால் நல்லதொரு ஜனநாயக நாட்டை உருவாக்க முடியாதுங்குறது என்னோட அபிப்ராயம். இந்தியாவைப் பொறுத்த அளவுல மையப்படுத்துற அதிகாரம் எதுவுமே இந்த ஒன்றிய அமைப்பை நாசப்படுத்திடும்.

நாட்டில் 100 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், 100 பேரும் அறிவியல், கணிதம் சார்ந்த பணிகளுக்குச் செல்லப்போவதில்லை. இதனால்தான் ஒரு குழந்தையின் திறனுக்கேற்ப, அதன் விருப்பப் பாடங்களை 11-ம் வகுப்பு முதல் மாற்றி அமைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், அந்த மாற்றத்தை ஆறாம் வகுப்பிலேயே செய்வதால் என்ன சிக்கல் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

பள்ளிக் கல்வியை முடிச்சுட்டு கல்லூரில சேரப்போகும் நிலையில், எதிர்காலத்தில் என்ன படிப்பு படிப்பது என்று பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து கலந்தாய்வுக்குப் போகும் கொடுமை எந்த ஊர்ல நடக்குது? வருத்தப்பட ஏதும் இல்லை. இதுதான் நம்மூர் கள யதார்த்தம். ஒரு பிள்ளை பின்னாள்ல மருத்துவம் படிக்குமா, கணினில அதுக்கு ஆர்வம் வருமாங்கிறதை அது அஞ்சாவது படிக்குறப்போதே தீர்மானிக்குற திறன் இங்கே எத்தனை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கு? ஏற்கெனவே பிழைக்குறதுக்காகத்தான் படிப்புன்னு நெனைச்சுக்கிட்டு இருக்குற சமுதாயத்துல, பெரிய சமூகப் பிளவே இதனால் உண்டாகும்.

எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை பள்ளி செல்வோர் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு எட்டாம் வகுப்புக்குரிய மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி அறிவை இன்றைய பள்ளிக்கூடங்களால் கொடுக்க முடியவில்லை. வெறுமனே அவர்களைப் பள்ளியில் உட்கார வைத்துத் திருப்பி அனுப்புகிறோம். இதற்காக ஐந்தாம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரும் யோசனையும், இந்திய சமூகச் சூழலில் மோசமான முடிவுதான். எனினும், கட்டாயத் தேர்ச்சி முறையில் ஏற்படக்கூடிய இந்த மோசமான விளைவை, அதாவது போதிய திறனைக் குழந்தைகள் பெறாமலேயே பெற்றுவிட்டதாகச் சொல்லி, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அவர்களைத் தள்ளுவதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது?

நம்முடைய தேர்ச்சி மதிப்பெண் 35%. அதாவது, ஒரு மாணவர் 65% அறியாமையுடன் அடுத்த வகுப்புக்கு முன்னேறிப் போகலாம். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சப் புரிதலுடன் தேர்வாகும் ஒரு மாணவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புக்கு வரும்போது எப்படி இருப்பார்? அதனால, வகுப்பறைக் கற்பித்தலை நோக்கி முழுக் கவனத்தையும் திருப்பணும். தேர்ச்சி மதிப்பெண் 65%-80% உள்ள நாடுகள்லகூட, அதை எடுக்க முடியாத மாணவர்களை ஏற்கெனவே படிச்ச வகுப்புலயே வெச்சிடுறதில்லை. அஞ்சாம் வகுப்போட ஃபெயில்னு சொல்லி நிறுத்தினா, எத்தனை பேர் நம்மூர்ல பெண் பிள்ளைகளை மறுபடி மறுபடி பள்ளிக்கு அனுப்புவாங்க? ஆங்கிலம் தவிர பாக்கி எல்லா பாடங்களையும் நல்லா படிக்கிற ஒரு பிள்ளையை, ஆங்கிலத்துல ஃபெயில்ன்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. படிப்பை விடவும் விளையாட்டுல ஆர்வமா பங்கெடுக்கிற ஒரு பிள்ளையை, நீ பெயில்னு சொல்லி பள்ளியை விட்டே பாதியில அனுப்பிடுற அபாயம் இந்த முறையில இருக்கு. வடிகட்டல் கூடாதென்றால் தேர்ச்சி கூடாது என்று அர்த்தமில்லை. அனைவரையும் தேர்ச்சிக்குரியவராக ஆக்கவேண்டியது ஆசிரியரின் பணி. மாணவரது அறிவைச் சோதிக்கும் முறையில் பெருமாற்றம் வேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமல்ல, வாய்மொழித் தேர்வும் வேண்டும். ஒரு புதிய முறையைக் கொண்டுவரும்போது இவை எல்லாத்தையும் ஆழமா யோசிக்கணும்.


பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு இன்றைக்கும் நமக்கான பல பொக்கிஷங்களை உள்ளடக்கியிருக்கும் மொழி சம்ஸ்கிருதம். அது இந்தியோ, சமஸ்கிருதமோ பள்ளிக்கூடங்களில் கூடுதலாக விருப்பப் பாடமாக ஒரு மொழியைக் கொண்டுவருவதில் என்ன பிரச்சினை? கட்டாயமாக்கினால்தானே சிக்கல்?

இந்தியால உள்ள பத்து கோடிப் பிள்ளைகளுக்கும் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க மொதல்ல அம்பது லட்சம் சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருக்காங்களா? இன்னைக்கு நாடு முழுக்க சம்ஸ்கிருதம் தெரிஞ்சவங்க எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டாது. இங்கே சம்ஸ்கிருதம் பரீட்சை எழுதறவன் பதிலைத் தமிழ்லேயோ ஆங்கிலத்திலேயோ எழுதிக்கிட்டிருக்கான். நான் எந்த மொழிக்கும் விரோதி இல்லை. ஆனா, பள்ளிக்கூடம் மட்டுமே மொழிகளைச் சொல்லிக்கொடுக்குற இடம் இல்லை. இந்தி கத்துக்கணும்னா இந்தி பிரச்சார சபா இருக்குதுல்ல? அப்படியான அமைப்புகளை உண்டாக்கிட்டு போங்க. நீங்க பள்ளிக்கூடத்துலேயே எல்லாத்தையும் கொண்டுவந்து புகுத்தும்போது குழந்தைங்க மிரண்டு போகுது. நான் படிக்கிற காலத்துல ஆறாவது வகுப்புலதான் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினாங்க. அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள ஆங்கிலத்துல ஒரு கவிதை, கதையைப் படிக்கிற அளவுக்குத் தேறிட்டோம். ஏன்னா தாய்மொழியில இருந்த அடித்தளம். இன்னைக்கு இங்கிலீஷ் இங்கிலீஷ்னு சொல்லி என்னத்த செஞ்சிருக்கோம்? தமிழ்லேயும் சரி, ஆங்கிலத்துலேயும் சரி, பிழையில்லாம ஒரு கடிதம் எழுதக்கூடத் திராணியில்லாத கூட்டத்தை உருவாக்கிக்கிட்டிருக்கோம். பன்னிரெண்டு வருஷம் பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுக்குற ஆங்கிலத்தைவிட ஒருத்தன் எளிதா ஒரு சில வருஷங்கள்ல இந்தியைச் சீக்கிரம் படிச்சுடுறான், பள்ளிக்கூடத்துக்கு வெளியில அவனா விரும்பிப் போகும்போது. முழு வருஷ பரீட்சை முடிஞ்சதும் புத்தகத்தைச் சுக்குநூறா கிழிச்சு வீசிட்டுப்போற பசங்களை நான் பார்த்திருக்கேன். ஏன் புத்தகத்துக்கு மேல படிச்ச குழந்தைக்கு இவ்வளவு வெறுப்பு வருது? அவனால நம்மள கிழிக்க முடியலை; புத்தகத்தைக் கிழிக்கிறான். பள்ளிக்கூட அளவுல ஒரு அளவுல ஒரு மொழியைக் கொண்டுவர்றதுங்கறதே திணிப்புதான்.

உங்களிடம் யோசனை கேட்கப்பட்டால் நீங்கள் முன்மொழியக்கூடிய மாற்றம் என்னவாக இருக்கும்?

தொடக்கக் கல்வியை நோக்கிப் பிரதான கவனத்தைத் திருப்பணும்னு சொல்வேன். அனைவருக்கும் 12 வருஷப் பள்ளிக் கல்விங்குறது என்னோட தனிப்பட்ட விருப்பம். இன்னைய காலகட்டத்துல 8 வருஷப் படிப்பு எதுக்கும் உதவாது. அப்புறம், கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுக்கக் கூடாது. அந்த இடத்துல மாநில அரசாங்கங்கள் இருக்கணும். பள்ளிக்கூடங்களோட நிர்வாக அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்கள்கிட்ட இருக்கணும். ஒரு கூட்டத்துல, கிராமத்து மாணவர்கள் எழுந்து கேள்வி கேட்டாங்க, ‘ஐயா, நாங்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்களைப் பெத்தவங்க படிக்காதவங்க. நெல்லுக்கு என்ன உரம் போடணும், எந்த ரக நெல் அதிக விளைச்சல் தரும், என்ன நோய்க்கு என்ன பூச்சிக்கொல்லி அடிக்கணும், இன்னைக்குப் புதுசா என்னவெல்லாம் வந்துருக்கு, நாளைக்கு விவசாயம் எதிர்கொள்ளப்போற சிக்கல் என்ன, அதுக்கு நாங்க எப்படித் தயாராகணும்.. இது எதுவும் எங்க பாடப் புத்தகத்துல இல்ல. ஆனா, பயன்படாதது ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கு. எப்போ இதையெல்லாம் மாத்தப்போறீங்க’ன்னு. கன்னியாகுமரியிலேயும் ஊட்டியிலேயும் சென்னையிலேயும் தஞ்சாவூர்லேயும் இருக்குற மாணவர்களுக்கு இடையிலேயே தேவைகள், நோக்கங்கள் மாறிடும்போது, காஷ்மீர்லேர்ந்து குமரி வரைக்கும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கைங்கிறது பொருத்தம் இல்லாதது. மத்திய அரசாங்கம் நாளுக்கு நாள் மாநிலங்களோட உரிமைகளைக் கைகள்ல எடுக்குறது உரிமை மீறல் மட்டும் இல்லை; அவங்களால நிர்வகிக்கவே முடியாத வேலைகளையும் கையில வெச்சுக்க நெனைக்குற பேராசை.

அதாவது, நம்முடைய ஆரம்ப காலப் பள்ளிக்கூட நிர்வாக முறைக்கு மாற வேண்டும் என்று சொல்கிறீர்கள்…

ஆமாம். அந்தக் காலத்துல பள்ளிக்கூடம் எதையும் அரசாங்கம் நடத்தலை. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் கூடிய மாதிரிப் பள்ளிகள், அப்புறம் எழும்பூர், திருச்சி, தலைச்சேரி இந்த மூணு ஊர்கள்ல உள்ள இஸ்லாமியப் பெண்கள் பள்ளிகள் தவிர, வேறு எதையும் அரசு நேரடியாக நிர்வகிச்சது கிடையாது. எல்லாப் பள்ளிக்கூடங்களும் உள்ளாட்சி நிர்வாகத்துலதான் இருந்துச்சு. பள்ளிக்கூடத்துல ஒரு குறைனு வந்தா, மக்கள் நேரா உள்ளூர் ஊராட்சி உறுப்பினர்கிட்ட குறை சொல்ல, கேள்வி கேட்க முடிஞ்சுது. இன்னைக்கு முழுக்க அதிகாரிங்க கையில பள்ளிக்கூடங்கள் வந்துடுச்சு.

இந்த மாற்றத்துக்கான மைய நோக்கம் என்னவாக இருந்தது?

அதிகாரப் பசி. ஒரு அமைச்சரைக் காட்டிலும் அன்னைக்கு டிஸ்ட்ரிக்ட் போர்டு தலைவரும் ஒரு எம்எல்ஏவைவிட பஞ்சாயத்து ஒன்றியத் தலைவரும் அதிகாரம் மிக்கவர்களா இருந்தாங்க. ஒரு பிரஜை, தன்னோட ஊருக்குப் பள்ளிக்கூடம் வேணும்னு கேட்டாலோ, சாலை வேணும்னு கேட்டாலோ அதைச் செஞ்சு தர்ற அதிகாரம் இவங்ககிட்ட இருந்துச்சு. இதே காரியத்தை ஒரு எம்எல்ஏ செய்யணும்னு நெனைச்சாகூட, இவங்ககிட்ட வந்து தொங்கணும். அதனால, இந்த முறையை ஒழிச்சிக் கட்டணும்னு நெனைச்சாங்க. 1958-ல் அதற்கான வாய்ப்பு கிடைச்சது. மாவட்ட பஞ்சாயத்துக் கழகம் கலைக்கப்பட்டுச்சு. அடுத்து, பஞ்சாயத்து ஒன்றியச் சட்டம் வந்தது. அது வந்ததும் தொடக்கப் பள்ளிகளை எல்லாம் பஞ்சாயத்து ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றினாங்க. உயர் நிலைப் பள்ளிகளைக் கல்வித் துறை எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டுச்சு. அப்போ கல்வித் துறைச் செயலாளரா இருந்த ஆர்.ஏ.கோபாலசாமி மகா கெட்டிக்காரர். அவர் அப்பவே சொன்னார், ‘நிர்வாகியும் ஆய்வாளரும் ஒரே ஆளா இருக்க முடியாது’ன்னு. நிர்வாகியோட தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆய்வாளரே தன் பொறுப்புல நிர்வாகத்தை எடுத்துக்கிட்டா நிர்வாகம் என்ன ஆகும்? அதோட கோளாறைத்தான் இன்னைக்கு அனுபவிக்கிறோம்.

அரசாங்கம் தன் பொறுப்புல பள்ளிகளை எடுத்துக்கிட்ட ஆரம்பத்துல, மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுலதான் பள்ளிக்கூடங்கள் நடந்துச்சு. அப்போகூட நேர்மையான நிர்வாகம் இருந்துச்சு. 1970-ல் கல்வித் துறைக்குக் கீழே பள்ளிக்கூடங்களை மாத்தினாங்க. எல்லாச் சீர்கேடுகளும் தொடங்குச்சு. தமிழ்நாட்டுக் கல்வித் துறையைக் கெடுத்ததுல எம்ஜிஆருக்குப் பெரிய பங்கு உண்டு. கல்வி, சுகாதாரம் இது ரெண்டையும் தனியார்மயமாக்கியது அவர்தான். ஆனால், இதை கருணாநிதி தடுக்கலை. துணைபோனார். பின்னாடி அவரும் அதே கொள்கையைத்தான் கடைபிடிச்சார். ஏன்னா, அதுல ஆதாயம் இருந்தது. பள்ளிக்கூடங்கள் நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கீழே இருந்துச்சுன்னா இன்னைக்கு ஒரு அரசுப் பள்ளிக்கூடத்துல தண்ணி வரலைன்னா அடுத்த நிமிஷம் தெருவுல இருக்குற கவுன்சிலரைப் பிடிக்கலாம். பள்ளிக்கூடத்துல ஆசிரியர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மேலயும் மக்கள் மேலயும் பயமும் இருக்கும்; பிடிமானமும் இருக்கும். இன்னைக்கு யார் யாரைக் கேட்க முடியும்!

உங்களுக்கு எம்ஜிஆர் உடன் நெருக்கமான உறவு இருந்தது இல்லையா? இந்த விஷயத்தை அவரிடம் வலியுறுத்த முடியவில்லையா?

எனக்கு எல்லா முதலமைச்சர்கள் கூடவும் நல்ல உறவு இருந்துச்சு. நான் சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் உண்டுன்னு சொன்னா, அது இந்தம்மா மட்டும்தான். எம்ஜிஆர் ரொம்ப நெருக்கமாதான் இருந்தார். நான் நெனைச்சவுடன் அப்பாயின்மென்ட் இல்லாமல் அவரைப் பார்க்கக் கூடிய செல்வாக்கு அவர்கிட்ட எனக்கு இருந்துச்சு. அவர் கையால எனக்கு ஓவல், டீயெல்லாம் போட்டுக் கொடுத்துருக்கார். சாப்பாடு பரிமாறுகிற அளவுக்கு மதிப்பு வெச்சிருந்தார். என்னைக்கெல்லாம் எங்க வீட்டுல இரவுல தோசை இருக்குமோ அன்னைக்கெல்லாம் தயிர் சாதமும் இருக்கும். எம்ஜிஆர் பழக்கிவிட்ட பழக்கம் இது. ஆனா, முக்கியமான விஷயங்கள்ல அவர் அசைஞ்சு கொடுக்கலை. இப்போ, அப்போன்னு சொல்லிக் காலத்தை ஓட்டிட்டார்.


மீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதை என்று நம்புகிறீர்களா?
 

அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வாகம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும்?

நாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம், கல்வியை அரசு முழுவதுமாகத் தன் கையில் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். ஆனால், உலகமயமாக்கச் சூழலுக்குப் பிந்தைய காலகட்டம் ஒரு உண்மையை அப்பட்டமாகச் சொல்கிறது. நம்முடைய அரசுப் பள்ளிகள் பெருமளவில் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. அரசு போதிய அளவுக்குக் கல்வியில் முதலீடு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, கல்விக்காக அரசு செலவழிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும்கூட உருப்படியான பலனைத் தரவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மாறாக, சுமாரான உள்கட்டமைப்பு, சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிலையில், பாத்திரத்தின் ஓட்டைகளைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் தண்ணீர் மட்டும் வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

எந்த அடிப்படையில் அரசுப் பள்ளிகளைத் தரமற்றவைனு சொல்றீங்க? நான் இதை ஏத்துக்கலை. மதிப்பெண் அடிப்படையில தரம் பிரிக்குறதே தவறு. மாணவர் சேர்க்கையிலேயே பாகுபாடுகள் வந்துடுது இல்லையா? பொதுவுல கல்வி மோசமாகி இருக்குன்னா அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ரெண்டுமே மோசமாகி இருக்கு.

இல்லை. அரசுப் பள்ளிகளின் நிலைமை நிச்சயமாக மோசமாகி இருக்கிறது. நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாக்க முற்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன்...

இல்லை. ஆசிரியர்களோட குறைகளைத் தொடர்ந்து பேசிக்கிட்டிருக்குறவன் நான்கிறது உங்களுக்கும் தெரியும். நான் தலைமையாசிரியர் உத்யோகத்தில் சேர்ந்த காலத்தில் எச்.எஸ்.எஸ்.லாரன்ஸ் என்று ஒரு அதிகாரி ஆய்வுக்காக வந்தார். ‘மொத்தம் எத்தனை பேர் படிக்கிறாங்க?’னு கேட்டார். ‘815 பேர்’னு சொன்னேன். ‘அப்படின்னா, ஒரு நாள் அலுவலகப் பணி, நாலு நாள் ஆய்வுப் பணி’ன்னு சொல்லி அஞ்சு நாட்கள் கிராமத்தில் தங்கி ஆய்வு செஞ்சார். ஒவ்வொரு ஆசிரியரும் எப்படி பாடம் நடத்துறாருங்கிறதைப் பார்க்க ஒரு முழுப் பிரிவும் வகுப்புல உட்கார்ந்து கவனிப்பார். பையன்களோட நோட்டுப் புத்தகங்களை வாங்கிட்டுப்போய், ராத்திரி முழுக்க விழிச்சுருந்து பார்த்து, ஆசிரியர்கள் செஞ்ச தவறுகளைப் பச்சை மையால் சுழிச்சு, திரும்ப அனுப்பி வைப்பார். இப்படியெல்லாம் அன்னைக்கு ஆய்வு நடக்கும். இன்னைக்கு நெலைமை என்ன? வருஷக் கணக்கில் ஆய்வு நடக்காத / அதிகாரி போய் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வரக்கூடிய பள்ளிக்கூடங்கள் உண்டு. பள்ளிக்கூடங்களுக்கு முதல்வர்கள் வருவாங்க, திடீர்னு. அமைச்சர்கள் வருவாங்க. இன்னைக்கு யாரோட கண்காணிப்பும் இல்லை. ஆசிரியர் எப்படி இருப்பார்! இன்னைக்கு அரசுப் பள்ளிகள் தரமில்லைன்னு ஒருத்தர் சொன்னா, முதல்ல மறுக்க வேண்டியவங்க யார்? கல்வி அமைச்சரும் கல்வி இயக்குநரும். ‘என் பள்ளிக்கூடங்கள்லாம் நல்லாதான் இருக்கு’ன்னு அவங்கதான் சொல்லணும். அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏன்? மக்கள் கேட்பாங்க. ‘அப்படியா, உங்க பிள்ளைகள் எங்கே படிக்குது?’ன்னு. அரசுப் பள்ளிகளை நிர்வகிக்கிற தலைமைப் பொறுப்புகள்ல இருக்குறவங்களுக்கே அந்த அமைப்பு மேல உள்ள நம்பிக்கை இப்படி வெளிப்படும்போது, நாம கீழே இருக்குறவங்க கிட்டே கொஞ்சம் கருணையோட அணுகலாம்னு நெனைக்கிறேன். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ஆயிரத்தெட்டு வேலைகளைக் கொடுக்குது அரசு. ஒரு பள்ளிக்கூடத்துல அஞ்சு வகுப்பு இருக்குன்னா, குறைஞ்சது அஞ்சு ஆசிரியர்கள் வேணுமா இல்லையா? தனியார் பள்ளிகள் அப்படித்தானே நடக்குது? அரசுப் பள்ளி மட்டும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியா எப்படி நடக்க முடியும்? இப்படி நிறையப் பிரச்சினைகள் இருக்கு.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களைக் காட்டிலும் குறைந்த ஊதியத்தில், கூடுதலான இன்னல்களைத் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமக்கிறார்கள். எந்த ஆட்சி மாறினாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் அரசியல் செல்வாக்குடனேயே இருக்கின்றன. சம்பளம், சலுகைகளில் ஒரு பிரச்சினை என்றால், உடனே போராட்டத்தைக் கையில் எடுக்கும் ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளின் இருப்பையே பாதிக்கும் விஷயங்களில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? கடைசி ஏழையின் குழந்தையும் தனியார் பள்ளியை நோக்கி நகர்த்திவிட்டால், அரசுப் பள்ளிகள் என்ற அமைப்புதான் எதற்காக? அரசுப் பள்ளிகளைக் காக்கும் அடிப்படைக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதானே?

ஒரு நாள் பள்ளிக்கூட வளாகத்துல ஒருத்தர் நின்னு சிகரெட் பிடிச்சுக்கிட்டுருந்தார். நான் போய், ‘ஏன்யா.. படிச்ச ஆள் மாதிரி இருக்கிற. அறிவு இல்லையா?’னு கேட்டேன். சிகரெட்டை அவர் கீழே போட்டு மிதிச்சார். அவர் புதுசா வந்திருக்குற கல்வி அதிகாரிங்குறது அதுக்குப் பிறகு தெரிஞ்சுது. ‘வெல்கம் சார். ஆனா, பள்ளிக்கூட வளாகத்துல இந்த சிகரெட் துண்டு கிடக்கக் கூடாது. நான் இதை என் கையால எடுக்க மாட்டேன். மாணவர்களையும் எடுக்க விட மாட்டேன். நீங்கதான் எடுக்கணும்’னேன். அவர் எடுத்துப் போட்டார். இன்னைக்கு இது சாத்தியம் இல்லைங்கிறது தெரியவரும்போது, இன்னைய ஆசிரியர்களை நெனைச்சு வருத்தமாத்தான் இருக்கு. இந்த இழிவுக்கு ஆசிரியர் சங்கங்களும் பொறுப்பேற்கணும். ஒரு தொழிற்சங்கத்துக்கு எப்போ உண்மையான செல்வாக்கு இருக்கும்னா, அது அதுக்குக் கீழே இருக்கவங்க கிட்ட நேர்மையான தொழில் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும்போதுதான் இருக்கும். இன்னைக்கு ஆசிரியர் சங்கங்களோட தலையாய வேலை, பணி நியமனம், இடமாறுதலுக்காக உழைக்கிறதுன்னு ஆயிட்டு. எந்தச் சங்கம் நல்ல வசூல் தருதோ அதைத்தான் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்புறாங்க. தன்னைத்தானே விமர்சிக்காத யாரும் உருப்பட முடியாது. சுய மரியாதையை இழக்குறவங்க பொது மதிப்பையும் இழந்துதான் ஆகணும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் கல்வியை அரசாங்கம் மட்டுமே அனைவருக்கும் கொண்டுபோய் சேர்த்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா? மேலும், நாம் கடந்து வந்திருக்கும் காலங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்? தனியார் என்றாலே மோசம் என்கிற பார்வை சரிதானா?
 

இல்லை. நான் அப்படிச் சொல்லலை. எனக்கும் தனியார் நிர்வாகத்துல வேலை செஞ்ச அனுபவம் இருக்குங்குறதை நீங்க மறந்துட வேணாம். நான் வேலை செஞ்ச கோவை பி.எஸ்.ஜி. நிறுவனத்தையே எடுத்துக்குவோம். பி.எஸ்.ஜி.ரங்கசாமி நாயுடு, அவருடைய தம்பி பி.எஸ்.ஜி.கங்கா நாயுடு ரெண்டு பேரும் கீழே கிடந்த சமூகங்களைக் கல்வி மூலமா மேல கொண்டுவர்றதையே லட்சியமா எடுத்துக்கிட்டு தொடங்கின நிறுவனம் அது. பள்ளிக்கு ‘நாயுடு மஹா ஜனப் பள்ளி’னு பேர் வைக்கலை. ‘சர்வஜனா பள்ளி’னு பேர் வெச்சாங்க. எவ்வளவு பெரிய சிந்தனை! கங்கா நாயுடு காந்தியர். ஹரிஜன சேவையில ரொம்ப ஈடுபாடா இருந்தார். அவர் தோட்டத்துல வேலை கேட்டுப் போறவங்ககிட்டகூட, பிள்ளைளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவெச்சா வேலை தர்றேன்னு சொல்லி வேலை கொடுத்தவர் அவர். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் எங்கே கண்ணுல பட்டாலும் பள்ளிக்கூடத்துக்குத் தூக்கிக்கிட்டு வந்துடுவார். பள்ளிக்கூடம் முன்னால் ஒரு பெரிய கிணறு இருக்கும். கொடில பத்து பதினைஞ்சு துண்டு தொங்கும். பிள்ளைகளைக் கிணத்துல குளிக்க வெச்சு, உடம்பைத் துவட்டிவிட்டு, அதையே இடுப்பில் கட்டி வகுப்புக்குக் கொண்டாந்து விட்ருவார். ஆசிரியர்கள் கூட்டத்துல சொல்வார், ‘பள்ளிக்கூடத்துக்கு வர்றவனுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக நாங்க பள்ளிக்கூடம் தொடங்கலை. பள்ளிக்கூடத்துக்கு வராதவங்களை வர வைக்கிறதுக்காகத்தான் பள்ளிக்கூடம் தொடங்கியிருக்கோம். அதனால, முதல் கவனத்தை அவங்களுக்குக் கொடுங்க’ம்பார். பிஎஸ்ஜி கலைக் கல்லூரியை அவர்தான் தொடங்கினார். அப்போ துணைவேந்தரா இருந்த ஏ.எல்.முருகையா, ‘ஆலை முதலாளிகள் ஆலைகளை வேண்டுமானால் சிறப்பா நடத்தலாம். கல்லூரிகள் ஆலைகள் இல்ல. அதனால அனுமதி தர முடியாது’ன்னுட்டார். கங்கா நாயுடுவுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘முதலியார்வாள், நீங்க இப்படிப் பேசுவது நியாயமில்லை. நாங்க படிக்காதவங்க. மத்தவங்களைப் படிக்க வைக்கணும்னு ஆசைப்படுறோம். அதுக்கு நாங்க என்ன செய்யணும்னு நீங்க சொல்லணுமே தவிர, ‘உங்களால முடியாது’ன்னு சொல்றதுக்கு நீங்க அங்கெ இல்லை’ன்னார். சொன்னதோட இல்லை. அடுத்த பத்தே நாள்ல ஒரு மாணவர் விடுதியைக் கட்டினார். அரிசிக் கிடங்கைக் கல்லூரியா மாத்தினார். காந்தியே பாராட்டின சேவை அது. இப்படிக் கல்வியைச் சேவையா நெனைச்சு உள்ளே வந்து பெரிய மாற்றங்களை உருவாக்கின ஏராளமான நிறுவனங்கள் இருக்காங்க. இது தவிர, தொழில்ரீதியாவே நியாயமான கல்விக் கட்டணத்தோட இன்னைக்கும் சிறப்பா இயங்குற கல்வி நிறுவனங்கள் இருக்கு. நான் இவங்களையெல்லாம் மதிக்கிறேன். ஆனா, ஒரு அரசாங்கம் தன்னோட பொறுப்புகளை முழுக்கத் தனியார் மேல தள்ளிவிட்டுட்டு விலகிக்க முடியாது. இன்னைக்கு மக்களோட ரத்தத்தைத் தனியார் கல்வி நிறுவனங்கள் உறிஞ்சுக்கிட்டுருக்கு. வெளியில மக்கள் நெனைச்சுக்கிட்டு இருக்குற மாதிரி அவங்களோட கை ஏதோ அவங்களோட நிறுவனங்கள்ல படிக்குற மாணவர்கள் மேல மட்டும் இல்லை; அரசோட நடவடிக்கைகள்ல இருக்கு, எல்லோருக்குமான பாடத்திட்டத்துல இருக்கு, நாட்டோட கல்விக் கொள்கைல இருக்கு. இதையெல்லாம் எப்படி அனுமதிக்க முடியும்?

இந்த இடத்தில் கொஞ்சம் விளக்கமாகப் பேச முடியுமா?

ஒரு உதாரணம் சொல்றேன், மெட்ரிக் பள்ளிகளை நடத்துபவர்கள் எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியா உருமாறியிருக்காங்க தெரியுமா? நான் பாடத்திட்ட உருவாக்கக் குழுக்கள்ல இருந்திருக்கிறேன்கிறது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். என் தலைமையிலான பாடத்திட்டக் குழுவில் ஒருவர் இருந்தார். அரசுப் பள்ளியில அவர் தலைமை ஆசிரியர். இன்னொரு பக்கம் திருச்செந்தூரில் தனியார் பள்ளி நடத்துகிறவர். அவர் வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் 35% தேர்ச்சின்னா, அவர் நடத்துற பள்ளியில 100% தேர்ச்சி. கூட்டத்துக்கு வந்த மனுஷன் பொழுதும் செல்பேசியில பேசிக்கிட்டே இருந்தார். ‘ஒண்ணு, நீங்க போன் பேசுங்க. இல்லை, கூட்டத்தைக் கவனிங்க. ரெண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீங்க’ன்னேன். என்னைப் பார்த்து நக்கலா சிரிச்சார். மதியம் எங்க எல்லோருக்கும் ஒரு இடத்திலேர்ந்து சாப்பாடு வருது; அவரு கல்வித் துறை இயக்குநர்களோட சாப்பிடப்போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்புறம் ஒரு நாள்கூடக் கூட்டத்துக்கு வரலை. ஆனா, அவரு என்ன நெனைச்சாரோ அதைச் சாதிச்சுக்கிட்டார். இன்னொரு முறை என் தலைமையிலான பாடத்திட்டக் குழுவுல ஒரு முக்கியஸ்தரோட மருமகள் உறுப்பினரா வந்து உட்கார்ந்திருந்தார். அவருக்குத் தமிழே தெரியாது. மலையாள வழியில் படித்தவர். கல்வி அதிகாரிகள் எப்படி நட்சத்திர விடுதிகள்ல தங்குறாங்க? ஆடம்பரமான அவங்களோட உணவுச் செலவுக்கு யார் காசு கொடுக்குறாங்க? குடும்பத்தோட அவங்க ஊர் சுத்துறதுக்கு கார் எங்கேயிருந்து வருது? அவங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட வகையில இந்தக் களவு உறவுக்கான தேவை என்ன? இதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா? இன்னைக்கு, ‘பாடநூல்ல கேட்கப்பட்ட கேள்விகளைத்தான் பரீட்சையிலும் கேட்கணும்’னு விதியைக் கொண்டுவந்தவங்க இந்த மாதிரி கல்வி வியாபாரிகள். கணிதப் பாடத்தில் 60% கேள்விகளை மாதிரி வினாக்கள்லேர்ந்து கேட்கணும்னு விதியைக் கொண்டுவந்தது அவங்க. இந்த ரெண்டு விஷயம் மட்டும் மேல்நிலைக் கல்வியை எவ்வளவு மோசமாக்கியிருக்குனு நல்ல ஆசிரியர்கள்கிட்ட கேட்டுப்பாருங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிட்டுப்போன பாதிப் பேரு கல்லூரில எடுத்த எடுப்புல தேர்வுல அடி வாங்குறான். ஏன்? இதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா? அவங்க காசு சம்பாதிக்குறதுக்கு ஏத்த மாதிரி எல்லாத் தையும் வளைக்குறாங்க. உண்மையில, இன்னைக்குத் தனியார் பள்ளிக்கூடங்கள்ல மட்டும் இல்லை; அரசாங்கப் பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற மாணவர்களோட தலையெழுத்தையும் தீர்மானிக்கிறது இந்தக் கல்வி வியாபாரிகள்தான்! இதையெல்லாம் மாத்த ஒரு மாபெரும் இயக்கம் வேணும். அதை உருவாக்கக்கூடிய சக்தி இன்னைக்கு நாட்டுல இல்லை.

கல்வித் துறை முன்னின்று சமூக மாற்றத்தை உருவாக்க முடியாதா?

அப்படித்தான் ரொம்ப நாள் நான் நம்பி ஏமாந்தேன். சி.டி.குரியன்தான் சொன்னார், ‘கல்வி மாற்றம் சமூக மாற்றத்தை உருவாக்காது. சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்திற்குத் தூண்டுகோலா அமையும்’ன்னு. அவர் சொன்னது சரி. எந்த நாட்டில், சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வி மாற்றம் ஏற்பட்டிருக்கு? ‘கற்றவை எல்லாம் மறந்த பின்னால், எது தக்கி நிற்கிறதோ அதுதான் கல்வி’ன்னார் பி.எஃப்.ஸ்கின்னர். அதாவது, வள்ளுவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும்ன்னு சொன்னாரே அதுதான் கல்வி. நீங்க கணக்கை மறக்கலாம், அறிவியலை மறக்கலாம், படிச்சதன் விளைவா எந்தப் பண்புகள் உங்கள் ரத்தத்தில் ஏறி நிக்குதோ அதுதான் கல்வி. சமூக மாற்றம் நிகழாமல் கல்வி மாற்றம் பற்றி பேசுவது அபத்தம். ‘டேக்ஸானமி ஆப் லிசனிங்’னு ஒரு புத்தகம். கேட்பதில் எத்தனை விதமான முறைகள் இருக்குங்கிறது சம்பந்தமான புத்தகம் அது. இப்ப நாம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கோம் இல்லையா? நான் பேசுறதை நீங்க கேட்குறதும், நீங்க பேசுறதை நான் கேட்குறதும் ஒரே நிலைல அமையுறது இல்லை. அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து அமைதியா கவனிச்சுட்டு இருக்கார்னு வெச்சுக்குங்க. அவருடைய கேட்டலின் நிலை வேற. தவிர, ரெண்டு பேர் பேசிக்கிட்டிருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து உட்காரும்போது நம் பேச்சின் தொனி மாறும். கோபமாப் பேசினாகூட சத்தத்தை அடக்கிக்குவோம். கவனிச்சுருக்கீங்களா? இப்படிப் பேசுதல், கேட்டலில் மொத்தம் 161 வகை இருக்குன்னு அந்த நூல்ல சொல்லியிருக்காங்க. அதாவது, ஒரு பொது இடத்தில் காது கேட்பது வேறு திறன், இருவர் பேசும்போது காது கேட்பது வேறு திறன், மைக்ரோ போனில் காது கேட்பது வேறு திறன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறன்கிறாங்க. அப்போ அம்பது பிள்ளைகள் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய ஒரு ஆசிரியர் தன்னை எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு? நூத்தி இருபது கோடிப் பேர் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய அரசாங்கம் எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு? ஆசிரியர் உத்யோகம் கிடைச்சு அந்தியூர் பள்ளிக்கூடத்துல வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் சத்தமா பாடம் நடத்திக்கிட்டிருந்தேன். அங்கே தலைமையாசிரியரா இருந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. அவர் சொன்னார், ‘ராஜகோபால், ஷௌட்டிங் இஸ் நாட் டீச்சிங்’னு. அதுதான் ஒரு ஆசிரியரா நான் கத்துக்கிட்ட முதல் பாடம். இன்னைக்கு நம்ம கல்விக்கூடங்கள் மட்டும் இல்லை; அரசியல் கட்சிகள், அரசாங்கம்னு எல்லாருமே சத்தம் போடுறதுதான் செயல்பாடுங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க. ரொம்ப கஷ்டம்!

ஆகஸ்ட் 2016, ‘தி இந்து’

17 கருத்துகள்:

  1. Romba long article. As you said rt sir. Maattram varum sir

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. திரு எஸ் எஸ் ராஜகோபாலனை பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் . சரியான உண்மையான சிந்திக்க தூண்டும் கருத்துக்கள் . நல்ல பேட்டி . நன்றி திரு . சமஸ்

    பதிலளிநீக்கு
  4. "நம் கல்வி நம் உரிமை" எனும் தொடர் அனைவரின் வரவேற்பையும் வெகுவாகப் பெற்றதற்குத் தங்களின் கடின உழைப்புதான் ஒரே காரணி! அதில் எனக்கு மிகவும் பிடித்தவை இருபெரும் கல்வியாளர்களாம் பேராசிரியர் வசந்தி தேவி மற்றும் அய்யா இராசகோபாலன் ஆகியோரின் பங்களிப்புகள்தாம்; அதுவும் அய்யாவுடனான நேர்காணல் அத் தொடருக்கே ஒரு மணிமகுடம் எனில் அது மிகையன்று! இன்றைய கல்விச் சூழல் குறித்த-அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நேர்மையற்ற போக்கு குறித்த-சமூக அக்கறை தொனிக்கும் தங்களின் வினாக்களை அவர் எதிர்கொண்ட விதம் அவரின் கல்விப் புலம் சார்ந்த ஆழமான புரிதலை வெளிப்படுத்துகிறது; அய்யாவையும், "சாட்டை"ப் படத்தில் வரும் தயாளனைப் போன்றோரையும் காண்பது இன்று மிக, மிக அரிது!தங்களின் பிள்ளைகளத் (தாம் பங்குதாரரக இருக்கும்) தனியார்ப் பள்ளிகளில் படிக்க வைக்கிற அநியாயக்காரர்கள் இன்றைய ஆசான்கள்! அய்யா விரும்புகிற சமூக மாற்றத்துக்கு நேர் எதிரானவர்கள்; அவர்களின் சங்கங்கள் அப்பட்டமான சுயநலக் கும்பல்கள்! எனது சுமார் முப்பதாண்டு கால அரசு ஊழியர் சங்கப் பணியில் நான் கண்ட உண்மை இது! அவரின் பிறப்பு ஓர் ஆதிக்க சாதியில்தான் எனினும் அவரின் குடும்பமே சமூக நீதிக் காவலர்களின் கூடாரமாய்த் திகழ்ந்ததால் அவரும் தன்னளவில் இன்று வரையிலும் எளிய மக்களின் கல்வி உரிமைக்கான களப் போராளியாகத் திகழ்கிறார்! "எவர் எம்மவர்? "தமிழ்,தமிழ்" என வெற்றுக் கூச்சல் போட்டவர்களா? தங்களின் வீடுகளை விட்டே அதை விரட்டியடித்துவிட்டவர்களா? அல்லது தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிற-சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்தவொரு மொழித் திணிப்புக்கும் எதிராக நிற்கிற- அய்யாவைப் போன்றவர்களா?" என்ற கேள்விக்கு சரியான விடை தந்த நேர்காணல்! வெறும் தனியரின் மனமாற்றமா அல்லது அடற்குத் தோதான சூழலை உருவாக்கும் சமூக மாற்றத்துக்கான இயக்கமா என்கிற வினாவுக்கும் விடையிறுத்த நேர்காணல்! தொய்வின்றித் தொடரட்டும் தங்களின் இத்தகைய அரிய சமூகப் பணி!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு
  5. கல்வித்துறையில் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற ஒருவரிடம் மக்களின் பிரதிநிதியாய் நின்று நீங்கள் கேட்டிருக்கும் ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானவை. அவற்றிற்கு அவர் அளித்திருக்கும் பதில்கள் அனைத்தும் பாடம் போன்றவை.
    சிறப்பான பேட்டி.
    நன்றியும் வாழ்த்துகளும் சமஸ்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பேட்டி மட்டுமல்ல, சிந்திக்க வைக்கும் பேட்டியும் கூட..!

    --
    Ismail Bin Haneefa,
    Erode.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு பதிலிலும் அவ்வளவு ஞானம் ... சிறந்த பேட்டி ...இது போன்ற பேட்டிகள் வருங்காலங்களிலும் தொடர வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பேட்டி சமூக மாற்றம் - கல்வி மாற்றம் அவசியம்

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப கஷ்டம்! இது ரெண்டும் எஸ்.எஸ்.ஆர்-உடைய கடைசீ வார்த்தைகள்! enough said!

    பதிலளிநீக்கு
  10. Super samas....puttu puttu vaitheergal....matrambvendum....kandippaga....

    பதிலளிநீக்கு
  11. மிக ஆழமான அவசியமான மாற்றத்தை மக்கள் மனதில் விதைக்கின்ற கட்டுரை - தேவ்குமார் ஆறுமுகம்

    பதிலளிநீக்கு
  12. கல்வி கூடங்களை பஞ்சாயத்துப் போன்ற அந்தந்தப் பகுதி மக்களின் பொறுப்பில் விடுவது குறித்துப் பலர் சொல்லியிருக்கிறார்கள். மணி சங்கர் ஐயர் கூட பஞ்சாயத்து ஆட்சி வந்தால் பல பிரச்சனைகள் தீரும், ஆட்சியில் பஞ்சாயத்து நிலையில் பங்கேற்பதால் வசதிகள் பெருகும் என்றும் சொல்கிறார்கள். அதில் ஒரு பெருத்த சந்தேகம் இருக்கிறது. சாதிப் பாகுபாடு, மதப்பிரிவினை, என்ற அடிப்படைக் கூறுகளின் வழியே செயல்படும் நமது சமூகத்தில், இவற்றின் ஆதிக்கம் கல்வியிலும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, பொதுத் தேர்வை பள்ளி அளவில் அல்லது மாவட்ட அளவில் நடத்தினால் எளிதாக மாணவனை தரப்படுத்த இயலும். ஆனால் சாதியும், மதமும், தன் சாதி அல்லது தன் பகுதி அல்லது தன் மாவட்ட மாணவன் வரவேண்டும் என்ற வேட்கை உட்பட மற்ற கெட்ட பாதிப்புகளும் இருப்பதனாலேயே தான் மாநில முழுவதுமான அல்லது இந்திய முழுமைக்குமான பொதுத் தேர்வுகள் தேவையாகிவிடுகின்றன.




    பதிலளிநீக்கு