அஞ்சல் அபாயம்!


உலகின் மிகப் பெரிய அஞ்சல் நிறுவனமான இந்திய அஞ்சல் துறையின் 247 வருட கால வரலாற்றில் மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், படிப்படியாக அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அஞ்சல் துறையை மூடும் பாதையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் இப்போது 1,57,979 அஞ்சலகங்கள் இயங்குகின்றன. இவற்றில் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்களின் எண்ணிக்கை மட்டும் 1,39,182. கிட்டத்தட்ட 4.75 லட்சம் ஊழியர்கள். ஒர் அஞ்சலகம் சராசரியாக 7,716 பேருக்கு சேவை செய்வதாகத் தெரிவிக்கிறது இந்திய அஞ்சல் துறையின் வருடாந்திர அறிக்கை!
கடந்த பல ஆண்டுகளாகவே நம்முடைய அஞ்சல் துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது. மாறாக, தனியார் கூரியர் நிறுவனங்களோ வருவாயை வாரிக் குவிக்கின்றன. இத்தனைக்கும் அஞ்சல் துறையுடன் ஒப்பிட்டால், அவற்றின் கட்டமைப்பு சுண்டைக்காய்தான். உதாரணமாக, நாட்டின் பெரிய கூரியர் நிறுவனங்களில் ஒன்றான ‘டிடிடிசி’ மாதத்துக்கு ஒரு கோடி கடிதங்கள், சரக்குகளைக் கையாள்கிறது. 5,200 இடங்களில் மட்டுமே அதற்கு தபால் சேகரிப்பு மையங்கள் இருக்கின்றன. ஊழியர்கள் வெறும் 13,000 பேர்தான்!
ஆனால், இவ்வளவு விரிவான கட்டமைப்புடன் இருக்கும் அஞ்சல் துறை தொடர் நஷ்டத்தில் இயங்கக் காரணம்... மத்திய அரசின் _  அஞ்சல் துறை நிர்வாகத்தின் _ கையாலகத்தனம்! தகவல் தொழில்நுட்பம் விசுவரூபம் எடுத்திருக்கும் ஒரு யுகத்தில் விரைவான செயல்பாட்டின் முக்கியத்துவம்பற்றியோ நிர்வாகச் சீர்கேடுகளின் அபாயம்பற்றியோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை நம்முடைய அஞ்சல் துறை!
மிக சமீபத்திய உதாரணம் இது... புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் உரியவர்களிடம் விநியோகிக்காமல் குப்பையில் வீசி எறியப்பட்ட பாஸ்போர்டுகள், ஏ.டி.எம். அட்டைகள் உள்பட ஏறத்தாழ 10 ஆயிரம் தபால்களை அண்மையில் மீட்டனர் பொதுமக்கள். இதற்குக் காரணமான அஞ்சல் அலுவலர் பவானந்தம், அஞ்சலர் மாணிக்கம் இருவர் மீதும் நீண்ட காலமாகப் புகார் சொல்லப்பட்டும் அவர்கள் மீது அஞ்சல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள். இப்போது கையும் களவுமாகப் பிடிபட்டதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தனியார் நிறுவனங்களில் சாத்தியமா?
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு ஒரு நாளுக்குள் தபால்களை ஒப்புகைச் சான்று பெற்று விநியோகித்து விடுகின்றன கூரியர் நிறுவனங்கள். அஞ்சல் துறையில் சாதாரண அஞ்சலில் அனுப்பப்படும் தபால்கள் கட்டாயம் சென்றடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பதிவு அஞ்சல் கட்டுபடியாகக் கூடிய கட்டணத்தில் இல்லை. விரைவு அஞ்சலில் அனுப்பும் தபால்கள் பக்கத்து மாவட்டங்களைச் சென்றடைய சில சமயங்களில் இரு நாட்கள் ஆகிவிடுகின்றன!
கூரியர் நிறுவனங்களில் ஒரு மாநிலத்துக்குள் 250 கிராம் கொண்ட ஒரு தபாலை அனுப்ப ஆகும் செலவு ரூ. 30. வெளிமாநிலங்களுக்கு அனுப்ப ரூ. 45. ஒரு நாளைக்கு 10&க்கும் மேற்பட்ட தபால்களைத் தரும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டணத்தில் 30 சதம் வரை கழிவு தருகின்றன கூரியர் நிறுவனங்கள். அஞ்சல் துறையிலோ இதே தபாலை பதிவு தபாலில் அனுப்ப ஆகும் செலவு ரூ. 85! ஒரு வீட்டில் தபாலுக்கு உரியவர் இல்லை அவரைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, தபாலைச் சேர்க்கும் நடைமுறையைக்கூட இன்னமும் நம் அஞ்சல் துறை அறிமுகப்படுத்தவில்லை!
அஞ்சல் துறை மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு தபாலும் ஒப்புகைச்சான்று பெற்று விநியோகிக்கப்படும்; இதற்கான கட்டணம் கூரியர் நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் என்கிற ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தாலே போதும். அஞ்சல் துறையை அதன் பழைய கம்பீரத்துக்குக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அடிப்படையான வியாபாரக் கட்டமைப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத அஞ்சல் துறை, வருவாயைப் பெருக்க அஞ்சலகங்களில் தங்கக் காசுகளில் ஆரம்பித்து தீபாவளி பட்டாசு வரை விற்கிறது! உலகின் முன்னோடி என்ற தன்னிலை மறந்து அமெரிக்காவின் ‘மெக்கின்ஸே’ நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கிறது!
அஞ்சல் துறைக்கு ‘மெக்கின்ஸே’ கொடுத்து இருக்கும் பரிந்துரைகளில் முக்கியமானவை... நகர்ப்புறங்களில் உள்ள 9,797 அஞ்சலகங்களை மூடுவது; விரைவு அஞ்சல் மையங்களின் எண்ணிக்கையை 315-ல் இருந்து 89 ஆகக் குறைப்பது; அஞ்சலகச் சேவையின் முக்கிய ஆதாரமான ரயில்வே மெயில் சேவை மையங்கள் எண்ணிக்கையை 421-ல் இருந்து 84 -ஆகக் குறைப்பது... நேரடியாகச் சொன்னால், படிப்படியாக அஞ்சலகங்களை மூடி அஞ்சல் சேவையில் இருந்து அரசு விடுபடுவதுதான்!
இந்தப் பரிந்துரையை அமலாக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஜூலை 5 முதல் கால வரையறை அற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள் அஞ்சல் துறை ஊழியர்கள். ‘‘இதுவரையிலான எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் இதற்கு உண்டு. ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் அல்ல இது. அஞ்சல் துறையின் நலனுக்கானது’’ என்கிறார்கள் ஊழியர்கள். ஆரோக்கியமான அறிகுறிதான் இது. அப்படியே தங்கள் செயல்பாட்டையும் நிறுவனத்தின் செயல்பாட்டையும் மீளாய்வு செய்யவும் கொஞ்சம் நேரத்தை அவர்கள் ஒதுக்கலாம். இந்திய கூரியர் நிறுவனங்களிடம் இருந்து வெற்றிச் சூட்சமத்தைக் கற்றுக்கொள்ள மத்திய அரசை நிர்பந்திக்கலாம்!

1 கருத்து: